Monday, June 29, 2015

                                 நட்பில் தாய்மை...

            இடுக்கண் களைவதாம் நட்பு என்று வள்ளுவம் உரைக்கிறது. மிகச் சிறந்த நட்பை எல்லா இலக்கியங்களும் பேசியிருக்கின்றன.  இருப்பினும் அதியமானுக்கும் ஔவைக்கும் இருந்த நட்போடு எதனையும் ஒப்பிடமுடியாது என்றே தோனுகிறது.  இருவருக்கும் தொடங்கிய நட்பு முரண்பாட்டில்தான் தொடங்கியது பின் அதியமான் புரிந்துகொண்டதாலும் புலவர்களை மதிக்கும் மாண்பினாலும் நட்பாக மலர்ந்தது.
              ஔவையின் மீது கொண்ட  நட்பின் காரணமாக தன்னுடைய வாழ்நாளையே குறைத்துக்கொள்ள மனம் துணிந்த மாண்பை அவன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்தவன்.  ஔவையும் அவன் மீது கொண்ட  நட்பைப் பல பாடல்களில் உரைத்து மேன்மைப்படுத்துவதையும காணமுடிகிறது.
                                    ஆதல்  நின்னகத் தடக்கிச்
                                    சாதல் நீங்க எமக்கீந் தனையே
சாதல் (மரணம்) நீங்க எனக்குத் தந்த உன் மாண்பை என்னவென்று சொல்வேன் என்கிறார் ஔவை அதியமானின் உயர்ந்த பண்பை.
                        அவனுக்காகத் தூதுபோகிறார் தொண்டைமானிடம். அது வெகு சிறப்பான பாடல்.  இருவருக்குமான நட்பின் உச்சம் அதியமான் இறந்துபோக ஔவை பாடிய பின்வரும் பாடல்தான். உலகின் சிறந்த நட்பிற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.


                        சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
                        பெரியகட் பெறினே
                        யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
                        சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
                        பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
                        என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
                        அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே
                        நரந்தம் நாறும் தன்கையால்
                        புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
                        அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீ
                        இரப்போர் கையுளும் போகிப்
                        புரப்போர் புன்கண் பாவை சோர
                        அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
                        சென்றுவீழ்ந் தன்று அவன்
                        அருதிறத்து இயங்கிய வேலே
                        ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
                        இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
                        பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
                        சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
                        ஈயாது வீயும் உயிர்தவப் பலவே (புற.235)

            அதியமானுக்குக் கொஞ்சம் கள் கிடைத்தால் முதலில் எனக்கு அளித்துவிட்டுப் பின் எஞ்சியதைத் தான் உண்பான். நிறைய கள் கிடைத்தால் அப்பவும் அப்படியே செய்வான். அதுபோன்றே சிறிது சோறாக இருந்தாலும் பலருடன் சேர்ந்து உண்பான்.  சோறு அதிகமாக இருந்தாலும் அப்படியே பலருடன்தான் சேர்ந்து உண்பான்.  அது எல்லாம் போய்விட்டது.  எலும்புடன் நிறைய கறி சேர்ந்திருக்கும் கறியை (என்பொடு தடிபடு) எங்களுக்குத் தருவான். போர் என்றால் தான் மட்டும் சென்று துணிவாய் எதிர்கொள்வான். ஈயும் பண்புகொண்டவனாதலால் மட்டுமன்றி வருவோர்க்கு மலர் மாலையைச் சூட்டிசூட்டி அவன் கைகள் பூவாசத்துடன் இருக்கும். அந்தக் கையால் புலால் (கறி) நாற்றம் வீசும் என் தலையைத் தடவிக்கொடுப்பான். இப்போது எல்லாம் போய்விட்டது. அவன் இறந்துவிட்டான். அவன் மார்பில் தைத்த அம்பானது (அவனைக் கொண்ட மரணம்என்கிற அம்பு) முதலில் பாணரின்  மண்டை துளைத்தது, பின் அவனிடம் இரப்பவரின் கையைத் துளைத்தது,  கடைசியாக என்போன்ற புலவரின் நாக்கில் வந்து தைத்தது என அதியமான் இறந்துபோனதால் யார் யார் வாழ்வெலாம் அழிந்தது என்கிறார். எனவே இனிப் பாடுவோரும் இல்லை. பாடுவோர்க்கு வேண்டிய அருள்காட்டும் ஈகுநரும் (அதியமானும்) இல்லை.

                        இப்பாடலில் பூ வாசம் அடிக்கும் கையால் புலால் நாற்றம் அடிக்கும் தலையைத் தடவுதல் என்பதுதான் தாய்மைக்குரிய பண்பாகும். அதாவது அதியமான் தாயாகவும் ஔவை பிள்ளையாகவும் இருக்கின்ற நட்பின் மாண்பை இதைவிட யாரால் சொல்லமுடியும்?

                        இந்தப் பாடலில் இன்னொரு சிறப்புமிருக்கிறது. இதைத்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிட்டு இது இலக்கணம்  பிறழ்ந்த பாடல் அல்லது இலக்கண வரம்பை மீறிய பாடல் என்று குறிப்பிட்டு இவ்வாறு ஔவை பாடக்காரணம் ஔவைக்கு இலக்கணம் தெரியாதா என்பதல்ல பாடலுக்கு உணர்ச்சி முக்கியம் என்பதால் சீர்கள் மாறி மாறி வருகின்றன. எனவே புதுக்கவிதைக்கான வித்து சங்க இலக்கியக் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு பல்வகை சிறப்புடைய பாடல் இது.  அதியமானின் சிறந்த போர்த்திறன்,  மிகச்சிறந்த கொடைத்தன்மை,  ஔவையின் மாண்பு என இங்கு ஈவோரும் சரி பெறுவோரும் சரி சரியான தகுதியில் இருக்கும் பான்மையையும் இப்பாடல் சுட்டுகிறது. அனுபவியுங்கள்.

    




Friday, June 26, 2015




அடுத்தவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தொடங்குகிற 
அந்த தருணத்திலிருந்து நம்முடைய தவறுகளை
 மறைக்கத் தொடங்குகிறோம்.

000


ஆயிரம் அரசியல் இருக்கட்டும்
ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்
ஆனாலும் ஹெல்மெட் அணியுங்கள்
ஊனமுற்றாலும் உயிர்காக்கும்


0000


விடுமுறை நாளில்
மாடத்தில் முட்டையிட்டிருந்த
புறாவின் முட்டைகள் உடைந்துகிடந்தன
நான் அந்தப் பூனையைத் தேடுகிறேன்
கெட்டுப்போகாது என்று பிரிட்ஜில் வைத்த
கெட்டுப்போன பால்பாக்கெட்டை
எண்ணியபடியே
பாலும் கெட்டது முட்டையும் கெட்டது


000
Like · Comment · 

Wednesday, June 24, 2015

ஔவையின் நல்வழியிலிருந்து ஒரு பாடல்.



கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றுஎடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயின் சொல்.



பாடலின் பொருள்


படிக்காதவனாக இருந்தாலும் அவனிடத்தில் காசு இருந்தால் எல்லாரும் சென்று அவனை எதிர்கொள்வர். கொண்டாடுவர். காசில்லாதவன் என்னதான் படித்திருந்தாலும் அவனை மனைவியும் வெறுப்பாள், ஈன்ற தாயும் வேண்டாது மறுப்பாள் ஒருபோதும் செல்லாது அவன் வாய் சொல். செல்லாச் சொல்.


பாடலின் பொருளை எளிதில் புரிந்துகொள்ள சற்று விரிவாக்கி எழுதியிருக்கிறேன்.


என்றைக்குப் பாடிய பாடல் இது. இலக்கியம், மனிதநேயம், படைப்புக்கள், குழுக்கள், லட்சியம், சாதனை, நேர்மை...மனசாட்சி... ஒழுக்கம்.. போடுங்கள் குப்பையில் என்று சொல்லலாமா?
Like · 

Sunday, June 21, 2015

நிகழ்வுகள்....நிகழ்வுகள்...

நிகழ்வுகள்...
1, நேற்று நண்பர் கல்வெட்டியல் பேராசிரியர் சோ.கண்ணதாசன் அவர்கள் அலைபேசியில் அழைத்து செய்திசொன்னார். செய்தி இதுதான்.
அரசியல் காரணமாக தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்வழி பயிற்ற்ல் என்பது அருகிகொண்டிருக்கிறது. மொழிப்பாடமாக வேண்டுமானால் ஆங்கில்ம் மட்டுமல்ல எந்த மொழியும் இருக்கட்டும். அது பிரச்சனையில்லை. அடிப்ப்படையில் ம்ற்ற பாடங்களைக் கட்டாயம் தமிழ்மொழியில்தான் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக கவலைகொண்ட தமிழறிஞர்கள் கூடிய நிகழ்வுதான் அது.
கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இந்நிகழ்விற்கு அடிப்ப்படை காரணம் கோவை பேரூர் ஆதினம். அவர்க்ள தொடங்கியுள்ள வளர்தமிழ மன்றத்தின் சார்பாக இயக்கம் போல இயங்கி தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் தாய்மொழிக்காக அயராதுபாடுபட்டுவ்ரும் தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைந்து ஒன்றாகப் போராடி தமிழ்வழி பயிற்றலைக் கட்டாயமாக்க அரசினை வற்புறுததவேண்டும் என்பதுதான் நோக்கம். மூத்த ஆசிதினத்தில் அருளாசியுடன் இளையபட்டம் அருள்மிகு வேதாசலம் அடிகளார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி, கரூர், திருச்சி என்று தொடங்கி தஞ்சை வந்திருந்தார்கள். குறுகிய காலக் கூட்டம் என்றாலும் நோக்கம் மிக உயர்வானது பொறுப்பானது அவசியமானது என்கிற நிலையில் கிட்டத்தட்ட ஒரு வகுப்பறை முழுக்க தமிழார்வலர்கள் கூடியிருந்தார்கள்.
கூட்டத்தினை ஒருங்கிணைத்தவர் தமிழுக்காக கடைசி மூச்சுவரை செலவழித்து மறைந்த தமிழ்ப் புலமையாளர், பேரறிஞர் தெய்வத்திரு சொ.விருத்தாசலனார் அவர்களின் திருமகனார் திருமிகு பாரி அவர்கள்.
வரவேற்புரையை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் கணிதவியல் ஆசிரியர், வலைப்பூவில் தமிழுக்காகப் பல பதிவுகளை இட்டுவரும் கி.ஜெயக்குமார் அவர்கள்.
வளர்தமிழ மன்றத்தின் நோகக்ம் குறித்து திரு அப்பாவு அவர்கள் விளக்கிச்சொல்ல அதனைத் தொடர்ந்து இளையபட்டம் அவர்கள் விரிவாக வளர்தமிழ மன்றத்தின் அரிய இப்பணியை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திருமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை முன்மொழிய தொடர்ந்து அங்கு வந்திருந்தத ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்து இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதாக தங்கள் ஆலோசனைகளை முன் வைத்தார்கள். இறுதியில் பாரி அவர்கள் நன்றியுரைக்கக் கூட்டம் முடிந்தது.
வேண்டுகோள்
உலகின் எல்லா நாடுகளிலும் அடிப்படைக் கல்வி தொடங்கி விருப்பக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில்தான் பயின்று வருகிறார்கள். இச்சூழல் தமிழ்கத்தில் இல்லை. ஆயிரமாயிரம் குழுக்கள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல்போல பெருகிவருவது பெருஙகவலைக்குரியது. எனவே தமிழைக் கட்டாயமாகப் பயிற்றுமொழியாக்குவது என்பது காலத்தின் தேவையாகும். இருப்பினும் தமிழைப் போற்றுகிற பலரும் பல்வித அரசியலைக் கைக்கொண்டு அதனை பிழைப்புக்கருவியாகவே பயன்படுத்திவருகிறார்கள் என்பதும் கண்கூடு..
எனவே பேரூர் ஆதினம் எடுத்திருக்கும் இந்தமுயற்சி மிக முக்கியமானது. தமிழின் மீது அக்கறை கொண்ட யாரும் இதனை எவ்வாறு செய்ற்படுத்தினால் இது வெற்றிபெறும் என்பதறகான பயனான ஆலோசனைகளை முன்வைக்கலாம். அவற்றைப் பேரூர் ஆதினத்திற்கு எழுதியனுப்பலாம். தமிழைக் கற்கவேண்டும். தாய்மொழியில்தான் உலகறிவைப் பெறவேண்டும். உயரவேண்டும் என்கிற உணர்வுடன் நாம்எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
என்றாலும் இவற்றின் பின்னால் இருக்கக்கூடிய
பல சிக்கல்களும் இருக்கின்றன.
தமிழை உயிராக எண்ணிப் படித்தவனுக்குத் தமிழ்நாட்டில் மரியாதை இல்லை.
அவன் பிழைக்க எந்த ஒரு வேலையும் இல்லை.
தாய்மொழியில் படித்தால் நீ சாகமாட்டாய் உயிர்வாழ்வாய் என்கிற உத்திரவாததையடக்கிய நம்பிக்கை இல்லை.
தமிழ்ப் படித்தவர்கள் தமிழையே அறியாதவன் நடத்துகின்ற கல்விநிறுவன்த்தில் கைகட்டி சொற்ப சம்பளத்திற்கு வாழவேண்டிய அவலம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
அரசு பணியாளர் தேர்வு மையம் தவிர மற்றவற்றில் தாய்மொழியில் கலந்துகொண்டு தேர்வு எழுதமுடியாத இடர் நீண்டிருக்கிறது.
தமிழை மூச்சாக எண்ணுபவன் என்ன நினைப்பான். அவன் உள்ளம் எத்தயை இன்னல்களைத் தாங்கும்?
கடைத்தெரு பெயர்ப்பலகை தொடங்கி வெகுசன ஊடகம் வரை தாய்மொழி அக்கறை இல்லை. பிழைகள் மலிந்த செயற்பாடுகள் மனத்தை புண்படுத்துகின்றன.
இவையெல்லாம் நம்முன் இருக்கும் பிரச்சினைகள். தீர்க்க்ப்படவேண்டும் என்பதும் முக்கியமானது. அவசியமானது.
எனவே தாய்மொழியில் பயிற்றுவித்தல் என்பதை நாம் பலப்படுத்த பலப்படுத்த மேற்சொனன் பிரச்சினை சூரியன்கண்ட பனித்துளி போல விலகிவிடும்.
பேரூர் ஆதினத்தின் ஒப்பற்ற இந்த தமிழ்தொண்டிற்குக் கைகோர்க்க வாருங்கள்.
இதுகுறித்த் உங்கள் கருத்துக்களை பேராசிரியர் இளமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருவருள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி, வெண்ணாற்றங்கரை அஞ்சல், தஞ்சாவூர் எனும் முகவரிக்கும் அனுப்பலாம். ஊர்கூடித்தான் தேரிழுக்கவேண்டும். தமிழ்த்தேர் இழுக்க வடம்பிடிக்க வாருங்கள் தமிழ்ச் சமூகமே.
இரண்டு
இன்று தந்தையர் தினம்.
என் அப்பாவை நினைக்கிறேன்.
சிறுவயது முதலே விளையாட்டாகக் கூட கைநீட்டாமல்... தம்பி என்றே கடைசிவரை அழைத்து.. எந்த ஒரு செயலையும் வளவளவென்று பேசாமல் ஒருமுறை சொல்லி.. இது நன்மையானது எடுத்துக்கொள் இது தீமையானது விட்டுவிடப் பழகு..என்று அறிவுறுத்தி... உணவுவேளை தவறாமல் உண்ணும் பழக்கத்தையும்.. எப்போது படுத்தாலும் அதிகாலை எழுந்துவிடு.. என்றும்.. எதனையும் தள்ளிப்போடாதே... நாலுபேர் பார்ப்பதற்காக ஒரு செயலைச் செய்யாதே.. மனசாட்சிப்படி உழை.. ஒழுக்கமும் நேர்மையும் உன் மரணம்வரை மாறாதிருக்கவேண்டும்.. கடுஞ்சொல் பேசாதே... யாராக இருந்தாலும் எடுத்தெறிந்துவிடவேண்டாம்.. எல்லோரையும் மதிக்கப் பேசு.. என்றெல்லாம் சொல்லிய பல்வேறு தருண்ங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இவற்றிலெல்லாம் அப்பா வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.
மூன்று
சுகன்
சுந்தரசுகன்
சௌந்தர சுகன்..
எழுத்துப்போராளி... எழுத்தாய் வாழ்ந்தான்.. எழுத்தாய் மறைந்தான்..
இன்று அவனுக்கு நினைவேந்தல்... தஞ்சை பெசண்ட் அரங்கம்..மாலை 6 மணி
அவரவர் உள்ளத்திலிருந்ரு ஒரு துளி நீர் தாருங்கள் அவனின் ஆன்மாவிற்கு. போதும்.
நன்றி.