Friday, November 8, 2013

கணையாழியில்....





                      இலையுதிர்
                      மரங்களில் எல்லாம்
                      உதிரிலைகளுக்காக
                      வருத்தத்தில்
                      மீண்டும்
                      கிளைக்க வைக்கிறது
                      இலைகளை
                      மரம்
                      நம்பிக்கை
                      குலையாமல்..

                                               ===================

                                                            இம்முறை
                                                            எலிப்பொறியில்
                                                            அணில்
                                                            கடவுளின் நீதி
                                                            மெதுவாயும்
                                                            நிதானமாயும்...


                  ////////////////////////////////////////


                        முன்பாக 
                        இருந்தால
                        தந்தி அனுப்பி
                         இருப்பார்கள்..

                         சறறு நலமாக
                         இருந்திருந்தால்
                          யாரைவிட்டாவது
                          ஒரு கடிதம்
                          எழுதப்பட்டு வந்து
                          சேர்ந்திருக்கும்..

                          சாகிற தருணங்களில்
                           யாருககும் யாரிடமேனும்
                          எதையேனும் சொல்ல
                          ஆசையிருக்கிறது


                            கேட்பதற்கும்கூட
                            ஆசையிருக்கிறது
                            இறந்துபோன ஆத்மாவிற்கு
                            செய்ய மறந்ததை
                            யாருமறியாமல்
                             மறைப்பதற்கு...


                                           =======================


                                                       செம்பருத்திச் செடியில்
                                                       சில பட்டாம்பூச்சிகளைக்
                                                       காணமுடியும்...

                                                                     அரநெல்லி மரத்தில்
                                                                      எப்போதும் சிட்டுக்குருவிகளும்
                                                                      தவிட்டுக்குருவிகளும்
                                                                      தவறாது தரிசனம் தரும்.

                                                        நாரத்தைச் செடியின்
                                                        முட்களுக்கிடையே
                                                        மனததைப் பதைபதைக்க
                                                        வைத்து ஊஞ்சலாடும்
                                                        தேன்சிட்டுக்கள்

                                                                       வேப்பமரத்தில்
                                                                       சில பச்சைக்கிளிகளும்
                                                                       நிறைய காகங்களும்
                                                                       காணக் கிடைக்கும்..

                                                         என்றாலும்
                                                         வெட்டப்பட்டதை
                                                         விடுத்து மீந்திருக்கும்
                                                         மரங்களைவிடப் 
                                                         பறவைகள்
                                                        குறைந்தே போய்விட்டன

                                                                                          மருத்துவன்
                                                                                          கெடுவைத்துவிட்ட
                                                                                          ஓர் 
                                                                                          இறுதி நோயாளியைப்
                                                                                          போல...

                                                 ===========================

(நன்றி. கணையாழி நவம்பர் 2013)

Tuesday, November 5, 2013

எழுதப்படாத உயில்....... குறுந்தொடர் 4




                       கடிதங்களைப் படிக்கப் படிக்க அங்கையர்க்கண்ணிக்கு ஆர்வமாக இருந்தது.

                      சில கடிதங்கள் வேதனைப்பட வைத்தன.
                 
                      சில கடிதங்கள் கோபப்பட வைத்தன.

                      சில கடிதங்கள் இரக்கங்கொள்ள வைத்தன.

                      சில சுவையாகவும் சிரிக்கவும் வைத்தன.

                      சில கடிதங்கள் வியக்க வைத்தன.

               அவளுக்கு வேறு ஒரு புதிய உலகத்தின் கதவுகளை அந்த அலுவலகக் கடிதங்கள் திறந்து வைத்தன.

                  சமுகத்தின் முழு உருவமும் அவள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

                  தன்னுடைய தந்தை இறந்துபோய் கிடைத்தவேலை என்றபோது மனதில் தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது என்று யோசிக்கவே செய்தாள். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. விலகிப்போய் விட வேண்டும் வெகுதுர்ரத்திற்கு இவற்றின் வாசனை இல்லாமல் என்றுகூட தீர்மானம் செய்து வைத்திருந்தாள்.

                    ஆனால் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டன ஒவ்வொரு கடிதமும்.

                    இதைவிட ஏராளமான பிரச்சினைகளுக்குள் மனிதர்களும் குடும்பங்களும் சிக்கிக் கிடப்பதையும் அவற்றிலிருந்து மீட்டுவிடுங்கள் எங்களையும் என்பதுபோல கடிதங்களின் செய்திகள் புலம்பின.

                    எங்கப்பா நேர்மையானர். ஒரு பைசாகூட லஞ்சம் வாங்காதவர். பணியில் இருக்கும்போது இறந்துபோய்விட்டார். இன்றுவரை அவருக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையும் குடும்ப ஓய்வூதியமும்கூட வரவில்லை என்று புலம்பியது ஒரு கடிதம்.

                     எங்க குடும்பத்திற்கென்று பூர்விகமாக இருந்தது அந்த 100 குழி நிலந்தான். அதையும் அவங்க எடுத்துகிட்டாங்க.. நாங்க ஒருவேளைகூட முழுசா சாப்பிடமுடியாம தவிக்கிறோம். எங்க நிலத்தை மீட்டுக்கொடுங்க..

                    எம்மவன் ஆத்திரத்துல கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். என்னைக் காப்பாத்த யாருமில்லே. எனக்கு வரவேண்டிய முதியோர் உதவித்தொகை கிடைச்சா காவயிறு ரொப்பிக்குவேன்...வாங்கிக் கொடுங்க மவராசா...

                     நான் இயற்கையை நேசிப்பவன். இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர் வள்ர்க்கிற மாமரததுலேர்ந்து இலை கொட்டி தினமும் நாங்க அள்ளவேண்டியதாயிருக்கு. எங்க காம்பவுண்டுக்குள்ள வர்ற கிளைய வெட்ட ஏற்பாடு செய்யணும்..

                    இது அரசாங்க மருத்துவமனை. வசதியிலலாத நோயாளிங்க நிறைய வர்றாங்க.. ஆனா போதிய மருந்து வசதி.. இல்ல.. கட்டிடம் பழைய காலத்துக் கட்டிடம்.. இடிஞ்சுவிடும் நிலையிலே இருக்கு.. பக்கத்துலே தாய்சேய் நலவிடுதி இருக்கு.. இருக்கற நாலு கட்டிலேயும் துருப்பிடிச்சு.. ஏத்த இறக்கமா ஆடிக்கிட்டிருக்கு.. எனவே மருத்துவமனைக்கு வந்த நோயை சரி பண்ணணும்..

                      மழை பெய்தா முனிசிபல் பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்பறையும் ஒழுகுது. புள்ளங்க படிக்கமுடியாம நினையறாங்க.. உடனே அதை சரிப்பண்ணித் தரணும்..

                     எங்க வள்ளுவர் நகருக்கு ஒரேயொரு குடிநீர் இணைப்புக் கேட்டு இதுவரை 437 மனுக்கள் கொடுத்திட்டோம்.. ஒரு மனுக்காவது பதில் கொடுங்க.. இதுலே மனுநீதீ நாள்ல மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு 25ம் அடங்கும்..

                    எம் பையன அரசாங்க இலவச ஆஸ்டல்ல சேர்க்கப்போறேன். என்னோட கணவர் இறந்துபோய் ஆறு வருஷமாவுது.. எனவே எனக்கு வாரிசு சர்டிபிகேட்டும்.. என்னோட பையனுக்கு வருமானச் சான்றிதழும் தரணும்..என் குடும்பத்துலே யாருமே படிக்கல்லே.. என் மவனாச்சும் படிக்கணும்னு ஆசப் படறேன்.. ஐயா.. உதவிப் பண்ணா புண்ணியமா போவும்.. உங்க புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.

                      எனக்கு நாலு பொண்ணுங்க... இதுலே மூணு வாதம் வந்து காலு சூம்பிப் போச்சு.. எனவே ஊனமுற்றோர் சான்றிதழ் கொடுத்தால் என் பிள்ளைகள் வாழ்க்கை காப்பாற்றப்படும்..

                     அங்கையர்க்கண்ணிக்கு இந்த உலகத்தின் துன்பங்கள் அவளுடைய துன்பத்தை எடுத்துப்போய் துர்ரப் போட்டு புதைத்துவிட்டு வந்து இவளிடத்தில் நின்று விசுவரூபம் எடுத்திருந்தன.

                   ஒவ்வொரு கடிதத்திற்காய் பொருண்மை எழுதினாள்.

                    அதை எடுத்துப்போய் ரங்கராஜனிடம் காண்பித்தாள். பார்த்துவிட்டு அவளுடைய கையெழுத்தை அவன் ரசித்தான்.

                     உங்க கையெழுத்து குறுக்கி உக்காந்திருக்கிற முயல்குட்டிங்க மாதிரி இருக்கு.

                     அந்த உவமையை மனத்தில் காட்சிப்படுத்தி உடனே சிரித்தாள்.

                     நன்றி சார்.. ஆனால கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காதுன்னு சொல்லுவாங்க சார்..

                     சொல்லுவாங்கதானே...? இந்த உலகம் எதைத்தான் சொல்லலே?

                    சரி இந்தாங்க இதுக்குபேரு தன்பதிவேடு பர்சோனல் ரிஜிஸ்டர்னு  பேரு.. இதுலதான் அந்தக் கடிதங்கள் பதியணும்.. ஏற்கெனவே பதிஞ்சிருக்கிறத பாருங்க.. அதத் தொடர்ந்து எல்லாக் கடிதங்களையும் பதியுங்க.. ஏதும் சந்தேகம் இருந்தா கேளுங்க.. இதக் கத்துக்கிட்டா மத்த வேல எல்லாம் சுலபம்.. எதுவாயிருந்தாலும் நானிருக்கேன்.. பதட்டப்படாம வேல பாருங்க.. ஈடுபாட்டோட வேல பாருங்க.. எதுவும் கஷ்டமாயிருக்காது..

                       ரங்கராஜனின் வார்த்தைகள் சிட்டுக்குருவிகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்வதுபோல அவளின் தலையிலும் தோள்களிலும் வந்து அமர்ந்ததுபோல் உணர்ந்தாள்.

                        ஏனோ பார்த்த மாத்திரத்தில் அவனைப் பிடித்துப்போயிற்று அவளுக்கு.

                         ரங்கராஜ்னை ஒருமுறை பார்த்தாள்.

                         தீவிரமாக ஏதோ ஒருகோப்பில் குறிப்புக்களை எழுதிக்கொண்டிருந்தான்.

                        அங்கையர்க்கண்ணி ஒவ்வொரு கடிதமாக பதிய ஆரம்பித்தாள்.

                        எல்லாக் கடிதங்களுக்கும் சிக்கலைத் தீர்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

                       அது வருவாய்த்துறையே தவிர வறுமை தீர்க்கும் துறையல்ல என்று அங்கையர்க்கண்ணி உணரும் நாள் தொலைவில் இருந்தது.

                         நாலைந்து நாட்களில் அவள் அந்த அலுவலகத்தோடு ஒட்டிப்போனாள்.

                          தாசில்தர்ர் சொன்னார்.. பரவாயில்லம்மா.. சின்னப் புள்ளயா இருந்தாலும் நல்லா புடிச்சிக்கிட்டே.. இவ்வளவு சீக்கிரம் வேலையும் கத்துக்கிட்ட.. வெரிகுட்..

                          பெரிய சான்றிதழ் கிடைத்ததுபோலிருந்தது.

                          முதல் மாத சம்பளத்தில் அவள் அந்த அலுவலக்த்தில் இருப்போருக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தாள்.

                           எல்லாம் முடிந்தபின்.. தனியாக ஒரு பார்சலை கொண்டுவந்து ரங்கராஜ்னிடம் நீட்டினாள்.

                           என்ன இது?

                           உங்களுக்குத்தான்.. நான் முதல் சம்பளம் வாங்கியிருக்கேன்.

                          அதான் பார்ட்டி வச்சிட்டியே?

                          அது எல்லோருக்கும் பொதுவா..இது உங்களுக்குத் தனியா..

                          ஏன்?

                          ஏன்னா நீங்க மட்டும் ஸ்பெஷல் எனக்கு.

                          என்ன சொல்றே?

                          சார்.. அப்புறம் சொல்றேன்.. இப்ப வாங்கிக்கங்க யாரும் வந்துடப் போறாங்க.. என்னோட மனம் உவந்து தர்றது இது.. வாங்கிக்கங்க..

                            ரங்கராஜ்ன் வாங்கிகொண்டான்.

                           நன்றி. ஒரு நாள் என் வீட்டுக்கு வாஙக..

                           நிச்சயமா வருவேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் வருவேன்
என்றாள்.

                           ரங்கராஜ்னுக்கு எதுவும் புரியவில்லை.

                           சரி எப்ப வேணாலும் வாங்க என்றான்.

                          ஒரு வியாழக்கிழமை.. ரங்கராஜ்ன் வீட்டிற்கு அங்கையர்க்கண்ணி போனாள்.

                         வாங்க உக்காருங்க..

                          இதோ வந்துடறேன் என்றபடி உள்ளே போனான் ரங்கராஜன்.

                          வீட்டை கண்களால் சுற்றிப் பார்த்தாள். எதிரே சுவ்ற்றில் இருந்த ஒரு புகைப்படம் அவளை அதிர வைத்தது. ரங்கராஜன் மார்பளவு உள்ள புகைப்படம் அது. பக்கத்தில் ஒரு பெண் இருந்தாள்.

                           அருகே போய் பார்த்தாள். அந்தப் பெண் அழகாக இருந்தாள்.
உள்ளுக்குள் ஏதோ மடமடவென்று சரிய ஆரம்பித்ததுபோல் உணர்ந்தாள். படபடப்பாக இருந்தது.

                           ரங்கராஜ்ன் காபியோடு வந்தான்.

                           அவள் புகைப்படத்தைப் பார்ப்பதைக் கண்டு

                            வாங்க அங்கையர்க்கண்ணி.. அவள் என்னோட மனைவி..
என்றதும் அவளுடைய இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

                            முகமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

                            இந்தாங்க காப்பியைக் குடிங்க..

                            காப்பியை வாங்கும்போது கைகள் நடுங்கின.

                            அப்போதுதான் பயங்கரமாக ஒரு பெண்ணின் அலறல் கேட்டது.

                            சட்டென்று பயந்துபோய் கையிலிருந்து காப்பி டம்ளரை அப்படியே நழுவிவிட்டாள் அங்கையர்க்கண்ணி.

                                                                                                        (உயில் எழுதப்படும்)

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

குறிப்பு

                    வணக்கம்.

                    இந்த வாரக் கல்கியில் நண்பர் ரிஷபனின் ஒரு சிறுகதை
                    வெளிவந்துள்ளது.

                    கதையின் தலைப்பு எப்பவாவது ஒரு ரவுண்டு.

                    நீண்ட நாட்களுக்குப் பின் படித்த ஓர் அற்புதமான
                   மனத்தை நெகிழ வைத்த கதை அது.

                    நெடுநேரம் மனத்தைக் கட்டிப்போட்டிருந்தது.

                    கதையின் பொருண்மை.... அதை சொன்ன விதம்..
                    காட்சிகள்...எல்லாமும் வெகு நேர்த்தியாகப்
                    பின்னப்பட்டிருந்தது.

                    ஒரு நல்ல திரைக்காட்சியைக் கண்டதுபோல
                   மனநிறைவு.

                   உலக தரத்திற்கு இயங்கும் சிறுகதை அது.

                   திருமிகு ரிஷபன் கட்டாயம் அவரது பதிவில்
                  பதிவிடுவார்.. அவசியம் வாசியுங்கள்.

                    உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

                     அன்புடன்

                   ஹரணி.
                 

           

Saturday, November 2, 2013

தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்...



  அன்புள்ள

                            அனைவருக்கும் வணக்கமுடன் ஹரணி.

                            தீப ஒளி திருநாள்... தீபாவளி திருநாள்.. வாழ்த்துக்கள்...

                            இத்திருநாளில் எல்லோருக்குமாக இந்த ஆத்திசூடியையும் அறங்களையும் சமர்ப்பிக்கின்றேன்.


        ஹரணி
 
        ஹரணி

        ஹரணி                   




                                                                                                                                                                                                                          1. அன்பு யாவர்க்கும் செய்
                         


  2. ஆசைப்படு அடைந்த வாழ்வில்
                                        


                           







                                                                                                                                                                        3. இன்னல் யார்க்கும் தவிர்.                     



4. ஈர்ப்புடன் ஈகை புரி

                            








                                                                            5. உணமையே உயர்வென்று உணர்                          



 6. ஊருடன் மகிழ்ச்சி கொள்

                           







          7. எபபோதும் உழைத்து நில்


                           







8. ஏந்தி உதவி செய்



                           








                                                                                                         9. ஐயமில்லா உறவு வளர்



                          








10. ஒன்றுபட்டு வென்றெடு


                          








                                                                                   11. ஓயாமல் சுற்றம் பேண்



                          







12. ஔடதமாய் ஒழுக்கம் நினை



                          











                                                   13. அஃதே வீடுபேறென உறுதிப்படு.



Thursday, October 31, 2013

கவிதைகள்....




           கவிதைகள்.....கவிதைகள்.....


               00
                  எப்போது குறையும்
                  டீ மாஸ்டரின்
                  முகச்சூடு.

                                   000

              00
                  ஒவ்வொரு நாளும்
                   பகலும் இரவும்
                   யார் யாருக்கு?

                                    000

              00

                   ரயில் ஓடாத
                   தண்டவாளத்தில் ஓடுகிறது
                   மன ரயில்

                                  (நன்றி.  சௌந்தர சுகன்.... அக்டோபர்...2013).


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


          பேரச்சம்....

                    அப்பா இறந்துபோனபின்
                    ஒரு மாலையில்
                     பிள்ளை கேட்டான்
                    நீ எப்போ தாத்தா ஆவே?

                    ஏனென்றேன்

                    நான் அப்பா
                    ஆவணுமே
                    என்றான்

                    இயல்பாகத்தான் கேட்டான்
                    பிள்ளையென்றாலும்
                    உள்ளுக்குள்
                    பெருக்கெடுக்கிறது
                    இயல்பற்ற
                    பேரச்சம்....
               
                                    (நன்றி. ஆனந்தவிகடன்.....6.11.2013)

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                                               

                                                      இருளும் ஒளியும்...

                                                                             - ஹரணி



                       தீபாவளி கூட்டம் சாலை முழுக்கத் தெரிந்தது.

                       இரு சக்கர வாகனங்களில் விரைந்தபடியும்... சைக்கிளில் மிதித்தபடியும்... நடந்துகொண்டும்.. அவரவர்கள் கைகளில் வாகனங்களில் பளபளப்பான பல வண்ண ஜவுளிக்கடை பைகள்...

                       சில இடங்களில் இருள் கவ்விக் கிடந்தது சாலையில்

                       அந்த இடங்களில் பேருந்து நிறுத்தங்களும்... அல்லது சிறு பாலங்களும் இருந்தன.

                        துர்ரத்து தெருவிளக்கின் ஒளியில் அவை தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன.

                          கீழவாசலில் இருந்து மெயின் சாலைக்கு ஏறும் சிஆர்சி அருகில் சாலையைக் கடந்து சைக்கிளைத் தள்ளினாள் தனலெட்சுமி... நெற்றி முழுக்க வியர்வை.. தலை எண்ணெய் காணாமல் பரந்து கிடந்தது.. காதுகளில் தன சுயம் இழந்த கவரிங் வளையங்கள்... கைகளில் ரப்பர் வளையல் போலத் தோற்றம் கொண்டிருந்த வளையல்கள்... சைக்கிளின் பின் கேரியரில் அந்த மரத்துர்ள் மூட்டை இழுத்தது சைக்கிளை முன்நோக்கி தள்ள முடியாமல்.. பெரிய மூட்டை சற்று கணத்தது.. மரத்துர்ள் அடுப்புத்தான் அவளுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து.. நான்கு நாட்களுக்கு ஒருமுறை கீழவாசலுக்கு சைக்கிளில் ஏறிப்போய் மரப்பட்டறையில் வாங்கி வருவதும் நிற்கவில்லை.

                  சற்று களைப்பாக இருந்தது. வடவாற்றுப் பாலத்தின் ஓரமாக ஆஞ்சநேயர் கோயில் அருகில் சைக்கிளை சற்று நிறுத்தினாள்.. யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு தலையைக் குனிந்து பாவாடையின் கீழ்நுனியை உயர்த்தி முகத்தைத் துடைத்தாள்..பின் சட்டென்று கீழே விட்டாள். யாரும் பார்த்திருப்பார்களோ என்கிற அச்சத்தில்..

                 முகத்தைத் துடைத்த சில நொடிகளுக்குள் மறுபடியும் அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் கொப்பளித்து பிரகாசித்தன..

                  எரிச்சலாக இருந்தது.

                  ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டமில்லை. அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தாள். அவள் காயத்ரி..

                     தன்னோடு படித்தவள் என்றதும் அவளைக் கூப்பிட்டாள்.

                    காயத்ரியும் இவளைப் பார்த்துவிட்டாள்.

                    ஏய் தனம் எப்படியிருக்கே?

                     நல்லாயிருக்கேண்டி.. நீ எப்படி இருக்கே...

                     எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சுடி... என்று சொல்லி தன் கழுத்தின் மாறாத மஞ்சள் கயிற்றைக் காட்டினாள்.

                     தனலெட்சுமிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. கல்யாணம் ஆயிடிச்சா?
ஏண்டி எனக்கு சொல்லலே?  என்றாள்.

                      கோவிச்சுக்காதடி... மறந்துபோயிடிச்சி....ஆமா இன்னமுமா
மூட்டை அடிககறத விடலியா நீ? என்றாள் சிரிப்பை நிறுத்தி.

                       ஆமாண்டி. எரிச்சலா இருக்கு. ஆனா எங்க வீட்டுலே மரத்துர்ள் அடுப்புத்தானே ... நீதான் வந்திருக்கியே... இலவச கேஸ் கொடுத்ததகூட கொடுத்திட்டோம் வேண்டாம்னு... சிலிண்டர் வாங்க வருமானம் ஏது?

                        நீ பாவம்டி.. என்றாள்

                        சரி விடு..உன்ன பாத்ததும் நம்ப ஸ்கூல் ஞாபகம் வந்துடிச்சிடி..
எப்படி படிப்பே நீ?  இங்கிலிசுலேயும் சமுக அறிவியல்லேயும் உன்ன யாருமே முந்த முடியாதுடி... என்றாள் காயத்ரி.

                        அதெல்லாம் முடிஞ்சுப்போச்சுடி காயத்ரி.. எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனதிலேர்ந்து வண்டி ஓட்டறதில்லே... எங்கம்மாதான் அரவை மில்லுக்கு போவுது.. நானும் ஒரு கவரிங் கடைக்கு வேலைக்குப் போறேன்.. குடும்பம் ஓடுதுடி. . ஆமா உங்க வீட்டுக்காரரு என்ன பண்ணறாரு..

                       காயத்ரி பேசாமல் இருந்தாள்.

                       என்னடி பேசாம இருக்கே?

                       எங்கம்மா வேலை பாத்தாங்களே புளி முதலியார் வீடு...

                       ஆமா...

                       அவரு பொண்டாட்டி செத்துப்போச்சின்னு என்ன கேட்டாருன்னு எங்கம்மா எனன் அவருக்கு கட்டி வச்சிடிச்சி..

                       அடிப்பாவி.. அவரு உங்கப்பா வயசுல்ல..

                       வேற யாருடி என்ன கட்டிக்குவா...காது கழுத்த மூடக்கூட எதுவும் இல்லேன்னு அம்மா சொன்னா.. கட்டிக்கிட்டேன்.. மாடிவீடு.. நாலஞ்சு புளியந் தோப்பு இருக்கு.. அதுக்கு காவல் எங்கப்பாதான்.. அதுக்கு சம்பளம் தனியாதர்றாரு..நிம்மதியா மூணுவேளை திருப்தியா ஆசப்பட்டத சாப்பிடறோம்டி..  சரி.. வரட்டுமா.. அம்மா தேடுவா..

                          போயிட்டுவா..

                           வீட்டுக்கு வாடி... கொஞ்சம் புளி எடுத்திட்டுப் போகலாம்..

                           வரேன் காயத்ரி..

                            சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்துவிட்டு தள்ளியபடியே ஆஞ்சநேயர் கோயில் வாசலில் நிறுத்திஅப்படியே கும்பிட்டு மறுபடியும் சைக்கிளைத் தள்ளினாள்.. மரத்துர்ள் மூட்டை பின்னாலிருந்து இழுத்தது.

                           சற்று நிதானம் பண்ணி தள்ளினாள். சைக்கிள் நகர்ந்தது.
என்னவோ சைக்கிள் தள்ளுவது தனலெட்சுமிக்குப் பிடித்திருந்தது. தனக்கு
எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் ஆகட்டும். தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று தனலெட்சுமிக்கு தோணியது.

                            தெருவிளக்கின் ஒளி அவள் தலைமேல் விழுந்து பின்னால் நகர்ந்துபோனது. சைக்கிளை முன்னால் தள்ளியபடி போனாள் தனலெட்சுமி.

                                                             0000000

                                           



                                   

















Wednesday, October 30, 2013

கேட்டதும் கசிந்ததும்



              வழக்கம்போலவே இவ்வாண்டும் தீபாவளி வந்துவிட்டது.

              ஒவ்வொரு ஆண்டும் வரும். கொண்டாடுவோம்.

             என்ன இன்னல்கள் இருந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும் கொண்டாடுவது அவசியமாகிவிட்ட வாழ்க்கைச் சூழல்.

               தீபாவளி நெருங்குகையில் கடைத்தெரு நிரம்பிவழியும்.

               மக்கள் கூட்டம் சிறு ஓடையாகும் பின் நதியாகும் பின்னிரவில்
வெள்ளியும் நிலவும் மிதக்கும் அற்புதம் காணக் கண்கோடிவேண்டும்.

               அப்படியான நதியின் கரையில் நடந்தபோது காதில் விழுந்தவை

                00000000000000

                ஏண்டி.. உயிரை எடுக்கறே... அவவன் தீபாவளிக்கு நாயா பேயா
அலைஞ்சி பணத்த வாங்கிட்டு வந்தா.. படுத்தறே.. இருக்கற ரெண்டாயிரத்துக்
குள்ள எல்லாத்தையும் முடிச்சுக்க.. இல்லாட்டி எனக்கு ஒரு முழம கயிறு வாங்கிக்கொடு.. என்னால முடியாது...

               வருஷத்துக்கு ஒரு தடவை அழச்சிட்டு வர்றீங்க.. அரக்கப் பரக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயிருக்காதுங்கறது என்னோட தலையெழுத்து..
நான்தான் முதல்ல தொங்கணும்..

             ?????????????????????????????????

               ஏம்மா.. உக்காந்திருக்கே... எனக்கு இன்னொரு ஸ்பைடர் மேன்
டிரஸ் எடுத்துக் குடும்மா...

               இருடா...தம்பி.. பேசாம இரு... உனக்கு பைவ் ஸ்டார் வாங்கி
கொடுத்திருக்கேன்.. அப்பா உள்ள போயிருக்காரு வரட்டும்..

               நீ வாம்மா.. அப்பா வர்ற வரைக்கு போய் டிரஸ் பாக்கலாம்..

              என்ன படுத்தாதடா தம்பி.. அம்மா வயித்த பாரு.. தங்கச்சி
பாப்பா வேற உதக்கிறா.. வலிக்குது நடக்கமுடியல்லே..

             ஏம்மா...இப்படி வயித்த தள்ளிக்கிட்டு இந்தக் கூடடத்துலே வந்திருக்கே..
யாராச்சும் இடிச்சுட்டா.. பாத்தும்மா..

                என்னங்க ஆச்சு?

                ஏடிஎம்ல தொடச்சி எடுத்திட்டேன்.. எண்ணுர்ருவா இருக்கு.. இவனுக்கு
ஸ்பைடர்மேன் டிர ஸ் எடுத்துடலாம்.. போன தீபாவளிக்கே ஏமாத்தியாச்சு...

    ????????????????????????????????????????????????????????

                       யேய் பப்பி... உனக்கு இத்தோட நாலு சுடிதார் ஆச்சு.. போதுமா
இன்னும் வேணுமா?

                       ஒண்ணுமே புடிக்கல்ல டாடி.. ஜீன்ஸ் எடுத்துக் குடுங்க..

                       சரி.. வா..

         ???????????????????????????????????????????????

                       எனக்கே அசிங்கமா இருக்கு.. நாலுங்கிழமையுங்கூட  கையிலே
காசு இலலே.. பழையபடி வட்டிக்கு வாங்கிட்டுத்தான் வந்திருக்கேன்.. இந்தத் தடவை மாசம் சுளையா மூவாயிரம் வட்டிக் கட்டணும்..

                      என்னங்க பண்ணறது.. சமாளிப்போம்.. கேக்கற பிள்ளைங்களா
இருந்தா சொல்லி புரிய வைக்கலாம்..  ஒண்ணுக்கும் வறுமை புரியலே..

          ???????????????????????????????????????????


                       என்ன சார்.. வழக்கம்போல கோஆப்டெக்ஸ் தானா?

                       வேற பாலு.. நம்ப பட்ஜெட்டுக்கு அதான்..  பொண்ணுக்கு
வேற தலைதீபாவளி.. மாப்பிள்ளை அழைக்கப்போவணும்..

                      ??????????????????????????????????

                      என்ன சார் வேணும்.,,

                      பீட் காசு பத்துரூபா வாங்கிட்டு வரச்சொன்னாரு ஏட்டய்யா,,

                      இப்பத்தான் சார் கொடுதேன்..

                      அது வேற கணக்கு.. கொடு.. கூட்டத்துலே நேரமில்ல எடு...

                      காலையிலேர்ந்து நுர்று ரூவாய்க்கு வேவாரம் பார்த்தா ஐம்பது ருபா இவனுங்களுக்கு வாக்கரிசி போடவே சரியாயிடுது..

                       ???????????????????????????????

                        இதுக்குத்தாண்டி உன்னோட கடைத்தெருவுக்வே வரமாட்டேன்னு சொன்னேன்..

                       நாளு தவறாம அழைச்சிட்டு வர்றீங்க... இன்னிக்கு தப்பா
போச்சு?

                      ஏண்டி.. அவவன் துணி எடுப்பான்.. எப்பப் பாரு எடுத்த துணி புடிக்கலேன்னு மாத்த வரேன் இந்தக் கூட்டத்துல அவன் கன்னாபின்னான்னு
கத்துவான்..

                      நேத்தே கேட்டுட்டுதான் வந்தேன்.. பிடிக்கலேன்னு மாத்த வருவேன்னு..

                       சரி போயிட்டு வா..

                       இன்னொரு 200 கொடுங்க.

                       எதுக்குடி?

                       மாத்துற துணி கூட விலையிருந்தா...

                       அடக்கடவுளே...

                  ???????????????????????????????????


                    சைக்கிளை தள்ளியபடி .... சுக்கு காபி...சுக்கு காபி...
                    ஒரு சுக்கு காபி கொடுப்பா..

                    நீண்ட நாட்களாகவே கேட்கவேண்டிய கேள்வி..

                    இதுல என்ன கிடைக்கும்பா உனக்கு..

                    எப்படியும் 50 கிடைக்கும் சார்.. அதுக்கு மேல கெடைக்காது..
நேரமாச்சுன்னா ஆறிப்போயிடும்.. கொட்டவேண்டியதுதான்.. வலிய
போனா யார் சார் குடிப்பா.. வழிபூரா டீக்கடை இருக்கு..

                  ?????????????????????????????????????????


                            சரி போ கடைக்குள்ள..

                            அய்யா சாமி உன்ன கையெடுத்துக் கும்பிடறேன்.. இங்கேயே
உக்காரு நான்போய் துணி எடுத்திட்டு வந்துடறேன்..

                            நா... ன்.. பா...ழ்...க்க வேண்டாமா?

                           கடைக்குள் வந்து வாந்தி எடுத்திராதய்யா.. மானமே போயிடும்..

                          போடி... ஐ ம்.. டீசண்ட் பார்ட்டி.. குடிச்சிருக்கேன்.. ஆனா வாந்தி எடுக்கமாட்டேன்..

                          நாலைந்து சிறுபடிகள் ஏறுவதற்கே நேரமாகிறது.

                          ஜவுளிக்கடை வாட்ச்மேன்.. அம்மா நீங்க மட்டும் போங்க..
நீங்க உள்ளே போகதீங்க சார்.. திட்டுவாங்க..

                          ங்கோத்தா.. .. எவன்டா.. என்னை தடுக்கிறது.. நாயே...

                          தகராறு தொடங்க... அய்யோ கடவுளே என்றபடி அவனை இழுத்துக்கொண்டு திரும்புகிறாள் அந்த தர்மபத்தினி..

                            ????????????????????????


                            என்னை காவு குடுக்கன்னு பொற்ந்திருக்கு சனியன்... வாயிலும் கன்னத்திலும் மாறி மாறி விழுகின்றன சுளிர் அடிகள்... துடித்துப்போகிறான்
அந்த சிறுவன்.

                            ஏமமா இப்படி பச்சபுள்ளய அடிக்கிறே?

                            புடிவாதம் புடிச்சி நான்தான் வச்சுக்குவேன்னு அம்பது ரூபாய வச்சிருந்து இப்ப எங்கய போட்டுடுச்சுங்க.. எப்படி துணி எடுப்பேன்..

                            ஐம்பது ரூபாயில் என்ன துணி எடுப்பாள்?

                             ??????????????????????????????

                             ஏய்யா என்ன கூடடம்?

                              வயசானவரு மயங்கி விழுந்துட்டாரு?

                              ஏம்பா இந்தகூட்டத்துலே வர்றீங்க?

                             பேரப் புள்ளங்களுக்கு துணி எடுக்க வந்தாராம்..

                             சரி..

                             அவரு பணத்தை யாரோ அடிச்சுட்டாங்களாம்-

                             எவ்வளவு?

                             ரெண்டாயிரம்.. அதான் பென்ஷன் பணமாம்...

                               ?????????????????????????????



                               
                   

      

Sunday, October 27, 2013

கூமுட்டைகளும்... உளுத்துப்போய் கொட்டுபவைகளும்...




                      வளர்ந்திருக்கிறதா தமிழ் சினிமா?

என்கிற கேள்வியுடன் இந்தப் பதிவைத் தொடங்கலாம் என்று எண்ணுகிறேன். பேசாப் படமாக அல்லது ஊமைப்படமாக முதன் முதலில் வெள்ளித்திரையில் வெளிவந்தபோது சினிமாவை அப்படியொரு ஊடகத்திற்குள் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சியும் வியப்பும் ஏதோ ஒன்றை இது சாதிக்கப்போகிறது என்கிறதான எதிர்பார்ப்பிலும் எண்ணம் உருப்பெற்றிருக்கும். அந்தக் காலக்கட்டம் தொடங்கி இன்றுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான சினிமாக்கள் ஆயிரக்கணக்கான நடிகர்கள் சிலபல இயக்குநர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மனதில் நிற்கக்கூடிய இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள் இசையமைப்பாளர்கள் திரைப்படப் பாடலாசிரியர்கள் எனத் தனித்தனியாக தனித்தன்மையுடன் சினிமாக்களைப் பார்த்து அளவிடும் காலக்கட்டம் வரைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு அடையாளப் படுத்தப்பட்ட சினிமா வளர்ந்திருக்கிறதா? என்கிறே கேள்வியையே இன்றைக்கு புற்றீசல்போல மனம்போனபோக்கில் எல்லாம் தலைப்புக்களை வைத்து வெளிவந்துகொணடிருக்கும் சினிமாக்கள் மனத்தில் விதைத்துக் கொண்டிருக்கின்றன. தியேட்டருக்கு வருவதற்கு முதல்நாளே சிடியாக (திருட்டு விசிடியாக வருவது என்றைக்கும் அனுமதிக்கமுடியாத குற்றம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்) தியேட்டரைவிட்டு துர்க்கியபின் (அதிக பட்சம் ஒருவாரம் ஓடினால் அதிர்ஷ்டம்) சிடிக்களாக வந்தும் விற்பனையாகாத நிலையில் அல்லது வேறுவழியில்லை ஏதோ ஒரு சிடியை வாங்கு என்பதான நிலையில் வாங்கப்பட்டு நேரம் கழிய பார்த்துவிட்டு துர்க்கிப்போடுகிற சிடிகள்... என்பதான நிலைதான் தற்போது பெரும்பான்மை படங்களுக்கான நிலைமை.

                     தொடக்கத்தில் சினிமாக்கள் முழங்கைவரையில் கையும் பின்கழுத்துவரை ஏறிய உடம்பும் என ரவிக்கை அணிந்த கதாநாயகிகள் நாதா என்று தொடங்கி கொஞ்சம் நல்ல தமிழில் பேசிய பின் நல்ல தமிழில் பேசி நடித்த படங்கள் நடிப்புக்கும் கதாநாயகன் கதாநாயகிகளுக்கும் விரசமில்லாத கதைக்கருக்களுக்குமாக அப்புறம் சாகசங்கள் அடங்கிய வரலாற்றுப் படங்கள் புராணப்படங்கள்.. பக்தியுணர்வு பெருக்கும் படங்கள் என தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு அவை இன்றைக்கும் பார்க்கும் தகுதியை இழக்கா மலிருப்பதும் உண்மையானது.இயககுநர் பாலச்சந்தர். ஸ்ரீதர் மகேந்திரன் போன்றோரும் மற்றும் சிலரும் தொடர்ந்து தந்த படங்களில் கதை சொல்லுகிற முறையிலும் ஒருசில படங்களின் பொருண்மைநிலையிலம் மாற்றங்களும் புது உத்திகளும் அறியப்பட்டன. இவை ஏற்படுத்திய தாக்கங் களும் குறிப்பிடத்தக்கவை. தொடர்ந்து பாரதிராஜா தொடங்கிய காலக் கட்டத்துப் படங்கள் நல்ல கிராமத்தின் இயற்கைப் பின்னணியைச் சுவைக்க வைத்தன. இருப்பினும் இதுதான் சினிமாவின் சூத்திரம் என்பதுபோல அதனைத் தொடர்ந்து ஓராயிரம் படங்கள் அதே கிராமம்.. மரத்தடி பஞ்சாயத்து.. வேப்பிலை...உடுக்கடி... குளம்..குட்டை... காதல் என வட்டமடித்து வட்டமடித்து மழுங்கடித்தன.

                 இவற்றுக்கிடையில் மனித வாழ்வியலின் இருள் பக்கங்களில் ஒளியேற்றத் துடிக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய படங்களையும் எதார்த்த வாழ்வின் அவலங்களையும் நடுத்தர வர்க்க மனிதனின் பல்வேறு பிரச்சினைகளையும் கையிலெடுத்துக்கொண்டு பட்ங்களைத் தந்த இயக்குநர்கள் அதிகபட்சமாக அந்த ஆண்டின் இறுதியில் ஏதேனும் ஒரு விருதிற்காக மேடையேறி அத்துடன் காணாமல் போன கதைகளும் உண்டு. நினைவில் வந்ததைக் குறிப்பிடவேண்டுமானால்... பாரதிராஜாவின் நிழல்கள். கல்லுக்குள் ஈரம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள். பாலுமகேந்திராவின் வீடு துரையின் பசி இப்படியாக எதார்த்த வாழ்வின் நுட்ப அவலங்களையும் போராட்டங்களையும் சித்தரித்த படங்களும் ஓடி மறைந்தன. இவற்றின் தாக்கங்கள் என்பவை அவ்வளவாக  உணரப்படவில்லை. ஆனாலும் இவையும் இவற்றைத் தொடர்ந்த பல இயக்குநர்களின் ஒருசில படங்களும் கணிசமான பார்வைக்கும் வசூலுக்கும் இலக்காகியுள்ளமையும் அறியப்பட
வேண்டியவை என்றாலும் இவை தமிழ சினிமாவின் வளர்ச்சியை எந்தளவு
பாதித்திருக்கின்றன அல்லது உயர்த்தியிருக்கின்றன அல்லது எந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன என்றால் அதன் முடிவு ஏமாற்றத் தையே அளிக்கிறது. இருவேறு உச்ச துருவங்களாக விளங்குகின்ற ரஜினிகாந்தும் கமலஹாசனும் தங்களின் படங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று இயங்கியசூழலில் அவை வரவேற்கப்பட்டன. விமர்சிக்கப்பட்டன என்றாலும் அவை அந்தந்த படங்களின் இயக்குநர் அல்லது நடிகர்களின் தனிப்பட்ட நடையுடை உத்திகளின் வெளிச்சத்தையே பிரதிபலித்தன. அவை வெற்றி என்றும் அடையாளமிடப்பட்டன. ஆனாலும் உலக அரங்கின் வாசலைக்கூட அவை நெருங்குவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்பது யோசனைக்குரியது.

                    இப்படி தொடர்ந்த சூழலில் தற்போது தமிழ் சினிமாக்களில் பள்ளி. கல்லுர்ரி களங்களை அடிப்படையாககொணடு எடுக்கப்படும் காதல் கதைகள் எல்லாம் வீணான முட்டைகளாகவே ஆகிகொண்டிருக்கின்றன. பள்ளிப் பிள்ளைகளின் முகத்தோடு கதாநாயக முகத்தின் பொருத்த அது முத்திப் போன தோற்றத்தையே பிரதிபலிக்கிறது. தவிரவும் அப்படங்களின் கதைப் பொருண்மை முதல் காட்சியிலேயே ஊகித்துவிடுகிற மலினத்தையும் உள்ளடக்கியவை. தவிரவும் பெரிதான ஒரு சமுகத் தேவையின் பிரதி பலிப்பையும் சமுகப் பயனையும் துளிகூட அளிக்கமுடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆயுதங்களோடு புழங்குபவனோடு சமுகத்தில் அடாவடித்தனங்கள் செய்பவனோடு பொருந்திய காதல் கதைகளைக் காட்சிப்படுத்தியது சமுகத்தின் பயன் என்பதில் வெந்நீரை ஊற்றியதாகியது.


                   அப்புறம் நல்ல சினிமாவே தமிழில் எடுக்கப்படவில்லையா? என்கிற கேள்விக்கு எடுக்கப்படும் சினிமர்க்களை அவரவர் பர்ர்த்தே பதில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். நம்பிக்கை தருகிற படங்களைத் தருகிற தங்கர் பச்சான். மிஸ்கின் பாலா முருகதாஸ்  போன்றோரும் அந்த உயர்ந்ததின் தொடக்கத்தைத் தொடங்கி பின் அதன் சக்கையையே பெரிதாகக் காட்சிப்படுத்திவிடுகிற நிலைக்குத் தள்ளப்படுகிற வணிக சமரசத்தைத் தவிர்கக்முடியாமலும் மறைக்கமுடியாமலும் போகிறது. இருப்பினும் இவர்கள் கையில் இவர்கள் அறியாமல் உலகதரத்தின் தொடர் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் அந்தப் பயணத்தினைத் தொடங்கும்
இவர்கள் கையில் தமிழ சினிமா உலகக் கண்களின் பார்வையைச் சந்திககிற
வாய்ப்பிருக்கிறது. என்றாலும் நம்முடைய இலக்கியங்களின் மையப் புள்ளியில் அல்லது சாரத்தில் எடுத்துப் பேசப்பட்டிருக்கிற மனிதனின் உணர்வலைகளில் நாடிப் பிடிக்கிற லாவகத்தைக் கற்றுகொள்ள தமிழ சினிமா முயலவேண்டும் என்கிற ஆதங்கமுமிருக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் வான் முட்டும் அளவிருந்தாலும் அதனைத் தாண்டிய இவை மீறிய தரமும் தகுதியும் நம்முடைய தமிழ் சினிமா படைப்பாளிகளிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கையே தமிழ்  சினிமா வளரவில்லை என்று தொடக்கத்தில் கேட்ட கேள்வியைக் கேட்டு துர்ண்டுவதற்கான ஒன்றாக இருக்கிறது.

                     30 நாட்கள் 45 நாட்கள் 65 நாட்கள் ஆண்டுகள் எனப் படப்பிடிப்பு நடததி வெயிலிலும் மழையிலும் கிடந்து துர்க்கமின்றி பசிவேளை மாறியுண்டு எடுக்கப்படும் ஒரு படம் அரங்கில் ஒருவாரத்திற்குமேல் இருக்க முடியாமல் காணாமல் போகிறதே அதைப்பற்றிய சிந்தனை ஏன் பெருகவில்லை? உடனே ரசிகர்களின் ரசனைக்கேற்பவே எடுக்கிறோம் எங்களாலும் உலகத் தரத்தில் எடுகக்முடியும்? எத்தனை பேர் பார்ப்பார்கள்? என்கிற தயாரான பதில்களைச் சுமந்திருக்கும் நீங்கள் ரசிகர்களின் ரசனைக் கேற்ப எடுக்கிறோம் என்கிற நிலையில் அதுஏன் சரியாக நிற்கவில்லை. அதிகபட்சமும் குறைந்த பட்சமும் ஒருவாரம்தானே தாக்குபிடிக்கிறது. ஒரு நாளில் வெளியாகிற 10 படங்கள் என்கிற கணக்கில் யோசித்தால்கூட அந்த பத்துப் படங்களின் ரசனையும் வேறுபட்டுதானே இருக்கிறது. ஆனாலும் அந்தப் பத்து ரசனைகளின் முடிவு என்ன?  தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறதா?

                    தொலைக்காட்சித் தொடர்களில் இயங்கும் எல்லா பாத்திரங்களையும் பாருங்கள் காலைப்பொழுதிலும் சரி மாலைப் பொழுதிலும் சரி மதியப் பொழுதிலும் சரி இரவுப் பொழுதிலும் சரி.. வீட்டின் உறாலில்... படுக்கையறையில்... அடுக்களையில் எனப் பாத்திரங்கள் இயங்கும்போது மடிப்பு கலையாமல் உடையமைப்பும் தலை சிகையலங்காரமும் கழுத்து நிறைய நகைகளும் முகப்பொட்டும் இப்படித்தான் எந்த நேரமும் இருப்பார்களா? இது எத்தனை செயற்கையோ அதையே தமிழ் சினிமாவிலும் பொருத்தமற்ற பாத்திர ஒப்பனை தொடங்கி பலவும் இருக்கின்றன. எதார்த்தம் என்ற ஒன்றையே தமிழ் சினிமா மறந்துவிட்டது போலும். உலக அரங்கின் திரைப்படங்களை நகலெடுத்தது இது என்கிற குற்றச்சாட்டுக்களை சுமக்கிறோம்.. இல்லையென வாதிடுகிறோம்.. ஆனாலும் இயற்கையான
ஒரு சினிமாவை என்றைக்கு தமிழ் சினிமாவுலகம் அளிக்கும் என்பதை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது கூடவே உலகத் தரத்திற்குக் கொஞ்சங்கூடக் குறையாத தரத்தையும் தகுதியையும் சினிமாபொருண்மையையும் கொண்டிருக்கிறவர்கள் தமிழ்ச் சினிமாவின் படைப்பாளிகள் எனும் நம்பிக்கையுடன்.

                               




Saturday, October 26, 2013

எழுதப்படாத உயில்.....குறுந்தொடர்...3

எழுதப்படாத உயில்... குறுந்தொடர்...3




                          அவசரப் பிரிவிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ரங்கராஜன் வெளியேதான் காத்திருந்தார்.

                          அவர் பையன் மற்றும் சில உறவினர்கள் பக்கத்து வீட்டுப் பையன் நின்றுகொண்டிருந்தார்கள்.

                           ஏம்பா.. கவனமா பாத்துக்கக்கூடாதா?  என்றார் ரங்கராஜன் மகனிடம்.

                          என்னோடதாம்பா பேசிக்கிட்டிருந்தாங்க அம்மா.. பாத்ரூம் போய்ட்டு வரேன்னுட்டு போனாங்க... கொஞ்சநேரங்கழித்து மடார்னு சத்தம் கேட்டது... அம்மான்னு சத்தம். ஓடினேன்.. மலலாக்க விழுந்துகிடக்காங்க..

                         தரையிலே லேசா வழுக்கியிருக்கு.. ஆனா பாசி இல்லே.. கால் நழுவியிருக்கு..

                         டாக்ட்ர் என்ன சொன்னார்?

                        விழுந்த அதிர்ச்சியிலே மயக்கமாயிருக்காங்க.. பின் மண்டையிலே அடின்னாலும் பயப்படறதுக்கில்லேன்னுட்டாங்க...ரெண்டு நாள் கண்காணிப்புலே வச்சி பாத்துட்டு அழைச்சிட்டுப் போங்கன்னு டாக்டர்
சொல்லிட்டாரு..

                        ரங்கராஜன் சறறு அமைதியானார். அந்த வராந்தாவில் பெஞ்சு தேடி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

                                                  000000000000


                      வாசலில் குரல் கேட்டு வாசலுக்குப் போனாள் தேவகி.

                      அஞ்சல்காரப் பெண் கையில் ஒரு கடிதத்துடன் நின்றிருந்தாள்.

                       இந்தாம்மா...  எனற்படி கொடுத்துவிட்டுப் போனாள்.

                       அக்கா... உன் பேருக்குத்தான் வந்திருக்கு..

                      உள்ளே போனதும் அந்தக் கடிதத்தை அங்கையர்க்கண்ணி
வாங்கிக்கொண்டாள்.

                         கடிதம் பிரித்தாள். அது கடிதமல்ல அரசாங்க ஆணை.

                        அவளை வேலையில் சேரச்சொல்லி வந்திருந்த ஆணை அது.

                        உள்ளே பார்த்து கத்தினாள். அம்மா ஆர்டர் வந்துடுச்சி...

                       அங்கையர்க்கண்ணியின் அம்மா உள்ளிருந்து உறாலுக்குள் வந்தாள்.
                       எப்போ வந்துச்சி?

                      இப்பத்தாம்மா போஸ்ட் உமன் கொடுத்திட்டுப் போறாங்க.

                      எப்ப வேலையிலே சேரச்சொல்லி வந்திருக்கு?

                      நாளைக்கும்மா...

                      சரி...உனக்கு விருப்பந்தானே?

                     விருப்பமில்லாட்டியும் போய்த்தானே ஆகணும்மா என்றாள் அங்கையர்க்கண்ணி..

                      அப்போ உனக்கு இஷ்டமில்லியா?

                      அப்படிச் சொல்லலேம்மா.. போகவேண்டிய கட்டாயம் இருக்குல்லே.. அதைச் சொன்னேன்...

                       சரி அதை உங்கப்பா போட்டோகிட்ட வச்சி விளக்கேத்து..

                      அங்கையர்க்கண்ணி அதை அப்பாவின் புகைப்படத்திற்குக் கீழாக
வைத்துவிட்டு வணங்கினாள்.

                      அப்பா நீங்க இருந்து எனக்குக் கிடைக்கவேண்டிய வேலை. நீங்க இறந்துபோய் எனக்கு கிடைக்குது உங்களுக்குப் பதிலா... கஷ்டமா இருக்குப்பா.. நீங்க இல்லாம இருக்கறது..

                         கண்ணீர் வழிய வேண்டி நின்றாள் அங்கையர்க்கண்ணி.

                         மறுநாள் தாலுகா ஆபீஸ் தேடி  தானே போனாள்.

                         காலையிலேயே அம்மா அப்பா போட்டோ முன்பு விபூதி இட்டு போற இடத்துலே பாத்துக் கவனமா நடந்துக்க என்றாள்.

                          அம்மாவின் ஆசி போதும்.

                          நேராக அவள் தாசில்தாரைப் பார்த்தாள்.

                          கடிதத்தைப் பிரித்து படித்த அவர்.. அவளைப் பார்த்து
ஓ.. அந்த சிவராமன் பொண்ணா நீ.. அருமையான மனுஷம்மா.. ஒரு பாலிசி
யோட வாழ்ந்தவர்ம்மா... சரி.. வாழ்த்துக்கள்.. உன் அப்பா மாத்ரியே வேலை பாரு... எதுவானாலும் சந்தேகம் கேளு.. எல்லோரும் உதவியா இருப்போம்..

                          மேசையின் மணியை அழுத்த அலுவலக உதவியாளர் ஓடிவந்தான்.

                         இவங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்க.. நம்ப ரங்கராஜ்ன் கிட்டே கூட்டிட்டுப் போ..

                          இவர்கள் ரங்கராஜ்ன் மேசைக்குப் போனபோது அவர் மும்முரமாக ஏதோ ஒரு கோப்பில் -குறிப்பு எழுதிக்கொண்டிருந்தார்.

                         சார்... என்று அவரைக் கலைத்தான். அலுவலக உதவியாளர்.

                         நிமிர்ந்தார்.

                         மேடம் புதுசா வேலைக்கு வந்திருக்காங்க,,, உங்ககிட்ட தாசில்தார் ஐயா உடச்சொன்னாரு..

                          அங்கையர்க்கண்ணியை நிமிர்ந்து பார்த்தார்.

                          அவளும் பார்த்தாள்.

                           இருவருக்கும் பாந்தமான ஒரு அலை பரவியது.

                           உக்காருங்க.. என்றதும் உட்கார்ந்தாள்.

                           ஜாயனிங் ரிப்போர்ட் கொடுத்தாச்சா?

                           அப்படின்னா? என்றாள்.

                           சட்டென்று ரங்கராஜனுக்கு சிரிப்புவந்தது. சிரித்துவிட்டுக்
கேட்டார்.

                          என்ன படிச்சிருக்கீங்க?

                          பிபிஏ..

                          அவளுக்கு பணிசேர்வறிக்கை எப்படி எழுதுவது என்று சொல்லி எழுதச்சொன்னார்.

                          வெள்ளைத்தாள் எடுத்துக் கொடுத்தார்.

                          அனுப்புநர் பெறுநர் பொருள் பார்வை என்று வரிசையாக அழகாக பொறுமையாக சொன்னார்.

                           எழுதினாள்.

                           அவளின் கையெழுத்து  மாவில் விழுந்து ஓடும் எலியின் கால் தடங்களைப் போல அழகாக இருந்தது.

                            அதை ரசித்தார் ரங்கராஜன்.

                            அவள் எழுதி முடித்ததும் ரங்கராஜனிடம் நீட்டினாள். அவர் அதை சரிபார்த்துவிட்டு உள்ளே போய் தாசில்தாரிடம் கொடுங்க என்றார்.

                            எழுந்துபோய் கொடுத்துவிட்டு வந்தாள்.

                            அவர் அக்கடிதத்தின் மேல் சிறுகையொப்பமிட்டுத் தந்திருந்தார்.

                            ரங்கராஜ்ன் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து அவரைப்
பார்த்து  நன்றி  என்றாள்.

                            ரங்கராஜன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு சில கடிதங்களை அவளிடத்து தந்து இதைப் படித்து என்ன பொருண்மை என்று ஒரு தனித்தாளில் குறியுங்கள் என்றார்.

                           அவள் கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

                                                                          (உயில் எழுதப்படும்)



Monday, October 21, 2013

எழுதப்படாத உயில்....குறுந்தொடர்...2

குறுந்தொடர்...


                                            எழுதப்படாத உயில்.....2



                                 ரங்கராஜன் அடிக்கடி மனம் சோர்ந்துபோனாலும் வேலையில்  சோர்ந்துபோவதில்லை.

                                 செய்கிற வேலையைத் திருத்தமாகச் செய்வார்.

                                 யாரும் அதில் குறைகாண முடியாதது மட்டுமல்ல. அந்த வேலையை மறுபடியும் செய்யவேண்டியதில்லை.

                                 அத்தனை நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்.

                                 ஆனால் உலகியல் நீதி வேறு என்பதுதான் ரங்கராஜ்ன் வரைக்கும் நிருபிக்கப்பட்டிருந்தது.

                                 உண்மை உழைப்பு நேர்மை இவற்றோடு பணி செய்பவனுக்கு எப்போதும் பணியிலும் சுமை இருக்கும் வாழ்க்கையிலும் சுமை கூடியிருக்கும்.

                                ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

                                ஒருவேலையும் செய்யாமல்.. செய்கிற வேலையிலும் கவனக் குறைவாகவும் செய்கிறார்கள்...  அலுவலகத்தில் நுழைந்தவுடனேயே அரசியல்...

                                 ஆனால் லஜ்ஜையே இல்லாமல் துளிகூட கூச்சமும் இல்லாமல் மாதம் பிறந்தால் சம்பளம் மட்டும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

                                   ரங்கராஜனுக்கு அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு விஷயம் அடிக்கடி மனத்திற்குள் கேள்வியாக வந்துபோகும்.

                                   இப்படி ஊரை ஏமாற்றி மனசாட்சியின்றி வேலையும் பார்க்காமல் ஆனால் சம்பளம் மட்டும் வாங்கிகொண்டுபோகும்போது அவர்கள் வீட்டில் இப்படி உழைக்காமலே ஊதியம் பெறுகிறாயே இது உனக்கு கேடில்லையா என்று யாராவது ஒருத்தராவது கேட்கமாட்டார்களா?

                                  எப்போதோ படித்த பழமொழி நினைவுக்கு வந்துவிடும்.

                                  நச்சு மரத்தில் எப்படி நல்ல பழம் பழுக்கும்?

                                  நிச்சயம் குடும்பமே நச்சாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உடனே சமாதானமாகிவிடுவார்.

                                 ஒவ்வொரு முதல் தேதியிலும் இந்த ஓரங்க நாடகத்தை மனதிற்குள்ளே அவரே நடித்து அவரே இயக்கி அவரே பார்த்து நடத்திக் கொள்வார்.

                                  யாரோ கூப்பிட நிமிர்ந்தார்.

                                  ரங்கராஜன் சார் ஓஏபி பில் போயிடிச்சான்னு தாசில்தாரு கேக்கறாரு..

                                  அனுப்பி நாலு நாளாச்சு... கண்ணன் என்றார்.

                                  சார்.. நமக்கு வேண்டியவரு.. ரொம்பநாள் குடும்ப நண்பர்.. அவரோட சால்வன்சி பைலு தாசில்தாரு மேசையிலேயே கெடக்கு..

                                  என் மேசைக்கு வந்தா உடனே அனுப்பிடுவேன் வெங்கட்ராமன் என்றார்.

                                  அதுபோதும் சார்... ரொம்ப நன்றி..
                 
                                   சார் டீ.. என்றபடி நாயர் கடைப் பையன் டீ கொண்டு வந்தான்.

                                   என்னடா எப்படியிருக்கே?

                                   ஏதோ சாரே..  நாள் கழிஞ்சி... நிம்மதியில்லா...

                                   உனக்கு என்னடா கவலை?

                                  இந்த உலகத்துலே வந்து பொறந்திட்டா சாரே எல்லோருக்கும் கவலைதானே மிச்சமிருக்கு.. எப்ப எது நடக்கும்னு யாருக்கு தெரியும் சாரே,, அவன் ஏட்டை படிச்சுட முடியுமா? வரேன் சாரே,, அப்புறமா டீ கிளாச எடுத்துப்போறன்..

                                    இவருடைய பதிலை எதிர்நோக்காமல் போய்விட்டான்.

                                    எதார்த்தமா பேசிவிட்டுப் போகிறான் வாழ்வின் நுட்பத்தை.

                                    யோசித்தபடியே டீயைக் குடிக்க ஆரம்பித்தார்.

                                    கடைசி மிடறை உறிஞ்சத் தொடங்கும்போது ப்யூன் நடேச்ன அவசரமாக வந்து அவர் மேசை முன் நின்றான்.

                                    என்ன நடேசா?

                                     தாசில்தாரு கூப்பிடறாரு சார்...

                                    என்ன விஷயம்?

                                    தெரியலே சார்... ஆர்டிஓ கிட்டேர்ந்து தபால் வந்துச்சி.. பிரிச்சு பார்த்ததும் போய் கூப்பிட்டு வான்னார்..

                                     என்ன  பிரச்சினை என்று தெரியவில்லை. ஏதாவது கடிதம் அனுப்பியதில் இணைப்பு விட்டுப்போயிருக்கும்.

                                    என்னவாயிருக்கும் என்று ஆர்டிஓ ஆபிசுக்கு அனுப்பிய தபால்களை வரிசையா மனத்தில் புரட்டியபடி எழுந்து தாசில்தார் அறை நோக்கிப் போனார்.

                                    வாங்க ரங்கராஜன் என்றார் தாசில்தார்.

                                    சொல்லுங்க சார்.. என்றார்.

                                    உக்காருங்க... என்றார்..

                                    ரஙகராஜன் உட்கார்ந்தார்.

                                    வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி தாசில்தார் பதவி உயர்வு வந்திருக்கு ரங்கராஜ்ன்..

                                     ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எதிர்பாராதது இது.

                                      சட்டென்று இப்படி வருமென்று தெரியவில்லை.

                                      இந்தாங்க தபால் என்று கொடுத்தார் தாசில்தார்.

                                      வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.  உண்மைதான்.

                                      மனசுக்குள் மகிழ்ச்சி புரண்டு படுத்தது.

                                      நாயர் கடைபையன் பேசியது நினைவோடையில் ஒருகணம் மிதந்துபோனது.

                                      ரொம்ப நன்றி சார்.

                                       நன்றி போதாது ரங்கராஜ்ன். இன்னிக்கு சாயந்தரம் எல்லாருக்கு எஸ்கசி தரணும்.

                                      கண்டிப்பா சார்.

                                      தன்னுடைய இருக்கைக்கு வந்தார்.  என்னவோ சாதித்ததுபோலிருந்தது அந்த பதவி உயர்வு கடிதம் வந்ததும்.

                                      தன்னுடைய உழைப்பிற்கு ஒரு மரியாதை இருக்கிறது என்று நம்பிக்கை துளிர்த்தது.

                                      இன்னும் நன்றாக உழைக்கவேண்டும் என்றுதான் அவருள் தோணியது.

                                      வீட்டிற்குத் தெரிவித்தால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். வேறு யாரிடத்தில் உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளமுடியும் தன் குடும்பத்திடம் தவிர.

                                    அப்போது டெலிபோன் மணியடித்தது.

                                    பதிவறை எழுத்தர் பஞ்சநாதம் எடுத்து... ரங்கராஜன் சார்..
உங்களுக்குத்தான் போன்.. என்று ரிசிவரை பக்கத்தில் வைத்துவிட்டு போனான்.

                                   எழுந்துபோனார். போனை எடுக்கும்போதே இனி இந்த மேசையில் உட்கார்ந்தபடியே போனை எடுத்துப் பேசலாம் .

                                    ஆமாம் அந்த மேசைதான் உதவி தாசில்தார் மேசை.

                                    போனை காதில் வைத்ததும் மறுமுனையில் அவருடைய
பையன் பேசினான்.

                                     அப்பா... அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க.. பின் மண்டையிலே நல்லா அடி.. ஏகப்பட்ட ரத்தம்.. மெடிக்கலுக்கு துர்க்கிட்டு போறோம் உடனே வாங்கப்பா என்று பதட்டத்துடன் போனை வைத்துவிட்டான்.

                                      அப்படியே போனை வைத்துவிட்டு தாசில்தாரிடம் சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு ஒரு ஆட்டோ பிடித்து ஓடினார்.

                                     ரங்கராஜன் மருத்துவ மனைக்குள் நுழையும்போது அவர் மனைவி சாரதாவை அவசரப் பிரிவிற்குள் கொண்டுபோனார்கள்.

                                                             
                                               (உயில் வளரும்)