Tuesday, February 21, 2012



                 என் அன்பிற்கினிய பதிவர்களுக்கு...

                                பேருந்து நாவலின் நான்காவது அத்தியாயத்தை நியாயப்படி 14.2.2012 அன்று பதிவிட்டிருக்கவேண்டும். தொடர்ந்து வகுப்புகள் எடுக்கும் பணிச்சூழலில் பயணங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன ஓய்வெடுக்க முடியாமல். எனவே இரு வாரங்கள் கடந்துவிட்டன. மார்ச் முதல் வாரத்தில் மட்டுமே இனி பதிவிடும் சூழல். எனவே நாவலை வாசித்து கருத்துரைக்கும் அன்புள்ளங்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். மார்ச் முதல் வாரத்தில் இதனை ஈடுகட்டிவிடுவேன் என நம்புகிறேன். நன்றிகள்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                                           என்ன நியாயம் இது சந்திரா?
                                                                                    (நியாயம் கேட்கும் குட்டிக்கதை)


                     மனசுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான் சந்திரசேகர். மறுபடியும் மறுபடியும் அனலில் வாட்டப்படும் திடப்பொருளாய் மனசு நொந்துபோயிருந்தான்.

                         உலகத்தில் நியாயம் என்பது நல்லவர்களுக்கு எப்போது எட்டாக்கனியா? அதை எதிர்பார்ப்பது தவறா? என்பதுபோன்ற பல கேள்விகள் அவன் நிம்மதியையும்...மனதையும்,,,மகிழ்ச்சியையும் அரித்துக்கொண்டிருந்தன கரையான்களைப்போல...
     
                        எதிர்பார்க்கவில்லை சியாமளா இப்படி செய்வாள் என்று.

                        ஒரு ஆண்டு இல்லை  கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்து.. பல்வேறு எதிர்ப்புக்களிடையே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

                       நான் சாதிக்கப் பிறந்தவன் சாகமாட்டேன் என்று சத்தியம் செய்து உழைத்துக்கொண்டிருந்தான் இரவுப்பகலாய்...

                       அதுதான் தவறாயிற்று..

                        எதிர்வீட்டிற்கு குடிவந்தான் வெங்கடேசன் அவன் மனைவியுடன். அவன் மனைவி அழகில் குறைந்தவள் இல்லை. இவனும்  அழகில் குறைந்தவன் இல்லை.

                        எதிர்வீடு என்பதால் அறிமுகம் செய்துகொண்டது தவறாயிற்று.

                         சியாமளா நம்பிக்கைத் துரோகம் செய்தாள்.

                        அவளுக்கு சந்திரசேகர் இல்லாத இரவுகளில் வெங்கடேசன் ஆக்கிரமித்துக்கொள்ள இடம்கொடுத்தாள்.

                          விஷயம் தெரிந்ததும் துடித்து துவண்டுபோனான் சந்திரசேகர். அதைப்பற்றி கவலைப்படவில்லை சியாமளா. நாள் முழுக்க சொற்போர் நடந்தது எந்த முடிவும் ஏற்படாமல்.

                           வெங்கடேசனின் மனைவியும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான். பெண்தான் சரியாக இருக்கவேண்டும் என்று ஒரு தத்துவம் பேசிவிட்டு இயல்பாகிப் போனாள்.

                           பன்னிரண்டு வருட குறிஞ்சிப்பூ அன்பை உதறமுடியவில்லை. வெளியில் காட்டிக்கொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு விபரீத முடிவு எடுத்தான். அதன்படி மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய வம்சம் இனி இல்லாது போகட்டும் என்று குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டு வந்துவிட்டான்.

                          இதென்ன பைத்தியக்காரத்தனம் என்றார்கள். இதென்ன நியாயம் சந்திரா? என்று பலர் கேட்டார்கள்.

                            மனதாரக் காதலித்தேன். அந்த அன்பைக் கொன்றுவிட்டாள். அவளோடுதான் நான் வாழவேண்டும் எல்லாவற்றையும் உதறினேன். அவளுடைய இந்த செயலால் இனி அவளுக்கு என்னால் ஒரு வாரிசு உருவாகக்கூடாது..சரியான அன்பை உணராமல் வாழ்ந்துவிட்ட செயலுக்காக நான் என் வம்சத்தையே அழித்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்..

                            கண்ணீரால் உதிர்த்து சொன்னான்.

                            என்ன நியாயம் சந்திரா? என்று நானும் கேட்க நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போது அவன் முகத்திற்கு நேராய் கேட்க முடியாமல் போகிறேன்.


                     


                         

Monday, February 20, 2012

கதம்பக் கூடை.....



                          1980 களில் தீவிரமாக நவீன இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு...டாக்டர் செல்லப்பா படிக்கக் கிடைத்தன. அவர் முகமறியாமல் வரலாறு அறியாமல் படித்த நாவல்கள் அவை. அன்றைக்கு அவையும் என்னைப் புதிய தளத்திற்கு இட்டுச் சென்ற நாவல்களில் கலந்து கிடைத்தன வாசிப்பிற்கு. அவர் இன்றைக்கு மறைந்துவிட்டதாக இன்றைய குங்குமத்தில் படித்தபோது இப்போதுதான் அவரின் முகத்தைப் பார்க்கிறேன். இருப்பினும் அவரின் பங்களிப்பு தமிழ் நாவல்உலகில் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகிறது என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அம்மா அவர்களின் ஆன்மாவிற்கு எனது இதயபூர்வமான அஞ்சலிகளை உங்களோடு சேர்ந்து செலுத்துகிறேன்.



 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



  ஒவ்வொரு நாளும்
 கூறு போடப்படுகிறது...

  முகூர்த்த நாள் என்கிறார்கள்
  ஒரு முகூர்த்தமகிழ்ச்சியை
  அனுபவிப்பதற்குள்
  ஒரு மரண அறிவிப்பை அந்த
  முகூர்த்த நாள் வழங்கிவிடுகிறது...

  மேடுபள்ளம்போல் மகிழ்வும் துன்பமும்
  ஒன்றெனத் தத்துவமாய் உணர்ந்தாலும
   அதனை ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை...

   ஏதேனும் ஒன்றால் கண்ணுக்குப் படாத
    கத்தியாய் காலம் நின்று ஒவ்வொரு
    நாளையும் அதன் விருப்பமாய் வெட்டித்
   தள்ளுகிறது... அள்ளிக்கொள் எனும் வற்புறுத்தலோடு...

   காலையில் ஒன்றுமாய்
   மாலையில் ஒன்றுமாய்
   இடைப்பட்ட பொழுதுகளில்
   சிலதுமாய்  நாளின் கூறுகள்...

    ஒரு முதிர்ந்த பாட்டியின் சிரிப்பு
    ஒரு மொட்டின் எதுவுமறியா சிரிப்பு
    அன்றைய சேமிப்பாய் வாழ்க்கைக் கணக்கில்

    வாழ்தல் என்பது விதிக்கப்பட்டாலும்
    அது யாரின் விருப்பமுமாய் இல்லையெனும்
    கசப்பே மறுபடியும் நினைவூட்டலாய்
    திகட்டத் திகட்ட...

     அலுப்பாய் ஓய்ந்து இரவின் மடியில்
     படரும்போது ஏதேனும் ஒரு கவிதைதான்
     உனக்கு வாழ்வதற்குக் கூடுதலாய்
     தந்திருக்கிற வரம் நானென்று
     உணர்த்தி மலர்கிறது
     நாளைக்கான எதிர்கொள்ளலை
     நம்பிக்கையோடு....

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


       நேற்றுடன் அம்மாவுடனான
       சண்டை முடிவுக்கு வந்துவிட்டது...

       நேற்றுடன் அப்பாவுடனான
       ஒரே தலையணை உறக்கம்
       முடிவுக்கு வந்துவிட்டது...

       நேற்றுடன் தம்பியுடனான விளையாட்டு
       அழுகை மோதல் முடிவுக்கு வந்துவிட்டது...

        நேற்றுடன் மொட்டை மாடி... சந்தனமுல்லைக்கொடி
        காதல் பறவைகள்...ஜோவென்றதும் வாலாட்டும்
        பப்பிகுட்டி...எல்லாமும் முடிவுக்கு வந்துவிட்டன...

        பருவத்தின் முதிர்வில் ஒரு மஞ்சள் கயிறு
       எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது
       இருபத்தைந்தாண்டுகளைப் புறந்தள்ளிப்போட்டுவிட்டு...

       அம்மாபோல...அப்பா போல....
       தம்பி போல... எல்லாரும் இருக்கிறார்கள்
       உன்வீட்டில் உன் உறவுகளாய்
       அத்தனை பேரையும் அப்படியே நேசிக்கவும்
       நான் ஆவலாய்க் காத்திருக்கிறேன்...
       நீயெப்படியிருப்பாய்...?

       ஒரு சின்னப் புன்னகை... ஒரு செல்ல நிமிட்டல்...
       ஒரு மெல்லிய கைப்பற்றல்...ஒரு மயிலிறகாய் தலைகோதல்..
       ஏதேனும் ஒன்றுபோதும்..சொல் வேண்டாம்...
       சொல்லவேண்டாம்...

       தள்ளிய அறைக்குள்
       காத்திருக்கிறோம் நானும்
        என் மனமும்....

     

Thursday, February 16, 2012

உன்னோடு வாழ்தல் அரிதல்ல விதி....



                                     உருவமற்றிருக்கிறாய்..
                                     எந்த உருவத்தையும்
                                     உருவற்றாக்குகிறாய்...

                                     உன்விருப்பமாய் உன்னாட்சி
                                     தன்னாட்சி கட்டுப்பாடற்று...

                                     தவிக்கவிடுகிறாய்...
                                     சங்கடப்படுத்துகிறாய்...
                                     கோபமூட்டுகிறாய்...
                                     கொந்தளிக்க வைக்கிறாய்..
                                     கொள்ளி வைத்ததுபோல
                                     அதிர வைக்கிறாய் ஏனென்று
                                     தொட்டுக்கேட்டால்...

                                      என்ன செய்துவிடமுடியும் என்னை
                                      என்று கேட்பதில்லை..
                                      ஆனால் எல்லாமும் செய்கிறாய்..
                                      எல்லாமும் அசைவற்றுப்போகிறது...

                                       முணுமுணுக்கிறாய்...
                                       முட்டி மோதுகிறாய்..
                                       நெருப்பு வீசவும் செய்கிறாய்.
                                       நெஞ்சுபொறுக்காது வெடிக்கிறாய்..
                                       வேதனைப்படுத்தியோடுகிறாய்...

                                        உன்னை என்னதான்
                                        செய்துவிட முடியும்?
                                        அந்த துணிவுதான் உனக்கு.....
                                        நீயின்றி எதுவுமில்லை...
                                        கர்வத்தில் கரைந்திருக்கிறாய்
                                     
                                        வாழ்வது அவரவர் விருப்பமென்றாலும்
                                        வாழ்தலில் நீதான் முக்கியம்
                                        நம்பித்தான் வாழ்கிறோம்...
                                        நம்பாது வாழ்ந்தாலும் அஞ்சாதிருக்கிறாய்..

                                         உன்னோடு வாழ்தல் அரிது
                                         அரிதாயினும் வாழ்தல் விதிதான்...
                                                                          
                                         
                                          மின்சாரமே...மின்சாரமே....

                                          

Monday, February 13, 2012

அஞ்சலி


    எங்கள் வீட்டில் லவ்பேர்ட்ஸ் வளர்ப்பது என்னுடைய மகள். அதில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து வளர்த்து நிறைய பறவைகள் உள்ளன. இவ்வாறு இரு குஞ்சுகளை ஈன்ற தாய்ப்பறவை ஒன்று வயிற்றில் முட்டையுடன் இறந்துவிட்டது. இன்று. இறந்துபோன தாய்ப்பறவையைச் சுற்றி இரண்டு குஞ்சுகளும் வாயருகே வாய் வைத்து குரலெழுப்புவது மனச்சங்கடமாக உள்ளது. எனவே இன்றைய பதிவாக இறந்துபோன அத்தாய்ப்பறவைக்கு ஒதுக்கப்படுகிறது.



               
                                         பறவையாயினும்
                                         தாய்மை உயர்வானது..

                                         கண்திறவா குஞ்சுகளின்
                                         முன்னே கண்திறந்தபடி
                                          அந்த தாய்ப்பறவையின் மரணம்..
                                          உயிர்விடைபெற்ற வழியைத்
                                          துரத்தும் திறந்த கண்கள்...

                                          குஞ்சுகளின் தவிப்பு என்ன
                                          யாரின் தவிப்பையும் மரணம்
                                          லட்சியம் செய்வதில்லை...

                                          பறவையாக இருந்தாலும்
                                          பாசமாக இருந்தாலும்
                                          வாழ்வின் முடிவை வளைக்கமுடியாது...

                                           உன் குஞ்சுகள் வாழும்
                                           அமைதிகொள் தாயே...


                                         
                                       

Friday, February 10, 2012

அன்பின் தொடர் பகிர்வு



அன்பின் விருது




         
              அன்புள்ள...

                                        உறரணியின் பணிவான வணக்கங்கள்.

                                        லீப்ஸ்டர் பிளர்க்

                                        இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும்.  இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

                                       பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

                                       நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

                                  1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

                                 2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

                                 நன்றிகள்.


                               எனக்குப் பிடித்தவை ஏழு.

                               1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
                                   அப்பா.

                                2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

                               3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
                                   எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
                                   என் மகன்.

                               4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
                                    நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
                                    தனிமை
.
                               5. கடவுள் வழிபாடு,

                               6.. குழந்தைகள்.

                               7.  தமிழ்மொழியின் இலக்கியங்கள்.


                    பகிர்தல் நேரம்


                      1,  எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
                           இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
                           என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
                           எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
                                                                          நண்பன் மதுமிதா - க்கு..



                       2.  இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
                            துவள்கிற  தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
                            பன்முகத் திறனால்  பளிச்சென்று,,,உறவுகளை
                            மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..                          
                            என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...
                             
                       3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
                            மனதிற்குப்  பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
                            களைப்   பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
                           அவர்களுக்கு...

                       4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
                           தேர்வும்,,  மனதிற்கு இதமும்....ஆழமும் என
                            இயங்கிக் கொண்டிருக்கும்  சைக்கிள் மிருணாவிற்கு...

                       5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
                           வகையான  சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
                           வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
                          அவர்களுக்கு...

 
                          அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

                          இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.




                       

Thursday, February 9, 2012





                 வாழ்க்கையின் சொற்கள்
                 இறைந்துகிடக்கின்றன...



                        சொல்....   சோறு......        பதம்.....        சிரிப்பு.....

                                                   அழுகை...    நம்பிக்கை....
                         வெற்றி....
                                           தோல்வி,,,,.
                     தண்ணீர்...                                                      . கண்ணீர்....
                                                           சிதைவு...                  சரிவு...                   சத்தியம்...
                         மௌனம்..                               . மகிழ்ச்சி....


                                           கசிவு... அன்பு... பரிவு... ஏக்கம்...

                                                   எதிர்பார்ப்பு...
.  எளிமை....
                                                       துடிப்பு....
...  சகிப்பு...
                                     தகிப்பு...                          .முயற்சி....        இறுதி...
தொடக்கம்...



 
                             யாருக்கு எது கிடைக்கும்?

                             யாருக்கு என்ன தெரியும்?


                            அவரவர்க்கு அவரவர்க்குரியது ஒரு வாழ்க்கை.
                            அது அந்த வாழ்க்கைதானா?

                            உறுதி செய்யமுடிவதில்லை ஒருபோதும்
                            ஒதுங்கிவிடவும் முடிவதில்லை வேண்டாமென்றும்...

                            வாழ்ந்துதானே ஆகவேண்டும்
                            நம்முடையதல்லாதிருந்தாலும்
                            நம்முடையதாகவிருந்தாலும்
                         

                             கழிகிறது கட்டற்று....பெருக்குகிறது
                             தேவையானதுட்படவும்...வகுக்கிறது
                             வகுபடாதிருக்கும் நிலையிலும்...
                            கூட்டுகிறது எதுவாயினும்  ஒதுக்கியபின்னரும்
                             இந்த என்றைக்கும் விடைகாணமுடியாத
                             கணக்கின் கணத்தில் அசைகிறது
                             வாழ்க்கை கணக்கில்லாமல்....
                             கட்டுப்படாமல்...
                             ஆனால்  



                              கணக்கிற்குட்பட்டதுபோலவும்
                             கட்டுப்பட்டிருக்கிறேன் என்று உறுதிமொழி
                             அளித்ததுபோலவும்
                             கடைசிவரைக்கும்....

                             எனினும்
                             வாழ்தல்தானே வரம்....
                             சுகம்...உரம்...பதம்...பரிபூரணம்...
                             ஓம் சாந்தி....ஓம் சாந்தி... ஓம்சாந்தி...


                                               

                 

Tuesday, February 7, 2012

பேருந்து (நாவல்)


                                  மூன்றாம் அத்தியாயம்..........மனசு கொல்லிகள்...


                      பாண்டியன் வண்டியை நிறுத்தியதும் ஜெயக்குமாரிடம் சொன்னார். போச்சு இன்னய பொழப்பு, என்றபடி வண்டியை விட்டு இறங்கினார். எல்லோரும் அவசரஅவசரமாய் இறங்கினார்கள். கூட்டம் வண்டியை நோக்கி ஓடி வந்தது. அதற்கு முன்னால் ஒரு நடுத்தர வயதைத்தாண்டிய பெண் கையில் ஒரு துரட்டியுடன் ஓடி வந்தாள்.

                      பரபரப்புடன் காருக்கு கீழே குனிந்து பார்க்கையில் ஒரு ஆடு அடிபட்டிருப்பது தெரிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் குட்டியைப் போடும் நிலையில் இருந்தது. நடக்கமுடியாமல் நடந்து பேருந்து வருவதைக் கவனிக்காமல் தலைப்பகுதி முன்சக்கரத்தில்பட விழுந்து முன்சக்கரம் ஏறி பின்சக்கரமும் ஏறியிருந்தது. சுற்றிலும் ரத்தக்குவியல். பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

                        இந்தாப்பா டிரைவர் கொஞ்சம் வண்டிய முன்னால நவுத்து.. என்று யாரோ சொல்ல. பாண்டியன் உள்ளே ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்து சற்று தள்ளி நிறுத்தினார். பளீரென்ற வெளிச்சம் அந்த ஆட்டின்மேல் விழுந்தது.சுற்றிக் கூடிக்கொண்டார்கள். பழத்தை நான்காகக் கத்தியால் பிளந்ததுபோல அந்த ஆட்டின் மேடான வயிற்றுப்பகுதியில் சக்கரம் ஏறி அழுத்தியதில் வயிறு வெடித்து பிளந்திருந்தது. அந்த ஆடு வாய் திறந்து கத்துவதற்கு உயிர் போயிருக்கக்கூடும். கண்கள் திறந்தபடி வானத்தைப் பார்த்துக் கிடந்தது. வயிற்றுப் பகுதியில் நாலைந்து கருப்புநிறக் குட்டிகள் இறந்து கிடந்தன. ஒன்று மட்டும் லேசாக அசைவதுபோலிருந்தது- ஆனால் அது ரத்தச் சகதிக்குள் முண்டிக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது. முடியவில்லை. அதுவும் சற்று சேரத்தில் தனது கடைசிக் கதறலை என்றைக்கும் கேட்கமுடியாமல் இறந்துபோயிருந்த தனது தாயின் காதுகளுக்கு அனுப்பிவிட்டு மண்சரிவதைப் போல அந்த சாலையில் சரிந்து படர்ந்தது.

                       கையில் துரட்டியுடன் வந்த பெண் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்திருந்தாள்.

                          பாவிப்பய...இருந்தும் கெடுத்தான். செத்தும் கெடுத்தான். வாக்கப்பட்டு வந்தப்ப வச்ச நெருப்பு இன்னும் எரியுதே.. இனி என்ன பண்ணுவேன் என்று அந்த அந்த ஆட்டின் மேல் விழுந்து அழுதாள். அவள் முகமெங்கும் ரத்தம் படர்ந்தது.

                            பாவங்க... செனையாடு... என்ன பாவம் செஞ்சதோ?

                            வண்டிய எங்க ஓட்டுறானுங்க.. பாத்து ஓட்டறதில்லே.. இதுவே மனுஷங்க மாட்டியிருந்தா...

                            ஓடிவந்த கூட்டம் ஆளுக்காள் பேசினார்கள்.

                             அய்யய்யோ நம்ப தனத்துக்காவோட,,ஆடு... அவ பொழப்பே இதுலதான்.. அடப்பாவிங்களா..

                            எவன்டா அவன் டிரைவர்..அவன புடிச்சி ஒதடா மாப்பிள்ளே...

                            பொறு மாமா,,, அவசரப்படாதே...

                            ஜெயக்குமார் முன்னால் போய் பேசினார்.. இந்த பாருங்க அதா வந்து சிக்கிடிச்சி.., டிரைவர்மேல தப்பில்லே...

                               என்னக்கிடா தப்ப நீங்க ஒத்துக்கிட்டிருக்கீங்க?

                               யாரா இருந்தாலும் மரியாதயா பேசுங்கப்பா...யாராச்சும் வேணுமின்னு வண்டிய விடுவாங்களா?  ஒரு பெரியவர் பேசினார்.

                               ச்சும்மா இரு பெரிசு...இவனுங்க வண்டியிலே ஏறினா பிளைட்டு ஓட்டறமாதிரி வர்றானுங்க... ஒதுங்க விடுறதில்லே.. அதுக்குள்ள உட்டு ஏத்திப்புட்டுப் போயிடாறானுங்க...நாயம் பேசவந்திட்டே நீ?

                               ஆட்டிடமிருந்து அந்த ஆட்டுக்குரியவளை..தனத்தை பிரித்து அழைத்துப்போனார்கள்.

                               நானும் இன்னொரு நண்பர்களும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆளுக்காள் கோபம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

                             ஒருவன் பாண்டியனிடம் போய் வெட்டி வம்பு இழுத்துக்கொண்டிருந்தான். எப்படியும் அவனுடைய நோக்கம் பாண்டியனை வம்புக்கிழுத்து அடித்துவிடவேண்டும் என்பதுதான்.

                              போ..போ..அந்தப்பக்கம்.. என்று அவனைத் தள்ளிக்கொண்டேயிருந்தார்.

                               யேய்.. என்மேலயே கய்ய வைக்கிறியா நீ?  மாப்ளே இங்க் பாருடா.. செய்யறதையும் செஞ்சிப்புட்டு அடிக்க வர்றாண்டா?

                                  யேய்.. என்று ஒருகூட்டம் பாண்டியனை நோக்கி பாய்ந்தது.

                                  நானும் நண்பர்களும் குறுக்கே போனோம். விடுங்க.. அவரு அடிக்க வர்றலங்க...போங்க என்றதும்..மீறி வந்தார்கள். உடனே என்னுடைய நண்பர்... சார்  இது சரிப்பட்டு வராது.. நீங்க போலிச கூப்பிடுங்க...ரோட்டுல ஆடு வந்தது நம்ப குத்தமில்லே.. போலிசு வந்து சொல்லட்டும்.. அதப் பாத்துக்கலாம்.

                                அதற்குள் ஒருவர் வந்து விடுங்கப்பா.. அவங்கஅவங்க அவசரமா போய்க்கிட்டிருக்கோம்..பின்னாடி பாருங்க.. எத்தனை வண்டி நிக்குது... காலத்துல ஆபிசுக்குப் போகவேண்டாம்.. பேசி முடியுங்கப்பா...

                               என்னத்தயா பேசறது?  அவளோ தாலியறுத்தவ... அவ பொழப்பே இந்த ஆடுதான்.. அதுவும் போயிடிச்சி.. இனி என்ன பண்ணுவா,, சாவ வேண்டியதுதான் அவளும் ஆட்டைப்போல...

                                பின்னால் நின்றிருந்த வாகனங்களிலிருந்தும் மக்கள் இறங்கி வந்து இந்தப் பேருந்தைக் கூடிநின்றார்கள். அப்படியே வெயிலில் ரத்தம் உறையத் தொடங்கியது. நான் மணியைப் பார்த்தேன். எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

                                 ஆட்டைப் பார்த்தேன். எல்லாக் குட்டிகளும் இறந்துபோயிருந்தன. யாருக்கானாலும் விதிக்கப்பட்டதுதான் விதியும். இன்னும் நாலைந்து தினங்களில் உலகத்தைப் பார்ப்போம் என்று விதிக்கப்படவில்லை போலும் அந்தக் குட்டிகளுக்கு. அவற்றின் ராசி தாயையும் கொன்றுவிட்ட ராசி போலும்..

                                இத என்ன பண்ணுவாங்க? என்றபடி ஒரு இளம்பெண் தன் கணவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

                                 இவ்வளவு பேசறானுங்க பஸ் போனதும் ஆளுக்காள் கூறுபோட்டு எடுத்திட்டுப் போயிடுவானுங்க.. சாப்பிடறதுக்கு என்றான் அந்த இளைஞன் தன் மனைவியிடம்.

                                 பொதுவா இதுமாதிரி ஆக்ஸிடெண்ட்ல அடிபடறத சாப்பிட மாட்டாங்க..

                               ஒருவன் லேசான குடியுடன் தலையில் கட்டிய முண்டாசுடன்.. பிஞ்சாட்டுக் கறி ருசி மாப்பிளே என்றான்.

                                 எனக்கு சங்கடமாய் இருந்தது. பேசி முடித்தார்கள். ஜெயக்குமார்  கண்டக்டர் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்தார். அந்த ஆட்டுக்குரிய பெண்ணை அழைத்தார்கள்.

                                     இந்தாம்மா வா இங்கே...இதப்புடி சர்க்காரு ரோட்டுமேல ஆடு மேக்கறது தப்பு.. உன் ஆட்டுமேலதான் தப்பு... ஆட்ட அள்ளிட்டுப்போ... என்றபடி அவள் கையில் பணத்தைத் திணிக்க அழுதழுது சிவந்த கண்களுடன் தன் கையில் திணிக்கப்பட்ட அந்தப் பணத்தையே பார்த்தபடி திக்பிரமை பிடித்தவள் போலானாள்.

                                  டிராபிக் ஜாம் ஆயிடிச்சுப்பா... ஏறுங்க ஏறுங்க.. அவங்கஅவங்க வண்டிய பாத்து ஏறுங்கப்பா என்று ஒருவர் சத்தமாய் சொல்ல அவரவர் வண்டி நோக்கி ஓடினார்கள்.

                                சார் வாங்க போகலாம்.. பாண்டிய வண்டிய எடு... இன்னிக்கு ஒரு சிங்கிள் கட்டு...கிளம்பு..

                                வண்டியில் ஏறினோம்.

                                டிரைவருக்கு அருகிலிருந்த பேனட்டின்மேல் முக சோர்வாய் ஜெயக்குமார் உட்கார்ந்தார். நான் கேட்டேன். எவ்வளவு கொடுத்தீங்க?

                                   சுளையா அய்ந்துர்று ரூவா சார்.. இன்னிக்குப் படிக்காசு போச்சு.. கைப்பணமும்போச்சு... மாசாமாசம் இப்படி ஆயிடுது சார்...இதுக்கு ஒரு நடவடிக்கை கார்ப்பரேசன் எடுக்கமாட்டேங்குறாங்க... வண்டி கலெக்சன் காமிக்கலன்னா ஆயிரம் கேள்விகேட்டுக் கொல்றாங்க...

                                 பாண்டியன் முகம் சாதாரணமாகவே இறுக்கமாக இருக்கும். இப்போது இன்னும் சிறிது அடர்த்தியாய் இறுகிக்கொண்டது.

                                 ஆடுதுறையிலிருந்து காவிரி பாலத்தைக் கடந்து திரும்பிப் போகையில் பாண்டியன் வாய் திறந்தார்..

                                 தினமும் வேண்டிக்கிட்டுதான் வர்றேன்..சார்.. அதயும மீறி நடந்துடுது..ஒரு சின்ன உயிருக்குக்கூட தீங்கு வரக்கூடாதுன்னுதான் எல்லா டிரைவரும் ரொம்ப கவனமா ஓட்டறோம்.. மோட்டார் லைன் அப்படி..இப்படி அடிபடும்போது கஷ்டமாயிடுது.. நாம கொடுக்கற பணம் பத்தாது. ஆனா அத மீறி கொடுக்க எங்களோட வருமானம் பத்தாது. கார்ப்பரேசன் இதல்லாம் கண்டுக்காது. ரோட்டுல எது நடந்தாலும் கண்டக்டரும் டிரைவரும்தான் பாத்துக்கணும். மோட்டார்ல ஏறினவன் எல்லாருடைய தலையெழுத்தும் இதான் சார். அந்தம்மா கதறும்போது என்னால எதுவும் செய்ய முடியல்லே...இதனால நான் ஆடு, கோழி கறி திங்கறதே விட்டு பத்து வருஷமாச்சு சார்.. என்னமோ அத தின்னாலே இப்படி ரோடு ஞாபகம் வந்துடுது.. என்ன வேலைக்கு வேணாலும் போகலாம் சார்.. மோட்டார் வேலைக்கு மட்டும் வரவே கூடாதுசார்.. இதெல்லாம் சாப பொழப்பு சார்..

                               பாண்டியன் தழுதழுக்கப் பேசினார். எல்லா டிரைவர்களின் குரலிலும் பேசினார். எனக்குள் ஒரு பிரமிப்புகலந்த ஆச்சர்யம் வந்தது. பாண்டியன் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொன்னபோது. இப்படியும் ஒரு டிரைவர் என்று அவர்மேல் ஒரு கூடுதல் மரியாதை வந்தது.

                           நான் அந்த ஆட்டுப் பெண்ணைப் பார்த்தேன். அவள் தலையில் லேசாக ஓரிரு நரைமுடிகள் விழுந்திருந்தன. நெற்றியில் பொட்டு இல்லை. விதவை. இளம் வயதில் விதவை ஆகியிருக்கவேண்டும். கைகளில் நசுங்கிப்போன தன்னிறத்தை இழந்திருந்த கவரிங் வளையல்கள். கழுத்திலும் அப்படியே ஒரு கவரிங் சங்கலி...வெளுத்துப்போன புடவை. வறுமை அவளைப் படம பிடித்திருந்தது. எனக்கு என்னுடைய கிராமத்து சித்தி ஒருத்தி நினைவுக்கு வந்தாள். போனமாதம்தான் வைக்கோல்போரில் வைக்கோல் பிடுங்கும்போது பாம்பு கடித்து பத்துநாட்கள் ஐசியுவில் இருந்து இறந்துபோனாள்.

                          அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவளுக்கும் என்னைப் பிடிக்கும். அவளுடைய வாழ்க்கையும் இப்படித்தான் பரிதாபகரமானது. அம்மாவின் கடைக்குட்டி சின்னம்மாவின் மகள் அவள். கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் நன்றாக இருந்த கணவன் மஞ்சள் காமாலை திடீரென்று தாக்கி இறந்துபோனான். நிலைகுலைந்துபோனாள். அப்புறம் ஒரு குழந்தையோடு தோப்பில் இருந்த ஒரு சிறுவீட்டில் இரண்டு மாடுகள் சில ஆடுகளை வைத்துக்கொண்டு வாழத்தொடங்கிவிட்டாள். மிகவும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு தன்னுடைய பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள்..என்னைக் கண்டுவிட்டால் போதும் ஒரு தாயின் பரிவோடு,,தம்பி.. என்னப்பா வேணும்? என்று கேட்டபடியே படபடவென்று இளநீர் வெட்டித்தருவாள். வேண்டாம் என்றாலும் இளநீர்குடித்த சில நிமிடங்களிலேயே காபி போட்டு தருவாள். வடை சுடுவாள். தெய்வத்தைக் கண்டதுபோல் ஆடுவாள். உண்மையில் ம்னிதர்கள் மனிதர்களிடம் செலுத்தவேண்டிய அன்பும் பரிவும் பாசமும் உண்மையும் கிராமங்களிடம்தான் இருக்கின்றன என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் மருத்துவமனையில் சென்று பார்த்தபோது அசைவற்ற சருகைப்போலக் கிடந்தாள். வயிறு மட்டும் ஏறிஇறங்கி அவள் உயிருக்குப்போராடுவதைக் காட்டிக்கொண்டிருந்தது. அவள் பக்கத்தில் அவளுடைய தாய் என்னுடைய அம்மாயி அசைவற்று உறைந்திருந்தாள்.

                        தன்னுடைய ஆட்டின் மேல் விழுந்து கதறிய அந்தப் பெண் இறந்துபோன என்னுடைய சித்தியைப் போலவே எனக்குத் தெரிந்தாள். இன்னும் இந்த தமிழ்தேசத்தில் எளிய மக்களின் வாழ்க்கை அவர்கள் சொல்வதுபோல நாங்க நாதியத்தவங்க...ரோட்டுல நிக்கறோம் உதவுங்க  என்பதுபோல இன்னும் சாலைகளில்தான் இருந்து முடிகிறது. பெரும்பாலும் அடுத்தவர் கொல்லைகளிலும் அறுவடை முடிந்த வயல்களிலும்தான் ஆடுகளை மேயவிட்டு பிழைப்பார்கள். இதுதான் அவர்களின் வாழ்வாதாரம்..மனசுக்குள் இன்னும் அந்த ஆட்டுப்பெண்ணின் முகம் நிழலாடியது. பாண்டியன் அதை நினைவுப்படுத்தியிருந்தார் ஆழமாக.

                     மாயவரம் பேருந்து நிலையத்தில் நுழைந்து சிதம்பரம் போகும் கட்டையில் வ்ண்டியை நிறுத்திவிட்டு பாண்டியன் சோர்வாக இறங்கினார். ஜெயக்குமார் வாங்க சார்..டீ சாப்பிடலாம் என்றார். போய் டீ சாப்பிட்டோம்.

                     என்ன பாண்டியா அதே நினைச்சிக்கிட்டிருக்கியா? விடு,, எத்தனை பாத்திருக்கோம்?

                       ஜெயக்குமார் ஆறுதல் சொன்னாலும் பாண்டியன் முகஇறுக்கம் விடுபடவில்லை. கையும் உதடுகளும் இயந்திரம்போல இயங்க டீயை அருந்தினார்.

                        நான் எப்போதும் பேருந்தில் படியேறும்போது வலதுபக்கம் உள்ள இருக்கையில் சன்னலோரம் உட்காருவதுதான் வழக்கம். என்னுடைய பேக்கை வைத்துவிட்டுதான் டீ குடிக்க இறங்கியிருந்தேன். திரும்ப வண்டியில் ஏறும்போது என்னுடைய சீட்டிற்கு அருகில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். நன்றாக சிவந்த உருவம். ஒல்லியான தேகம். தலை முழுக்க வெள்ளிக்கம்பிகளாய் நரையோடி மிக அழகாக இருந்தது. முகத்தில் கோல்டுபிரேம் போட்ட கண்ணாடி. உதடுகள் ரத்தச்சிவப்பாய் இருக்க வெற்றிலை மென்றுக்கொண்டிருந்தார்.

                          நான் ஏறியதும் வேண்டா வெறுப்பாய் விலகுவதுபோல லேசாக கால்களை நகர்த்தி எனக்கு வழிவிட்டார். நான் ஏதோ வேறுபாட்டை அதில் உணர்ந்தேன்.

                         பேருந்தை எடுக்கப் புறப்பட்டது. அவர் என்னை நெருக்கிக் கொண்டேயிருந்தார்..ஒரு கட்டத்தில் நான் பொறுமையிழந்து..

                         ஏன் சார்? இப்படிப் போட்டு அமுக்கறீங்க? என்றேன்.

                        யாரு அமுக்குறா? எனக்கென்ன ஆசையா? கூட்டம் தள்ளுது..இப்படி பேசுறவங்க சொந்தக் கார்ல வரணும்.. எங்க உயிரை எடுக்கக்கூடாது.. அமுக்கறாங்களாம்.. என்று படபடவென்று பேசினார்..

                        என்ன இது ஒருவார்த்தை பேசியதற்கு இப்படிப் பேசுகிறார் என்று அவரைப் பார்த்தபடியே பேசாதிருந்தேன். அவர் பேசிவிட்டு என்னைக் காணாதைப்போலவே ரோட்டைப் பார்க்க ஆரம்பித்தார்.

                             ஜெயக்குமார் கத்தினார்.. பாண்டியா இரு,, டெலிபோன் நிக்குது ரோட்டுல.. லேசா அணை என்றார்.

                               காவிரிபாலத்தைத் தாண்டிய திருப்பத்தில் ஒருவர் கையில் வயர் பையுடன் வேகமாகப் பாண்டியனைப் பார்த்தபடி ஓடிவந்தார்.

                                பாண்டியன் நிறுத்தினார்.

                                ஏறியவர் நிற்பவர்கள் யாரையும் லட்சியம் பண்ணாமல் கூட்டத்தைப் பிளந்தபடி முன்னேறி போய் பாண்டியனுக்குப் பக்கத்தில் பேனட்டில் உட்கார்ந்துகொள்ள ஜெயக்குமார் விசில் கொடுக்க பாண்டியன் வண்டிய எடுத்தார்..

                             உட்கார்ந்தவர் பேச ஆரம்பித்தார்... என்ன பாண்டியா,,,டைம் பிரகாரம்தான் வண்டிய எடுப்பிங்களோ?..என்ன இன்னிக்கு இவ்வளவு லேடடு? கடலுர்ர் வண்டிய விட்டுட்டு உக்காந்திருக்கேன்..என்ன ஜெயக்குமார் சொல்றதில்லியா?,.. வண்டி இந்த லைன்லே ஓடணுமா வேண்டாமா? என்று தொணதொணவென்று விட்டுவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். திக்குவாய்போல.

                           பேசாம இருங்க..திருவிடை மருதுர்ர்ல ஓரு ஆடு அடிபட்டுடுச்சி.. பாண்டியன் மூடு அவுட்டாயிட்டான் என்றார் ஜெயக்குமார்..

                             அ..அ...அ...அவ்வளவுதானா? விடுங்க எடுத்துப்போட்டுட்டு வந்திருந்தா பிரியாணி போட்டிககலாம் என்றபடி சிரித்தார்..

                                பாண்டியன் எதுவும் பேசவில்லை.

                                நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தேன்.. நெருக்கி நெருக்கி நெருக்கடி கொடுத்துக்கொண்டேயிருந்தார். நான் எதுவும் பேசாமல் பொறுத்துக்கொண்டேன். வைத்தீஸ்வரன் சன்னதியில் சாமியை வணங்கிவிட்டு  சற்று கண்களைக் மூடி துர்ங்கலாம் என்று முடிவெடுத்தபோது படிக்கருகில் வந்து படியில் நின்றுகொண்டு ஜெயக்குமார் பேசஆரம்பித்தார்..

                                 மதியம் எப்ப வருவீங்க சார்? என்றார்.

                                 சொல்லமுடியாது ஜெயக்கமார் அது வேலை முடியறத பொறுத்தது. என்றேன்.

                                    நம்ப வண்டி சிதம்பரம் போய் உடனே பத்து அஞ்சுக்கு டிரிப் எடுத்து வரணும்.. இப்போ மாறிப்போயிடிச்சி. கும்பகோணத்தோட சிங்கிள் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.. இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம், ஆனா படிக்காசு போயிடிச்சி என்றார் வருத்தமுடன்.

                                 எனக்குப் பக்கத்திலிருந்தவர்  என்னாச்சு ? என்றார்.

                                 ஆடு மாட்டிடிச்சி சார்.. பஞ்சாயத்து..பணம் கொடுத்திட்டு வர்றதுக்கு முக்காமணிநேரம் ஆயிடிச்சி..அதான்லேட்டு...

                                 அவர்அதற்குமேல் பேசவில்லை. சீர்காழி பழைய பேருந்து நிலையம் வந்ததும் என் பக்கத்திலிருந்தவர் எழுந்து இறங்கினார். போகும்போது என்னை ஒருமுறை திரும்பி முறைப்பதுபோல போனார்.

                                 இது யார் ஜெயக்குமார் என்றேன்.

                                 அவரு போஸ்ட்மாஸ்டர் சார்.. இங்கதான் வேலை பாக்கறாரு.. நம்மோட ரெகுலர் கஸ்டமர்.. நீங்க உக்காந்திருக்கீங்களே அந்த சீட்டுதான் அவரோடது. வேற சீட்டுல உக்கார மாட்டார்..

                                  டிக்கட் போடப் போய்விட்டார் ஜெயக்குமார்.

                                  அவர் நெருக்கியதன் காரணம் புரிந்தது. சொன்னால் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்றும் தோணியது. நாளைக்கு வந்தால் கொடுத்துவிடலாம் என்று முடிவுசெய்துகொண்டேன்.

                                 பாண்டியனிடம் தொணதொணவென்று அந்த திக்குவாய் பேசிக்கொண்டே வந்தார். எனக்கே எரிச்சலாக இருந்தது. பெரும்பாலும் வண்டி ஓட்டும்போது டிரைவரிடம் யாரும் பேச்சுக்கொடுக்கக்கூடாது. அதுகூடவா தெரியாது ஒரு மனுஷனுக்கு என்று நினைத்துக்கொண்டேன்..

                                  இவனுக்கு இதே வேலையாப் போச்சு...தினமும் இப்படித்தான் உயிர எடுக்கறான் என்று யாரோ அவரைக் காட்டிக் கோபப்பட்டார்கள்.

                                   வல்லம் படுகை வரும்போது பேனட்டில் உட்கார்ந்திருந்தவர் படிக்கு வந்திருந்தார். வரேன் ஜெயக்குமார்.. என்றார்.. இறங்குங்க..பேச்சுதான் என்றபடி ஜெயக்குமார் சொல்ல வண்டியை மெதுவாக ஓட்டினார் நிறுத்தாமல் அவர் இறங்கிகொள்ள வண்டி வேகமானது-

                                  வண்டியில் லேசாக கூட்டம் குறைந்திருந்தது. என் பக்கத்தில் வந்து ஜெயக்குமார் உட்கார்ந்து இன்வாய்ஸ் எழுத ஆரம்பித்தார். அப்போதுதான் முதுகிற்குப் பின்னால் யாரோ திட்டுவதுபோன்ற குரல் கேட்டது திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்சீட்டில் சன்னலோரம் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அதாவது தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்ததையும் அவர் கவனிக்கவில்லை. கைவிரல்களை உயர்த்தி உயர்த்தி திட்டிக்கொண்டிருந்தார்.. இப்படி செஞ்சிருக்கக்கூடாது.. நானும் இப்படியாகும்னு நினைக்கல்லே..கொஞ்சம் கவனிக்காம இருந்திட்டேன்.. நீயாவது கத்தியிருக்கலாம்ல.. என்றபடி அவரது பேச்சில் தெளிவாகக் கேட்டது சொற்கள். தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார் எதைப்பற்றியும் கவலைப்படாமல்.

                                 சிதம்பரம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போது மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது. இன்னிக்கு முடிந்தது கதை என்று நினைத்துக்கொண்டேன். வருகைப்பதிவேடு அலுவலகத்திற்குப் போயிருக்கும். கையொப்பமிட முடியாது எனத் தோணியது. அவசரமாக இறங்கி வேகமாக நடந்தேன். காந்திசிலை அருகில் போகும்போது நண்பர் ஒருவர் தன் வண்டியில் எற்றிக்கொண்டார். வண்டியை விட்டு இறங்கி வேகமாக உள்ளேபோகும்போது அலுவலக உதவியாளர்வருகைப்பதிவேட்டுடன் படியிறங்கிக்கொண்டிருந்தார். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே அவரிடம் வாங்கி படியில் வைத்துக் கையொப்பமிட்டுவிட்டு மாடிப்படியேறினேன். முதல் தளத்தில் என்னுடைய அலுவலகம். என்னுடைய இருக்கையில் அமர்ந்ததும் துறைத்தலைவர் என்னை அழைப்பது கேட்டது. எழுந்து உள்ளே போனேன்.

                                போனதும் வணக்கம் சார் என்றேன்..
                                என்ன இப்பத்தான் வர்றியாய்யா? என்றார்.
                                ரோடுலே ஒரு ஆக்ஸிடெண்ட் சார்.. அதான் லேட்டாயிடிச்சி சார் என்றேன்.
                                ஏதாவது ஒரு மயிறு காரணம்.  சொல்றே நீ எப்பவும்?

                               எனக்குள் ஒரு கோபம் சுர்ரென்று கிளம்பி எழுந்தது.

                                எப்ப லேட்டா வந்து காரணம் சொல்லியிருக்கேன் சார்.. சொல்லுங்க ? என்றேன் கோபமாக..

                                சட்டென்று நிமிர்ந்து என்ன எதிர்த்து பேசறியா நீ? சொச்ச காலம் இருக்கு. வேலைய பாரு..ஏதாவது பேச்சுமயிறு பேசிக்கிட்டிருக்கே.. என்றார் மறுபடியும்.

                                 மிருகத்திடம் மல்லாடுவது வீண் என்று நான் பேசாதிருந்தேன்.

                                போ...இன்னிக்கு அந்த ஆண்டறிக்கை அனுப்பணும்..  தயார்
பண்ணு என்றார்.
                                 நான் அறையைவிட்டு வெளியே வந்தேன்.

                                 அந்த சாலையில் சிதைந்துபோயிருந்த அந்த தாய் ஆடும் குட்டிகளும் மனக்காட்சியாக விரிந்தது.

                                  தானேபேசிக்கொண்டிருந்த அந்த மனிதரும் மனதிற்குள் வந்து பேச ஆரம்பித்திருந்தார்.

                                  கைப்பேசி அழைத்தது.

                                  எடுத்து அழைப்பைத் திறந்து காதுகளில் வைத்தபோது அக்கா பேசினாள். அவள் சொன்னது மனதை அதிரவைத்தது.


                                                                                   (பேருந்து ஓடும்)


                           



                    

Sunday, February 5, 2012

கொஞ்சம் கவிதைகள்....



ஒவ் வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய் மாறுகிறது
விருப்புக்களையும் வெறுப்புக்களையும்
கடந்த அலட்சியத்தில் பயணிக்கிறது
சில சமயம் கேட்பதுபோல பணிகிறது
சில சமயம் பணிவதுபோல கேட்கிறது
எல்லாமும் மெய்யல்லவென்றுணர்கையில்
மெய்யற்றுப்போகிறது
உன்னோடு வாழ்தல் அரிதென்று விலக்கமுடியாமலும்
விலக்கவும் அதனிடமே அனுமதிகேட்கவேண்டியிருக்கிறது
எப்படியிருந்தாய் மூலத்திலென்று பார்ப்பதற்காகவே
வாழவேண்டியிருக்கிறது சொச்சத்தையும் மிச்சத்தையும்
வைத்துக்கொண்டு..

000000000000
000000000000

இம்சையாவே இருக்கிறது
இயலாமையிலும் சங்கடத்திலும்
சகித்துக்கொள்ளமுடியாமலும்
அவமானத்திலும் காயங்களிலும்
சில சமயம் சில மிருகங்களிடம்
பொழுதுகளைத் தொலைக்கவேண்டியிருக்கிறது
ஆனாலும்
வாழ்வின் கடைசி இருப்புவரை அவை
மிருகங்களாகவே வாழ்ந்து மிருகங்களாகவே சாகும்
என்ற ஊழ்வினையின் நிறைவில்
மிச்ச வாழ்வு மீந்தேறும் எப்போதும்..

00000000
00000000

ஒரு துயரத்தினை விலைபேசலாம்
விலை பேசுதல் எளிதுதான்
துயரத்திற்குப் பதிலாய் சுகத்தினையும்
சுகத்திற்குப் பதிலாகத் துயரத்தையும்
பண்டமாற்றுச் செய்யமுடியாத
நிலைதான் கடினமானது எப்போதும்
அது
வியாபாரமாக இருந்தாலும் கூட...

00000000
00000000

உன் சுகத்தையே பார்த்துப் பார்த்து
அதனையே வாழ்வின் நிலையென்று அனுபவித்து
என்னையும் சேர்த்து எதைப்பற்றியும் கவலைப்படாமல்
கடைசிவரை இருந்து கரைந்துவிட்டாய்
மனத்தையடக்கி நடித்து நின்றாலும்
ஒவ்வொரு இரவிலும் என்னுடல் கேட்கிறது
தின்ன
நெருப்பில் எரிந்த உன்னுடல் எரியாதிருந்த
நிலைபோல
பசிக்குக் கொடுப்பதுதானே தர்மம்....

000000
000000

எங்கு எரிகிற சுடராயினும்
அதற்குள் உருவம் காட்டாத
ஒரு கண்ணாடி நிற்கிறது
அதற்குள் யுகங்களின் இசை
யாரும் வாசிக்க எப்போதும்


------ (ந்ன்றி ..... உயிர் எழுத்து (இலக்கிய மாத இதழ்), பிப்ரவரி 2012)
                            படம் - உயிர்எழுத்து.
                             

Friday, February 3, 2012

குழந்தைகள் தோட்டம்



                        நண்பகலுக்குப் பின் பள்ளி விட்டதும் குழந்தைகள் எல்லாருமே அந்த அரக்கனின் தோட்ட்த்திற்கு விளையாட வந்துவிடுவார்கள்.  அது மிகப்பெரிய தோட்டம்.  அழகான தோட்டம் எங்கும் மிருதுவான பசுமைப் புற்கள். வானின் சுட்ர்களைப் போல அழகான பூக்கள். வச்ந்த காலத்தில் அற்புதம் கூடியிருக்கும். அங்கு மரங்களில் வந்து உட்கார்ந்து பாட்டுப்பாடும் பறவைகளின் பாட்டில் மயங்கி பிள்ளைகள் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ரசிப்பார்கள்.

                       இப்படிப்பட்ட சூழலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த அரக்கன் தோட்டத்தில் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு ஏய் குழந்தைகளே.. இது என் தோட்டம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் இங்கே? இனி இங்கே விளையாட யாரையும் நான் அனுமதிக்கமாட்டேன் என்று கத்தினான்.

                     உடன் தோட்டத்தைச் சுற்றி பெரிய தடுப்புச்சுவர் எழுப்பி அன்னியர்கள் உள்ளே வராதீர்கள் என பலகையில் எழுதி மாட்டி வைத்தான்.

                    குழ்ந்தைகள் மிகவும் வருத்தமுற்றார்கள். சாலையில் புழுதியும் கற்களும் இருந்ததால் அங்கு விளையாட முடியவில்லை. எனவே அரக்கன் தோட்டத்துச் சுவர்களைச் சுற்றிச்சுற்றி வந்து கவலை தோய்ந்த முகமாக காட்சியளித்தார்கள்.

                  எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் இந்தத் தோட்டத்தில்...இப்போது எல்லாம் போய்விட்டது. தங்களக்குள் பேசி வருத்தப்பட்டார்கள்.

                   வசந்த காலம் வந்தது. எங்கும் சிறு பறவைகளும் பூக்களும் என மகிழ்வாக இருந்தது. ஆனால் அரக்கனின் தோட்டம் மட்டும் மிகவும் சோகமாகக் காட்சியளித்தது.

                   அவன் தோட்டத்தில் மட்டும் கடுமையான குளிர். அரக்கன் யோசித்தான். வசந்த காலம் ஏன் என் தோட்டத்திற்கு வரவில்லை? என்று தன் கோட்டைக்கு முன் உட்கார்ந்து யோசித்தான். பதில் கிடைக்கவில்லை அவனுக்கு.

                   ஒரு நாள் அரக்கன் படுக்கையை விட்டு எழும்போது அருமையான இனிமையான ஒரு பாடலைக்கேட்டான். அதுபோன்ற ஒரு பாடலை அவன் இதுவரை கேட்டதில்லை. அப்போது அவன் தோட்டத்தில் நல்ல காற்று இருந்தது.

                 கடைசியாக வசந்தம் என் வாசலுக்கு வந்துவிட்டது என எண்ணியபடியே படுக்கையைவிட்டு துள்ளி எழுந்துவெளியே வந்தான். வந்தவன் அந்தக் காட்சியைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டான்.

                அது அழகான காட்சி. அரக்கன் எழுப்பிய தடுப்புச்சுவரில் ஒரு ஓட்டை செய்து அதன் வழியே குழந்தைகள் தோட்டத்திற்குள் நுழைந்து மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்திருந்தார்கள்.

              குழந்தைகள் மறுபடியும் வந்ததும் தோட்டம் மகிழ்ந்தது. மரங்கள் பூத்தன.  பறவைகள் உள்ளே வந்து பாட்டிசைத்தன. அது மிக அழகான காட்சியாக இருந்தது.

                தோட்டத்தில் துர்ரமாய் இருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு பையன் ஏற முயன்று கொண்டிருந்தான்.
 
                அரக்கனின் மனம் இளகிவிட்டது. மிகவும் வருத்தப்பட்டான். சே எவ்வளவு சுயநலமாக இருந்துவிட்டேன். இந்த தடுபபுச் சுவரை உடைத்தெறிவேன். இனி இது குழந்தைகள் தோட்டம் என அறிவித்தவன் உடனே கதவையும் திறந்து வைத்தான். பின் தோட்டத்திற்கு உளளே போனான்.

             அவனைக் கண்டதும் குழந்தைகள் பயந்துஓடின. ஒரு சிறுவன் மட்டும் ஓட முடியாமல் நின்று விடவே அவனருகே போய் அவனை அன்போடு துர்க்கி ஒரு மரக்கிளையில் உட்கார வைத்தான் அரக்கன். அந்த சிறுவன் அரக்கன் கழுத்தை வளைத்துப் பிடித்து முத்தமிட்டான். இதைப் பார்த்த குழந்தைகள் மீண்டும் தோட்டத்தை நோக்கி ஓடி வந்தார்கள். உடனே வசந்தமும் வந்தது.

           குழந்தைகளே இனி இது உங்கள் தோட்டம் என்று பெருங்குரலில அரக்கன் அறிவித்தான்.

           குழந்தைகள் பயம் ஒழிந்து அரக்கனோடு சேர்ந்து விளையாடினார்கள். வசந்தம் நிறைந்த அந்த தோட்டம் அழகாய் இருந்தது.

            ஆனால் அரக்கன் மனசுக்குள் அவனை முத்தமிட்ட சிறுவன் ஞாபகமாகவே இருந்தான்.

             குழந்தைகளிடம அவனைப் பார்த்தால் நாளை வரச்சொல்லுங்கள் என்றான் அரக்கன்.

            நாங்கள் இதற்கு முன்பு அவனைப் பார்த்ததே இல்லை என்றதும் அரக்கன் வருத்தப்பட்டான். அடிக்கடி அவனையே நினைத்துக்கொண்டான்.

         வருடங்கள் பல ஓடின.

           அரக்கனுக்கு வயதாகி முதுமையடைந்தான். தோட்டத்திற்கு முன் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து குழந்தைகள் விளையாட்டை ரசித்தான். இந்த தோட்டத்தில் மலர்கள் அழகானவை. அதைவிட் குழந்தைகள் அழகானவை என அடிக்கடி அரக்கன் சொன்னான்.

            ஒருநாள் காலை உடைமாற்றும்போது ஒரு அற்புதக் காட்சியை அரக்கன் பார்த்தான். தோட்டத்தின் மூலையில்ஒரு மரத்தில் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று ஏராளமான பூக்கள்.. அந்தப் பூக்களைச் சுமந்த கிளைகள் பொன் நிறமாய் மின்னின. பழங்கள் வெள்ளி நிறத்தில் சுடர்விட்டன. மரத்தின் கீழே வெகு நாட்களாய் அரக்கன் நேசித்த தேடிய அந்த சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

           குழந்தை அருகில் போன் அரக்கனுக்கு ஏதோ செய்தது. திடீரென்று அந்தக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கினான். யார் நீ? என அன்பாய் விசாரித்தான்.

           குழந்தையோ கள்ளங்கபடமில்லாமல் சிரித்தது.

           முன்பொருமுறை முறை நான் இந்தத்தோட்டத்தில் விளையாடினேன். இன்று என்னுடன் வா.. என் தோட்டத்தில் விளையாட,, அதுதான் சொர்க்கம்.

                    குழந்தைகளே இந்தக் குழந்தை யாரென்று தெரிகிறதா உங்களுக்கு?



                                                                மூலம் - ஆங்கிலத்தில் ஆஸ்கர் ஒயில்ட்

                                                                 தமிழில் உறரணி..


                       (எனக்கு மிகவும் பிடித்த கதை) நான் மொழிபெயர்த்த பல சிறுவர் கதைகளுள் இது ஒன்று. கால இடைவெளியில் தொடர்ந்து பதிவு செய்வேன்.

Wednesday, February 1, 2012

என் அப்பாவின் கவிதைகள்...


                   அப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு நோட்டு கிடைத்தது. அதில் சில கவிதைகளைப் பார்க்கமுடிந்தது. அப்பா அழகாகப் படம் வரைவார்கள். எழுத்து அழகாக இருக்கும். கலையுணர்ச்சியோடு எதையும் செய்வார்கள். நான் எம்.ஏ படித்தபோது வீட்டில ஒரு பெயர்ப்பலகை வைத்தேன். அதன்பின் தொடர்ந்து நான் படித்த படிப்புக்களையெல்லாம் நான் முடித்தவுடம் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி எழுதி என் பெயருக்குப் பின்னால் ஒட்டியது நினைக்கையில் மனம் கசிகிறது.

                   இப்போது அந்த குறிப்பேடு என் சகோதரியிடம் உள்ளது. அதனைப் பெறமுடியாத சூழலும் உள்ளது. அதில் இருக்கும் கவிதைகள் எல்லாம் வேடிகக்கையானவை மருத்துவ சிகிச்சை பற்றிய வேடிக்கைக் கவிதைகள். வாய்ப்பு அமையும்போது எல்லாக் கவிதைகளையும் பதிகிறேன். இப்போது சான்றுக்கு மட்டும் நினைவில் இருப்பதைக் குறிப்பிடுகிறேன்.

                 
                          தலைவலிக்கு மருந்து (கவிதை)

               
                         தலைவலி கண்டதென்று
                         தவிக்கின்ற மனிதர்காள்
                         தயவுடன் மருந்தைக் கேளீர்
                 
                         மலைதனில் பெருத்தத்தக்கக்
                        கல்லைத் துர்க்கி வந்து
                         தலைவலி உள்ள பேர்
                         தலையைத் தாங்கி
                         ஓங்கியே போட்டால்
                         தலைவலி தீர்ந்து
                         சொல்லாமலே துர்ங்குவார்..


                                             மருந்து கிரயம் 4 அணா (1952 இல் எழுதியது)

இன்னுமொரு கவிதை...

                               
                               சகல ரோக நிவாரணி


                               தஞச்ர்வூர் தலையாட்டி
                               மன்னார்குடி மண்வெட்டி
                               கும்பகோணம் கோமுட்டி
                               உலக்கைக் கொழுந்து
                               சித்தானை வேரு

                               குடிபோன வீட்டில்
                               அடிபோன சட்டியை எடுத்து
                               வாயோடு சேர்த்து
                               ஆயிரம் பொத்தலிட்டு,,,,

                               பதக்கு தண்ணீரை எடுத்து
                               உழக்குத் தண்ணீராக்கி
                               சுண்ட வைத்து
                               உள்ளங்கையில் வைத்து
                               புறங்கையை நுர்றுமுறை நக்க

                               எந்த வியாதியும் பட்டென்று
                               போகும்..

                                யாரிடமும் சொல்லாதே,,,

                                                                    கிரயம் இரண்டனா,,,


                     முழுக்கவிதை மறந்துவிட்டது. ஆனால் எல்லாம் வேடிககையாக இருக்கும், முழுக்க முழுக்க நகைச்சுவையாகப் படிப்பதற்கு.

                         குறிப்பேடு கிடைத்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன். அப்பா இறந்த பிறகுதான் ஒவ்வொரு நாளும் அப்பாவின் நினைவு படுததிக்கொண்டிருக்கிறது. அவரைப் பற்றிய நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.