Saturday, August 15, 2015

கொத்துச் சிரிப்போடு,,,



              இன்று கல்கியில் வெளிவந்துள்ள என் கவிதை


                                                      அம்மாவின்
                                                      கைப்பிடிகளை அகற்றி
                                                      மேலே விழுந்த
                                                      நீர்ப்போர்வையுடன்
                                                     வெற்றுடலோடும்
                                                      கொத்துச் சிரிப்போடும்

வீட்டின் மையத்தில் வந்து
நின்று உடலுலுக்கும்
தருணத்தில் மத்தாப்புகளாய்
சிதறிவிழும் நீர்த்துளிகளுடன்
ஆனந்தத் தாண்டவம்
நடத்தும் குழந்தை



உங்கள் வீட்டிலிருந்தால்
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதாய்ப் பொருள்...

(நன்றி. கல்கி. 23 ஆகஸ்ட் 2015)
         

Tuesday, July 28, 2015







பாரத தேசத்தின் பண்பாட்டு அடையாளம்
மாண்பமை மனிதாபிமானமிக்க மனிதர்
பிள்ளைகளின் மகிழ்ச்சியாய் விளங்கிய மேதை
எளிமையும்...இனிய புன்னகையும்..
இறுதிவரை தொண்டும் ஆற்றிய எம்மான்
காலத்தின் அழிக்கமுடியாத தடம்
விண்வெளி நாயகன்
வீறார்ந்த அறிவியல் விஞ்ஞானி
விருதுப் பறவைகள் பல தஞ்சமடைந்த வேடந்தாங்கல்
பல்கலைக்கழகங்கள் பல போட்டிப்போட்டுக்கொண்டு
முனைந்து முன்வந்து வழங்கிய முனைவர் பட்டங்கள்
எண்ணங்களை எழுச்சிமிகு பாரதத்தின் வல்லமையைப்
பெருக்க எழுதிய எண்ணற்ற புத்தகங்கள்
கடவுள் இந்தத் தேசத்திற்கு அனுப்பிய அறிவியல்
தூதுவன்...

உணர்வுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல்
உள்ளம் உடைந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது
நினைக்குந்தோறும் நெஞ்சம் வெடிக்கிறது
வேரிழந்த செடியாய் ஆனது பாரதம்
அறிவியலின்...அறவியலின்... தகப்பனை
பிள்ளைகள் நாம் இழந்துவிட்டோம்
எதனைக்கொண்டு ஈடுசெய்முடியாத பேரிழப்பாய்..
அய்யா... அப்துல் கலாம்...உங்களை இனி என்று
காண்போம்?....
000

வல்லமை மிக்க தேசம்
வலிமையான இளந்தலைமுறை
வளமான பலமான கனவுகள்
யாரும் எதனாலும் நெருங்கிவிடமுடியாத
அரணாகக் காக்கவேண்டும் பாரதத் தேசத்தை
என்றே
பல்வகையானும் காலம் முழுக்கச் சொல்லி
இப்போது
இறைவன் அழைக்க விடைபெற்றுக்கொண்டுவிட்டார்
அப்துல் கலாம்..
0000


அவரின் எண்ணங்களை
நாம் வரமென அவரவர் நெஞ்சில்
அணையாச் சுடராய் பொத்தி
அதன்படி பாரத தேசம் பயனுற
உழைக்கும் ஒவ்வொரு எழுச்சியிலும்
அப்துல் கலாம் என்கிற மாமனிதர்
உயிர்த்தெழுவார்... நிச்சயம்...சத்தியம்..
000


மரணம் எப்போதும் என்னை
அச்சுறுத்தியதில்லை
எல்லோருக்கும் வந்தால் போய்த்தானே
ஆகவேணடும் என்கிற மனஉறுதியுடன்
வாழ்ந்த மேதையே...
சாதலும் புதுவதன்று என்று கணியன்
பூங்குன்றன் உரைத்ததை உணர்வால்
உணர்த்தியவரே...
உங்களின் எண்ணங்களை நாங்கள்
போற்றிப் பாதுகாப்போம்..
000


விண்ணில் பகலில் சூரியனும்
இரவில் நிலவும் இந்தப் பூமியைக்
காப்பதுண்டு...
இந்த மானுட வானில் நீரே
சூரியனும் நிலவுமாய்
நின்றவரே... அப்துல் கலாம்
காலம் என்றைக்கும் கலைக்கமுடியாத
கனவே...காலமானாலும் பாரதத்தின்
காலமாய் ஆகி நின்றவரே...
போய்வாருங்க... மனமசைக்கிறோம்..
காலத்தை வென்ற கலாமே...
காலங்காலத்துக்கும் பாரத தேசம்
பனிக்க நினைத்திருக்கும் நெஞ்சங்களில்
நிறைய செதுக்கி வைத்திருக்கும்
உங்கள் கனவுகளில் இந்த தேசம்
இன்னொரு புதிய பிறப்பெடுக்கும்
நம்பிக்கையுடன்
மனமசைக்கிறோம்... சென்றுவாருங்கள்
ஐயா..
000

Monday, June 29, 2015

                                 நட்பில் தாய்மை...

            இடுக்கண் களைவதாம் நட்பு என்று வள்ளுவம் உரைக்கிறது. மிகச் சிறந்த நட்பை எல்லா இலக்கியங்களும் பேசியிருக்கின்றன.  இருப்பினும் அதியமானுக்கும் ஔவைக்கும் இருந்த நட்போடு எதனையும் ஒப்பிடமுடியாது என்றே தோனுகிறது.  இருவருக்கும் தொடங்கிய நட்பு முரண்பாட்டில்தான் தொடங்கியது பின் அதியமான் புரிந்துகொண்டதாலும் புலவர்களை மதிக்கும் மாண்பினாலும் நட்பாக மலர்ந்தது.
              ஔவையின் மீது கொண்ட  நட்பின் காரணமாக தன்னுடைய வாழ்நாளையே குறைத்துக்கொள்ள மனம் துணிந்த மாண்பை அவன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்தவன்.  ஔவையும் அவன் மீது கொண்ட  நட்பைப் பல பாடல்களில் உரைத்து மேன்மைப்படுத்துவதையும காணமுடிகிறது.
                                    ஆதல்  நின்னகத் தடக்கிச்
                                    சாதல் நீங்க எமக்கீந் தனையே
சாதல் (மரணம்) நீங்க எனக்குத் தந்த உன் மாண்பை என்னவென்று சொல்வேன் என்கிறார் ஔவை அதியமானின் உயர்ந்த பண்பை.
                        அவனுக்காகத் தூதுபோகிறார் தொண்டைமானிடம். அது வெகு சிறப்பான பாடல்.  இருவருக்குமான நட்பின் உச்சம் அதியமான் இறந்துபோக ஔவை பாடிய பின்வரும் பாடல்தான். உலகின் சிறந்த நட்பிற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.


                        சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
                        பெரியகட் பெறினே
                        யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
                        சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
                        பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
                        என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
                        அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே
                        நரந்தம் நாறும் தன்கையால்
                        புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
                        அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீ
                        இரப்போர் கையுளும் போகிப்
                        புரப்போர் புன்கண் பாவை சோர
                        அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
                        சென்றுவீழ்ந் தன்று அவன்
                        அருதிறத்து இயங்கிய வேலே
                        ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
                        இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
                        பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
                        சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
                        ஈயாது வீயும் உயிர்தவப் பலவே (புற.235)

            அதியமானுக்குக் கொஞ்சம் கள் கிடைத்தால் முதலில் எனக்கு அளித்துவிட்டுப் பின் எஞ்சியதைத் தான் உண்பான். நிறைய கள் கிடைத்தால் அப்பவும் அப்படியே செய்வான். அதுபோன்றே சிறிது சோறாக இருந்தாலும் பலருடன் சேர்ந்து உண்பான்.  சோறு அதிகமாக இருந்தாலும் அப்படியே பலருடன்தான் சேர்ந்து உண்பான்.  அது எல்லாம் போய்விட்டது.  எலும்புடன் நிறைய கறி சேர்ந்திருக்கும் கறியை (என்பொடு தடிபடு) எங்களுக்குத் தருவான். போர் என்றால் தான் மட்டும் சென்று துணிவாய் எதிர்கொள்வான். ஈயும் பண்புகொண்டவனாதலால் மட்டுமன்றி வருவோர்க்கு மலர் மாலையைச் சூட்டிசூட்டி அவன் கைகள் பூவாசத்துடன் இருக்கும். அந்தக் கையால் புலால் (கறி) நாற்றம் வீசும் என் தலையைத் தடவிக்கொடுப்பான். இப்போது எல்லாம் போய்விட்டது. அவன் இறந்துவிட்டான். அவன் மார்பில் தைத்த அம்பானது (அவனைக் கொண்ட மரணம்என்கிற அம்பு) முதலில் பாணரின்  மண்டை துளைத்தது, பின் அவனிடம் இரப்பவரின் கையைத் துளைத்தது,  கடைசியாக என்போன்ற புலவரின் நாக்கில் வந்து தைத்தது என அதியமான் இறந்துபோனதால் யார் யார் வாழ்வெலாம் அழிந்தது என்கிறார். எனவே இனிப் பாடுவோரும் இல்லை. பாடுவோர்க்கு வேண்டிய அருள்காட்டும் ஈகுநரும் (அதியமானும்) இல்லை.

                        இப்பாடலில் பூ வாசம் அடிக்கும் கையால் புலால் நாற்றம் அடிக்கும் தலையைத் தடவுதல் என்பதுதான் தாய்மைக்குரிய பண்பாகும். அதாவது அதியமான் தாயாகவும் ஔவை பிள்ளையாகவும் இருக்கின்ற நட்பின் மாண்பை இதைவிட யாரால் சொல்லமுடியும்?

                        இந்தப் பாடலில் இன்னொரு சிறப்புமிருக்கிறது. இதைத்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிட்டு இது இலக்கணம்  பிறழ்ந்த பாடல் அல்லது இலக்கண வரம்பை மீறிய பாடல் என்று குறிப்பிட்டு இவ்வாறு ஔவை பாடக்காரணம் ஔவைக்கு இலக்கணம் தெரியாதா என்பதல்ல பாடலுக்கு உணர்ச்சி முக்கியம் என்பதால் சீர்கள் மாறி மாறி வருகின்றன. எனவே புதுக்கவிதைக்கான வித்து சங்க இலக்கியக் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு பல்வகை சிறப்புடைய பாடல் இது.  அதியமானின் சிறந்த போர்த்திறன்,  மிகச்சிறந்த கொடைத்தன்மை,  ஔவையின் மாண்பு என இங்கு ஈவோரும் சரி பெறுவோரும் சரி சரியான தகுதியில் இருக்கும் பான்மையையும் இப்பாடல் சுட்டுகிறது. அனுபவியுங்கள்.

    




Friday, June 26, 2015




அடுத்தவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தொடங்குகிற 
அந்த தருணத்திலிருந்து நம்முடைய தவறுகளை
 மறைக்கத் தொடங்குகிறோம்.

000


ஆயிரம் அரசியல் இருக்கட்டும்
ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்
ஆனாலும் ஹெல்மெட் அணியுங்கள்
ஊனமுற்றாலும் உயிர்காக்கும்


0000


விடுமுறை நாளில்
மாடத்தில் முட்டையிட்டிருந்த
புறாவின் முட்டைகள் உடைந்துகிடந்தன
நான் அந்தப் பூனையைத் தேடுகிறேன்
கெட்டுப்போகாது என்று பிரிட்ஜில் வைத்த
கெட்டுப்போன பால்பாக்கெட்டை
எண்ணியபடியே
பாலும் கெட்டது முட்டையும் கெட்டது


000
Like · Comment · 

Wednesday, June 24, 2015

ஔவையின் நல்வழியிலிருந்து ஒரு பாடல்.



கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றுஎடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயின் சொல்.



பாடலின் பொருள்


படிக்காதவனாக இருந்தாலும் அவனிடத்தில் காசு இருந்தால் எல்லாரும் சென்று அவனை எதிர்கொள்வர். கொண்டாடுவர். காசில்லாதவன் என்னதான் படித்திருந்தாலும் அவனை மனைவியும் வெறுப்பாள், ஈன்ற தாயும் வேண்டாது மறுப்பாள் ஒருபோதும் செல்லாது அவன் வாய் சொல். செல்லாச் சொல்.


பாடலின் பொருளை எளிதில் புரிந்துகொள்ள சற்று விரிவாக்கி எழுதியிருக்கிறேன்.


என்றைக்குப் பாடிய பாடல் இது. இலக்கியம், மனிதநேயம், படைப்புக்கள், குழுக்கள், லட்சியம், சாதனை, நேர்மை...மனசாட்சி... ஒழுக்கம்.. போடுங்கள் குப்பையில் என்று சொல்லலாமா?
Like · 

Sunday, June 21, 2015

நிகழ்வுகள்....நிகழ்வுகள்...

நிகழ்வுகள்...
1, நேற்று நண்பர் கல்வெட்டியல் பேராசிரியர் சோ.கண்ணதாசன் அவர்கள் அலைபேசியில் அழைத்து செய்திசொன்னார். செய்தி இதுதான்.
அரசியல் காரணமாக தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்வழி பயிற்ற்ல் என்பது அருகிகொண்டிருக்கிறது. மொழிப்பாடமாக வேண்டுமானால் ஆங்கில்ம் மட்டுமல்ல எந்த மொழியும் இருக்கட்டும். அது பிரச்சனையில்லை. அடிப்ப்படையில் ம்ற்ற பாடங்களைக் கட்டாயம் தமிழ்மொழியில்தான் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக கவலைகொண்ட தமிழறிஞர்கள் கூடிய நிகழ்வுதான் அது.
கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இந்நிகழ்விற்கு அடிப்ப்படை காரணம் கோவை பேரூர் ஆதினம். அவர்க்ள தொடங்கியுள்ள வளர்தமிழ மன்றத்தின் சார்பாக இயக்கம் போல இயங்கி தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் தாய்மொழிக்காக அயராதுபாடுபட்டுவ்ரும் தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைந்து ஒன்றாகப் போராடி தமிழ்வழி பயிற்றலைக் கட்டாயமாக்க அரசினை வற்புறுததவேண்டும் என்பதுதான் நோக்கம். மூத்த ஆசிதினத்தில் அருளாசியுடன் இளையபட்டம் அருள்மிகு வேதாசலம் அடிகளார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி, கரூர், திருச்சி என்று தொடங்கி தஞ்சை வந்திருந்தார்கள். குறுகிய காலக் கூட்டம் என்றாலும் நோக்கம் மிக உயர்வானது பொறுப்பானது அவசியமானது என்கிற நிலையில் கிட்டத்தட்ட ஒரு வகுப்பறை முழுக்க தமிழார்வலர்கள் கூடியிருந்தார்கள்.
கூட்டத்தினை ஒருங்கிணைத்தவர் தமிழுக்காக கடைசி மூச்சுவரை செலவழித்து மறைந்த தமிழ்ப் புலமையாளர், பேரறிஞர் தெய்வத்திரு சொ.விருத்தாசலனார் அவர்களின் திருமகனார் திருமிகு பாரி அவர்கள்.
வரவேற்புரையை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் கணிதவியல் ஆசிரியர், வலைப்பூவில் தமிழுக்காகப் பல பதிவுகளை இட்டுவரும் கி.ஜெயக்குமார் அவர்கள்.
வளர்தமிழ மன்றத்தின் நோகக்ம் குறித்து திரு அப்பாவு அவர்கள் விளக்கிச்சொல்ல அதனைத் தொடர்ந்து இளையபட்டம் அவர்கள் விரிவாக வளர்தமிழ மன்றத்தின் அரிய இப்பணியை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திருமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை முன்மொழிய தொடர்ந்து அங்கு வந்திருந்தத ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்து இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதாக தங்கள் ஆலோசனைகளை முன் வைத்தார்கள். இறுதியில் பாரி அவர்கள் நன்றியுரைக்கக் கூட்டம் முடிந்தது.
வேண்டுகோள்
உலகின் எல்லா நாடுகளிலும் அடிப்படைக் கல்வி தொடங்கி விருப்பக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில்தான் பயின்று வருகிறார்கள். இச்சூழல் தமிழ்கத்தில் இல்லை. ஆயிரமாயிரம் குழுக்கள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல்போல பெருகிவருவது பெருஙகவலைக்குரியது. எனவே தமிழைக் கட்டாயமாகப் பயிற்றுமொழியாக்குவது என்பது காலத்தின் தேவையாகும். இருப்பினும் தமிழைப் போற்றுகிற பலரும் பல்வித அரசியலைக் கைக்கொண்டு அதனை பிழைப்புக்கருவியாகவே பயன்படுத்திவருகிறார்கள் என்பதும் கண்கூடு..
எனவே பேரூர் ஆதினம் எடுத்திருக்கும் இந்தமுயற்சி மிக முக்கியமானது. தமிழின் மீது அக்கறை கொண்ட யாரும் இதனை எவ்வாறு செய்ற்படுத்தினால் இது வெற்றிபெறும் என்பதறகான பயனான ஆலோசனைகளை முன்வைக்கலாம். அவற்றைப் பேரூர் ஆதினத்திற்கு எழுதியனுப்பலாம். தமிழைக் கற்கவேண்டும். தாய்மொழியில்தான் உலகறிவைப் பெறவேண்டும். உயரவேண்டும் என்கிற உணர்வுடன் நாம்எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
என்றாலும் இவற்றின் பின்னால் இருக்கக்கூடிய
பல சிக்கல்களும் இருக்கின்றன.
தமிழை உயிராக எண்ணிப் படித்தவனுக்குத் தமிழ்நாட்டில் மரியாதை இல்லை.
அவன் பிழைக்க எந்த ஒரு வேலையும் இல்லை.
தாய்மொழியில் படித்தால் நீ சாகமாட்டாய் உயிர்வாழ்வாய் என்கிற உத்திரவாததையடக்கிய நம்பிக்கை இல்லை.
தமிழ்ப் படித்தவர்கள் தமிழையே அறியாதவன் நடத்துகின்ற கல்விநிறுவன்த்தில் கைகட்டி சொற்ப சம்பளத்திற்கு வாழவேண்டிய அவலம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
அரசு பணியாளர் தேர்வு மையம் தவிர மற்றவற்றில் தாய்மொழியில் கலந்துகொண்டு தேர்வு எழுதமுடியாத இடர் நீண்டிருக்கிறது.
தமிழை மூச்சாக எண்ணுபவன் என்ன நினைப்பான். அவன் உள்ளம் எத்தயை இன்னல்களைத் தாங்கும்?
கடைத்தெரு பெயர்ப்பலகை தொடங்கி வெகுசன ஊடகம் வரை தாய்மொழி அக்கறை இல்லை. பிழைகள் மலிந்த செயற்பாடுகள் மனத்தை புண்படுத்துகின்றன.
இவையெல்லாம் நம்முன் இருக்கும் பிரச்சினைகள். தீர்க்க்ப்படவேண்டும் என்பதும் முக்கியமானது. அவசியமானது.
எனவே தாய்மொழியில் பயிற்றுவித்தல் என்பதை நாம் பலப்படுத்த பலப்படுத்த மேற்சொனன் பிரச்சினை சூரியன்கண்ட பனித்துளி போல விலகிவிடும்.
பேரூர் ஆதினத்தின் ஒப்பற்ற இந்த தமிழ்தொண்டிற்குக் கைகோர்க்க வாருங்கள்.
இதுகுறித்த் உங்கள் கருத்துக்களை பேராசிரியர் இளமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருவருள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி, வெண்ணாற்றங்கரை அஞ்சல், தஞ்சாவூர் எனும் முகவரிக்கும் அனுப்பலாம். ஊர்கூடித்தான் தேரிழுக்கவேண்டும். தமிழ்த்தேர் இழுக்க வடம்பிடிக்க வாருங்கள் தமிழ்ச் சமூகமே.
இரண்டு
இன்று தந்தையர் தினம்.
என் அப்பாவை நினைக்கிறேன்.
சிறுவயது முதலே விளையாட்டாகக் கூட கைநீட்டாமல்... தம்பி என்றே கடைசிவரை அழைத்து.. எந்த ஒரு செயலையும் வளவளவென்று பேசாமல் ஒருமுறை சொல்லி.. இது நன்மையானது எடுத்துக்கொள் இது தீமையானது விட்டுவிடப் பழகு..என்று அறிவுறுத்தி... உணவுவேளை தவறாமல் உண்ணும் பழக்கத்தையும்.. எப்போது படுத்தாலும் அதிகாலை எழுந்துவிடு.. என்றும்.. எதனையும் தள்ளிப்போடாதே... நாலுபேர் பார்ப்பதற்காக ஒரு செயலைச் செய்யாதே.. மனசாட்சிப்படி உழை.. ஒழுக்கமும் நேர்மையும் உன் மரணம்வரை மாறாதிருக்கவேண்டும்.. கடுஞ்சொல் பேசாதே... யாராக இருந்தாலும் எடுத்தெறிந்துவிடவேண்டாம்.. எல்லோரையும் மதிக்கப் பேசு.. என்றெல்லாம் சொல்லிய பல்வேறு தருண்ங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இவற்றிலெல்லாம் அப்பா வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.
மூன்று
சுகன்
சுந்தரசுகன்
சௌந்தர சுகன்..
எழுத்துப்போராளி... எழுத்தாய் வாழ்ந்தான்.. எழுத்தாய் மறைந்தான்..
இன்று அவனுக்கு நினைவேந்தல்... தஞ்சை பெசண்ட் அரங்கம்..மாலை 6 மணி
அவரவர் உள்ளத்திலிருந்ரு ஒரு துளி நீர் தாருங்கள் அவனின் ஆன்மாவிற்கு. போதும்.
நன்றி.

Friday, May 29, 2015

பத்தி வாசனை...


அந்தத் தெருவிலேயே
எங்கள் வீட்டில்தான் முதலில்
தொலைக்காட்சி பெட்டி வந்தது.

வெள்ளிக்கிழமைதோறும்
தெருவே ஒலிஒளியுமாக இருந்தது
ஓர் அரங்கத்தைப் போல
வருவோரை ஒழுங்குப்டுத்தி 
உட்காரவைத்து அப்பா மட்டும்
நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார்..

ஒரு பத்தியை ஏற்றி வைக்கச்
சொல்லுவார் பலரின் மூச்சுக்
காற்று ஒரே இடத்தில் என்று..
அம்மாகூட இதை அடக்கிய
பெருமையாகப் பேசித் திரிந்தாள்.

அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
தெருவில் இன்னும் மரியாதை கூடியது..

என் பிள்ளைகளும் அக்காவின்
பிள்ளைகளும் தெருப்பிள்ளைகளும்
என வீடே குழந்தைகளின்
தோட்டமாக இருக்க அப்பாவே 
எல்லாருக்குமான இசையாக இருந்தார்.

அப்பா இறந்துபோன பின்
ஒவ்வொன்றாய் காலையில் 
மாலையில் உதிரும் பூக்களாய்
உதிரத் தொடங்கிவிட்டன

இப்போது யாருமற்ற
வீட்டில் அம்மாவும் அவள்
தனிமையும்தான்..

எப்போதாவது யாரேனும் இருவர்
கூடினால்கூட அந்த வீட்டில்
ஏற்றாமல் வருகிறது
அப்பா ஏற்றிய பத்தி வாசனை.

0000

Thursday, May 28, 2015

உங்களுக்குண்டா?

உங்களுக்குண்டா?


                           1  சிலரை  நமக்குப் பிடிக்காது.  வேண்டாம்  என்று விலக்குவோம். ஆனால் முக்கியமான நேரத்தில் யாரை விலக்கினோமோ அவர்களிடத்துதான் உதவி கேட்டு நிற்கவேண்டிய சங்கடம் வரும்..

                                            உங்களுக்குண்டா?


                          2.   நமக்கு உற்ற உறவுகளில் யாரேனும் இறக்கும்போது திட்டமிட்டதுபோல அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல், வரமுடியாமல் போகிறது.

                                           உங்களுக்குண்டா?


                          3.    மனசு கேட்காமல் போய் அன்பு காட்டுவோம். உதவியும் செய்வோம்.  நம்முடைய பேச்சு அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கும்.  அலட்சியம் செய்வார்கள்.   அடுத்தமுறை என்ன ஆனாலும் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் மனசு கேட்காமல் மறுபடியும் அவமானத்திற்கு ஆளாவோம்.  அந்த துயரம் சொல்லமுடியாது.

                                              உங்களுக்குண்டா?


                            4.   பல முறை ஒன்றிற்காகப் போராடுவோம். கிடைக்காது. சரி இனி வேண்டாம் என்று விடும்போது அது எளிதாக மற்றவருக்குக் கிடைத்துவிடும். ஏன் இப்ப கேட்டிருந்தா கொடுத்திருப்போமே என்பார்கள். மனசு நொந்துபோகும்.

                                              உங்களுக்குண்டா?

                           



Saturday, May 16, 2015



                                         ஒரு கன்றுக்குட்டியின் வாழ்க்கை...


                      பிறந்தவுடன் தாயை இழந்துவிட்டது அந்த கன்றுக்குட்டி.

                     எனவே அது மிகுந்த துயரத்துடன் கடவுளை வேண்டி நின்றது.

               
   கடவுள் உடனே பிரசன்னமானார்.

                     என்ன வேண்டும் கன்றே? என்றார்.
             
                      ஏன் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள் என்றது.

                      நான் கொல்லவில்லை. அது உன்னோட தாயின் விதி.

                      சரி நான் எப்படி வாழ்வது? என்றது கன்றுக்குட்டி.

                     உடனே ஒரு புல்வெளியை உருவாக்கித் தந்தார்.  இது உன் வாழ்நாள் வரைக்கும் பசியைத் தீர்த்துவிடும் என்றார்.

                     தாகத்திற்கு என்றது கன்று.

                     உடனே ஒரு சிறிய சிற்றோடையை அழகாக ஓடச்செய்தார். பளிங்கு முகம் காட்டி அந்த சிற்றோடை ஓடியது. ஒருமுறை கன்று அதில் இறங்கி தன் முகம் பார்த்து திருப்தி கொண்டது.

                     வேறு ஏதேனும் ஆபத்து எனக்கு நேராதா? என்றது.

                     உடனே கடவுள் அந்த புல்வெளியைச் சுற்றி பலத்த வேலியை ஒன்று உருவாக்கினார்.
 
                    அந்த வேலிக்குள் மனம்போல சுற்றிசுற்றி மகிழ்ந்தது.

                    நான் போகலாமா என்றார் கடவுள்.

                   இடி, மழை வந்தால், வெயில் அடித்தால்  என்ன செய்வது என்றது கன்று.
                   உடனே அது ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகையை உருவாக்கினார். மூங்கிலால் அழகான கொட்டகை உருவானது.

                   உள்ளே ஒடிப்போய் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு வெளியே வந்தது கன்று.

                    இப்படி யோசித்து யோசித்து கன்று எல்லர்ம் கேட்கக் கடவுள் பொறுமையாகத் தந்துகொண்டேயிருந்தார்.
 
                      இரவாகிவிட்டது கடவுள் சென்று வரட்டுமா என்றார்.

                      சரி.. நான் கூப்பிடும்போது வரவேண்டும் என்றது கன்று.

                      அது முடியாது ஒருமுறைதான். இந்த முறைதான் எனவே இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டுவிடு என்றார் கடவுள்.

                          நெடுநேரம் யோசித்துவிட்டு கன்று சொன்னது... எனக்கு அம்மா இல்லை.. தனியா இருக்க பயமா இருக்கும்ல... எனக்கு விளையாட ஒரு பிரெண்ட்ட தா... என்றார்..

                           கடவுள் இன்னொரு கன்றைத் தந்தார்..

                            அந்தக் கன்று கடவுளிடம் இந்த கன்று கேட்டதையெல்லாம் கேட்கத்தொடங்கியது.

                                                                00000

                           

Thursday, May 14, 2015


      
       000
       மூலையில்
       அப்படியே கிடக்கிறது
       சிலந்தி வலைபின்னியபடியும்
       அந்துப்பூச்சிகளுடனும்
       ஆனாலும் நிறம்மாறாமலும்
       அந்தக் குடை
       அதைப் பயன்படுத்தும் அப்பாவின்
       மரணத்தை மறக்கமுடியாத்துபோல....

       000

       கடைசிவரை மாறவேயில்லை
       கட்டிய கைக்கடிகாரம்
       அணியும் செருப்பு மாடல்
       பெளண்டன் பேனா
       சில்வர் பொடி டப்பா
       ஏழு மணிக்குள் காலையுணவு
       பன்னிரண்டு மணிக்குள் மதிய உணவு
       எட்டு மணிக்கு இரவு உணவு
       ஒன்பது மணிக்குமேல் விழிக்காமை
       எதுவுமே அப்பாவிடம் இம்மியும்
       கடைசிவரை மாறவேயில்லை
       அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களே
       பிள்ளைகள்தான் பிள்ளைகளாக இல்லை...

       000            
         
         அடிக்கடி மறந்துபோகிறது
         குடையெடுத்துப்போக
         எடுத்துப் போகும்போது
         தவறாமல் மறந்துபோகிறது
         எடுத்துவர
         குடையெடுத்துப் போகையில்
         மழை வருவதில்லை அல்லது
         நனைவதில்லை
         குடையெடுக்காமல் போகும்போது
         கட்டாயம் பெய்கிறது
         வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும்
         என்று யாரேனும் பாராட்டினால்
         குடையைத் திட்டி தீர்க்கிறேன்
         000
             ஒவ்வொரு நாளும்
         எத்தனை சொற்களை
         இழந்தாலும்
         பிணத்தின் மூடிய கைகளுக்குள்
         சிக்கிய பொருளைப்போல
         எடுக்கமுடியாமல்
         காத்திருக்கும் நம்பிக்கை
         மறுநாளின் சொற்களைப்
         புதுப்பிக்கிறது வாழ்வதற்கு..
     மீட்டெடுக்கவும்..
      000           
           மின் கம்பியில்
           சிறகு பரத்தி
           அடிபட்டு வீழ்ந்துபோகும்
           காகமொன்று
           சுற்றி நின்று கரையும்
           கூட்டம்
           எங்காவது கேட்கும்
           அமாவாசைக் குரலுக்கு
           விரைந்துபோகும்
           எல்லாம் மறந்து..

            000

            வற்றிய ஆற்றின் கரையில்
            தீராநதி
            விதவையின் வீடு..

            000

            வலை வீசுதலில்
            மீன்கள் சிக்குகின்றன
            ஒருபோதும்
            நதியல்ல..

            000

            கனவினுர்டாகப்
            பயணித்தாலும்
            நம்பிக்கையின்மீதே
            இளைப்பாறவேண்டும்
         0000                    

                     

           

         
                     
              


        


Wednesday, May 13, 2015

.என்னமோ நடக்குது...





                                                    என்னமோ நடக்குது....


                              மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வந்தார்கள்.  இரவின் வானத்தில் நிலவு இன்றைக்கு அழகு மங்கிப்போயிருந்தது. மணப்பெண் நர்மதாவின் அழகிற்கு முன்னால்  அது தோற்றுப்போயிருந்தது.

                               இன்னும் சற்று நேரத்தில் அவளை ஒருவனிடத்தில் ஒப்படைப்பதற்கான நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது.

                                உணவு தேடியலையும் எறும்புகளைப்போல அந்த மண்டபத்தில் உறவினர்கள் சிதறியிருந்தார்கள்.

                               மகிழம்பூ மரத்தின்கீழே உதிர்ந்துகிடக்கும் மகிழம்பூக்களைப் போல  அவர்கள் சிரித்தும் கிடந்தார்கள்.

                                சிறுவர்களும் சிறுமியர்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்புகளை மண்டபமெங்கும் மழை பெய்வதைப்போல பெய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்தார்கள் மனம்போன போக்கில்.

                                 அந்த இரவின் பழைய பேருந்துநிலைய அருகில் காந்தி சிலையில் மேலிருந்த விளக்கு அழுது வடிந்துகொண்டிருந்தது. காந்தியின் முகம் இருளடைந்திருந்தது அதனால்.  கையிலிருந்து கைத்தடி கொஞ்சம் உடைந்திருந்தது.

                                 அவர்தான் அந்த விபத்திற்குச் சாட்சி.  பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையுமாக இருந்த அந்த இளைஞன் சாலையைக் கடக்க முயன்றபோது ஒரு சிறுவேன் அடித்துப்போட்டுவிட்டுப்போய்விட்டது.

                                பதறித் தவித்த அவனோடு வந்த கூட்டம் அவசரமாக 108 க்கு போன் செய்திருந்தார்கள். உயிர் இருந்தது.

                                 யாரோ போனில் உரக்கக் கத்தினார்..  மண்டபத்திற்கு வரமுடியாது... என்றார்.

                                 காந்திசிலை அருகே கிடந்த பொட்டலத்திலிருந்து கேக்கை நாயொன்று நக்கி சாப்பிட ஆரம்பித்திருந்தது.  போலிஸ் வந்தது சம்பவ இடத்திற்கு.

                                 கற்பகவினாயர் கோயில் தெருவில் ஒரு வீட்டின்  முன் வாசலில்  தாயும் சிறுபெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

                                  அப்பா எப்பம்மா வருவாங்க?
                                   இப்ப வந்துடுவாங்க..
                                  எங்கம்மா போயிருக்காங்க..
                                   காந்திசிலைக்கிட்ட உள்ள மண்டியிலே லோடை இறக்கிட்டு வந்துடுவாங்க..
                                   அய்...யா... எனக்கு சாக்லெட் கேக் வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க.. அப்பா..

                                    வாங்கிட்டு வருவாரு..

                                    இன்னொரு முக்கில்

                                    என்னடா ஆச்சு?

                                    லோடு இறக்க வந்தேன்.. மண்டிக்கு..

                                    சரி..

                                    ஒரு ஆளு குறுக்கே வந்துட்டான்.. புது மாப்பிள்ளை போலருக்கு..

                                     என்னாச்சு?

                                     அடிபட்டுட்டான்..  நான் வண்டிய  எடுத்துட்டு வந்துட்டேன்.. எவனாச்சும் நம்பர பாத்திருப்பான்..

                                      எனக்குத் தெரிஞ்ச வக்கிலு இருக்காரு பார்க்கலாம்..

                                      என் வூட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுடா... பத்து நாளாச்சுடா.. வீட்டுக்குப் போய்..

                                       சரி..

                                       108 அவர்களைக் கடந்துபோனபோது அவன் அதை மிரண்டு பார்த்துக்கெர்ண்டிருந்தான்.

                                       வண்டி நம்பர யாராச்சும் பாத்தீங்களா?

                                       ஒருவரும் பார்க்கவில்லை.

                                       ம்ண்டபத்தில் யாரோ சொன்ன நகைசுவைக்கு மணப்பெண் சிரித்துக்கொண்டிருந்தாள்..

                                       சற்று நேரத்தில் மாப்பிள்ளை உள்ளே வந்தான்., நண்பர்கள் சூழ..

                                       நிச்சயதார்த்தம் தொடங்கியது.

                                       அதோ பாருடா உங்கப்பா..

                                       அப்பா சாக்லெட் கேக்...

                                       இந்தாடா?

                                       நாக்கு செத்துப்போச்சிடி... பத்து நாளாச்சு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு.. என்ன பண்ணியிருக்கே..

                                       கோலா உருண்டை போட்டு குழம்பு வச்சிருக்கேன்..  கோழி வறுத்திருக்கேன்.. சாப்பிடலாம்..

                                       நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..

                                       மருத்துவமனை வாசலில் 108  நிற்க அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்கள்.. அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். நல்லவேளை அவனுக்கு முன்பக்கம்தான் அடிபட்டிருந்தது.  காலில் நல்ல அடி. இடுப்பு எலும்பு நகர்ந்துபோயிருந்தது.

                                      மருத்துவமனை வாசலுக்கு வெளியே ஓடிவந்தாள் அவனத தாய்..
                                      என்னாச்சு எம்புள்ளக்கி....

                                      சார்... இத்தோட காட்சிய நிறுததிடுங்க.. என்றார்  டைரக்டர் சங்கர்.

                                      ஏன் சார்?

                                      மிசச்த்தை நாளைக்கு வச்சுக்கலாம்...  என் நண்பனோட நிச்சயதார்த்தம் இன்னிக்கு.. நான் மண்டபத்துக்குப் போயிட்டு வந்துடறேன்.. சென்டிமெண்டா வேணாம்.. நாளைக்கு மிச்சத்தை வச்சுக்கலாம்..

                                      ஓகே சார்..

                                                                                               0000000000000

                                     

                                     
                                 

Tuesday, May 12, 2015

கொஞ்சம் இலக்கியம்...




                      கணவன் மனைவி என்கிற உறவு குடும்பம் என்கிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ளது.

                       நம்முடைய அப்பாக்கள் வாழ்ந்த காலத்தில்  கணவன் மனைவியாக இணைந்தவர்கள் பெரும்பாலும் விவாரத்து என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருந்தது.

                       திருமணம் ஆகி சில தினங்களிலேயே கணவனை இழந்தார்கள். என்றாலும் பிள்ளைகளை வளர்க்க கடைசிவரை விதவையாகவே வாழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். பிள்ளைகள் தவறு செய்தால் அடிக்கடி சொல்வார்... கம்னாட்டி வளர்த்த புள்ள கரைசேராதுன்னு சொல்ல வச்சிடாதே.. உங்கப்பன் விட்டுட்டுப் போனபொறவ நான் பட்டது அந்த சிவனுக்குத்தான் தெரியும் என்பார்கள்.

                      பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். சண்டையிட்டிருககிறார்கள்.  அடி வாங்கியிருக்கிறாள் மனைவி.  அடிக்கப்பட்டிருக்கிறான் கணவன் கண்டிப்பு என்கிற பெயரால். இருந்தும் அங்கே உறுதிப்பாடு என்பதைக் குடும்பம் என்கிற சொல் இணைத்து வைத்திருந்தது.

                         ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் தொடுப்பாகவும் வைத்திருந்தார்கள். அவற்றையும் அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

                        என்றாலும் முக்கியமான நிகழ்வகளில் அது இறப்பாக இருந்தாலும் சரி.. பிறப்பாக இருந்தாலும் சரி.. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளிலும் சரி.. மனைவிக்கே உரிமை இருந்தது. அதனால்தான் சங்க இலக்கியம் மனைவியர் என்பதற்கு உரிமை மகளிர்... மனையாள்.. இல்கிழத்தி.. இல்லாள் என்கிற சொறக்ளைக் கையாண்டிருக்கிறது.

                        பரத்தை வீட்டுக்குப் போய்வந்த தலைவன் ஒருவனுக்கு மனது உறுத்துகிறது. தலைவி தன்னிடத்து அன்பாக இருப்பாளா என்று. அவனுடைய சந்தேகத்தை உணர்ந்துகொள்கிறாள். நிரம்பவும் தெளிவாக தலைவி உரைக்கிற இப்பாடல் குறுந்தொகையில் உள்ளது. அற்பதமான பாடல் மட்டுமல்ல ஒரு பெண்ணின் குடும்பத் தலைவியின் உண்மையான அழுத்தமான பண்பாட்டு உணர்வை, பண்பை உணர்த்துகிற பாடல் இது.

                   அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
                   மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
                   இம்மை மாறி மறுமை ஆயினும்
                   நீயா கியரெம் கணவனை
                   யானா  கியர்நின் நெஞ்சுநேர் பவளே
                                                                குறுந்தொகை. பா.49 அம்மூவனார்.

பாடலின் பொருள்

                    அணிற்பல்லைப் போன்ற கூரிய முட்கள் நிறைந்த மணம் முதிர்ந்த தாழையினையும் (தாழம்பூ) நீலமணியின் ஒளியைப் போலும் கரிய நீரையுமுடைய (நெய்தல் நிலத்துப் பாடல் - கடலைக் குறிப்பது) தலைவனே. நீ கொடுமை செய்கிறாய் இந்தப் பிறவியில். சரி போகட்டும் அடுத்த பிறவியிலும் நீதான் கணவனாக இருப்பாய் நான்தான் உன் நெஞ்சுக்குப் பிடித்தவளாக இருப்பேன். அப்படி ஆகிவிடு.

                  என்கிறாள். தலைவனுக்குக் குறிப்பால் தன் அன்பையும் உணர்வையும் புலப்படுத்தும் பாடல்.  இன்னும் ஆழமாகப் பார்த்தால் இப்பிறப்பு மட்டுமன்றி மறுபிறப்பிலும் கொடுமை செய்கிற கணவனே அது உன் தன்மையாக இருந்தாலும் நீதான் எனக்குக் கணவன். உன் நெஞ்சுக்குப்பிடித்தவள் நான்தான் என்றும் உணர்த்துகிறாள்.

                          அனுபவிக்கவும் உணரவுமான பாடல் இது.