Wednesday, May 13, 2015

.என்னமோ நடக்குது...





                                                    என்னமோ நடக்குது....


                              மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வந்தார்கள்.  இரவின் வானத்தில் நிலவு இன்றைக்கு அழகு மங்கிப்போயிருந்தது. மணப்பெண் நர்மதாவின் அழகிற்கு முன்னால்  அது தோற்றுப்போயிருந்தது.

                               இன்னும் சற்று நேரத்தில் அவளை ஒருவனிடத்தில் ஒப்படைப்பதற்கான நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது.

                                உணவு தேடியலையும் எறும்புகளைப்போல அந்த மண்டபத்தில் உறவினர்கள் சிதறியிருந்தார்கள்.

                               மகிழம்பூ மரத்தின்கீழே உதிர்ந்துகிடக்கும் மகிழம்பூக்களைப் போல  அவர்கள் சிரித்தும் கிடந்தார்கள்.

                                சிறுவர்களும் சிறுமியர்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்புகளை மண்டபமெங்கும் மழை பெய்வதைப்போல பெய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்தார்கள் மனம்போன போக்கில்.

                                 அந்த இரவின் பழைய பேருந்துநிலைய அருகில் காந்தி சிலையில் மேலிருந்த விளக்கு அழுது வடிந்துகொண்டிருந்தது. காந்தியின் முகம் இருளடைந்திருந்தது அதனால்.  கையிலிருந்து கைத்தடி கொஞ்சம் உடைந்திருந்தது.

                                 அவர்தான் அந்த விபத்திற்குச் சாட்சி.  பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையுமாக இருந்த அந்த இளைஞன் சாலையைக் கடக்க முயன்றபோது ஒரு சிறுவேன் அடித்துப்போட்டுவிட்டுப்போய்விட்டது.

                                பதறித் தவித்த அவனோடு வந்த கூட்டம் அவசரமாக 108 க்கு போன் செய்திருந்தார்கள். உயிர் இருந்தது.

                                 யாரோ போனில் உரக்கக் கத்தினார்..  மண்டபத்திற்கு வரமுடியாது... என்றார்.

                                 காந்திசிலை அருகே கிடந்த பொட்டலத்திலிருந்து கேக்கை நாயொன்று நக்கி சாப்பிட ஆரம்பித்திருந்தது.  போலிஸ் வந்தது சம்பவ இடத்திற்கு.

                                 கற்பகவினாயர் கோயில் தெருவில் ஒரு வீட்டின்  முன் வாசலில்  தாயும் சிறுபெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

                                  அப்பா எப்பம்மா வருவாங்க?
                                   இப்ப வந்துடுவாங்க..
                                  எங்கம்மா போயிருக்காங்க..
                                   காந்திசிலைக்கிட்ட உள்ள மண்டியிலே லோடை இறக்கிட்டு வந்துடுவாங்க..
                                   அய்...யா... எனக்கு சாக்லெட் கேக் வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க.. அப்பா..

                                    வாங்கிட்டு வருவாரு..

                                    இன்னொரு முக்கில்

                                    என்னடா ஆச்சு?

                                    லோடு இறக்க வந்தேன்.. மண்டிக்கு..

                                    சரி..

                                    ஒரு ஆளு குறுக்கே வந்துட்டான்.. புது மாப்பிள்ளை போலருக்கு..

                                     என்னாச்சு?

                                     அடிபட்டுட்டான்..  நான் வண்டிய  எடுத்துட்டு வந்துட்டேன்.. எவனாச்சும் நம்பர பாத்திருப்பான்..

                                      எனக்குத் தெரிஞ்ச வக்கிலு இருக்காரு பார்க்கலாம்..

                                      என் வூட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுடா... பத்து நாளாச்சுடா.. வீட்டுக்குப் போய்..

                                       சரி..

                                       108 அவர்களைக் கடந்துபோனபோது அவன் அதை மிரண்டு பார்த்துக்கெர்ண்டிருந்தான்.

                                       வண்டி நம்பர யாராச்சும் பாத்தீங்களா?

                                       ஒருவரும் பார்க்கவில்லை.

                                       ம்ண்டபத்தில் யாரோ சொன்ன நகைசுவைக்கு மணப்பெண் சிரித்துக்கொண்டிருந்தாள்..

                                       சற்று நேரத்தில் மாப்பிள்ளை உள்ளே வந்தான்., நண்பர்கள் சூழ..

                                       நிச்சயதார்த்தம் தொடங்கியது.

                                       அதோ பாருடா உங்கப்பா..

                                       அப்பா சாக்லெட் கேக்...

                                       இந்தாடா?

                                       நாக்கு செத்துப்போச்சிடி... பத்து நாளாச்சு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு.. என்ன பண்ணியிருக்கே..

                                       கோலா உருண்டை போட்டு குழம்பு வச்சிருக்கேன்..  கோழி வறுத்திருக்கேன்.. சாப்பிடலாம்..

                                       நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..

                                       மருத்துவமனை வாசலில் 108  நிற்க அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்கள்.. அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். நல்லவேளை அவனுக்கு முன்பக்கம்தான் அடிபட்டிருந்தது.  காலில் நல்ல அடி. இடுப்பு எலும்பு நகர்ந்துபோயிருந்தது.

                                      மருத்துவமனை வாசலுக்கு வெளியே ஓடிவந்தாள் அவனத தாய்..
                                      என்னாச்சு எம்புள்ளக்கி....

                                      சார்... இத்தோட காட்சிய நிறுததிடுங்க.. என்றார்  டைரக்டர் சங்கர்.

                                      ஏன் சார்?

                                      மிசச்த்தை நாளைக்கு வச்சுக்கலாம்...  என் நண்பனோட நிச்சயதார்த்தம் இன்னிக்கு.. நான் மண்டபத்துக்குப் போயிட்டு வந்துடறேன்.. சென்டிமெண்டா வேணாம்.. நாளைக்கு மிச்சத்தை வச்சுக்கலாம்..

                                      ஓகே சார்..

                                                                                               0000000000000

                                     

                                     
                                 

Tuesday, May 12, 2015

கொஞ்சம் இலக்கியம்...




                      கணவன் மனைவி என்கிற உறவு குடும்பம் என்கிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ளது.

                       நம்முடைய அப்பாக்கள் வாழ்ந்த காலத்தில்  கணவன் மனைவியாக இணைந்தவர்கள் பெரும்பாலும் விவாரத்து என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருந்தது.

                       திருமணம் ஆகி சில தினங்களிலேயே கணவனை இழந்தார்கள். என்றாலும் பிள்ளைகளை வளர்க்க கடைசிவரை விதவையாகவே வாழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். பிள்ளைகள் தவறு செய்தால் அடிக்கடி சொல்வார்... கம்னாட்டி வளர்த்த புள்ள கரைசேராதுன்னு சொல்ல வச்சிடாதே.. உங்கப்பன் விட்டுட்டுப் போனபொறவ நான் பட்டது அந்த சிவனுக்குத்தான் தெரியும் என்பார்கள்.

                      பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். சண்டையிட்டிருககிறார்கள்.  அடி வாங்கியிருக்கிறாள் மனைவி.  அடிக்கப்பட்டிருக்கிறான் கணவன் கண்டிப்பு என்கிற பெயரால். இருந்தும் அங்கே உறுதிப்பாடு என்பதைக் குடும்பம் என்கிற சொல் இணைத்து வைத்திருந்தது.

                         ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் தொடுப்பாகவும் வைத்திருந்தார்கள். அவற்றையும் அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

                        என்றாலும் முக்கியமான நிகழ்வகளில் அது இறப்பாக இருந்தாலும் சரி.. பிறப்பாக இருந்தாலும் சரி.. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளிலும் சரி.. மனைவிக்கே உரிமை இருந்தது. அதனால்தான் சங்க இலக்கியம் மனைவியர் என்பதற்கு உரிமை மகளிர்... மனையாள்.. இல்கிழத்தி.. இல்லாள் என்கிற சொறக்ளைக் கையாண்டிருக்கிறது.

                        பரத்தை வீட்டுக்குப் போய்வந்த தலைவன் ஒருவனுக்கு மனது உறுத்துகிறது. தலைவி தன்னிடத்து அன்பாக இருப்பாளா என்று. அவனுடைய சந்தேகத்தை உணர்ந்துகொள்கிறாள். நிரம்பவும் தெளிவாக தலைவி உரைக்கிற இப்பாடல் குறுந்தொகையில் உள்ளது. அற்பதமான பாடல் மட்டுமல்ல ஒரு பெண்ணின் குடும்பத் தலைவியின் உண்மையான அழுத்தமான பண்பாட்டு உணர்வை, பண்பை உணர்த்துகிற பாடல் இது.

                   அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
                   மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
                   இம்மை மாறி மறுமை ஆயினும்
                   நீயா கியரெம் கணவனை
                   யானா  கியர்நின் நெஞ்சுநேர் பவளே
                                                                குறுந்தொகை. பா.49 அம்மூவனார்.

பாடலின் பொருள்

                    அணிற்பல்லைப் போன்ற கூரிய முட்கள் நிறைந்த மணம் முதிர்ந்த தாழையினையும் (தாழம்பூ) நீலமணியின் ஒளியைப் போலும் கரிய நீரையுமுடைய (நெய்தல் நிலத்துப் பாடல் - கடலைக் குறிப்பது) தலைவனே. நீ கொடுமை செய்கிறாய் இந்தப் பிறவியில். சரி போகட்டும் அடுத்த பிறவியிலும் நீதான் கணவனாக இருப்பாய் நான்தான் உன் நெஞ்சுக்குப் பிடித்தவளாக இருப்பேன். அப்படி ஆகிவிடு.

                  என்கிறாள். தலைவனுக்குக் குறிப்பால் தன் அன்பையும் உணர்வையும் புலப்படுத்தும் பாடல்.  இன்னும் ஆழமாகப் பார்த்தால் இப்பிறப்பு மட்டுமன்றி மறுபிறப்பிலும் கொடுமை செய்கிற கணவனே அது உன் தன்மையாக இருந்தாலும் நீதான் எனக்குக் கணவன். உன் நெஞ்சுக்குப்பிடித்தவள் நான்தான் என்றும் உணர்த்துகிறாள்.

                          அனுபவிக்கவும் உணரவுமான பாடல் இது.

                          

Monday, May 11, 2015

வைரமுத்து சிறுகதைகள்




                         வைரமுத்து சிறுகதைகள்...


                ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென  கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல முயற்சி.

                தொடர்ந்த வாசிப்பில் இச்சிறுகதைகள் குறித்து எழுதவேண்டும் என்று தோனியது. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்த்தது.

                  கவிஞராக இருக்கும் படைப்பாளி சிறுகதைகள் படைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. சிறுகதைக்கென்று இருக்கும் தன்மைகளில் அவை சில மாற்றங்களை நிகழ்த்தும்.  சிறுகதைக்கான கரு சரியாக அமைந்தாலும் அவற்றை சிறுகதையாக்கும்போது கவிஞருக்குள் இருக்கும் கவிதைக்குணமே முன்னிற்கும். இயல்பாக அமையவேண்டிய நிகழ்வுகளில்கூட இந்த கவிதைக்குணமே துருத்திக்கொண்டு நிற்கும். இது தவிர்க்கமுடியாதது என்றாலும் அது சிறுகதையின் ஓட்டத்திறகுத் தடையாகும். ஏனென்றால் கவிஞனாக இருக்கும் நிலைப்பாட்டில் பார்க்கிற எந்தக் காட்சியிலும் அதனை எதனோடாவது ஒப்பிட்டுக் காட்ட முனையும் மனத்தைத் தடுத்துவிடமுடியாது. சிறுகதையைக் கவிதைபோல சொல்வதும் கவிதைக்குள் சிறுகதையின் தன்மையைக் கொண்டுவருவதும் உத்தி என்றாலும் அவை இயல்பானவையல்ல. அந்தந்த இலக்கியப் பிரிவினை அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடும். இப்போக்குகளை கவிஞர் வைரமுதது அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக யுத்தம்  இவற்றில் காணலாம். என்றாலும் இவற்றையும் தாண்டி அவை பிரமிப்பை உண்டாக்கிய நாவல்கள். தற்போது இத்தன்மையை குமுதத்தில் எழுதி வரும் சிறுகதைகளிலும் காணமுடிகிறது என்றாலும் அதைத்தாண்டி கவியரசு எடுத்துக்கொண்டுள்ள சிறுகதைக்கான  கதைக்கரு அதனை வெளிப்படுத்தல், காட்சிப்படுத்தல் இக்கூறுகளில் மேலெழுந்து நிற்கிறது. இவை இக்கதைகளின் வெற்றி எனலாம். இருப்பினும் சிறுகதைக்கான சோதனைத்தளம் எனும் நிலையில் சிறுகதைக்கான வளர்ச்சிப்பாதையில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.
             சிறுகதையின் தொடக்கம், பின்னல், விவரிப்பு, முடிப்பு எனும் நிலைகளில் இச்சிறுகதைகள் அபாரமான உயரத்தை எட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு சிறுகதையிலும் சிறுகதைக்கான கரு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது புதுச் சொல்லாளுமையில் மெருகேறித் திளைக்கின்றன.  புதுமைப்பித்தன் சிறுகதைகள் போல, மௌனியின் சிறுகதைகள் போல, அழகிரிசாமியின் சிறுகதைகள் போல, சுந்தரராமசாமியின் சிறுகதைகள் போல, திஜாவின் சிறுகதைகள் போல, சூடாமணியின் சிறுகதைகள் போல, ஜெயகாந்தன் சிறுகதைகள் போல, மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள் போல, கோணங்கியின் சிறுகதைகள் போல, அ.முததுலிங்கத்தின் சிறுகதைகள் போல ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரின் வீச்சை அடையாளப்படுத்தினாலும். இவை எவற்றின் ஒட்டுதலும் இல்லாமல் கவியரசுவின் தனித்துவப் படைப்பாளுமையின் மூல அச்சில் வைரங்களாக இச்சிறுகதைகள் சுடர்விடுகின்றன.

              சான்றாக இந்தவாரம் வெளிவந்துதுள்ள சிறுகதை யாருக்கும் வாழ்க்கைப் பக்கமில்லை என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்.

                 சாதாரண சொற்கள் ஆனால் அழுத்தமான பண்பாட்டுக் கருவறையிலிருந்து வெளிவருகின்றன. எதார்த்தமான விவரிப்பு. போகிற போக்கில் நினைத்துப் பார்க்கமுடியாத காட்சிப்படுத்தல். புதுச்சொல்லாக்கம். படிப்போரின் மனசுக்குள் கைப்பிடித்து அழைத்துப்போகும் திறன்.. கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போலப் படியும் சோகம். என்றாலும் இப்படித்தான் என்று வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிற  கருவாயன் அல்லது அவனை ஏற்றுக்கொள்ள வைக்கிற தமிழ்ச்சமுதாயப் பண்பு இவற்றை அழகான மகிழம்பு கோத்ததுபோல இணைக்கிறார் கவியரசு.

                             நறுக்குச் சவரம்
                             சீயக்காய் போட்டு பெருந்தேய்ப்புத் தேய்த்த பிறகும்
                             தலைமுடியில் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருந்தது
                             செம்மறியாட்டுச் சிறுநீர் வாசம்...(ப.142)

                             பல்விழுந்த சீப்பின் பல்விழாத ஓரங்களில்...

                             தோற்றம் என்ன தோற்றம்? இந்த பூமிக்கு வந்துபோகும்
                             கோடிகோடி சராசரி அற்புதங்களில் அவனும் ஒருவன்.
                             தான் வாழ்கிறானோ இல்லையோ வாழ்வுக்குச்
                             சம்பவங்கள் கொடுப்பவன்  (இங்கேயே இச்சிறுகதையின்
                             முடிவை உணர்த்திவிடுகிறார் நுட்பமாகக் கவியரசு)

        இவை கவித்துவமான வரிகள் என்றாலும் சிறுகதையின் ஓட்டத்தில் தடையில்லை.

                           உலகச் சிறுகதைக்கு நிகரான காட்சிப்படுத்தல் எல்லாச் சிறுகதைகளிலும் (கவியரசுவின் சிறுகதைகளுக்குள்ளேயே) ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறது வேறு எதனோடும் ஒப்பிடத் தேவையில்லாமல்.

                        ஒத்த ஆலமரம் தாண்டி பெருமாயி ஊருணி பிடித்து
                       முனியாண்டி கோயில் கடந்து சூராங்கரடு ஏறி இறங்கினால்
                       பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சாவடிப்பட்டி சித்தோடை..
                       கடந்து கரையேறினால் ஊர் வந்துவிடும் (ப.143)

இது மதினியின் ஊருக்குப் போவது.

                         சித்தோடை கடந்து சூராங்கரடு ஏறி முனியாண்டி கோயில்
                        முட்டி பெருமாயி ஊரணி புடிச்சு ஒத்த ஆலமரம் தாண்டுனா
                         பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சல்லிப்பட்டி...

இது மதினியின் ஊரிலிருந்து திரும்பி வரும்போது..

                          இரண்டும் ஒரே காட்சிப்படுத்தல் என்றாலும் சொற்களில் கதையின் பின்னல் தெரிகிறது. முனியாண்டி கோயில் கடந்து...முனியாண்டி கோயில் முட்டி... கரையேறினால் ஊர் வந்துவிடும... ஆனால் வாழ்க்கை...?

                         மதினியைப் பெண் கேட்கப் போகும்போது எதுவும் சிரமமில்லை.

                          காடு கடுங்காடு..முள் மண்டிய பெருங்காடு..கொளுத்துகிறது.
                          சித்திரைக்கோடை. வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று
                          உருக்கப் பார்க்கிறது........சில்லிமுள்ளும் செந்தாழையும் திருகு
                          கள்ளியும், சப்பாத்திக்கள்ளியும் இலந்தையும் நெருஞ்சியும்
                          குராஞ்செடியும் உடைசாலியும் சிவானர் வேம்பும் வேலும்
                          கருவேலும் இலைக்கற்றாழையும் வேலாந்தழையுமென
                          முட்காடாய் விரிந்துகிடக்கும் வெம்பாலை நந்தவனமாய்
                          தெரிந்தது நம்ம பயலுக்கு.. (ப.144)

ஆனால் மறுபடியும் நந்தவனம் வெம்பாலையாகிவிட்டது கருவாயனுக்கு.

                               ஒருசாலை மேய்ப்பர்கள்

                               உச்சந்தலையில் வழுக்கையில் ஒத்தமுடி முளைச்சது
                               மாதிரி ஊருணிக்கரையில்  துண்டா நிற்கிறது ஒரு
                               பூவரசமரம். . (ப.145)

கருவாயனும் இப்படித்தான்..

                                எப்போதும் உறவுகளை உணர்வுகளை அன்பைத் தாண்டிப் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது வாழ்க்கையில் என்றாலும் அதைத்தாண்டி அன்புதான் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துகிறது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இக்கதை.

                              வாசிப்பில் சில சிறுகதைகளில் சிற்சில தடுமாறல்கள் வந்தாலும் இச்சிறுகதைகள் எதிர்காலச் சிறுகதை வரலாற்றில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக நிற்கும் என்பதைக் கவியரசு உறுதிப்படுத்துகிறார்.

                           
                                               

                       

Sunday, May 10, 2015



 அன்புள்ள

                       வணக்கம்.

                       இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு.

                       தொடர்ந்து நாளையிலிருந்து  பதிவுகளுடன்.

                       எப்போதும்போல அன்பு காட்டுங்கள்.

                       நன்றி வணக்கம்.




                        

Sunday, April 19, 2015

விகடனில் வந்த என் கவிதை

எனக்கு எல்லாமும் தெரியும்
என்று ஒருபோதும்
சொல்வதில்லை
எல்லாமும் தெரிந்தவன்...
உயர்ந்தோங்கிய
மலையின் மாண்பிலிருந்து
பேரிரைச்சலால்
கீழிறங்கிவிடுகிறது அருவி..
தவளைகளின் பல்வகைக்
கத்தல்கள் என்றைக்கும்
இசையானதில்லை.
ஆனாலும் ஆரவாரமும்
ஆர்ப்பாட்டமும் மிக்கதுகள்
தவளைகளை மதிப்பிற்குரியனவாக
மாற்றிவிடுகின்றன..
தேர்ந்த கல்லின்
தேர்ந்த சிலை உணர்த்தும்
தேர்ந்த சிற்பியைப் போல
பலர் இந்த உலகின்
மனித வாழ்வை
செதுக்கிக் கொண்டே
இருக்கிறார்கள்...
நன்றி... ஆனந்தவிகடன்

Friday, April 3, 2015

மகன் எழுதிய கவிதை

அன்புள்ள

                   வணக்கம்.

                   என் மகன் எழுதிய கவிதை இது.

                   உங்களின் வாழ்த்திற்கும் பார்வைக்கும்.

                 
                                இலட்சிய இட மடைந்தேன்; புது
                                நண்பர்கள் படை புகுந்தேன்; எழில்
                                மும்பையில் மனம் மகிழ்ந்தேன்; தனிக்
                                காட்டினில் தின மலைந்தேன்; புகழ்
                                உலகினில் நான் மிதந்தேன்; இரவினில்
                                இனம்புரியாயொரு தனிமையை நானுணர்ந்தேன்; என்
                                 நிலைதனை எடுத்துரைக்கத் தமிழினை நாடிவந்தேன்....

Sunday, December 28, 2014

உரையாடல் சுவை....




               இலக்கியங்கள் சுவையானவை.  அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்பது சொற்சுவை, பொருட்சுவை, கருத்துச்சுவை, ஓசை எனப் பல்வகை சுவையும் கொண்ட இலக்கியம் அதிலிருந்து சிறு உரையாடல். இது சிங்கனுக்கும் சிங்கிக்கும் நடந்த உரையாட்ல்.

              உலா வரும் திருக்குற்றால நாதரிடம் ஏழுவகைப் பெண்களிடம் ஒருத்தியான வசந்தவல்லி என்னும் அழகி அவர் மேல் காதல் கொள்கிறாள். அவளுக்குக் குறி சொல்ல வருபவள் குறத்தி. அவள் குறி சொல்லி ஏராளமான பரிசுகளைப் பெறுகிறாள். அவள் கணவன் குறவன். இவர்கள்தான் சிங்கனும் சிங்கியும்.

             சிங்கியைக் காணாமல் சிங்கன் பல இடங்களில் தேடிக் கடைசியில் திருக்குற்றாலத் தெருவில் அவளைக் கண்டுபிடிக்கிறான். அவள் உடம்பெங்கும் அணிகலன்களையும் புதிய புடவையையும் அணிந்திருக்கிறாள். சிங்கன் அவற்றில் மயங்குகிறான். அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாட்ல் இது. வெகு சுவையாக உள்ளது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.


சிங்கன்  -  இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி?
சிங்கி     -   பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா.


சிங்கன் -   உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும்
                     இருக்குதடி சிங்கி.
சிங்கி     -   அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா.


சிங்கன்  -  உன் காலுக்கு மேலே பெரிய வீரியன் பாம்பு கடித்துக் கிடப்பானேன்
                     சிங்கி?
சிங்கி     -   சேலத்து நாட்டில் குறிச் சொல்லக் கிடைத்த சிலம்பட அது சிங்கா.


சிங்கன் -   சிலம்புக்கு மேலே ஏதோ திருகலும் முறுகலும் அது என்னடி சிங்கி?
சிங்கி     -   அது கலிங்க நாட்டார் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா.


சிங்கன் -   நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல  நெ ளிவு அது
                      என்னடி சிங்கி?
சிங்கி     -   பாண்டியனார் மகள் கேட்ட குறிக்கிட்ட பாவிகமடா சிங்கா.


சிங்கன் -   செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி?
சிங்கி    -   குற்றாலருடைய சந்நிதியில் வாழும் பெண்கள் தநத மணிகொச்ச
                     மடா சிங்கா.


சிங்கன் -  உன் சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்
                    சிங்கி?
சிங்கி     -  கண்டிய தேசத்தில்  நான் பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.


சிங்கன் -  உன் தொடைமேல வாழைக்குருதை இப்படி விரித்து மடித்து
                     வைத்தது யாரடி சிங்கி?
சிங்கி    -   திருநெல்வேலியார் தந்த சல்லாச் சேலைதான் அது சிங்கா.


சிங்கன் -  உன் தொடைகளின்மேல சாரைப்பாம்புபோல கிடப்பது ஏதடி
                     சிங்கி?
சிங்கி     -  சோழ அரச குமாரத்தி தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா.


சிங்கன் -   உன் மார்புக்கு மேலே கொப்புளஙகள் அது ஏனடி சிங்கி-
சிங்கி    -    காயப் பட்டினத்தால் தந்த பெரிய முத்தாரமடா சிங்கா.


சிங்கன் -  எட்டுப் பறவைகள் குமுறுவதுபோனறு குரல் எழும்பும் கமுகு
                    போன்ற உன் கழுத்திலே எட்டுப் பாம்புகள் ஏதடி சிங்கி?
சிங்கி     -  குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா.


சிங்கன் -   காதில் கள்ளிப்பூ பூத்திருக்கேடி சிஙகி?
சிங்கி     -   அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டியடா சிங்கா.


சிங்கன் -    குமிழமலர்  மூக்கில் புன்னை அரும்பு ஏதடி சிங்கி?
சிங்கி     -    முத்து மூக்குத்தியடா சிங்கா.


சிங்கன் -   சொருகி முடித்த உன் கூந்தலில் துர்க்கணாங்குருவிக் கூடு ஏதடி
                      சிங்கி?
சிங்கி    -    தென் குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா சிங்கா.


இப்படியாக நீண்டுபோகிறது உரையாடல் . இறுதியில்


சிங்கன் - விந்தைக்காரியான உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது சிங்கி.
சிங்கி     - அதில் சந்தேகமோ, உன் தலைப்  பேனைக் கேளடா சிங்கா.


என்கிறாள்.

                    எத்தனை இலக்கியவளமும் சுவையும் பாருங்கள்.



Tuesday, December 23, 2014

ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்



வணக்கம்.

                       என்னுடைய  குரு  பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன். இதுவரை 64 நுர்ல்களை எழுதியுள்ளார். ஒவவொரு புத்தகம் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவை.

                         இவரைப் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவு நெடுநாட்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

                          இந்தப் பதிவு இவருடைய ஒரு நுர்ல் பற்றி.

                          நுர்லின் பெயர்  ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்.

                          எத்தனையோ சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. என்றாலும் இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்டது.

                         காலங்காலமாக நமக்குச் சொல்ப்பட்டு வந்த நீதிக்கதைகள் பல தந்திரங்களை உள்ளடக்கியவை. இவற்றை தன்னுடைய அனுபவத்தில் வேறாகப் பார்த்துப் புதிய சிந்தனையை உண்டாக்குகிறார் பேராசிரியர் அவர்கள்.

                       இதற்கு இன்றையக்கான அவசியம் நேர்ந்திருக்கிறது.


                     இன்றைய சமுகத்தை மாசுபடுத்துபவர்களை ஒரு சிறிய
                     ஊசியாலாவது குத்திப் பார்க்கவேண்டுமென்ற துடிப்பு
                    எனக்கிருந்தது. பெருமைப்படத்தக்க சில உண்மை நிகழ்வு
                     களை எடுத்துச் சொல்லி இவற்றில் உள்ளதுபோல வாழ்ந்து
                     பாருங்களேன் என்று இளைஞர்களைத் துர்ண்டும் நோக்கம்
                     எனக்கிருந்தது. இவற்றின் விளைவே இந்த நுர்லாகும்.


என்கிறார். ஆனால் உண்மை மிகக் கசப்பானது. எப்படியென்றால் இன்றைக்கு தேவை ஊசிகளல்ல கடப்பாரைகள். லட்சக்கணக்கில் கடப்பாரைகள் தேவை. ஆனால் கடப்பாரைகள்தான் முறிந்துபோகும் செயலற்று. இப்படியெண்ணி மறநதுபோகலாம். இங்கு குவெபா அவர்கள் ஊசியால் குத்துவது என்பது உண்மையின் ஊசியால் மனத்தில் தைப்பது என்கிறபொருளாகும்.

                       .........................நீதிக் கருவூலங்கள் இன்று பூட்டுத் திறக்கப்படாமல்
                     இரும்புப் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்டுவிட்டன. அந்த வாழும்
                     மறைகள் வாழ்க்கை மறைகளாகவில்லை. அந்த நீதிகளை எளிமை
                     யாக என் அனுபவக் கல்வியில் பெற்ற பயிற்சியோடு சேர்த்து இந்த
                     நுர்லை உருவாக்கி உங்கள் முன் அளிக்கின்றேன். இளைஞர்களின்
                     வாழ்க்கையில் இந்த நுர்ல் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்
                     என்பது என் உறுதியான நம்பிக்கை. வெறுங்கதை சொல்லிச் சிரிக்க
                     வைத்துப் படிப்போர் பொழுதை வீணடிக்க நான் விரும்பவில்லை.
                     விழலுக்கு நீர்பாய்ச்சுவதால் பயன் ஏது? விளைவயல்களாக இருக்க
                     வேண்டிய இளைஞர் உலகில் களைகள் மண்டிக் கொண்டிருக்கின்றன.
                     பொழுதுபோக்கே வாழ்க்கை நோக்கம் எனப் பூரித்துப் போயிருக்கிறது.
                     இளைஞர் உலகம். அதனைத் திசை திருப்பவே இந்நுர்ல் ஆக்கப்
                     பட்டுள்ளது.


                              கதைத்தொகுப்பின் நோக்கம் இது.

                        இத்தொகுப்பில் 45 கதைகள் உள்ளன.  இரு கதைகள் உங்களின் பார்வைக்கு சான்றாக.

                            ஆற்றில் விழுந்த கோடாரி என்கிற கதை எல்லோரும் அறிந்ததுதான். விறகு வெட்டியின் நேர்மையால் தங்கம், வெள்ளி, இரும்பு எனக் கோடரி கிடைத்தது. இதனைப் பின்வருமாறு மாற்றி யோசித்து நம்மையும் பலமாக சிந்திக்கத் துர்ண்டுகிறார்.

                   விறகு வெட்டுபவரே ஆற்றில் கோடரி விழுந்துவிட்டதா? பரிவோடு
              கேட்டது தேவதை. 

                     ஆம் அம்மா. அவன் இயல்பாகக் கூறினான்.

                    கவலைப்படவேண்டாம் நான் இந்த ஆற்றில் மூழ்கி உன் கோடரியை
              எடுத்துத் தருகிறேன் என்றது வனதேவதை.

                     ..................நீ போய்வா.. நான் நீந்தத் தெரிந்தவன்.. நான் கைதவறவிட்ட
              கோடரியை நானே எடுத்துக்கொள்வேன் என்றான் கோடரிக்காரன்.

                      ...........................................

                       காலகாலமாக இப்படித்தானே கதை சொல்லி வருகின்றனர். ஆனால்   என் கதை வேறு. கோடரி என்றால் அது விறகு பிளக்கவேண்டும். தங்கத்தால் செய்த கோடரி வீட்டின் தரித்திரத்தை மாற்றலாம். ஆனால் உழைப்பை மறக்கடிக்கும். அதை அணிகலனாகச் செய்து அணிந்துகொண்டால், கடினமான   உழைப்பைப் புறக்கணிக்கும். பாதுகாப்பாக வைக்கப் பெரிய இடம் கேட்கும். பிறகு உதவிக்கு ஆள்கேட்கும். வெள்ளிக்கோடரியை அழகிய தட்டாக்கி உணவு     உண்ணலாம். ஆனால் நான் குடிக்கும் கூழுக்கு அது மிகை. ஆகவே என்    உழைப்பு மூலதனத்திற்கு ஏற்ற துணைக்கருவி இரும்புக் கோடரிதான். அதை ஆற்றில் மூழ்கி நானே எடுத்துக்கொள்வேன். வேலைசெய்யும் நேரம் உன்னோடு பேசி வீணாகிவிட்டது. உன் பட்டாடை கசங்காமல் அணிகலன்கள் பறிபோகாமல்
              பத்திரமாகப் போய்வா என்றான் விறகுவெட்டி.
இன்னொரு  கதை

       நான் யார் தெரியுமா? என்கிற கதை. இக்கதையில் வரும உரையாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும்.

                  திரு கந்தசாமி அவர்களே உங்கள் சிறப்புத்தகுதி?

                     ஐயா, நான் கலியுகக் கலைக்காவலர் என்ற சிறப்புப்
                     பெயரைப் பெற்றவன்.

                  அப்பாடா, கவலை இல்லை. இந்த யுகமுழுவதும் நீங்கள்
                  கலைகளைக் காப்பாற்றி விடுவீர்கள். அது சரி இந்தப் பட்டத்தை
                  உங்களுக்கு யார் கொடுத்தார்கள்.

                      கள்ளிக்காரன் புதுக்குடி மழலையர் பள்ளித் தொடக்க
                  விழாவின்போது அதன் தாளாளர் மாட்டுத்தரகர் மாடசாமி
                  கொடுத்தது.

                      மிகச் சிறப்பு கந்தசாமி அடுத்து சண்முகவேலன் அவர்களே
                   உங்கள் சிறப்புப் பெயர்?

                           சாதிக் கழக்கறுத்த சண்டமாருதம் சண்முகவேலன் என்பார்கள்
                    என்னை.

                           உங்களுக்கு இந்தப் பட்டத்தைத் தந்தவர்?

                        கொண்டையாம்பட்டி கோபாலகிருஷ்ணக் கோனாலும் ஐயன்வாடி
                    சுந்தரசாமித் தேவரும் ஐயா.

                          மிக நன்று பாராட்டுகள் அடுத்து நீங்கள்.

                     புரட்சி எழுத்துப் புயல்வேகச் சிந்தனை வேந்தன் பொழிலன்.

                          உங்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்கியவர்
.
                     மனவளர்ச்சியற்ற மக்கள் மன்றத்தார்.

                          எதற்காகக் கொடுத்தார்கள்?

                     அவர்கள் மன்றத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.

                     அதற்கு ஒரு மரியாதையாக.

                           மிக நன்று நர்மதா உங்கள் தகுதி.

 நாட்டியக்கலை அரசி அபிநயக் கூடாரம் அங்கலாவண்யள அழகு சித்திரம்    என்பது நான் பெற்ற பட்டம்.

                            இவற்றை வழங்கியவர்.

                            என் பாட்டி பிறவி நாட்டியக் கலாராணி பிரேமலதா அவர்கள்.

                            அவர்கள் அவ்வளவு சிறப்பாக ஆடுவார்களா?

                            அவர்கள் நடப்பதே நாட்டியம் போல இருக்கும்.

                            ஏன்?

                            பிறவியிலேயே அவர்களுக்கு ஒரு கால் ஊனம்.

இதுபோன்று ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஊசியாய் தைக்கின்றன. நியாமுள்ளவர்கள் தர்மவான்கள் என்பதுபோல இது சரியான தளத்திற்குச் சென்றால் உரிய நியாயத்தின் முத்திரையாகப் பதியும்.

                அவசியம் படிக்கவேண்டிய தொகுப்பு இது. 

               புத்தக விவரம் . அனுராதா பப்ளிகேஷன்ஸ்
                               விடையல் கருப்பூர், கும்பகோணம். 612 605.
                                  பேச. 04366-262237, 263237



                   


                             






                       

Wednesday, December 17, 2014

தாயற்ற பாவிகாள்....




                                     ஒரு கணம் இதயம் உறைந்துவிட்டது இயங்காமல்.  மிருகங்கள்கூட  குழந்தைகள்  என்றால் இரக்கம் காட்டும் என்பதற்கு ஏராளமான செய்திகள் வருகின்றன.

                                     மிருகத்தைவிடக் கேவலமானவர்கள் என்பதை தாலிபான்கள்......காட்சிப்படுத்தியிருக்கும் கொடூரச் செயல் இது.

                                     பிள்ளைகள் என்ன செய்தன?

                                     படிக்கிற வகுப்பறைக்குள்  மரணத்தையா பாடமாகப் போதிப்பது.

                                     என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள்  அம்மாவைக் கூட நினைக்கமுடியாமல் உயிர் போயிருக்குமே... தாலிபான்  பாவிகளே.. நீங்கள் ஒருவர்கூட தாய்க்குப் பிறக்கவில்லை...

                                     அம்மா என்று  மிருங்கள்கூட  உச்சரிக்கின்றன.  உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டன.

                                     இவர்களைப் பிள்ளைகளாகப் பெற்றதாக எண்ணிய  தாய் உள்ளங்களே.. உங்கள் இதயத்தை அடைத்துவிடுங்கள் இந்தப் பாவிகளுக்குத் துளிகூட கருணையின்றி..

                                      இயக்கம் என்பதற்குப் பெரிய பொருள் உண்டு.  ஒவவொரு தேசத்திலும் விடுதலைப் போராட்டச் சூழமைவில் இயக்கங்கள் மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கின்றன. அவை அந்தந்த தேசத்தில் மிகப்பெரும் நன்மைகளை ஏற்படுத்தியவை.

                                         குழந்தைகளைக் கொல்கிற ஒன்று எப்படி இயக்கமாக இருக்கமுடியும்?  உலகின் மிகச்சிற்ந்த கோழைகள், எதற்கும் தகுதியற்ற தீவிரவாதம் என்கிற ஒரு விஷத்தை மட்டுமே உண்கிற கொலைகார பாவிகள்... ஒன்று சேர்ந்திருக்கிற மலமடிக்கும் சாக்கடை.. இயக்கமல்ல...

                                         காலையில் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகளை பிணங்களாகப் பெற்ற தாய்களுக்குத் தந்திருக்கிறீர்கள்... அந்த தாய் உள்ளங்கள் என்ன பாடுபடும்?  அவர்களின் சாபம் உங்களைப் போன்ற இயக்கங்களை விரைவில் அழித்து சாம்பல் ஆக்கிவிடும்.. இது சத்தியம்..

                                            அல்லா உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... அல்லாவின் தண்டனை உங்களுக்கு நிச்சயம் உண்டு.



                                              இளம் பட்டாம்பூச்சிகளே
                                              சிறகடிக்க வழியற்று
                                              உயிரறுத்துப்போனார்கள் பாவிகாள...

                                               இதயத்தின் வேதனை அடங்கவில்லை.
                                               பிள்ளைகளே....பிள்ளைகளே...

                                               உங்களின் ஆன்மாவில் என்னைப்
                                                புதைக்கிறேன்...  செய்வதறியாமல்...

                                               மீண்டும் பிறந்து வாருங்கள்
                                               உங்களின் தாயின் கருவறைக்குள்...

                                               அல்லாவையும் ஆண்டவனையும்
                                               வேண்டி நிற்கிறேன்...




                                         

                                           

                                         

Monday, December 15, 2014

உள்ளம் இடிகிறது...




                     தமிழ் செம்மொழியாகி வேண்டுமென்கிற அளவிறகு விழாவும் கொண்டாடியாகி முடிந்துவிட்டது.

                     செம்மொழி என்பதற்கு அடிப்படை தமிழின் சங்க இலக்கியங்கள்.  பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்கிற இலக்கியங்கள்.

                     இவ்விலக்கியங்களைப் பாடிய புலவர்களும் அவர்கள் பட்டபாடும் எழுத்தில் வடிக்கமுடியாதவை.

                     ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த மனித  வாழ்வைத் தேடி இரவும் பகலும் பாராமல் ஓயாமல் எந்தவித வாகன வசதியுமற்ற காலவெளியில் ஓயாத மனத்துடன் அலைந்தவர் தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதய்யர் அவர்கள். உவேசா என்று அழைக்கப்படுபவர்.

                    அவர் பட்ட பாடுகளும் அத்தனை துன்பங்களுக்கிடையில் அவர் சேகரித்துப் பாதுகாத்துத் தந்துவிட்டுப்போயிருக்கிற இலக்கியங்கள் ஏராளமானவை.

                       அவர் இல்லையென்றால் அவ்விலக்கியங்கள் இல்லை. அவ்விலக்கியங்கள் இல்லையென்றால் இன்றைக்குப் பலருக்கு பிழைப்பே இல்லை.

                        தமிழ்மொழி உள்ளளவும் தமிழ்பேசும் உள்ளம் உள்ளளவும் அவரை மற்க்கக்கூடாது. மறந்தால் அவர்களை மன்னிக்கவும் முடியாது.

                         அப்படிப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டுவிட்டது.

                         முன்பிருந்தே தமிழுணர்வு உள்ளவர்கள் போராடியும் பலனற்று அவ்வீட்டை வாங்கியவர்கள் அதன் அருமை தெரியாமல் இடித்துவிட்டார்கள். அரசும் பேசாமல் இருந்துவிட்டது.

                          அவ்வீட்டை நினைவு இல்லம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமான தானே வரவேண்டிய உணர்வுள்ள கோரிக்கை விடுக்கப்பட்டும் இடிக்கப்பட்டுள்ளது தமிழ்த்தாத்தாவின் வீடு.

                            அரிய பல நுர்ல்களைப்  புதிப்பித்தவர் (பதிப்பித்தவர்)

                             கருத்தரங்குகள் அல்லது அவரின் பிறந்த நாளில் அல்லது நினைவுநாளில் புகைப்படத்திற்கு மாலையிட்டுப் புகைப்படம் எடுத்து மறந்துவிடுவதைத்தான் காலங்காலமாக ஒவ்வொரு தமிழறிஞருக்காகவும் நாம் செய்கிற அதிகப்பட்சத் தமிழ்த்தொண்டு.

                               தமிழுக்காக நம்முடைய தாய்மொழிக்காகப் பாடுபட்டவர்களை நாம் என்றைக்கும் நினைத்து அவர்கள் உரைத்துவிட்டுப்போன வாழ்வின் சொற்களில் ஏதேனும் ஒன்றையாவது நாம் பின்பற்றி வாழவேண்டும்.

                              உள்ளம் இடிகிறது..

                              அரசிடம் ஒரு  வேண்டுகோள்...  அவர் வீடு இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவிடம் கட்டியாவது  நாம்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.  தமிழுக்காக தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர்வது என்பதும்கூட தமிழ்த்தொண்டுதான். 

Sunday, October 26, 2014

அன்புள்ள...

                  இன்றைக்கு தினமணியில் ஒரு கவிதைபோன்ற செய்தியை வாசித்தேன்.

                    எந்த ஓர் உயிரையும்
                    அதிகம் நேசித்துவிடாதே
                    அவர்கள் பேசாத
                    ஒவ்வொரு நொடியும்
                    மரணத்தைவிட
                    கொடுமையாக இருக்கும்..

உண்மைதான். இந்த நேசிப்பு என்பது ஒருவரோடு காலம் முழுக்க அருகில் இருந்துதான் நேசிக்கவேண்டும் என்பதில்லை.  அது வாய்த்தவருக்குக் கொடுமையானது. அதைப்போன்றுதான் அவர்களின் எழுத்துக்களும். ஒரு படைப்பாளியைப் பார்த்துப் பேசாமலேயே அவரின் எழுத்துக்களோடு வாழ்வது அதனை நேசிப்பது என்பது அற்புதமானது.

               இந்த வாரம் முழுக்க மனம் கணத்திருக்கிறது.

               காரணம் மூன்று மரணங்கள். பேரிழப்புகள்.

               1. நடிகர் எஸ்எஸ்ஆர் என்றழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்.
              2.  எழுத்தாளர்  பெருமைமிகு ராஜம் கிருஷ்ணன் அவர்கள்.

              3. எழுத்தாளர் கலை விமரிசகர் தேனுகா அவர்கள்.

              முதல் இரண்டுபேரோடு பழக்கமில்லை என்றாலும் படங்களின் வழியாக முன்னவரும் எழுத்துக்களின் வழியாகப் பின்னவரும் என் மனதை நனைத்தவர்கள். தெளிவான உச்சரிப்பில் வசனம் பேசி காட்சிக்கு உயிர்கொடுத்தவர் எஸ்எஸ்ஆர். அவரின் படங்கள் படங்களல்ல வாழ்க்கை. வாழ்க்கையாக அவரின் படங்களின் அவரின் நடிப்பு. அவரின் குடும்பத்திற்கு மனத்தின் ஆழத்திலிருந்து அஞ்சலியும் ஆறுதலும்.

              2. தஞ்சை ப்ரகாஷ் அவர்கள் எங்கள் குரு எங்களுக்கு நல்ல இலக்கியங்களுக்கான திசையில் வழிகாட்டி நின்றபோது எண்பதுகளில் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் படித்து நெகிழ்ந்தது உண்டு. காலந்தோறும் பெண் என்கிற அவரின் சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையிலான பெண் குறித்த சிந்தனைப் பதிவுகளான நுர்லை வாசித்தபோது நிறைவு. படைப்புலகிலும் ஆய்வின் பரப்பிலும்  அவரின் தேர்ந்த தெளிவும் எழுத்தும் நாளைவரையும் அழியாக கோலங்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமை செலுத்திய பெண் எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன். சூடாமணி அநுத்தமா அம்பை சிஆர் ராஜம்மா காவேரி வாஸந்தி என பெண் எழுத்துக்களில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர்கள். இதற்குக் காரணம் இவற்றை வாசிக்கச் சொன்ன குரு ப்ரகாஷ் அவர்கள்.

              பலர் பல எழுத்தாளர்களுடன் குறிப்பிடத்தக்க நினைவுகளில் கலநதுகொண்டு சரியாக அவர்களுட்ன் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் புகைப்படம் எடுத்துப் பரிமாறும்போது பொறாமையாக இருக்கிறது. எப்போதும் நம்மைவிட்டுப் போகமாட்டார் என்று ஒவ்வொரு மணிக்கணக்கில்அருகில இருந்தும் என் குரு ப்ரகாஷ்உடன் ஒரு புகைப்படம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு அணிந்துரை வாங்கமுடியவில்லை கடைசிவரை. எனவே ராஜம கிருஷ்ணன் போன்றவர்களை எப்படியேனும் ஒருமுறை சந்தித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது. இது என் ராசி போலும். ஒவ்வொருவரின் இழப்பின் பின்னேதான் இதனை உணரும் வாய்ப்பை எனக்களிக்கிறார் கடவுள்.

             இப்போது என் கண்களில் கரிப்பு மணிகள். அம்மாவின் ஆன்மா அமையுறட்டும்.

               மூன்றாவது கலை விமரிசகர் தேனுகா. வங்கிப் பணியில் இருந்துகொண்டு ஓவியங்களைப் புதுஉலகின் திரையில் தரிசிக்க வாய்ப்பளித்தவர். வண்ணங்கள் வடிவங்கள் வழியாகவே அவர்அறிமுகம். ஒவ்வொரு தஞ்சைக் கூட்டத்திற்கும் அவர் வருவார். ப்ரகாஷ் அழைத்திருப்பார். முதல் அறிமுகத்தில் ஹரணி என்று அறிமுகம் செய்துகொண்டேன். இனிமையாக ஓவியம் குறித்த புரிதலை உண்டாக்கினார்.

                அதற்கு சரியாக நான்கு முறைகள் சந்தித்திருக்கிறேன் அவரை. நான்காவது முறை சமீபத்தில் தி இந்து தமிழ் நாளிதழ் நடத்திய வாசகர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது நானும் நண்பர் அனன்யா அருள் அவர்களும் சென்று நலம் விசாரித்தோம். என்னுடைய சந்தேகப்புத்தி என்னைத் தெரிகிறதா சார் என்றேன். என்ன ஹரணி நன்றாகத் தெரிகிறது என்றார். உடல் தளர்ந்திருந்தது. பின் அவரிடம் கவிஞர் நா விச்வநாதன் அவர்கள் பேசத்தொடங்கப் பிரிந்தோம் நானும் அருளும். வழக்கமாகப் பேசுகிற பேச்சிலிருந்து மாறுபட்டிருந்தது தேனுகாவின் பேச்சு. மாறுபட்ட பேச்சு. உணர்ச்சி இழையோட இந்துவின் தன்மைகுறித்து தேவை குறித்து மிக அழகாகப் பேசினார். என்ன இது தேனுகா இன்றைக்கு மாறுபட்டிருக்கிறார் பேச்சில் என்றுகூட நானும் அருளும் நினைத்தோம். கூறிக்கொண்டோம் பரஸ்பரம். கடைசிப் பேச்சு என்றாலும் அவர் உடல் தளர்ந்திருந்தாலும் சுவை குறையாத தளராத பேச்சு அது.

                 இன்றைக்கு அவர் இவ்வுலகிலிருந்து உடல் வழியாகவும் விடைபெறுகிறார். அவரின் எழுத்துக்கள் அவரின் முகம் இன்றைக்கும் முகத்தில் ஓர் ஓவியம்போல மனத்திரையில் விரிந்துகொண்டேபோகிறது.

                 தி இந்து வாசகர் விழாவில் அவரிடம் கைகுலுக்கம்போது  சிறுபிள்ளைகளின் கழற்றிப்போட்ட சட்டைகளைக் கையில் எடுப்பதுபோது மிருதுவாக இருந்தது அவரின் குலுக்கல். அது தளர்வு என்றாலும் ஓர் ஓவியத்தைத் தொடடுத் தடவுவதுபோலிருந்தது.

                  தேனுகா சார்...

                    

Thursday, October 23, 2014

தீபாவளி கொண்டாடியவர்கள்...



              தீபாவளி கொண்டாடியவர்கள்...


              தீபாவளி ஒவ்வொரு ஆண்டு வந்தாலும் அதுவொரு எதிர்பார்ப்பை உருவாக்கியே வருகிறது.

                முன்கூட்டியே அவரவர் தகுதி, வேலை, சம்பளம், பட்ஜெட் இவற்றிற்கு ஏற்பத் திட்டமிட்டு குடும்பத்தின் அனைவரும் சேர்ந்துபோய் துணி எடுத்து வந்துவிடுகிறார்கள்.

                 தீபாவளி வருவதற்கு முன்னமே இரண்டு மாதங்களுக்கு முன்பே துணி எடுத்து ரிலாக்ஸாகத் தைத்துக் காத்திருப்பவர்கள். இவர்களின் திட்டமிடல் எப்போதும தவறாது.

                ஒரு மாதத்திற்கு முன்பு தீபாவளி குறித்து பேசத் தொடங்கி அது தொடர்பாகக் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டை வந்து அது அணையாத நெருப்புப்போல தீபாவளி வரும் ஒரு வாரத்திற்கு முன்பு அணைந்துபோகும். எப்படியோ பணம் புரட்டி எல்லாமும் எடுத்தவுடன்.

                தீபாவளிக்கு முன்தினம் கண்டிப்பாக அன்றைக்கு எப்படியும் மழை பெய்யும். ஒரு குடைதான் இருக்கும். குடை மறந்துபோகும். கூட்டம் நெருக்கும். எதையும் பார்த்து நிதானமாக எடுக்கமுடியாது. என்றாலும் வேறு வழியின்றிப் போய் எடுத்து வீடு வந்துசேரும்போது நேரம் மட்டுமல்ல எரிச்சலும் நீண்டிருக்கும்.

                           அவரவர் வசதிக்கேற்ப வாகனங்களில் வருகிற கூட்டம்.  வாயில் பற்ற வைத்த சிகரெட் அல்லது பீடியுடன் ஒரு கையால் வேட்டியின் நுனியைப் பற்றிக்கொண்டு முன்னே ஒரு கிராமத்து கணவன் அசைய.. பின்னே அவன் மனைவியும் பிள்ளைகளும் முகத்தில் மகிழ்ச்சியுடன்.. வேடிக்கைப் பார்த்தபடி நெரிசலில் நடப்பார்கள்.

                           பல விவாதங்கள்.. சிறுசிறு சண்டைகள்...பிரச்சினைகள்.. வீட்டிற்குப் போனவுடனே துணி பத்தவில்லை மாற்ற வாவென்ற அழைப்புக்கள். டாப் இருக்கு சரியான பாட்டம் கிடைக்கலே..  இவ்வளவு கலர் இருக்கு நான் நினைச்ச கலர் அமையலே.. எல்லாருக்கும் நல்லா அமைஞ்சுடிச்சி.. எனக்குத்தான் கலரும் அமையலே துணியும் அமையலே.. இப்படி பல உரையாடல்கள்.. பணம் பத்தாமை.. மனம் போதாமை... குணம் போதாமை..

                       எப்படியே தீபாவளி நாள் விடிகிறது.

                       முன்தினம் இரவிலிருந்து மத்தாப்புகளும் ராக்கெட்டுகளும் வண்ணம் காட்ட.. படபடவென்று பட்டாசுகள் வெடிக்கின்றன.

                       தீபாவளியன்று வீடுவீடாகப்போய் பலகாரங்கள் பரிமாறி துணிகுறித்த விசாரிப்புகள். எதிர்பார்ப்புகள்..

                         எல்லாம் முடிந்து அன்று மாலை..

                         ஒரே உரையாடல் எல்லோரிடத்தும்

                         என்னதான் பாத்துப் பாத்து எடுத்தாலும் இந்த வருஷமும்
டிரெஸ் சரியா அமையலே..  நாலைஞசு பேரு சொல்லிட்டாங்க.. இது மாட்ச் இல்லே.. இதப்போய் எடுத்தியான்னு.. சே..

                          குடிசைகள் அடர்ந்த  தெருக்களின் ஊடே நடந்தால்... நடக்க முடியாது...வாசல்தோறும் பளபளப்பான சேலைகளில் உள்ளே கன்னங்கரேலென்ற பெண்கள் வாயெல்லாம் சிரிப்பாக.. ஆண்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு,  எனப் புளொரெசண்ட் கலர்களில் சட்டை வெள்ளை வேட்டி.. பிள்ளைகள் உடம்பில் ஜாக்கெட் அணிந்ததுபோல மினி சர்ட்.. மேலே ஒரு கலர் கீழே ஒரு கலர்.. சட்டையில் அங்கங்கே பிளாப்புகள் பட்டன்கள்.. பாக்கெட்டுகள்.. கீழே பேண்டை மடித்துவிட்டிருப்பார்கள்.. கைகளில் உதிரி வெடிகளைப் பிடித்திருப்பார்கள்... கையெல்லாம் மருந்தின் படலம் முட்டையோட்டின் உள் சவ்வுபோலப் படர்ந்திருக்கும்.. அதை பேண்ட்டில் தேய்த்தபடி வெடி வெடிப்பதில் மும்முரமாக.. சின்னஞ்சிறு பிள்ளைகள் பாதி முறுக்கு கடித்தபடியோ.. அதிரசம் வாயில் பாதி சட்டையில் பாதி உதிர்த்தபடியோ..சட்டைப் பாக்கெட்டில் துருத்திக்கொண்டிருக்கும் வாழைப்பழம்.. இப்படி தெருமுழுக்க எல்லோருக்கும் தீபாவளியை உதிர்த்துக்கொண்டிருக்கும் சிரிப்பு.. சிரிப்பு...

                      ஒவ்வொருஆண்டும் இப்படித்தான்... இவர்கள்தான் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.. மறுநாள் எதுவுமில்லை என்ற உணர்வை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டு..

                            மனதால் கொண்டாடுவோம் தீபாவளி மட்டுமல்ல எல்லாவற்றையும் எல்லாமும் குறையாக இருந்தாலும்..