Monday, July 15, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்..... ஜிஎம்பி ஐயாவின் கடிதம்...



              வணக்கம்.

             ஜிஎம்பி ஐயா பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.

             73 வயதுடைய இளங்காளை அவர்.

             இந்த வயதிலும் தன்னுடைய  அனுபவ விருட்சத்திலிருந்து ஒவ்வொரு சுவை கனியாகத் தந்துகொண்டேயிருக்கிறார்.

             பாருங்கள் ஓர் அதிசயத்தை. அவரின் பதிவுச் சொற்கள் தவறில்லாமல் பதிவாகியிருக்கும். இதிலென்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம். அவருக்குத் தட்டச்சு தெரியாது. என்றாலும் தளராமல் ஒற்றை விரலால் எத்தனை பெரிய பதிவுகளையும் அனாசயமாகப் பதிவிட்டுவிடுகிறார்.

                நாம் கற்றுக்கொள்ளவேண்டும் அவரிடமிருந்து நிறைய.

                என்னுடைய இல்லத்திற்கு வந்தபோது அவரிடம் சில புத்தகங்களைத் தந்தேன். உடனே அதில் வித்தியாசமாக இருக்கிறது என்று நத்தையோட்டுத் தண்ணீரைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் அதுபற்றி.

                இப்போதுதான் பேராசிரியர் கருப்புசாமியின் விமர்சனத்தைப் பதிவிட்டுவிட்டு மின்னஞ்சலைத் திறந்தேன். இன்ப அதிர்ச்சி. ஜிஎம்பி ஐயாவின் கடிதம். உங்கள் பகிர்வுக்காக அதுவும். இன்று இரு விமர்சனக் கனிகள் சுவைத்த திருப்தியுடன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


அன்புள்ள ஹரணிக்கு
முகம் தெரியா நட்பினாலேயே தங்கள் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்த நான் நேரில் உங்களைச் சந்தித்ததில் அகமகிழ்ந்தேன் என்பதே நிஜம். உங்களது எளிமையும் பணிவும் என்னைக் கவர்ந்தது. அது எல்லோரையும் கவரும் என்பதும் உண்மை. நான் அங்கு வந்திருந்தபோது என் கை கொள்ளா அளவுக்குப் புத்தகங்களை எனக்குக் கொடுத்தீர்கள். அண்மை காலமாக வாசிப்பைத் தொலைத்திருந்த எனக்கு அது ஒரு விருந்துபோல் தோன்றியது. படிப்பதற்கு நான் எடுத்துக்கொண்ட முதல் புத்தகம் தங்களது “நத்தையோட்டுத் தண்ணீர்.” தலைப்பே வித்தியாசமாய் இருக்க படிக்கத் துவங்கியபோதே ஒன்று விளங்கியது. சக மனிதர்களிடம் ஆங்கிலத்தில் சொல்லும் empathy இல்லாவிட்டால் இந்தமாதிரி கருத்துகள் உதிக்காது. அர்ச்சகர் தரும் சிறிது தீர்த்தத்தை அருந்தும்போது சற்று மனப்பாரம் குறைந்தாற்போல் இருக்கும் என்று எழுதி இருக்கிறீர்கள். அதிகம் படித்தறியாத எனக்கு சந்தேகங்கள் பல எழுவதுண்டு. மழைக் காலங்களில் வயல் வரப்புகளில் நத்தைகள் திரிவது கண்டதுண்டு. அதே போல் கடற்கரைகளில் கிளிஞ்சல்கள் மற்றும் சிறிய சங்குகளும் கண்டதுண்டு. நீங்கள் குறிப்பிடும் நத்தையோடும் சிறிய சங்குகளைப் போலவே இருக்கும். இதுதான் அதுவா.?
எழுதுவதே எண்ணங்க்ளைக் கடத்த என்பது என் கணிப்பு. அது பொழுதுபோக எழுதினாலும் எழுத உந்துவதே உள்ளத்தின் உணர்வுகள்தான். நூலின் துவக்கத்தில் சமர்ப்பணமாக நீங்கள் கூறியிருக்கும் உள்ளம் படைத்தோரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.அதுவும் தலைமுறை இடைவெளி என்று கூறி பல நல்ல இயல்புகள் தொலைக்கப் பட்டு விட்டன. ஏதும் செய்ய இயலாத நிலையில் எழுதுவதன் மூலம் உள்ளக் கொந்தளிப்புகளையாவது கொட்டித்தீர்க்கலாம். அப்படி வெளிவரும் எழுத்துக்கள் கற்றதனுடையவும் அனுபவத்தினும் வெளிப்பாடு என்பது புரிகிறது. அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடைபெறும் ஒன்றினை மற்றது அறிந்த கத்திச் சண்டையெ என்பதும் புரிகிறது. அவற்றை தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு ஆசிரியராக இருந்து பொறுமையாக, வெளிப்படையாக அனுபவ முத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் உங்களது ஒவ்வொரு கருத்திலும் உடன்பாடு உண்டு.. மற்றபடி விமரிசிக்க எனக்குத் தகுதி போறாது.
என் பணிக்கால வாழ்வில் பெரும்பகுதியை தர உறுதி மற்றும் தரக் கட்டுப்பாடு என்றே கழித்துவிட்டதால் சில குறைகள் என் கண்ணில் தட்டுப்படுவது இயல்பாகிவிட்டது.
இந்த நூலில் குறை ஒன்றும் இல்லை இருந்தாலும் உள்ளடக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள அத்தியாய வரிசை நூல் கோர்க்கப்படும்போது மாறி இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா.?   

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000


நத்தையோட்டுத் தண்ணீர் .....விமர்சனம்.... கோபியிலிருந்து...



            பேரா. நீ.வ.கருப்புசாமி அவர்கள் கோபி கலை அறிவியல் கல்லுர்ரியில் பணிபுரிகிறார். அவருக்கு எனது நுர்லை அனுப்பியிருந்தேன். நுர்ல் பெற்றதும் உடனே பேசினார்.


                    அன்பழகன் சார்... நான் வண்டியில்போகும்போது கீழே விழுந்து காலில் அடிபட்டு மாவுக்கட்டு போட்டு படுத்திருக்கிறேன். உங்கள் புத்தகம் வந்துவிட்டது. எனவே நகரமுடியாத சூழலில் படிக்க ஆரம்பித்தேன். இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான ஒரு புத்தகம் யாரும் படிக்கிற மாதிரி எளிமையாக இருக்கிறது. முழுமையாகப் படித்துவிட்டு எழுதுகிறேன் என்றார்.

இன்று அவரின் விமர்சனம் அஞ்சலில் வந்தது. உங்களின் பகிர்வுக்காக.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


               நத்தையோட்டுத் தண்ணீர் என்னும் நுர்லில் சமூகத்திற்கு ஏற்புடைய கருத்துக்களை சோழவளநாட்டின் வட்டாரத் தமிழில் எழுதியமையும் பண்பாடு. உறவு. நட்பு. வாசிப்பு. தமிழ ஆய்வாளரின் நிலைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தெளிவாகவும் எளிமையாகவும் கருத்துக்களை எழுதியுள்ளமையைக் காணலாம்.


1, வாசித்தல் சுவாசித்தால்...

             என்னும் கட்டுரையில் நிகழ்கால உயர்கல்வியில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தையும் தேடலையும் புத்தகங்களில்தான் கிடைக்கும். இன்றைய வாசித்தலின் வகைகளையும் அதனால் ஏற்படும் உறவுகள். பண்பாடு. தன்னம்பிக்கைச் சிந்தனைகள் வாசிப்பதால் வளர்த்துக்கொள்ள இயலும் உலகியல் வழக்கு எப்படி உள்ளது அதனால் சமுதாயத்தில ஏற்படும் மாற்றங்களையும் எனத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

2, நட்பு

               நவீன காலத்தில் நட்பின் நிலையை மிகவும் சுருக்கமாகவும் இன்றைய நட்பின் சூழலையும் மிகவும் அழகாக விளக்குவதற்கு ஜாதகத்தில் தொடங்கி வாலிப வயதில் நழுவிய விதத்தையும் சூழ்நிலைக்கு ஏற்ப தோன்றும் நட்பையும் மிகவும் சிந்திக்கும்படியாக நடப்பில் தன்மையில் எழுதியுள்ளார்.

3. மடலேறுதல்

                    இன்றைய கடிதங்கள் எப்படியுள்ளன? அறிஞர் அண்ணா. காந்தியடிகள். மு.வ. கடிதங்கள் சமுதாயத்திற்கு ஆறுதலாக அமைந்திருந்தன. இன்றைக்குக் கடிதங்கள் காணாமலேயே போய்விட்டன. பழைய மடல்கள் ஆறுதல் மொழிகளாக இருந்தன இன்றைய செய்திகள் மடலேறுதல் போல அமைந்துள்ளன .

4. சந்தர்ப்பவாதிகள்

                 தலைப்பில் வாழ்க்கையில் சந்தர்ப்பவாதிகள் சமூகத்தில் அதிகம் உண்டு அவர்கள் நல்லவர்களை எளிதாகக் குழியில் தள்ளிவிடுவார்கள் காரியம் நிறைவேறும்வரையில் மிகவும் நளினத்தோடு பேசுவார்கள் காரியம் முடிந்தபிறகு எண்ணிப் பார்ப்பதில்லை என்பதை இளைஞர்களுக்கு சுட்டிக் காட்டும் விதம் அருமையாக உள்ளது.

5 பண உறவுகள்

             உண்மையான உறவுகள் சமுகத்தில் விதை அற்ற விளைபொருட்கள் போல் உள்ளன. பணம் பததும் செய்யும் பாதாளம் வரை பாயும் என்பதை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

6. வழிகாட்டிகள்

             நல்ல வழிகாட்டிகள் மூலம் இளைய தலைமுறை மற்றும் வளர்ந்தவர்கள் தங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளமுடியும் என்றும் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள் வயல்நிலம் போலவும் ஏற்காதவர்கள் மேடுபள்ளம் போன்றவர்கள் போலவும் என அர்த்தமுள்ள வகையில் தெளிவாக்கியுள்ளார்.

7. இளம் பருவமும் மனவெளி விளையாட்டுக்களும்

                  இளமையில் விளையாட்டுக்கள் இல்லாத கல்வி உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் கேடாக அமைந்துள்ளன. இதன் விளைவுகளையும் சிதைவுகளையும் சமுகத்தின் மீதான மிகுந்த அக்கறையோடும் நிகழ்கால சூழலையும் எனப் பதிவு செய்துள்ளவிதம சிறப்பானது.

8, தமிழாய்வுகள்

            தமிழ் இனம் தன்னை எப்படி இழிவுபடுத்திக்கொண்டாலும் குறை கூறினாலும் யாரும் கவலைபடாத நிலை உள்ளது. நுனிப்புல் மேய்தலாக இன்றைய ஆய்வுகள் உள்ளன. தமிழ் மீது அக்கறை இல்லை. அதோடு கருத்துத் திருட்டுக்கள் அதிகமாக ஆய்வுகளில் இடம்பெறுவது மிகவும் வருத்தமாக உள்ளது.  நாமே நம் மொழிக்கு வலிமை சேர்க்கவேண்டும். தவறினால் மொழிக்கும் இனத்துக்கும் தீமை செய்பவர்களாக இருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் இக்கட்டுரையில்.

9. என் ஆசிரியர்கள்

                 அன்றைய காலத்தில் வாழ்ந்த ஆசிரியர்களின் மதிப்புக்களையும் மாணவர்களைத் தங்கள் சொத்துக்களாக மதித்த பாங்கையும் இன்றைய ஆசிரியர்கள் நெறிப்படுத்தும் பண்பு இல்லாதவர்களாகவும் மாறிப்போனதை கொண்ட வாழ்க்கைதான் நமக்கு வாய்த்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

10. நீதிபோதனை வகுப்புகள்..

                  பள்ளியில் நீதிபோதனை வகுப்புக்கள் இல்லாமல் போனதால் மாணவர்கள் மனதில் தைரியம் இல்லை. வாழவேண்டிய குழந்தைகள் சில தோல்விகளைகூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.  அன்றைய நீதிபோதனை வகுப்புக்கள் தன்னம்பிக்கைக்கு உகந்த வகையில் உள்ளதை இக்கட்டுரை வாயிலாக உணரமுடிகிறது.

11,  நம்பிக்கை அனுபவ வைத்தியம்

                  அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு மனச் சோர்வு அடையும்போது பெரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் மொழிகளால் மாறிப்போனது. பல்வேறு கை வைத்தியமுறைகள் குழந்தைகளைப் பண்படுத்தின. இன்றைய சூழல்  வழி தெரியாமல் திகைக்கின்ற வாழ்க்கையைப் படம்பிடித்து இக்கட்டுரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. பெரியவர்களின் இழப்பின் மதிப்பையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

12. சில அர்ப்பணிப்புக்கள்

               மனிதனாகப் பிறந்தவன் வாழும் காலத்திலும் வாழ்ந்து முடித்த காலத்திலும் சிலருக்காவது வழிகாட்டியாக இருந்து ஏதேனும் செய்துவிட்டு அதனை விட்டுவிட்டுப்போகவேண்டும. அது அர்ப்பணிப்பாக இருக்கவேண்டும் என்ற அரிய கருத்தைப் பதிவுசெய்துள்ளவிதம் சிறப்பானதாக இக்கட்டுரையில் வெளிப்படுகிறது.

13, வடவாற்றங்கரையில்

                        இளமைக் காலத்தில் துள்ளிக் குதித்து விளையாடிய ஆற்றங்கரையயையும் அது வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருந்ததையும் எண்ணிப் பார்க்கும் விதமும் ஆற்றங்கரையோரம் இருந்த சிவ வழிபாட்டு முறைகளையும் இளமை நினைவுகளையும் கூறும்போது அது மண்வாசனையோடு மணக்கிறது இக்கட்டுரையில்.

14. சபை நாகரிகம்

                         இப்புத்தகத்தில் இது கடைசிக்கட்டுரை. பண்பட்ட மனிதர்கள்கூட  சபை நாகரிகம் தெரியாமல்  இருப்பதையும் சபையில் எப்படி பேசவேண்டும் எப்பொழுது பேசவேண்டும் என்று பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை. இவற்றை மாணவ சமுதாயத்திற்கு எடுத்துக்கூறி நெறிப்படுத்தவேண்டும் என்ற உணர்வை இககட்டுரை உணர்த்துகிறது.

                    மொத்தத்தில் நடைமுறை வாழ்க்கையில்  இளைய தலைமுறையினருக்கும் வளர்ந்த தலைமுறைக்கும் இப்புத்தகம் கற்றுக் கொடுக்கும் நிலையில் அமைந்துள்ளது.  நம்முடைய பண்பாடும் மதிப்புக்களும் சிதைந்துவிடக்கூடாது என்கிற கவலையோடு உருவாக்கப்பட்டிருப்பதே இந் நுர்லின் வெகு சிறப்பாகும்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Sunday, July 14, 2013

நத்தையோட்டுத் தண்ணீர் விமர்சனம்




         பேராசிரியர் மா. கோவிந்தராசு என்பவர் அரசு கலைக்கல்லுர்ரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். கிட்டத்தட்ட 30 நுர்ல்களின் ஆசிரியர். இலக்கணம், திறனாய்வு, இலக்கியம், படைப்பிலக்கியம் எனும் பன்முகத் தளங்களில் இயங்குபவர். அவரின் நத்தையோட்டுத் தண்ணீர் நுர்ல் குறித்த விமர்சனம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     பேரன்பும் பெருமதிப்பும் கெழுமிய பேராசிரியர் க.அன்பழகன் (ஹரணி) அவர்களுக்கு அன்பு வணக்கம். நலமும் நாட்டமும் ஒன்றே.

       தங்களின் நத்தையோட்டுத் தண்ணீர் நுர்லினை ஆழ்ந்து வாசித்தேன்.

      இந்நுர்ல் தங்கள் அனுபவத்தின் சாறு. சுயசரிதையின் கூறு..கிராமம். இயற்கை. விளையாட்டு. நல்ல பெற்றோர். வாசிக்கும் பழக்கம். எழுதும் பழக்கம். நன்னெறி. குருபக்தி. நாகரிகம். தமிழர் பண்பாடு என இச்சூழலில் வளர்ந்த அனைவருக்கம் தங்களின் அனுபவம் ஏற்பட்டிருக்கும். அனுபவங்களை நினைப்பதும் பேசுவதும் எளிது... அவற்றை வரிவடிவமாக்குதல் அரிது.

         இந்நுர்ல் பற்றித் தங்களிடம் நேரில் அல்லது செல்பேசியில் கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தங்களின் மடலேறுதல் கட்டுரை என்னை எழுத வைத்தது. இந்நுர்லில் உள்ள மூன்றாவது கட்டுரை மடலேறுதல் என்பதில் கூறியுள்ளபடி பேசினால் போதாது.. கடிதம் எழுத வேண்டும் என்பதை உணர்ந்து இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

         சைவ சித்தாந்த சாத்திரங்களைப் போலப் பதினான்கு கட்டுரைகளில் பலநுர்று அறவுரைகள். அத்தனையும் பார்த்து. கேட்டு. அனுபவித்து உணர்ந்தவை. தங்களின் அனுபவத்தைச் சாறாகவும் இனிப்பாகவும் தந்திருக்கிறீர்கள்.

             ஏன் வாசிக்கவேண்டும்? எப்படி வாசிக்கவேண்டும்?  வாசிப்பின் பயன் என்ன? இன்றைய வாழ்க்கைக்கு வாசிப்பின் தேவை என்ன? இவற்றிற்கு அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் இன்றைய எதார்த்த உலகில் வாசிப்பு குறைந்து. உறக்கமும் ஊர்ப்பேச்சும் அதிகரித்து வருகின்றன. இந்நிலை மாறவேண்டும். இதற்குத் தங்களைப் போலப் பலர் துர்ண்டுதல் வேண்டும்.

              தங்களின் எழுத்தில் எளிய மொழிநடையும் சிறுசிறு தொடர் அமைப்பும் தெரிகின்றன. கட்டுரையிலும் தங்கள் கவிதையின் தாக்கம் வெளிப்பட்டுள்ளது.

                           வாசிப்பு என்பது ஒரு கலை
                           வாசிப்பு என்பது ஒரு தவம்
                           வாசிப்பு என்பது ஒரு பரவசம்
                           வாசிப்பு என்பது ஓர் உணர்வு
                            வாசிக்க வாசிக்க வளம் பெறுகிறோம் (ப.3)

             வாழ்க்கையின் அனுபவம் இலக்கிய வடிவம் பெறும்போது அது போற்றப்படுகிறது. இந்த நுர்லில் முத்திரை வரிகள் பல காணப்பெறுகின்றன. சான்றுக்குச் சில

                      வாசிப்போம் வாழும்வரை வாழ்வதற்காக.....
                      வாழ்கிறோம் என்பதை அர்த்தப்படுத்தவும்...

                      நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது...

                      எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு
                     சுட்டிக் காட்டுவது நட்பு

                      எழுதிப் பகிர்வதால் மறக்கமுடியாத சுமை இறங்கி
                      விடுகிறது. மறந்ததுபோல் ஆகிறது. இலேசாகிறது.

                      காற்று நுழைய முடியாத இடத்தில் கடித உணர்வுகள்
                      நுழையும். அது வாழ்வின் அந்தரம்.

                       உணர்வுகள்தான் உறவுகள்

                       மருத்துவப் பரிசோதனைகளில் நெகடிவ் என்று வந்தால்தான்
                       பாசிடிவ் வாழ்க்கை

                      பாவனை முழுக்க விஷம் தடவிய சொற்கள்


         சந்தர்ப்பவாதிகளுக்கு உருவகப் பெயர்களாக

                    மண்குதிரை. உடைந்த பாத்திரம். சிதைந்த பொருள். அழுகிய
                   பண்டம். புதைமணல்.  எனத் தந்திருப்பது நுட்பமானது.


   பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்னும பாடலடிகளும்  தங்களின் பண உறவுகள் கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

                              பணம்தான் தகுதி
                              பணம்தான் தரம்
                              பணம்தான் உரம்
                              பணம்தான் சக்தி
                              பணம்தான் உயிர்
                              பணம்தான் மரணம்
                              பணம்தான் கடவுள்
                     
கவிஞர் கண்ணதாசன் அனுபவம்தான் எல்லாம் என்பார். தாங்களோ பணம்தான் எல்லாம் என்கிறீர். இஃது இன்றைய நிலை.

               பொது வாழ்க்கைக்கும் ஆய்வுகளுக்கும் இன்றைய வழிகாட்டிகள் எப்படி இருக்கின்றார்களோ என்பதை எதார்த்தமாகக் கூறியுள்ளீர்கள்.

                வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.

              எதார்த்தமான நிஜ வாழ்க்கையில் நடைபெறும் குழந்தைகள் தொடர்பான செய்திகளை அருமையாக ஆழமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

                இன்று தமிழாய்வு என்னும் பெயரில் நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் மிகப்பெரும் கொலைபாதகங்களாக அமைந்துள்ளன என்று கூறுவது மிகப்பெரும் உண்மை. இன்று காணப்படும் மோசமான வழிகாட்டிகளையும் ஆய்வாளரின் அவலங்களையும் உள்ளவாறு கூறியுள்ளீர்கள்.

                  என் ஆசிரியர்கள். வடவாற்றங்கரையில் என்னும் கட்டுரைகள் இருத்தலியக் கோட்பாட்டுடன் பதிவாகியுள்ளன. பள்ளிகளில் முன்பெல்லாம் M.I. Period என்று நீதிபோதனை வகுப்பு நடைபெறும். இன்று இல்லாதது வருத்தம்தான். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் பலருக்கு நீதி போதிக்கத் தெரியாது. அல்லது அதற்குத் தகுதியில்லை என்பதும இங்குக் குறிப்பிடதத்க்கது.

                  அமெரிக்கா, இங்கிலாந்து. ஜப்பான். ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தாம் மேற்கொண்ட காரியத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கே வழிகாட்டியவர்கள் நம் முன்னோர்கள் இவண என்பது நோக்கத்தக்கது.

                  சத்திய்த்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவன் அரிச்சந்திரன்
                 தருமத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவன் தருமன்

ஆனால் இன்றைக்கு மக்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அரிதாகி வருகின்றது. அதனால் ஒரு துறையில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை.

               அவை அறிதல். இடமறிதல். நாகரிகம். பண்பாடு முதலானவற்றைக் கடைசிக்கட்டுரை பேசுகின்றது.

               இந்நுர்ல் கால் நுர்ற்றாண்டுக்கும் முந்தைய காலச்சுவடு. இன்றைக்கு வரலாற்றுப் பெட்டகம். தமிழன்னைக்கு அருங்கலன். தமிழர்களுக்கு அறைகூவல். சிறுவர்களும் இளைஞர்களும் படித்தவர்களும் ஆய்வாளர்களும் நெறியாளர்களும் இந்நுர்லை மீண்டும் மீண்டும் புரிந்து வாசிக்கவேண்டும்.

               பேராசிரியர் (ஹரணி) அவர்கள் இதுபோல் பல அரிய நுர்ல்களை இன்னும் எழுதுவதற்கு என்னுடைய நல்வர்ழ்த்துக்கள்.

                                                                                                  என்றும் அன்புடன்
                                                                                                 மா.கோவிந்தராசு


குறிப்பு...  1.  நுர்லின் தலைப்பு நத்தையோடு என்று உள்ளது. பெரும்பாலும்
                        நத்தைக்கூடு என்றுதான் சொல்வார்கள்.

                   2. குளியல் அறையில் குதிகால் பாதம் தேய்த்துக் குளிக்கச் சொர
                       சொரப்பான கருங்கல் தங்கள் தந்தை வைத்திருந்தார். அதனைப்
                      போல் எனக்கும் ஒருகல் (கரந்தையில் கிடைக்கும்) தர இயலுமா?



பேரா. கோவிந்தராசு அவர்கள் என்மேல்  கொண்ட அன்பின்காரணமாக மிகையாகவும் அன்புபாராட்டி எழுதியிருக்கிறார். இருப்பினும் அவரின் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.


 அவரின் குறிப்பிற்குப் பதில்கள்.

                       நத்தைக்கூடு என்பது எழுதுகிற வழக்கு. ஆனால் பேச்சு வழக்கில்
                      அந்த நத்தையோட்டை எடு என்றுதான் சொல்வார்கள். பேச்சு
                      வழக்கைப் பயன்படுததியிருக்கிறேன்.

                       என் தந்தையார் பயன்படுத்திய கல் தற்போது இல்லை. இருப்பினும்
                      தங்களுக்காக ஒரு சொரசொரப்பான கல் வாங்கித்தர மிகவும்
                      விருப்பப்படுகிறேன்.


                        நன்றிகள்.
                      

Saturday, July 13, 2013

குழந்தை இலக்கியம்......... காந்தியும் குமரேசனும்




 அறிமுகம்


                              நான் எழுத்துலகில் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு குழந்தைகள் என்றால் அளவுக்கதிகமான உணர்வுகளை வெளிப்படுத்துவது உண்டு. எனவே குழந்தை இலக்கியம் என்பது குறித்த உணர்வு எப்போதும் என்னுள்  அணையாத நெருப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது.

                                 1. குழநதைப் பாடல்கள்
                                 2. குழந்தைக் கதைகள்
                                 3. குழந்தைகள் தொடர்பான விளையர்ட்டுப்பொருட்கள்
                                 4. குழந்தை இலக்கியங்களை ஆவணப்படுத்துதல்
                                 5. குழந்தைகளுக்கான நாவல்கள்
                                 6. குழந்தைகளுக்குப் படக் கதைகள்
                                 7. குழந்தைகளுக்கு அறிவியலைக் கதையாகக் கூறல்.
                                 8. குழந்தைகளுக்கான நாடகங்கள்
                                 9. குழந்தைகளுக்காக உலகக் குழந்தை இலக்கியங்களை
                                     மொழிபெயர்த்தல்
                                10. குழந்தைகளுக்கான அகராதி உருவாக்கம்

எனப் பன்முகத் தளங்களில் என்னுடைய திட்டங்கள் திட்டமிடப்பட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். இதன் ஒவ்வொரு பிரிவையும் ஒரு மாதிரியாகத் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கே இந்த அறிமுகம்.

                              மைசூர் இந்திய  மொழிகள் நடுவண் நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்துடன் இணைந்து நடத்திய குழந்தைகளுக்குக் கதை எழுதுதல் எனும் பயிற்சிப்பட்டறையில் 15 நாள்கள் கலந்துகொண்டு சுமார் 50 கதைகளை எழுதித் தந்துள்ளேன். அந்த 50 கதைகளும் தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் படங்களுடன் கூடிய புத்தகங்களாக இந்திய மொழிகளில் உலவ விருக்கிறது. அதற்கான படிகளைப் புத்தககம் வெளிவந்ததும் எழுதிய ஆசிரியர்களுக்கு வழங்குவதாகக் கூறியிருக்கிறார்கள். அவை வந்ததும் அறிமுகப்படுத்துவேன்.

                              தற்போது 2008 இல் யுரேகா புக்ஸ நிறுவனத்தாரால் நண்பர் எழுத்தாளர் ஜாகீர் ராஜா அவர்களின் முயற்சியால் என்னுடைய 5 கதைகளைக் கேட்டுப் பெற்று அவை புத்தகமாக வெளிவந்துள்ளது. ஆனால் அவற்றைத் தற்போது வெளியிடுவதற்குக் காரணம் குழந்தை இலக்கியம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கான அவசியத்திற்காகத்தான்.

                             புத்தகத்தின் தலைப்பு..... காந்தியும் குமரேசனும் என்பதாகும். இதில் உள்ள 5 கதைகளில் ஒரு கதை உங்கள் பார்வைக்காக மகிழ்ச்சியுடன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                       காந்தியும் குமரேசனும்.


               குமரேசன் அவன் அப்பா மாரியுடன் மார்க்கெட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் அப்பா ஒவ்வொரு மீன் வகைகளையும் கூறுகளாகப் பிரித்துக்கொண்டிருந்தார்.

                      டேய் குமரேசு போய் ஒரு கட்டு காஜா பீடி வாங்கிட்டு வாடா என்றான் .

                       போப்பா முடியாது... நீ போய் வாங்கிக்க... புகை பிடிச்சா கேன்சரு
வந்துடும்னு வாத்தியாரு சொல்லியிருக்காரு.

                         கம்னாட்டி பெரிய கலெக்டரு மவன்.. கேன்சரு எனக்குத்தானே
வரும்... போய் வாங்கிட்டு வாடா... என்றான் மாரி மறுபடியும்.

                          முடியாதுப்பா.. இத எல்லாம் பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு
உறுதிமொழி எடுத்திருக்கோம்.

                           மாரிக்குக் கோபம் வந்தது. திரும்பவும் கேட்டான்.
நான் வியாபாரத்த பாக்கணும் போறியா.. மாட்டியா...

                             முடியாதுப்பா.. என்றதும் சட்டென்று குமரேசனை காலால் உதைத்தான். இதை எதிர்பார்க்காத குமரேசன் நிலைதடுமாறி அப்படியே குப்புற விழுந்து அம்மா என்று கத்தினான்... பெயர்ந்த சிறுசிறு ஜல்லிகள் முளைவிட்டிருந்த தரை அது... அதில் குமரேசன் முகம் மோதி கண்ணுக்கு அருகில் உதட்டில் எனக் கிழிந்து ரத்தம் கொட்டியது..

                            என்னய்யா மனுஷன் நீ...? இப்படியா உனக்கு கோவம் வரும்? என்று காய்கறிகடை போட்டிருந்த ஒரு பெண் ஓடிவந்து குமரேசனைத் துர்க்கினாள்.

                           முகமெங்கும் ரத்தம் வழிந்தது.

                            சாவட்டும் கம்னாட்டி பயபுள்ள... ஒருவேலை சொன்னா கேக்க மாட்டேங்குது... எதுத்து எதுத்து பேசுது.. பெரிய  மயிறு படிப்பு படிக்குது... ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே அப்பனை மதிக்கமாட்டேங்குது..

                              எல்லோரும் மாரியைத் திட்டினார்கள்.

                              புள்ள முகத்தப் பாரு... ரத்தமா வழியுது.. ஆசுபத்திரிக்கு
அழைச்சிட்டுப் போங்க... குமரேசனை யாரோ அழைத்துக்கொண்டு போனார்கள்.

                                 டாக்டர கேட்டார்

                                 எங்கடா விழுந்தே?

                                 எங்கப்பா உதைச்சு தள்ளிப்புட்டாரு.. அடிபட்டுடுச்சு...
என்றான்.

                                  உங்கப்பா என்ன வேலை செய்யறாரு?

                                 மீன் புடிச்சி விக்கிறாரு.. மார்க்கெட்ல

                                 நீ ஏன் மார்கெட்டுக்கு வந்தே? அவனுக்கு ரத்தத்தைத் துடைத்து மருந்து போட்டுக்கொண்டே கேட்டார்.

                                  ஸ்கூல்ல கட்டுரை நோட்டு சாரு கேட்டாரு... மீன் வித்து வாங்கித்தாரேன்னு எங்கப்பாதான் அழைச்சிட்டு வந்தாரு... என்றான்.

                                 எதுக்கு உங்கப்பாரு உதைச்சாரு?

                                 பீடி வாங்கிட்டு வரச்சொன்னாரு.. முடியாதுன்னேன்.. அதுக்காக ஒதச்சாரு.. பீடி பிடிச்சா கேன்சரு வரும்னு எங்க சார் சொன்னாரு.. அவங்க அப்பா அப்படித்தான் செத்தாருன்னு சார் சொன்னாரு.. பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கோம் பசங்க எல்லோரும்..

                                  வெரிகுட்.. என்று அவனைத் தோளில் தட்டியபடி டாக்டர்
போய்விட்டார்.

                                  வெளியே வந்தார்கள்.

                                   விசயம் கேள்விப்பட்டு குமரேசனின் அம்மா தனம் ஓடிவந்தாள்.

                                     என்னடா ஆச்சு? பதறிப்போய் கேட்டாள்.

                                     ஒண்ணும் இல்லம்மா.. அப்பா ஒதச்சிட்டாரு..

                                      சரி நீ ஸ்கூலுக்குப் போ.... என்றாள்.

                                      கட்டுரை நோட்டு வாங்கணும்மா.. என்றான்.

                                      தனம் மாரிக்கு அருகில் போய் மீன்கள் கிடந்த ரெக்சின் சீட்டைத் துர்க்கி அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள்.

                                     எதுக்குடி பணத்தை எடுக்கிறே என்றான் மாரி கோபமாய் புகையை விட்டபடி...

                                     அவனுக்கு நோட்டு வாங்க என்றாள் தனம்.

                                     பெரிய கலக்டரு படிப்பு படிக்குது..போ.. நோட்டை வாங்கிக் குடு என்றான்.

                                      கலக்டருக்குத்தான் படிக்கப்போறான். உன்ன மாதிரி பீடி வலிச்சிக்கிட்டு மீன் விக்க சொல்றியா? என்று கேட்டபடி பணத்தை குமரேசன் கையில் கொடுத்து ...நோட்டு வர்ங்கிட்டுப் போ.... என்றாள்.

                                     வகுப்பிற்குள் நுழைந்ததும் எல்லோரும் கேட்டார்கள்.

                                      என்னடா குமரேசு ஆச்சு?

                                       கீழே விழுந்திட்டேன் என்றான்.

                                       வகுப்பு தொடங்கியதும் வாத்தியார் வந்து வருகைப் பதிவேடு எடுக்கையில் குமரேசன் பெயரைக் கூப்பிட்டதும் எழுந்து வணக்கம் சொன்னான். நெற்றி வலித்தது. முகமெங்கும் வீங்கிக் கிடந்தது. முனகியபடி உள்ளேன் ஐயா..

                                       குரல் சரியாக விழாததால் வாத்தியார் நிமிர்ந்து குமரேசனைப் பார்த்தார்.

                                       இங்க வாடா என்றார்.

                                      அருகே போனான்.

                                       என்னடா ஆச்சு?

                                       அடிபட்டுடிசசி சார்.. என்றான்.

                                       எப்படி அடிபட்டுச்சி?

                                       விவரம் சொன்னான். கேட்டதும் வாத்தியார் முகம் மலர்ந்தது.

                                    உடனே மாணவர்களைப் பார்த்து சொன்னார்.

                                    குமரேசன் மாதிரித்தான் இருக்கணும். உறுதிமொழிப்படி நடந்திருக்கான்.. இப்படித்தான் தீய செயல்களை எதிர்த்து நிக்கணும்.. யார் செஞ்சாலும் தப்புத்தான்... அப்பாவாக இருந்தாலும் சரிதான்.. காந்தி இப்படித்தான் போராடினாரு.. நான் குமரேசனைப் பாராடட்றேன். ..எல்லாரும் கை தட்டுங்க என்றர்ர்.

                                   எல்லாரும் கைதட்டினார்கள். குமரேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வலி குறைந்தது போலிருந்தது.




Sunday, July 7, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்... விமர்சனம்



              மதுமிதா எனும் பெயரில் எழுதும் பி.சந்தானகிருஷ்ணன்  என்
நண்பன்.
              பள்ளி முதல் கல்லுர்ரி வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
              எனக்கு முன்னால் எழுத்துலகில் தடம் பதித்தவன்.
              சின்ன சின்ன சொற்களால் வசீகரிப்பவன்.
              எழுதும்போது வேகமாக எழுதுவான். ஆனால் கதையிலோ காதல்
கொஞ்சும். நட்பு இளகும். பரிவு இழையும். பளிச்சென்று ஒளிரும் நடை.
               இருவரும் சேர்ந்து கரந்தை நுர்லகத்தில் படைப்புலகம் சார்ந்த
ஒரு புத்தகத்தைக்கூட விடாது வாசித்தவர்கள்.
               துர்ரத்திலிருந்தே இருவரும் அட்டையைக் கொண்டே அது எந்தப்
புத்தகம் என்று அடையாளப்படுத்திவிடுவோம்.
               கரந்தை சாந்தி டீக்கடையில் நின்று மணிக்கணக்கில் பல டீக்கள்
குடித்தும் இலக்கியமும் படைப்பும் பேசியிருக்கிறோம்.
                 நிறைய எழுதிக் குவித்திருக்கிறோம்.
                 இன்னும் அவன் எழுத்தின்மேல எனக்கு ஒரு காதல் இருந்துகொண்டே இருக்கிறது.
                 அபாரமான வாசிப்பிற்குரியவன். நன்றாக நினைவிலிருத்துபவன்.
                 இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது எங்கள் நட்பு நதி. வற்றாமல் வாடாமல் வளங்குன்றாமல்.
                  என் நண்பன் என்னுடைய நத்தையோட்டுத்தண்ணீருக்கு எழுதிய கடிதம் (விமர்சனம்....) இதோ.
                 
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அன்பு ஹரணி,
வாழ்த்துக்கள்.
எழுதி,எழுதி உனக்கென ஒரு நடையை
உருவாக்கிக் கொண்டுள்ளாய்.
புனைவு எழுதுவதைவிட அபுனைவு எழுத
கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவை.
அது உன்னிடம் நிறைய உள்ளது.
மிகத் தாமதமாகத்தான் உன்னுடைய
 நத்தையோட்டுத் தண்ணீர்
வாசித்தேன்.
தண்ணீருடன் நிறைய முத்துக்களும்.
புத்தியிலிருந்து கொஞ்சமும்,
மனசிலிருந்து கொஞ்சமும்
எழுதியுள்ளாய்.
எனக்குப் பிடித்தது மனசிலிருந்து
எழுதியத்தைத்தான்.
வடவாற்றங்கரையில்..
சில அர்ப்பணிப்புக்கள்..
நம்பிக்கையான அனுபவ வைத்தியம்
இன்ன பிற.
வடவாறு கோடையிலும்
நம் மனசுள் சுழித்து ஓடிக்கொண்டிருக்கும்.
உனக்குக் கொஞசம் கூடுதலாய்.
இது கரந்தை நமக்குக் கொடுத்தக் கொடை.
QUALITYயும், QUANTITYயும் இணையாது எனும்
பொது புத்தியை உடைத்தவன் நீ.
நிறையவும்,நிறைவாகவும் எழுதுகிறாய்.
உன்னை ஒருமையில் விளித்தது உரிமையில்.

மீண்டும் என் வாழ்த்துக்கள்.

P.சந்தானகிருஷ்ணன்.


 


                 
            


Saturday, July 6, 2013

நெஞ்சுவிடு துர்து கவிதைகள்...





                      நண்பர் அவர்
                      கோயிலில்தான் பழக்கம்
                      இறைவன் திருக்கல்யாணத்திற்கு
                      எப்போதும் நன்கொடை கேட்பவர்
                      என்னாலியன்றதைத் தருவது வழக்கம்
                      அன்றும் அப்படித்தான்
                     அவருக்குக் கொடுக்கத்தான்
                      சென்றபோது பசித்த வயிறடங்க
                     வடையும் தேநீரும் சாப்பிட்டுத் திரும்புகையில்
                      கைநீட்டி நின்றான் உடலெங்கும்
                      எண்ணெய் பிசுக்கும் அழுக்குமேறிய
                      உடலுடன்.. உற்றுப்பார்த்தேன்
                      அதிர்ந்துபோனேன்..
                     என்னோடு படித்தவன் என்னைவிட
                      நன்றாய் படித்தவன் என்னவாயிற்று
                      அவனுக்கு...இப்படி மாறியது மனநிலைப்
                      பிறழ்வாய்.. உற்றுப்பார்த்துக்கொண்டேயிருந்தான
                      நன்கொடை பணம்முழுக்க அவனிடத்தில்
                      தந்தேன்.. வாங்கிகொண்டுபோனான்
                      தண்ணீர் கிடைக்காதவன் விக்குவதைப்போல
                      விக்கலுடன்...

                      000000000000000


                       சாலையில் அடிபட்டுக்
                       கிடப்பவனின் பையில்
                       துருத்திக்கொண்டிருக்கும்
                       வெள்ளைத்தாள் முழுக்க ரத்தம்
                       அதில் அவன் முகவரி
                       இருக்குமோ?

                      000000000000000000

                       
                       நான் பார்க்கப் பிறந்து
                       வளர்ந்தவன் இபபோது
                       நகராட்சிக் கவுன்சிலர்.....

                       இவர் பிறந்தது தெரியுமென்று
                       தருகிறான் சான்றிதழ்
                       எனக்கு.....

                       0000000000000000000000

                        சிங்கமும் சரி
                        சிறுத்தைகளும் சரி
                        காண்டாமிருகங்களும் சரி
                        ஒருபோதும் சொன்னதில்லை
                        நாங்கள் ஒன்று இரண்டு
                        மூன்றென்று எண்களாக...

                       00000000000000000000000


                        அவன் முகவரி
                        தேடியலைகிறர்கள்...

                        முகவரி தேடியே
                        தொலைந்துபோனவன்
                        அவனென்று தெரியாமல்...


                    0000000000000000000000000

                             நம்பிக்கையைப்
                             பத்திரமாக என்னிடத்தில்
                             ஒப்படைத்தது
                             பல
                             அவநம்பிக்கைகள்தான்...

                    0000000000000000000000000000000000

                           



                         


                     
                     
                     

                 

                     


                     
   
                       

Thursday, July 4, 2013

பொக்கிஷமும் சில பொற்காசுகளும்




                         இன்று பொக்கிஷம் கிடைத்த நாள்.

                        நண்பன் சுந்தர்ஜியின் வலைப்பதிவிற்கு சென்று விவேகானந்தரின் துறவியின் பாடலைக் கேட்டு என்னை மறந்தேன்.

                        மனத்தில் உள்ளதையெல்லாம் சுந்தர்ஜியிடம் கொட்டினேன் துறவியின் பாடல் எற்படுத்திய உணர்வலைகளின் தாக்கத்தால்.

                       உடனே அவர் எனக்கு அந்தப் பாடலை இன்று அந்த வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுநாளில் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார். அவர் அனுப்பியதிலிருந்து ஐந்து முறை பாடலைக் கேட்டுவிட்டேன்.

                         பொக்கிஷம் ஈந்தவருக்கு நன்றிகள்.

                         இன்று வீரத்துறவியின் நினைவுநாள்

                     

                                         உங்களைப் பற்றி
                                         நானென்ன உரைப்பது
                                         உலகே உரைக்கும்போது...

                                        உங்கள் நினைவுநாளில்
                                        விழித்திருக்கப்பெற்றவன்
                                        பாக்கியவர்ன்...
                                        எழுபவன்
                                        எழுதப்படுவான் வரலாற்றேடுகளில்
                                        இயங்குபவன்
                                        என்றைகும்
                                        சாகா வரம் பெற்றவன்...


                                            புறத்தால் பணிவதல்ல
                                            உன்னை
                                            அகத்தால் பணிதல் வேண்டும்
                                            அதற்கே பயிற்சி
                                            என் வாழ்நாள் முயற்சி
                                            என்றொரு சொல்லுரைக்க
                                            ஞானமாகும் எந்த வாழவும்...

                                           000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


இரண்டு


                               திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கைப்பேசி வழியாக வந்த இனிய தகவல் திரு ஜிஎம்பி ஐயா அவர்கள் தான் பயணிக்கிற வழியில் என்னைச் சந்திக்கவிருப்பதாக.

                                 உள்ளம் துள்ளியது.

                                 முன்பொருமுறை எழுதியிருந்தார் கரந்தையைக் கடக்கும்போது இது ஹரணியின் வீடு என்று தன் மனைவியிடம் கூறியதாக.
அன்பு அளவிடற்கரியது.

                                  காலையுணவிற்கு என் வீட்டில் இருக்க ஐயாவைக் கேளுங்கள் ஜெயக்குமார் என்றேன்.  நீங்களும் என் வீட்டில்தான் காலையுணவு அருந்தவேண்டும் அன்பு வேண்டுகோள் வைத்தேன்.

                                  சரி என்றார்.

                                  அப்புறம் இல்லை சாப்பிடுவதைவிட சந்திப்பது அவசியமானது. அதற்கான நேரங்களே முக்கியம் என்றுரைதது காபி மட்டும் போதும் என்று ஜெயக்குமார் சொன்னார்.

                                  அதன்படி 7.50 க்கு வீட்டிற்கு வந்தார் ஜிஎம்பி ஐயா.

                                  ஐயா. அம்மா, அவர்களின் திருமகனார் மூவரும் வந்தார்கள்.

                                  இத்தனை வயதிலும் இப்படியொரு நேர்த்தியான அழகிருக்குமா என்பதுபோல பளிச்சென்ற தோற்றம் ஜிஎம்பி ஐயா. அதற்கேற்றாற்போல எளிமையின் அழகோடு அம்மாவும் அவர்கள் பிள்ளையும்.

                                 முதல் அறிமுகமாக அது இல்லை.

                                 நெருங்கிய உறவுகள் போலவும் நீண்ட நாள்கள் தங்கிப் பழகியதுபோன்றும் அவர்கள் இருந்தார்கள்.

                                    அழகான மர்ன் துள்ளலைப்போல இனிய உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேயிருந்தது. மாடியிலிருந்து என்னுடைய சிறு நுர்லகத்திற்கு அழைத்துச்சென்றேன். ஐயா பரவசப்பட்டார். நெகிழ்ந்துபோனார்.  சுந்தர்ஜி ரிஷபன் ஆர் ராமமூர்த்தி. வைகோ என்று வலைப்பதிவு நண்பர்களை வலைப்பக்கத்திலேயே பார்த்துவிட்டு நேரில் பார்க்கவேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை எங்களைப் பார்த்த நிகழ்வில் குறிப்பிட்டார். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இப்படியொரு தருணம் வாய்க்குமா?
அம்மா அவர்களின் சாந்தமான முகம் இன்னும் அன்புகாட்டும் சொற்களோடு காட்சியாகிக்கொண்டிருந்தது. அவசியம் பெங்களூர் வாருங்கள் என்று அன்பு காட்டிச் சொன்னார்.

                                   இது பரவசமான நாள். ஆம் வலைப்பக்கத்தில் கண்டவரை நேரில் சந்தித்து உரையாடியது எத்தனை மகிழ்ச்சியானது. அவர்கள் போன பிறகு திரு ஜெயக்குமார் அவர்களிடம் அந்த இனிய உரையாடல் தொடர்ந்து இருந்தது.

                                  ஒரு நல்ல பொழுதோடு விடிந்த நாள் இது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                            படைப்பாளி என்பவன் பன்முக ஆளுமை கொண்டவன்.

                            தோண்டத்தோண்ட ஊறும் கிணற்றைப்போல அவனைத் துர்ண்டத் துர்ண்ட உள்ளிருக்கும் படைப்பு பெருகி ஊற்றெடுக்கும் என்பது உண்மையானது.

                             அப்படித்தான் கவிஞர் ராகவ் மகேஷ்.

                             முதலில் கவிஞர். நகைச்சுவைக் கவிஞர்.

                             நல்ல நலமுரைக்கும் நகைச்சுவைப் பண்பு கொண்டவர்.
பின்பு தஞ்சையில் இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சியில் நகைச்சுவை
நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்துப் பல மனங்களைக் கொள்ளைக் கொண்டவர்.

                           நகைச்சுவை உணர்வென்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது கடவுளின் வரம்போலவே.

                            ராகவ் மகேஷ் அதில் திறனானவர்.

                            அப்புறம் பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் உலகறிய தன்னுடைய நகைச்சுவைத்திறனை பாடியும் பேசியும் நடித்தும்  காட்டிய்வர்.
இப்போதும் அவரது பணி தொடர்ந்திருக்கிறது.

                              அண்மையில் யமுனா எனும் திரைப்படத்தில் நடித்து ஒருபடி மேலேறியிருக்கிறார்கள். நீண்டுகிடக்கிறது ஏணி. ஏறிக்கொண்டேயிருப்பார்.

                               இதுபோன்ற கலைஞர்களைச் சொல்வதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தேன். தற்போது அவர் எனது நத்தையோட்டுத் தண்ணீர் புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தை அவரின் அறிமுகத்திற்குரியதாக்கிக்கொண்டேன்.

                               அவரின் விமர்சனக்கடிதம் - நத்தையோட்டுத் தண்ணீர்  நுர்லுக்கானது.

 
                          பேரன்பிற்குரிய அய்யா

                          வணக்கம். கடித மரபு தொலைந்துபோனது பற்றிய உங்கள் கட்டுரை என்னைக் கடிதம் எழுத வைத்தது. நத்தையோட்டுத் தண்ணீர் என்னுள் பல உணர்வுகளை ஏற்படுத்தியது. இன்றைய மனிதர்கள் தொலைத்த பல விஷயங்களையும் நான் ஆற்றவேண்டிய சில கடமைகளையும் எனக்கு உணர்த்தியது. பொதுவாக கதை. கவிதைகளைவிட கட்டுரைகளை சுவாரஸ்யப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. முடியும் என்று எனக்கு பதில் சொல்லிவிட்டது இந்த நுர்ல். உங்கள் படைப்புக்களில் வெளிப்படும் யதார்த்தம். நேயம் போன்றவை தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது. மேலும் மேலும் படையுங்கள். படிக்கப் பெரும்படையே காத்திருக்கிறது.

                                                                                   அன்புடன்
                                                                                   ராகவ் மகேஷ்


       ஒரு படைப்பு ஏதேனும் சிறு கடுகளவேணும் பாதிப்பை விளைவை ஏற்படுத்தினால் அது அர்த்தமுடையதாகிறது. மேற்சுட்டிய கடிதத்தில் நுர்லைப் படித்ததும் கடிதம் எழுதுவேண்டும் என்ற உணர்வைத் துர்ண்டிக்
கடிதம் எழுதி அனுப்பவைத்தது என்று சொல்வதே வெற்றிதான். இதற்கப்புறம்தான் விருதுகள் எல்லாமும்.

(நன்றி திரு ராகவ் மகேஷ)



000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                       






                                     

                                     



Wednesday, July 3, 2013

கடைசி ஆசை



                  இம்மாதம் கணையாழியில்  வந்த என் கவிதை


                  கடைசி ஆசை
                  ////////////////////////////

                   இரவில்
                   எரிந்துகொண்டிருந்த
                   மெழுகுவர்த்தியிடம்
                   பரிதாபப்பட்டுக்
                   கேட்டேன்
                   உன் கடைசி ஆசை
                   என்னவென்று?

                   அமைதியாய்ச்
                   சொன்னது
                   என்னுடைய இந்த
                   சிறு வெளிச்சத்திலாவது
                   உன்னைப்
                   படித்துக்கொள்....

                  0000

                  (நன்றி. கணையாழி சூலை 2013)

நத்தையோட்டுத்தண்ணீர் ...... விமர்சனங்கள்



       நத்தையோட்டுத் தண்ணீர் என்ற என் புத்தகத்திற்கு இன்றைய 03.07.2013 தினமலரில் விமர்சனம் வந்துள்ளது.

               வாழ்க்கை அனுபவங்களை நிதானமாக அசைபோடுவது ஒருவித சுகம்.  இந்த நுர்லைப் படிப்பவர்கள், அந்த சுகத்தில் மூழ்கித் திளைக்கலாம். இந்தக் கட்டுரைத் தொகுப்பில். வாசித்தல். சுவாசித்தல். நட்பென்று வைக்கப்படும். வழிகாட்டிகள். சந்தர்ப்பவாதிகள். இளம்பருவமும் மனவெளி விளையாட்டுக்களும். எனது ஆசிரியர்கள் உட்பட 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமையான அனுபவங்களை மையமாக்கி கவித்துவமான நடையில் கட்டுரைகளை எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.

              நுர்லில் இருந்து சில இனிய துளிகள் : வாசிப்பதால்தான், பலவற்றை
மறந்து இன்னும் மிச்சம் இருக்கிற வாழ்வை வாழ நம்பிக்கை கொள்கிறோம்;
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு திருத்தம் பெறாத யோகா ஒளிந்து கிடக்கிறது; ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது, வழிகாட்டலுக்கு;
நீதிபோதனை வகுப்பு நீக்கப்பட்டதால், நீர்த்துப்போனது வாழக்கை.

                                                                                                              - பிரபா.

(நன்றி / தினமலர் / 03.07.2013)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நத்தையோட்டுத் தண்ணீருக்கு கரந்தை திரு ஜெயக்குமார் அவர்கள் எழுதிய விமர்சனம் பின்வருமாறு.


ஹரணியின்

நத்தையோட்டுத் தண்ணீர்

     இன்று (27.6.2013)  வியாழக் கிழமை காலை 11.30 மணியளவில், ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தேன். ஜெயக்குமார். குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே ஹரணிவாருங்கள் வாருங்கள், அமருங்கள் என மகிழ்வோடு வரவேற்றேன். ஒரு நிமிடம் வாருங்கள் என வெளியே அழைத்துச் சென்றார். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து, நூலொன்றினை எடுத்து வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.


படிப்பை அறிவியலில் தொடங்கி, ஆய்வுப் படிப்பைத் தமிழில முடித்தவர்.

     தமிழை நேசிப்பவர்கள் பலருண்டு. ஆனால் இவரோ தமிழை சுவாசிப்பவர்.
வாசிக்காத நாட்களெல்லாம், சுவாசிக்காத நாட்கள்
என்னும் உயரிய, உன்னத கொள்கையினை உடைவர்.

     ஹரணி அவர்களின் இல்லம் இருப்பதோ கரந்தையில். பணியாற்றுவதோ அண்ணாமலையில். நாள்தோறும் 200 கி.மீ பயணிப்பவர். பேரூந்தில் பயணித்த நாட்களை நெஞ்சில் நிறுத்தி பேரூந்து என்னும் புதினத்தைப் படைத்தவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிப்பவர். தொடர் வண்டிப் பயணத்தில், நாள்தோறும் குறைந்த்து 200 பக்கங்களையாவது படிப்பவர். இப்பழக்கத்தினை இன்று வரையில் தொடர்பவர். விரைவில் தொடர் வண்டி என்னும் புதினத்தைப் படைத்தாலும் படைப்பார்.

      படைப்பிலக்கியத் துறையில் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, ஆங்கிலக் கவிதைகள், பெண்ணியம்என்னும் நிலைகளில், தனது படைப்புத் திறனை வெளிப்படுத்திவரும், பன்முக ஆளுமை உடையவர்.

நத்தையோட்டுத் தண்ணீர்
ஹரணி அவர்களின் கைவண்ணத்தில ஓர் புதிய படைப்பு. புதுமைப் படைப்பு.

     நூலின் மூன்றாவது பக்கத்திலேயே, நம்மை முழுவதுமாய் நூலுக்குள் ஈர்த்து விடுகிறார்.

       சூழல்களாலும் ...
       இயலாமையாலும் ...
       மனம் புழுங்கும்
       சத்திய
       உள்ளங்களுக்கு....
       இச்சிறு நூல்

     14 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நம்மை பெருமூச்சு விட வைக்கும். ஆம் உண்மைதான்.

    நல்ல வாழ்க்கை வாழ்வது என்பது
    நல்ல புத்தகங்களை வாசிப்பது போல

    வாசிப்பு என்பது ஒரு கலை
    வாசிப்பு என்பது ஒரு தவம்
    வாசிப்பு என்பது ஒரு பரவசம்
    வாசிப்பு என்பது ஓர் உணர்வு
என தொடர்ந்து எழுதி, நம்மையும் அந்தச் சுழலுக்குள் இழுத்து விடுகிறார்.

நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது
என்ற ஒரு வரியே, இவர் அனுபவம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

     கடிதம் ஓர் வாழ்வின் உன்னத அடையாளம்
     கடிதம் எழுதுதல் ஒரு கலை
     நாம் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்றல்ல
     இதுதான் ஒன்று
சம்மட்டி கொண்டு நம்மைத் தாக்குகின்றன் இவரின் எழுத்துக்கள். வளர்ச்சி என்னும் பெயரில் நாம் இழந்தது அதிகம். எதை எதை இழந்தோம் என்பதையே அறியாமல், உணராமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     ஓடி பிடித்து விளையாடல்
     சடுகுடு
     திருடன் போலிஸ்
     கிச்சு கிச்சு தாம்பாளம்
     சில்லு செதுக்கல்
     கிட்டிப் புள் விளையாட்டு
     பளிங்கு உருட்டல்
இப்படி பல விளையாட்டுக்களை, இருள் சூழும் வரை, தெருவிலே நின்று விளையாடினோமே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று நம் பிள்ளைகளுக்கு, இவ்விளையாட்டுக்களின் பெயராவது தெரியுமா?

நாம் குழந்தைகளை ஏமாற்றுகிறோம்
நாம் குழந்தைகளுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை
தேவையில்லை என நாமாகவே தன்னிச்சையான முடிவு எடுக்கிறோம்
என நம்மைச் சாடுகிறார். உண்மை சுடுகிறது.

     கூட்டுக் குடும்பம் என்கிற அற்புதத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே. அது சுக்கு சுக்கலாகிவிட்டதே
என இவர் வருந்துவதைப் படிக்கும் பொழுது, நமது மனதில் வலி, மெல்ல மெல்ல கூடுகிறது.

     அவர்கள் எங்கே இருக்கிறார்கள்... எப்படியிருக்கிறார்கள்... இருக்கிறார்களா? புகழுடம்பு எய்திவிட்டார்களா? தெரியாது. ஆனாலும அவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு பார்த்த்து போலவே மனத்தில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அழியாப் பிம்பமாய், அதே ஆசிரியர்களாக. மிடுக்குடன்
என ஹரணி அவர்கள், தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூற, கூற, நாமும் நமது இளமைக் கால, பள்ளிக் கால நினைவலைகளில் மூழ்கி மூச்சுத் திணறுவதை உணர முடிகிறது.

நத்தையோட்டுத் தண்ணீர்
இந்த நத்தையோட்டில் தேங்கியிருப்பது வெறும் தண்ணீரல்ல. தெளிந்த அனுபவம். அந்த அனுபவம் புகட்டிய பாடம். அந்தப் பாடத்தால் விளைந்த உயர் ஞானம்.

     ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம்.
வாருங்கள். வாசித்துப் பாருங்கள்.

ஹரணி அவர்களின்
அலைபேசி 9442398953
மின்னஞ்சல் uthraperumal@gmail.com

நூல் வெளியீடு
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002






Monday, July 1, 2013

ஜால்ரா குறுந்தொடர் 6




                        தனலெட்சுமிக்கு யாரும் எழுப்பாமல் சற்று படுத்து உறங்கவேண்டும்போலிருந்தது,

                        மருமகனுக்கு ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு அழைத்து
வந்திருந்தார்கள்.

                        அது வாடகை வீடு,

                        தாராளமாக இல்லை. இருவருக்குப் போதுமானது. மூன்றுபேர் இருப்பதால் சிரமமிலலை.

                        தனலெட்சுமிக்கு சிரமமாக இருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டுத் திண்ணையில்தான் இருந்தாள். சாப்பிடும்போது மட்டும் உள்ளே போனாள். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும்.

                        சில சமயம் திண்ணைக்கே எடுத்துவரச்சொல்லி சாப்பிட்டாள்.

                       ஏம்மா?

                       இப்படியே வேடிக்கை பார்த்துட்டு சாப்பிட்டுப் பழக்கம். என் வூட்டுலே எதிரே வலம்புரி ஐயா முகத்த பாத்துட்டு சாப்பிடுவேன். அப்படி நினைச்சுக்கறேன்..

                        கூடவே பெருமூச்சு விட்டுக்கொள்வாள்.

                        மருமகன் உள்ளே படுத்திருந்தான். மகள் கடைத்தெருவிற்குப் போயிருந்தாள் காய்கறிகள் வாங்க.

                         திண்ணையில் அப்படியே சாய்ந்து படுத்தாள். துர்க்கம் வருமபோலிருந்தது. மனதிற்குள் வலம்புரி விநாயகர் துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பது போலிருந்து. என்ன தனம் அப்படியே வுட்டுட்டு வந்துட்டே என்று கேட்பதுபோல் உணர்ந்தாள்.

                         பூனை கண்ண மூடிக்கொண்டால் உலகம் இருண்டா போயிடும்.. ? தனம் இல்லாட்டி என்ன ஆயிரம் பேரு.. வாசல்ல நீர் தெளிச்சு பெருக்கி கோலம் போடுறது என்ன குதிரைக் கொம்பா?  யாரும் செய்யமுடியாத காரியமா என்ன?

                         மனசிற்குள் பல யோசனைகள்.

                         தன் வீட்டுத் திண்ணைபோலில்லை என்று ஒரு நினைப்பு தோணியது. தனலெட்சுமியின் கணவன் இருந்தபோது எப்போதும் அவன் வீட்டிற்குள் இருந்ததைவிட திண்ணையில்தான் அதிகம் இருப்பன். அவன் திண்ணையிலும் தனலெட்சுமி அவன் காலருகில் படியிலுமாக உட்கார்ந்துகொண்டு கதை பேசுவார்கள். பெருமபாலும் கணவன் பேசுவதைப் பெருமையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

                          போய்விட்டது.

                           முன்பு கணவன். இப்போது வீடு. இருக்கட்டும்.  மகள் வாழ்க்கைக்குத்தானே போனது. எப்படியே நல்லது நடந்தால் சரி.  என்ன வீடாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படியொரு விபத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தா?

                          என்னவோ வலம்புரி விநாயகரைப் பார்க்கவேண்டும் போலத் தோணியது.

                         அன்று மாலையே கிளம்பிக் கோயிலுக்கு வந்தாள்.

                         தாமோதரன் இருந்தார்.. என்ன கெழவி?  என்ன புதுசா வாசம் அடிக்குது கோயில்பக்கம்? என்று கிண்டலாகக் கேட்டார்.

                        அது வலம்புரி ஐயா வாசங்க... நம்பமேல ஏதுங்க வாசம்?  நாத்தம்தானே எப்பவும்?  அடிக்குது, இல்லே பூசிக்கிறோம்.. என்றாள்.

                        தாமோதரனுக்கு கோபம் வந்துவிட்டது.

                        குந்தக் குடிசையில்லே.. உனக்கெல்லாம் பேச்ச பாரு.. இப்படி இருக்கும்போதே உனக்கெல்லாம் வாய் கொறயலே,, எல்லாம் ஆண்டவன் அளந்துதான் வச்சிருக்கான்..

                        எதுக்குஙக்ய்யா என்கிட்டே வெட்டி வம்பு பேசறீங்க?  உங்க தகுதிக்கு நான் ஈடா?  என்றாள்

                         சுரீரென்றது தாமோதரனுக்கு.

                         பேசு..பேசு.. எல்லாம் யார் கொடுத்த தைரியம்னு தெரியும்.. சரி எங்க வந்தே? என்றார் மறுபடியும் குத்தலாக.

                          சாமி கும்பிட.. என்றாள் எதுவும் பேசாமல்.

                          சரி..போ.. சாமிய மட்டும் கும்பிட்டுப் போ.. கும்பாபிஷேகம் பண்ணற கோயிலு..

                          போய்விட்டார் தாமோதரன்.

                           தனலெட்சுமிக்குப் புரியவில்லை. சாமிய மட்டும் கும்பிடடுப் போன்னா என்ன அர்த்தம்?

                          உளளே போய் பிரகாரத்தில் நின்று வலம்புரி விநாயகரைப் பார்த்து  அழுதாள். அழுதபடியே பிரகாரத்தைச் சுற்றினாள்.

                          உள்ளே உட்கார்ந்துகொண்டு மறுபடியும் அழுதாள்.

                          தாமோதரன் பேசிய பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகப் பட்டது. இருக்கட்டும். அதற்கு என்னைப் பார்த்து ஏன் அப்படி சொல்லவேண்டும்? நான் என்ன செய்தேன்?

                           மனது குடைநத்து.

                           விவரம் தெரிஞ்ச நாளா உன் வாசலல நீர் தெளிச்சு வாசப் பெருக்கிக் கோலம்போட்டத தவிர என்ன செஞ்சேன்? என்ன கேட்டேன் வேணும்னு? கோயில் வாசல்விட்டு இறங்கி தெருவில் கால் வைக்க

                           அப்போது வேணுகோபால் வந்தார்.

                           வா,, தனம் என்றார்.

                           ஐயா.. என்றபடி அழுதாள்.

                           என்ன தனம்?

                            தாமோதரன் சொன்னதைச் சொன்னாள்.

                           உள்ள வா  என்றபடி கோயில் உள்அழைத்துப்போனார்.

                           இப்படி உட்கார் என்றார்.

                           உட்கார்ந்தார்கள்.

                            கோயில் வேலை ஆரம்பிச்சதுலேர்ந்து அவரோட பேச்சு சரியில்லை. கோயில்ல பல சின்ன சிலைங்க காணாமப்போயி பல வருஷமாச்சு.. உனக்குத் தெரியும் அதுங்க இருந்தது. யார் எடுத்து அத வித்தாங்கன்னு தெரியும்.. கோயில் சொத்து.. தெய்வம் பாத்துக்கும்னு விட்டுட்டோம். குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். அதை மறக்க
எல்லோரையும் ஏன் பாக்கறவங்களை எல்லாம் குத்தம் பேசறாரு.. அவர் செய்யலேன்னாலும் தபபு செஞ்சவங்க வாரிசுதானே அவரு.. உறுத்துது..
நீ கேட்டுக்காதே.. மனசோட வச்சுக்க.. எல்லோருக்கும் தெரியும்.. இந்த ஜால்ரா என்ன பொறும்?  உன்மேல பழியப் போடுறாரு,,, என்றதும் தனலெட்சுமி
பதறிப்போய் கேட்டாள்.

                     என்னது?

                     ஜால்ராவ நான் திருடிட்டேனா? இது அந்த சாமிக்கே அடுக்காதுஙக்ய்யா.. அதான் அப்படி ஜாடைப் பேச்சு பேசிட்டுப் போறாரா?
அடக்கடவுளே சாவற காலத்துல இப்படியொரு பழியா,,, நான் என்ன பாவம் செஞ்சே? கூட்டிப்பெருக்குனதுக்கு கிடைச்ச புண்ணியமாங்கய்யா இது,

                     சட்டென்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,

                     அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு தடுத்து ஆறுதல் சொன்னார்.

                     தனம் உன்ன பத்தி எல்லோருக்கும் தெரியும். விடு.. நெருப்புன்னா நாக்கு சுட்டுடாது,.

                      தனம் அழுதுகொண்டேயிருந்தாள்.

                      வேணுகோபால் போனபிறகும் நெடுநேரம் கோயில் பிரகாரத்தில உட்கார்ந்து வலம்புரி விநாயகர் முகத்தைப் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தாள்.

                      மாலை புறப்பட்டுப்போனாள்.

                      என்னம்மா ஆச்சு?

                       மகளிடம் சொலலிவிட்டு அழுதாள்?

                      நன்றி கெட்டவங்கம்மா... அந்த புள்ளயாருக்கே கண் தெரியலே போலருக்கு.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செஞ்சதுக்கு திருட்டுப் பட்டமா? எதுவும் இல்லாதவங்கன்னா எதுவேணாலும் சொன்னா கேட்டுக்குவாங்க.. எந்தப் பழியயும் போடலாம்னு நினைச்சிட்டாஙக்ளா?  நல்லாவே இருக்கமாட்டாங்க பாருங்க.. கும்பாபிஷேகத்துக்குப் போறப்ப  எல்லாரையும் வச்சிக் கேக்கறேன் பாரு.. என்றாள்.

                       மகளைத் தடுத்துப்பேசினாள் தனலெட்சுமி.

                      ஒண்ணுவேண்டாம். எல்லாம் அவருக்குத் தெரியும்.

                      தனிமையில் கிடந்து திண்ணையில் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தாள். அழுகையை நிறுத்தினாள்.


                                                                                                      (ஜால்ரா ஒலிக்கும்)