Sunday, October 5, 2014

அன்பு வேண்டுகோள்

அன்பு வேண்டுகோள்...

     
                    அனைவருக்கும் வணக்கம்.

                    என்னுடைய பேருந்து நாவல் வெளிவந்திருக்கிறது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதனை முன்னோட்டமாக வலைப்பக்கத்தில் எழுதியபோது இதற்கு நிறைய கருத்துக்கள் வந்தன. மகிழ்ச்சியாக இருந்தது.  ஐநது நாவல்கள் பாதிக்குமேல்  வளர்ந்து நின்றிருக்கும் நிலையில் இந் நாவல் முழுமையுற்றிருக்கிறது. கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

              குறிப்பாக வெளிவந்த குறிப்பிட்ட சில வாரங்கள் வரை தொடர்ந்து கருத்துக்கள் உரைத்தவர்கள்

                       மதிப்பிற்குரிய ஜிஎம்பி ஐயா
                       திருமிகு ரிஷபன்
                       சகோதரி கீத மஞ்சரி
                       சகோதரி நிலா மகள்
                       இளவல் ஜெயக்குமார்

உங்களுக்கு தனிப்பட்ட நன்றிகள். அன்புகூர்ந்து உங்கள் இல்ல முகவரியை எனக்கு மின்னஞ்சல் வழி தெரிவிப்பின் நாவலை அனுப்பிவைக்க ஏதுவாகும்.

                            நன்றிகள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                     


Monday, September 29, 2014

பரிசு



அன்புள்ள வணக்கம்..


                  இடைவெளிகள்தான் அன்பைத் தக்க வைக்கின்றன எனலாம்.

                 வேலைப்பளு படைப்பிலக்கியப் பணிகள் என்று நாள்கள் கடநதுவிட்டன.

                 இந்த இடைவெளியில் நிறைய மகிழ்ச்சிகள்.

                 1. முன்பு சொன்னபடி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்
                     இரண்டாம் பரிசு.

                 2. செல்லாத நோட்டு எனும் சிறுகதைத் தொகுப்பின் சில கதைகள்
                     கல்லுர்ரிப் பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.

                 3. தற்போது நேற்று தினமலர் வாரமலர் டிவிஆர் நினைவுச் சிறுகதைப்
                     போட்டியில் என் கதைக்கு முதல் பரிசு ..... ( சிறுகதைத் தலைப்பு                                 அவளும் அம்மாதான்...) கிடைத்துள்ளது.

                  4. பேருந்து நாவல் வெளிவந்துவிட்டது.

                 
           தொழில் நுட்பம் தெரியாததால் பரிசுக் கதைகள்  இரண்டையும் வெளியிடுவதில் தாமதம் நேர்கிறது. விரைவில் இன்னும் இரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்து எதுவாயினும் தெரிவிக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, August 24, 2014


இந்த வாரம் விகடனில் வந்த கவிதை...

பூர்வீக வீடு
சிதைந்துகொண்டிருந்த்து...

விரைவில் மாற்றிவிடுங்கள்
என்று சொல்லிவிட்டுப்
போனார் பெரியப்பா...

இடித்துவிட்டு மனைபிரித்து
பாகம் பிரித்துக்கொள்ளலாம்
என்பது சித்தப்பாவின் கருத்து..

முன்னோர்கள் வாழ்ந்த வீடு
என்றாலும் இப்போது வாழ
முடியாது... த்த்துவம் சொன்னார்
மாமா..

மனையாகப் போட்டால்
முன்மனை நமக்குதான்
பேசிக்கொண்டார்கள் மருமகள்கள்

எப்படியிருந்தோம் தெரியுமா
என்றே அழுதழுது நின்றார் அம்மா..

போவோர் வருவோர் ஆளுக்கொரு
கருத்து சொன்னார்..

நாலைந்து ஓணான்கள்
புணர்ந்து நின்றன
பூனையொன்று நாலைந்து
குட்டிகளை ஈந்திருந்த்து
விரிந்த சுவரிடுக்குகளில்
கொஞ்சம் பூச்சிகளும்

சில அணில்களும் அவ்வப்போது
பட்டாம்பூச்சிகளும்
வந்துபோயின
வீட்டின் மேலே ஒரு
செடி முளைத்திருந்த்து..

ஆனாலும் பூர்வீக
வீடு சிதைந்துகொண்டிருந்த்து..

வாழ்ந்த சிலவற்றின்
நினைவுகளோடும்
வாழும் சிலவற்றின்
கனவுகளோடும்.....

நன்றி  ஆன்ந்த விகடன்.


Saturday, July 26, 2014

கல்கியும் என் கனவும்...




                      அன்புள்ள

                                     ஹரணி வணக்கமுடன்.

                                     கதை எழுதிய காலத்தில் பெரும் பத்திரிக்கைகளான கல்கி. ஆனந்தவிகடன். குமுதம் இவற்றில் கதைவருவது பெருமைக்குரிய விஷயம்.
அதனை நோக்கித்தான் இலக்கும் நிச்சயிக்கப்பட்டிருக்கும்.

                                     அப்படி பாடுபட்டதில் என்னுடைய முதல் கதை கல்கியில் வருவதற்குப் பத்தாண்டுகள் ஆயின.  அப்புறம் பல கதைகள் கல்கியில் வெளிவந்திருகின்றன.

                                 என்றாலும் கல்கி நடத்தும் சிறுகதைப்போட்டியில் பரிசு
வெல்வது என்பது ஓர் உறுதியான இலக்காகவே எண்ணி இயஙகினோம் நானும் என் நண்பர்களும்.

                                 அதற்குப் பலனாய் சென்ற ஆண்டு அனுப்பிய கதை பிரசுரத்திற்குத் தேர்வானது. இது வெற்றியின் அறிகுறியாகப் பட்டது எனக்கு.

                                   முயற்சியில் தளர்ந்துவிடக்கூடாது என்பதில்
தெளிவும் கடும் உழைப்புமாக இருந்தேன்.

                                  இவ்வாண்டு கனிந்துவிட்டது.

                                  இவ்வாண்டு அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில்
என்னுடைய கதை இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.

                                 இதற்குப் பிடித்திருக்கிற காலங்கள் 27 ஆண்டுகள் என்றாலும்
மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றிக் கனியைப் பறித்துவிட்டோம் என்பதில்.

                                 இவ்வாண்டு கல்கிக்கு 73 ஆவது ஆண்டு.

                                 2016 ஆம் ஆண்டில் கல்கி பவள விழா கொண்டாடும். ‘
பவளவிழாவில் எப்படியும் முதல் பரிசு பெறவேண்டும் என்கிற உத்வேகத்துடன் என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

                              பரிசுபெற்ற கதை அடுத்தவாரம் வெளியாகும்.

                              கதையின் தலைப்பு  /   மூங்கில் சுமந்தவர்கள்.


                              உங்களுடன் மகிழ்ச்சியைப் பகிரும் தருணத்தில் கல்கிக்கும் நடுவர் குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

                               அன்னை இந்திரா காந்தி உருவாக்கிய பொன்மொழிகளுன் ஒன்று கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை என்று. என்னுடைய 40 ஆண்டுகால படைப்பு அனுபவத்தில் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன்.
தொடர்ந்தும்.

                                      00000000000

Friday, July 18, 2014

துண்டு,,,துண்டாய்,,,




                                        இதயத்தைக்
                                        கத்தியால் கீறியெடுத்து
                                        வெளியில் வைத்து
                                        துடிக்கத்துடிக்க
                                        295 முறை நெருப்பால்
                                        சூடு போட்டதுபோல....

                                        பாவிகளா
                                        கொலைகார பாவிகளா
                                        தாயின் வயிற்றில்தான்
                                        பிறந்தீர்களா?

                                        0000000000000000000000000

                                       
                                        பிஞ்சுடா
                                        பிஞ்சுடா
                                        நெஞ்சுடா
                                        நெஞ்சுடா
                                        கொதிப்பே அடங்கலையேடா,,
                                       

                                        000000000000000000000000000

                                         ( மலேயா விமானம் மீது ஏவுகணை தாக்கு,

                                            பெங்களுரில் 6 வயது மாணவி வன்கொடுமை)
                                                                        இந்து தமிழ் செய்தி 

Tuesday, July 15, 2014

ஒரு கொத்து பூக்கள்





                                         
                கடவுளின் பிரதிநிதி...ஏழை மக்களின் வரம்...


                                                நீ கடமைக்குப் பாடுபட்டவனல்ல
                                                கண்ணியமாய் பாடுபட்டவன்..

                                                நீ படிக்கவில்லை ஆனால்
                                                எல்லோரையும் படிக்கவைக்கவேண்டும்
                                                எனப் படிக்க வைத்தாய்...

                                                செவிக்குணவிட்டபோதும் நீ
                                                வயிற்றுக்கும் வளமாய் இட்டவன்..

                                                எத்தனை உயரத்தில் இருந்தாய்
                                                எப்போதும் ஏழையாய்தான் இருந்தாய்..
                                                சிந்தனையில் ஏழை மக்களின்
                                                வறுமை தீர்க்க வைரமாய் சிந்தித்தாய்..

                                                உனக்கு முன்னரும் இல்லை
                                                உனக்கு பின்னரும் இல்லை
                                                கண்ணியமான அரசியலை
                                                கற்பான அரசியலை
                                                கடைசிவரைக்கு நடத்திவிட்டுப்
                                                போனவன்...

                                                 உன்னாட்சியில் எல்லோரும்
                                                 வளம் பெற்றார்கள் ஆனால் நீமட்டும்
                                                 வறுமை தேசத்தின் குடிமகனாய்த்தான்
                                                 இருந்துவிட்டு போனாய்..

                                                  மக்களாட்சியில் கடவுளின் பிரதிநிதியாய்
                                                  மணம் வீசி நின்றவன் நீ..
                                                  உன் பிறந்த நாளில் ஒருமுறை நாங்களும்
                                                  இறந்து பிறந்து அனுபவிக்கிறோம்
                                                  இந்த ஒரு நாளையேனும்
                                                  மானுட வாசத்தோடு..

                                                  காமராசனே...கருணை வேந்தனே...
                                                 கவிபாடி இந்தப் புவியில் உனையடக்க
                                                  முடியுமா?

00000000000000000000000000000000000000000000000000000000


                                                  நீதி வழங்கும் நீதியரசருக்கே
                                                  வேட்டி கட்ட உரிமையில்லை
                                                  என்றால்
                                                  என்ன நடக்கிறது இந்த தேசத்தில்
                                                  ஆங்கிலேய அடிமைகளை
                                                  என்ன செய்வது?
                                                  நீதிதான் தீர்ப்புரைக்கவேண்டும்
                                                  உடனே அந்த கிளப்பை
                                                  அகற்றவேண்டும்.
                                                  கிரிக்கெட் என்ன
                                                  நமது பண்பாட்டின் பாரம்பரிய
                                                  விளையாட்டா?
                                                  அதற்கென்ன வேண்டியிருக்கிறது
                                                  ஒரு கிளப்?
                                                   பெர்னாட்ஷா சரியாகத்தான்
                                                   சொன்னார் சரித்திரத்தில்...


00000000000000000000000000000000000000000000000000000000000000000

                                                

Saturday, July 12, 2014

கடவுள் கேட்ட பிச்சை,,,




                                 
                                    சகோதரியே...

                                    உனக்கிட்ட வாழ்வு
                                    பிச்சையென்று வரமானது
                                    யார் குற்றம்?

                                    வெயிலில் காய்ந்து
                                    மழையில் நனைந்து
                                    ஏந்திய கைகளில்
                                    என்ன விழுமோ? அதுதான்..
                                    அன்றைய நாளை
                                   செலவழிக்க,,,

                                    யாதும் ஊரே யாவரும் கேளிர்
                                    உங்களுக்குத்தான் பாடப்பட்டதோ?

                                    எத்தனை பேர்?

                                    பத்து ரூபாய்
                                    போட்டவன் சில்லறை மாற்றிப்
                                   போட்டிருக்கலாம்,,

                                     உன் பங்கு இரண்டு ரூபாய்க்கு
                                    அதிகமில்லை ஆனால்
                                    அதை அனுபவிக்க நீ கொடுத்தது
                                    இம்முறை உயிரை,,,

                                     அம்மா,, தாயே பிச்சை போடுங்க
                                     என்று கேட்டதை யாரென்று
                                     பார்க்காமல் விட்டுவிட்டாய்..

                                     எமனிடம் கேட்டால் என்ன தருவான்
                                     மரணத்தைத் தவிர?

                                     கடவுளின் காலடியில்
                                     பிச்சை கேட்டவளுக்கு
                                     மரணத்தைப் பிச்சைபோட்டவன்
                                     சாட்சிக்கு அந்தக் கடவுளே,,,

                                      சகோதரியே பிறப்பொக்கும்
                                      எல்லா உயிர்க்கும்..

                                      வள்ளுவன் கூட வஞ்சனையாகத்தான்
                                       எழுதியிருப்பானோ?

                                       கடவுளின் பிச்சையாகத்தான்
                                       நீ போகிறாய்...

     
                               
                குறிப்பு.

                                  இன்றைய  செய்தித்தாளில் பத்து ரூபாய் பிச்சைக்காசைப்
                 பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்ணைக்
                கொலை செய்துவிட்டார்கள். அதன் விளைவு இந்தக் கவிதை.

Wednesday, July 9, 2014

வருத்தம்...




                           

                                   வெள்ளத்தனையது மலர்நீட்டம்....



                     இலக்கியம் என்கிற சொல்லுக்கான வரையறையாக விழுமியப்  பொருளைக் கொண்டது என்றும் அது இலட்சியத்தை நோக்கியதும்
என்பதும் மேனாட்டார் குறிப்பிடுவது.

                      காலங்காலமாகத் தமிழ் மொழி தோன்றிய காலத்திலிருந்து
அதில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் அந்தந்தப் படைப்பாளிகளின் அர்ப்பணிப்பு உணர்வாலும் தேர்ந்த படைப்பாளுமையாலும் உருவாக்கப்
பட்டது. மேலும் அது எல்லா மக்களுக்குமான பொது வாழ்வியலையும்
உள்ளடக்கியும் உருவாக்கப்பட்டதால் இன்றைக்கும் சாகா இலக்கியங்களாகத்
திகழ்கின்றன. அதேபோன்று படைப்பாளிகள் பெரும்பான்மையும் தங்களை
இனங்காட்டிக்கொண்டதில்லை. இது எல்லோரும் அறிந்த வரலாறு.

                       எனவே படைப்பாளன் எனும் நிலை மேன்மையானது. உயர்வானது. மதிக்கத்தக்கது. ஆனால் இன்றைக்கு நடக்கும் சில நிகழ்வுகள் இத்தகைய படைப்பாளிகள் மேல் சந்தேகங் கொள்ளவைக்கிறது.

                  1.  சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடன் இதழில்
தன்க்குப் பிடித்த எழுத்தாளர்கள் ஒரு பட்டியலைத் தந்திருந்தார். அது இப்போது ஒரு அரசியலாகிகொண்டிருக்கிறது. நாஞ்சில் நாடனுக்கு முன்னர் பலரும் இதுபோன்ற பட்டியலைத் தயாரித்துத் தங்களின் படைப்பாளுமையாகத் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதுபோன்ற பட்டியலே ஒருஅரசியல்தான்.

                      இதுபோன்ற பட்டியலைக் கண்டு தன் பெயர் இல்லையே.. விடுபட்டிருக்கிறதே.. ஏன் தரவில்லை. என்பதுபோன்ற காய்ச்சல்கள் எழுந்து
கொண்டேயிருக்கின்றன. இது குறித்த விவாதங்களையும் இதழ்கள் வெளியிடுகின்றன. நாஞ்சில் நாடன் வெளியிட்டிருப்பது அவருடைய தனித்த
விருப்பத்தின்பேரில் தரப்பட்டது. அவர் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள படைப் பாளிகள் சிறந்தவர்கள் எனப்து குறித்த விவாதத்திற்குப் போகவேண்டாம். பட்டியல் தருவதால் என்ன பிரச்சினை? நாஞ்சில் நாடன் என்ன அத்தாரிட்டியா?  பட்டியல் போடுவதை இதழ்கள் போடுவதற்குத் தங்கள் பிரபலத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோன்று சிறந்த கதைகள் என்று புத்தகம் வெளியிடுவதிலும் பெரும் அரசியலை உள்ளடக்கிக்
கொள்கிறார்கள். இப்படி பட்டியல் குப்பைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

                   எழுத்தாளனின் கடமை என்ன?  தரமான படைப்புக்களைப் பொது சமூகப் புத்தியில் ஆக்கம் தரும் வகையில் படைத்தளிப்பதுதான். நிறைய நாவல்களை வெளியிட்டும் பல்லாயிரக்கணக்கான சிறுகதைகளை வெளியிட்டும் பல பரிசுகளைப் பெற்றும்விட்டால் உடனே பட்டியல் போட்டுவிடவேண்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இன்னும் உலகநிலையில் ஒரு தரமான அங்கீகாரத்தையடையவில்லை
எனப்தை உணரவேண்டும். குண்டுச்ட்டிக்குள் குதிரைதான்.  அப்புறம் குறிப்பிட்ட பகுதி எழுத்தாளர்கள் எனும்போது அங்கே ஒரு சாதி அரசியலை உருவாக்கி விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். வருத்தமாக உள்ளது.
பட்டியலாக இருந்தாலும் சரி எதுவானாலும் சரி இந்தப் படைப்பாளிகளின் இதுவரை வெளிவந்துள்ள படைப்புக்கள் தரத்தில் கொஞ்சமும் குறைந்ததில்லை. மதிப்பானவை. ஆனாலும் அவை உலக இலக்கிய அரங்கைக் நோக்கிப் பயணிக்கவேண்டிய துர்ரம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது என்பதையும் கசப்பாக ஏற்றுக்கொள்ள
வேண்டும். பட்டியல் அரசியலை விட்டு படைப்பை இன்னும் மேம்படுத்துங்கள் எழுத்தாள சகோதர ஆளுமைகளே.

               2. பெண் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கருத்திற்கு  சாரு நிவேதிதா அம்பை. குட்டி ரேவதி சல்மா சுகிர்தராணி எனப்
பங்கேற்கும் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இன்னும் வரலாம்.
எதற்கு இந்த அருவருப்பான நிக்ழ்வுகள். ஆண் எழுத்தாளர்கள் என்ன இலக்கிய உலகை குத்தகைகு எடுத்திருக்கிறார்களா? பெண் எழுத்தாளர்கள் எழுத்தை
எதற்கு விமர்சிக்கவேண்டும்? உண்மையான விமர்சனமாக இல்லாமல் அது தனிப்பட்ட நிலையில் பெண்களைத் தாக்கும் சூழல் சரியானதல்ல. ஒரு
நாவல் எழுதிவிட்டு சல்மா உலக நாடுகளுக்குப் போகிறார் என்று சாரு நிவேதிதா எதற்குப் பேசவேண்டும்? போனால் என்ன?  ஒரேயொரு நாவலுக்கும் உலக நாடுகளுக்குச் செல்வதற்கும் என்ன தொடர்பு? அல்லது ஏராளமான கணமான தடித்த பக்கங்களில் நாவல்கள் எழுதி குவிப்பவர் என்றால் வெளிநாடுகள் போகலாமா? எதற்கு தனிப்பட்ட நிலையில் பெண்
எழுத்தாளர்களை விமர்சிக்கிறீர்கள்? அதற்கு என்ன உரிமை உங்களுக்கு யாரால் வழங்கப்பட்டிருக்கிறது?

                       
                              ஒத்த கருத்துள்ள ஐந்து எழுததாளர்கள் கூடி ஒரு கூட்டம்
நடந்தாலே அங்கேயும் ஒரு அரசியலை நடத்துகிறார்கள் ஒற்றுமையாக
இருப்பதுபோல இயங்கும் ஐந்துபேரும். இது ஒரு சான்றுதான்.

                               இதெல்லாம் படைப்பின் சாதனையா?

                               படைப்பாளுமையா?

                              என்னத்தை இந்த உலகில் நீங்கள் சாதிக்க எழுத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?

                              அப்படியென்ன மகோன்னதமான உலகியல் படைப்பைத்
தந்திருக்கிறீர்கள்?

                              உங்கள் எழுத்துக்களைத் தேடித் தேடி ஓடி ஓடி ஆசைதீரப்
படித்துவிட்டு இப்போது உங்கள் நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களின்
எழுத்துக்களின் மேலே சந்தேகம் வருகிறது.

                              எமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி.

                              எமக்குத் தொழில் எழுத்து என்று சொல்லும் தகுதி உங்களில்
யாருக்காவது இருக்கிறதா?

                                எழுதுவதெல்லாம் எழுத்தாகாது.

                               எழுத்து ஒரு தவம். கடுமையான தவம்.

                               விளைந்த சகித்துக்கொள்ளுகிற உயர்ந்த மனப் பக்குவத்தின்
விளைச்சல்தானே எழுத்து?

                               தெரியாமல கேட்கிறேன்?

                               என்றைக்கு இந்த அக்கப்போரை விடப்போகிறீர்கள்?







Tuesday, July 1, 2014

கசிவுகள்... கசிவுகள்...




                                                     

                                     ரயில் கட்டணம்
                                     சமையல் வாயு
                                     பெட்ரோல்
                                     எல்லாம் உயர்வு

                                     நிச்சயம்
                                     குறையும்
                                     இதற்கானவர்கள்
                                     மீதான நம்பிக்கை...

                                                            0000

                                                                   இடிந்து விழுந்தது                                    
                                                           திணறிக்கொண்டிருக்கிறது
                                                                மூச்சுவிட ஒவ்வொரு
                                                             இதயமும் வேதனையில்
                                                                தாங்க முடியவில்லை
                                                                         11 மாடியின்
                                                                             சுமை..

                                                                       

                                                                                      000

                                      என்னவாயிற்று?

                                       பறந்ததும்
                                       விழுந்ததும்
                                       மறைந்ததும்

                                       என்னவானார்கள்?



                                                         000

                                         ஆணாய் துடித்தான்
                                         பெண்ணாய் துடிக்கிறான்
                                         அர்த்தநாரியாய்
                                         அர்ப்பணித்தான் அந்த
                                         லோகநாதன்
                                         சிலிர்க்கிறோம்..


                                                      0000
                                         

                                       


                                     


                                     

Monday, June 30, 2014

பொடி முட்டை... (நாடகம்)




                                          பொடி முட்டை,,,
                                                                                (நாடகம்)



                       (       ஒரு வீட்டின் உறால் அது. தாராளமான இடவசதிகொண்டது)


                 
                        வயதானவர்..:

                                                 அம்மா.. மருமகளே இன்னிக்கு முட்டை
சாப்பிடணும்போல இருக்கு. ஒண்ணு அவிச்சிகொடேன்..

                        மருமகள்   :

                                          முட்டை என்ன விலை விக்குது தெரியுமில்லே..
4.50..

                         வயதானவர்  :

                                              நான் வாங்கிட்டு வந்திருக்கேம்மா.. இந்தா
எல்லாருக்கும்

                                (கொடுக்கிறார்)

                               (மருமகள் வாங்கிகொண்டு முணுமுணுக்கிறாள்)

                              (பென்ஷன் வாங்கற கொழுப்பு... இந்த முட்டைக் காசு
இருந்தா வேற சாப்பிடலாம் வாங்கி)

                     வயதானவர்  :  என்ன சொல்றேம்மா?

                     மருமகள்    :       அவிச்சி தரேன்.
                     
                     ஆளுக்கொன்றாக நாலு முட்டைகளை அவித்து வைக்கிறாள்.

                                     
                                                            காட்சி 2

                                  (ஹர்லில் வயதானவர் ஒரு சிறுவன் அவன் அப்பா
                                               மருமகள்)

                     சிறுவன்       :         தாத்தா சாப்பிட வாங்க.. அம்மா கூப்பிடுது..

                               (வயதானவர் சாப்பிட அமர்கிறார்)

                      மகன்      :              முட்டை அவிச்சியா.. போடு.,.போடு..
                                               அவிச்ச முட்டை சாப்பிட்டு நாளாச்சு..

                      வயதானவர்  :   (தன் முட்டையை உடைத்து வெள்ளைக்
                                  கருவை மட்டும் வைத்துக்கொண்டு மஞ்சள் கருவை
                                  எடுத்து மகன் தட்டில் போடுகிறார். அவனுக்குப் பிடிக்கும்)

                                      சாப்பிடுப்பா..

                                     (மகன் சாப்பிடுகிறான்) (பக்கத்தில் சிறுவன்)

                   மருமகள்  : இது என்ன இது ரெண்டு மஞ்சள் கரு ஏது?
                         
                   மகன்      :      அப்பாவுக்கு ஒத்துக்காதுல்ல.. அதான் கொடுத்தாரு.

                  மருமகள்   :  உங்களுக்கு என்ன சின்ன வயசா? உங்களுக்கு மட்டும்
                                          ஒத்து வருமா அதுவும் ராத்திரியிலே ரெண்டு மஞ்சக்கரு
                                          கொண்டாங்க.. ஒண்ணு போதும்

                                     (ஒரு மஞ்சள்கருவை எடுத்து பிள்ளை தட்டில்
                                           போடுகிறாள்)

                     சிறுவன்   :   போ... எனக்கு முட்டை வேணாம். போ..

                     மருமகள்  :   ஏண்டா வேண்டாம்?

                     சிறுவன் :     எனக்கு பொடி முட்டைதான் வேணும்..இது வேண்டாம்.

                     மருமகள்   : நாளைக்கு செஞ்சு தரேன்.. இப்ப இத சாப்பிடு.

                     சிறுவன்  :   முடியாது... எனக்குப் பொடி முட்டைதான் வேணும்.

                     மகன்      :      அவனுக்கு என்ன பிடிக்குமோ அப்படி செய்ய வேண்டி
                                             யதுதானே?

                     மருமகள்   :  உங்கப்பாவுக்கு அவிச்சா புடிக்கும். இவனுக்கு பொடி
                                              முட்டை புடிக்கும். உங்களுக்கு ஆம்லெட் புடிக்கும்
                                              ஆளுக்கொண்ணு செய்யமுடியுமா?

                      மகன்    :        நான் ஆம்லெட் கேட்டனா?  புள்ளக்கிப் புடிச்சத
                                              செய்யவேண்டியதுதானே?

                     வயதானவர்     குட்டிப்பயலே சாப்பிடு.. நாளைக்குத் தாத்தா
                                                    முட்டை வாங்கிட்டு வரேன்.. பொடி முட்டை
                                                    அம்மாவ செய்யச்சொல்லி சாப்பிடலாம்..

                      சிறுவன்    :     போ தாத்தா.. எனக்கு பொடி முட்டைதான்
                                                வேணும்.. (தட்டிலிருந்து முட்டையை எடுத்து
                                                தரையில் வைக்கிறான்)

                       மருமகள்  :    இந்த வயசிலேயே  எவ்வளவு அழுத்தம். சாப்பிடுடா..
                                                 (அடிக்கிறாள்... அழுகிறான்)


                                                  காட்சி 3


                         வயதானவர் :   அவன அடிக்காதம்மா..

                         மருமகள்    :       உங்க வேலைய பாருங்க... உங்களுக்கு முட்டை
                                                        வச்சாச்சுல்ல சாப்பிடுங்க..

                         மகன்      :            எதுக்கு நீ இப்படி பேசறே?  அப்பா என்ன பண்ணாரு?

                         மருமகள்    :      இப்ப யாரு முட்டை வேணும்னு கேட்டா?

                         வயதானவர் :    என்னமோ நாக்குருசி கேட்டுட்டேன...முட்டை
                                                       சாப்பிடணும்னு தோணிச்சி.. கடைத்தெருவுலே
                                                       அவிச்ச முட்டை இருக்கு.. எல்லாரும்சேந்து
                                                        சாப்பிடலாம்னு வாங்கிட்டு வந்தேன்..

                         சிறுவன்     :         எனக்கு பொடி முட்டைதான் வேணும்.

                         மருமகள்      :      இப்ப அடி வாங்கி சாவப்போற பாரு..

                         மகன்         :            இதே எழவா போச்சு.. புள்ள வந்து பொறந்திருக்கு
                                                          பாரு..

                                               (என்றபடி பாதியில் எழுந்துபோனான் கைகழுவ)

                                              (மருமகள் அடுப்படி உள்ளே போனாள் முனகியபடி)

                          வயதானவர்  (வெள்ளைக்கருவை பொடிப்பொடியா நசுக்கி
                                                            இந்தா பொடி முட்டை )

                           சிறுவன்    :       என்னை ஏமாத்தறியா தாத்தா? இது பொடி முட்டை
        இல்லே. (என்றபடி எழுந்து வந்து வயதானவர் தட்டில் இருந்த அந்த
        முட்டைத் துகள்களை அப்படியே அள்ளி தெருப்பக்கம் போய்
         வீசினான்)

                                                                       (நிறைந்தது)
       

                         

Sunday, June 29, 2014

மாறாதய்யா மாறாது... தொடர்ச்சி



மாறாதய்யா மாறாது....

                        
                           இரவு எட்டுமணிக்கு டாக்டர் வந்தார். எப்படி இருக்கப்பா
ராகவன்? என்றார்.

                           நல்லாயிருக்கேன் டாக்டர்.

                           காரம் அதிகம் சாப்பிடுவியா?

                           இல்ல டாக்டர்.

                           மசாலா அயிட்டங்கள் அதிகம் சேத்துக்குவியா?

                           இல்ல டாக்டர்.

                           என்வி அயிட்டங்கள் வெளியில் நிறைய சாப்பிடுவியா?

                           இல்ல டாக்டர்.

                           அப்புறம் ஏன் அல்சர் ஆச்சு? அதனாலதான் டைஜஸ்ட் ஆகாம
வாந்தியாகி புட் பாய்சனாகியிடுச்சி..

                           நாங்க சாப்பிடறதே ஒருவேளைதான் டாக்டர்.. ராகவனின்
அக்கா சொன்னாள்.

                           ராகவன் பேசாமல் அவளைப் பார்த்தான்.

                           என்னம்மா சொல்றே?

                           ஆமாம் டாக்டர். நாங்க அஞ்சுபேரு. அப்பா இல்ல. இவனுக்கும் வேலை கிடைக்கல்ல. அம்மா வீட்டு வேலை பாக்கறா.. அதுல மூணுவேளை சாப்பிடமுடியாது டாக்டர்.. படபடவென்று பழகிய உறவிடம் பகிர்வதுபோல பேசினாள்.

                            அக்கா பேசாம இரு என்றான் ராகவன்.

                            ராகவனைப் பார்த்து கேட்டார் என்ன படிச்சிருக்கே?

                            பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி சார்.. பர்ஸ்ட் கிளாஸ்..

                            சரி உடம்பப் பாத்துக்க. இன்னிக்கு டிஸ்சர்ர்ஜ் போட்டுடறேன். நாளைக்கு என்னை கிளினிக்ல வந்து பாரு. தெற்கு வீதியிலே டிடிடிசி கூரியருக்கு எதிரில் இருக்கு..

                             சரிங்க டாக்டர்.

                             வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ரெர்ம்பவும் சோர்ந்து
போயிருந்தான்.

                             ராகவன் அம்மா கேட்டாள் எப்படிப்பா இருக்கு?

                             பரவாயில்லம்மா. குடிக்க சூடா வரகாப்பி கொடேன்.

                             காபி வேண்டாம்பா. டீ தரேன். பால் இல்லாத டிகாசனைப் பனங்கல்கண்டு போட்டு ஆற்றி அதில் எலுமிச்சம்பழத்தை நாலைந்து சொட்டுகள் பிழிந்து கொடுத்தாள். 

                             குடித்தான்.

                             ஏண்டா கவலைப்படறே ராகவா. நடக்கறதுதான் நடக்கும்.
எங்களுக்கு என்னிக்கு நடக்குமோ அன்னிக்கு நடக்கும். நீ உடம்பக் கெடுத்துக்காத.. நமக்கு சொத்துன்னு ஆண்டவன் கொடுத்திருக்கறதே இந்த உடம்பும் நம்பிக்கையும்தான்.. 

                              சரிக்கா என்றான் ராகவன்.

                              நாம ஜெயிப்போம்டா ராகவா.. என்றாள் இன்னொரு அக்கா.

                              ஆமாங்க்கா.. கண்டிப்பா..

                              நாளைக்கு மறக்காம டாக்டரைக் கிளினிக்ல பாத்துடு. 
பெரிய அக்கா சொன்னாள்.

                               ஏன் என்னாச்சு? எதுக்கு பாக்கச் சொன்னாரு. மகமாயி எம் புள்ளய காப்பாத்து..அம்மா உணர்ச்சியில் சொற்களைக் கொட்டினாள்.

                              அம்மா... தம்பிய பாத்த டாக்டர் ரொம்ப நல்லவரும்மா. இவன் படிப்ப பத்தி கேட்டாரு.. ஏதாவது வேலை விஷயமா இருக்கும். அதான் வரச்சொல்லியிருக்காரு.

                              போயிட்டு வாப்பா.. அப்படி ஏதாச்சும் வேலைன்னு சொன்னா.. நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்னு சொல்லு.. உடம்பு முக்கியம்.

                              ஏம்மா அவரே டாக்டரு.. கிளினிக்லகூட வேலை போட்டுத்
தரலாம். அவரு பாத்துக்க மாட்டாரா?

                               சரி சரி சாப்பிட்டுப் படுங்க.. அவன் கொஞ்சம் துர்ங்கட்டும்.

                              மறுநாள் சனிக்கிழமை.

                              வடக்குவீதி மூல அனுமார் கோயிலில் பதினெட்டு சுத்துசுத்திவிட்டு டாக்டர் கிளினிக்கிற்குப் போனான்.

                               கிளினிக் பெரிய கிளினிக்காக இருந்தது. வாசலிலே
அவரின் போர்டு இருந்தது.

                               வரவேற்பில் கேட்டுவிட்டு அவரின் அறைக்குப்
போனான். டாக்டர் இருந்தார்.

                               வாப்பா ராகவா என்று மறக்காமல் பேருடன் கூப்பிட்டு சிரித்தார்.

                               நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்.

                                வணக்கம் டாக்டர் என்றான்.

                               இங்க கிளினிக்ல ஆபிசுல வேலைபாரு. இது இரக்கப்பட்டு இல்லே. உன்னோட நிலைமைக்கு உதவணும்னு தோணிச்சி.அவ்வளவுதான். படிச்சவனா இருக்கறதாலதான். மாதம் நாலாயிரம் சம்பளம். உன்னோட சர்டிபிகேட் செராக்ஸ் மட்டும் ஆபிசுல கொடுத்துடு. வேலைய ஒழுங்கா பார்க்கணும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. வேற அரசுப் பணிக்கு தேர்வு எழுது. கிடைச்சா போயிடலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். வேற எந்த சலுகையும் கிடையாது உனக்கு. சரியா.திங்கட்கிழமையிலேர்ந்து வந்துடு.

                               சரிங்க டாக்டர்.

                               சரி போய்ட்டு வா..

                               வீட்டிற்குத் திரும்பி செய்தியைச் சொன்னான். 

                               ரொம்ப சந்தோஷம்பா.. டாக்டர் வழியா உனக்கு
ஒரு விமோசனம் பொறக்கட்டும்.. மகமாயி இருக்கா. கண் திறந்து
வைப்பா.. நம்பள.. அம்மா வேண்டிக்கொண்டு வாழ்த்தினாள்.

                                சரிம்மா என்னோட ஆஸ்பத்திரி செலவுக்காக யார்
யார்கிட்டே எவ்வளவு கடன் வாங்கினே சொல்லு.. அத முத மாச
சம்பளத்துல கொடுத்திடணும்..

                                 அன்று இரவு துர்க்கம் வரவில்லை.இந்த வேலை திருப்திதான். ஆனால் இது நிரந்தரம் அல்ல. இளைப்பாறல். சற்று தளர்வாக மூச்சுவிட இது ஒரு நிம்மதி. ராகவன் அடுத்தக்கட்ட தன்னுடைய இலக்கைப பற்றி யோசித்தபடி இருந்தான். 

                                  இரவில் அருகே படுத்திருந்த அம்மா மெதுவாகத்
தலையைத் திருப்பி ராகவா என்றாள் மெதுவாக.

                                  அம்மா ஏதோ ரகசியம் சொல்லப்போகிறாள் என்ற
ஆவலோடு என்னம்மா? என்றான் இவனும் மெல்லிய குரலில்.

                                  இனிமே பழைய ரசமும் கரப்பான் பூச்சி விழுந்த
சோறும் நமக்கு வேண்டாம்பா.. நம்ப குலதெய்வம் கருப்பையாவை
வேண்டிக்கப்பா..

                                                    (நிறைந்தது)

Saturday, June 28, 2014

மாறாதய்யா மாறாது.......தொடர்ச்சி



              மாறாதய்யா மாறாது


                             ராகவன் அதிர்ந்துபோனான். சின்ன கரப்புகள். மூடப்பட்ட தட்டின் வழியே உள்ள இடைவெளியில் உள்ளே போயிருக்கின்றன.

                              வயிற்று மைதானத்தில் பசிக்குதிரை வேகமாக ஓட ஆரம்பித்து
இருந்தது. அதன் குளம்படி சத்தங்கள் கேட்டன.

                              திரும்பி அம்மாவைப் பார்த்தான். நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். இது தெரிந்தால் கொட்டிவிட்டு சட்டென்று வேறு உலை வைத்துவிடுவாள். தவறில்லைதான் ஆனால் நாளைக்கு சாப்பாடு ஒருவேளை குறைந்துவிடும்.

                               மெல்லக் கரண்டியால் கரப்புகளைச் சோற்றோடு அள்ளி
வெளியில் போட்டான். திரும்பவும் கொஞசம் சாதத்தை மேலாக எடுத்து வழித்ததுபோல போட்டான்.

                                 விறுவிறுவென்று சாதத்தைத் தட்டில் போட்டு ரசத்தை ஊற்றி அவசரமாய் வாயில் ஒரு உருண்டை வைத்து கொத்தர (கொத்தவரங்காய்) வத்தலை எடுத்துக் கடித்ததும் தேவாமிர்தமாக இருந்தது.

                                   எல்லாச் சோறும் காலியானபிற்பாடுதான் பசியடங்கயிது. குளம்படி சத்தங்கள் ஓய்ந்துபோயிருந்தன.

                                   அப்படியே எழுந்து வந்து கைகழுவிவிட்டு அம்மாவின் அருகில் படுத்தான். அக்காக்கள் குறட்டை வேகமாக ஒலியெழுப்பியடி
இருந்தது.

                                   எப்படியாயினும் இவர்களுக்கான வாழ்கையைத் தேடிவிட்டுத்தான் ஓய்வேன் அப்பா.. என்று மானசிகமாக அப்பாவிடம் பேசிக்
கொண்டான்.

                                  கௌளி அடித்தது. அப்பாதான் சரியென்கிறார்.

                                  அம்மாவின் அருகில் படுத்தான்.

                                  அதிகாலை 4 மணிக்கு அடிவயிற்றில் எழுந்தது ஒரு வலி. குறைந்துவிடும் என்று எண்ணி எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்தான். படுக்கமுடியவில்லை. வலி அதிகமானது. விடவேயில்லை. தாங்க முடியாமல் போனபோது அம்மா என்று அலறினான்.

                                   அலறியடித்து எழுந்தது அம்மாவோடு வீடும்.

                                   என்னப்பா என்னாச்சு?

                                   வயித்து வலி தாங்க முடியலம்மா. நெஞ்ச வேற அடைக்குது. உடம்பெல்லாம் நடுக்குதும்மா.

                                     அய்யோ மகமாயி என்புள்ளக்கி என்னாச்சு தெரியலியே
அம்மா ஒப்பாரி வைத்ததில் அக்கம் பக்கமிருந்து சிலர் ஓடிவந்தார்கள்.

                                     நாலைந்துவீடுகள் தள்ளியிருந்த ராமு ஓடிவந்தான். அவன் ஆட்டோ ஓட்டுபவன். வரும்போது ஆட்டோவோடு வந்தான்.

                                      ஏற்றிக்கொண்டு ஓடினார்கள் அரசு மருத்துவமனைக்கு.

                                      ராகவன் துடித்துக்கொண்டிருந்தான்.

                                      மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில்  நாலைந்து டாக்டர்கள் அரைதுர்க்கத்தில் இருந்தார்கள். நைட் டூட்டி  பார்த்திருப்பார்கள்.

                                      ஆனாலும் ராகவனை அவசரமாகப் பரிசோதித்தார்கள்.

                                       உடனே சேர்க்கவேண்டும் அட்மிஷ்ன் போட்டார்கள்.
சிகிச்சையும் ஆரம்பமானது.

                                        ராகவன் அதற்குள் நாலைந்துமுறை வாந்தியெடுத்தான். இருமுறை வயிற்றுப்போக்கும் அப்படியே போனான்.

                                          ஏதோ சாப்பிட்டது விஷமாயிடிச்சி. கவலைப்பட வேண்டாம். சரியான நேரத்துக்குக் கொண்டு வந்திட்டீங்க.. என்றார்.

                                            ட்ரிப் போட்டார்கள்.

                                            ட்ரிப்பிலேயே நாலைந்து ஊசிகளை உடைத்துப் போட்டார்கள்.
                                            ராகவன் மயக்கமாகியிருந்தான்.

                                            பக்கத்தில் உட்கார்ந்து ராகவன் அம்மா அழுதுகொண்டிருநதாள்.

                                            அதற்குள் ராகவனின் அக்காக்கள் அக்கம்பக்கம் ஏதோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிகொண்டு மருத்துமனைக்கு வந்திருந்தார்கள்.

                                             நீங்க பாத்துக்கங்க.. நான் வீட்டுக்குப் போயி தம்பிக்கு சட்டை கைலி எடுத்துட்டு பாத்திரம் டம்ளர் எல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்.

                                             என்னம்மா சொன்னாங்க?

                                             சாப்பிட்ட சாப்பாடு விஷமாயிடிச்சாம்..

                                             ரசம்தானே சாப்பிட்டான். நடுராத்திரி சாப்பிட்டிருப்பாம்மா. ரசம் கெட்டுபோயிருக்குமோ.

                                             இருக்கும். அது நேத்து ரசம். அப்படியும் சுடவச்சிதானே வச்சேன்.

                                             மகமாயி என் புள்ளய காப்பாத்து.. இவன வுட்டா எனக்கு வேற கதி கிடையாதும்மா. என்றபடி மறுபடியும் அழுதாள் ராகவனின் அம்மா.

                                               அம்மா.. அழாதம்மா. தம்பிக்கு ஒண்ணும் ஆகாது.

                                               என்ன இது ஒப்பாரி வக்கறிங்க?  அவருக்கு ஒண்ணும் இல்லே. புட் பாய்சன். சரியாயிடும். வயிறு வேற புண்ணாயிருக்கு. கண்டதயும் சாப்புடுவாரா? நர்சு கேட்டாள்.

                                               நர்சை ராகவன் அம்மாவும் அக்காவும் வேதனையோடு
பார்த்தார்கள்.  கண்டதையும் சாப்புடுவானா? அதுக்கு ஏதும்மா எங்களுக்கு வழி? என்று நர்சிடம் சொல்லவேண்டும் என்று துடித்தது.

                                             ராகவன் அம்மா கிளம்பிப் போனாள் வீட்டிற்கு.

                                             அவள் போனதும் ராகவனின் அக்காக்கள் ராகவன்
கிடப்பதைப் பார்த்துக் கண் கலங்கினார்கள்.

                                              அவரவர் சாமியை வேண்டினார்கள்.

                                               கருப்பையா.. எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து எங்க த்ம்பிதான்.. அவன்தான் எங்களுக்கு எல்லாமும். சோதிக்காதய்யா.. காப்பாத்து..

                                               குலதெய்வம் கருப்பையாவைக் கூப்பிட்டதும் சொல்லி
வைத்ததுபோல ராகவன் லேசாகக் கண்விழித்தான்.

                                               தம்பி என்றார்கள். ராகவன் உடனே அம்மா எங்கே?
என்றான்.

                                                                                                                     (தொடரும்)


பி.குறிப்பு

                          அன்புள்ள நட்பு உள்ளங்களுக்கு

                          கதையை இன்றுடன் முடிக்க முடியவில்லை. கதை நீள்கிறது.
எனவே பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்.

                                                 

Friday, June 27, 2014

சிறுகதை



மாறாதய்யா மாறாது,,,,,,



                       நிறைய உடல் வெப்பத்தை இழந்திருந்ததால் சூரியன் மேற்கில் களைத்துபோய் தள்ளாடிக்கொண்டிருந்தான்.

                        தாய்ப்பசுவிடம் பால் குடித்ததும் பசி தீர்ந்த கன்றுக்குட்டியின் துள்ளல்போல் இரவு மெல்ல தன் வலையை வீசியிருந்தது.

                        அந்த வலையினுர்டாக நாலைந்து பறவைகள் கூடு திரும்பிக்
கொண்டிருப்பது வானப்போர்வையில் வரையப்பட்ட ஓவியங்கள் அசைவது
போலிருந்தது.

                         தெரு முழுக்க வாசல் தெளித்துக் கோலமிட்டிருந்தார்கள்.

                         இன்றைக்கும் ஐந்து மணிக்குப் பொழுதுசாயத் தொட்ங்கியவுடனே பெண்கள் செய்யக்கூடிய மறக்காத வேலைகளுள் ஒன்றாக இருந்தது.

                          பெரும்பான்மை பெண்கள் ஆறு மணிக்கு மேல் எந்த வேலையும் செய்வதாக இல்லை என்பதை சங்கம் வைக்காமல் தீர்மானமாய் உறுதி எடுத்திருந்தார்கள்.

                          நள்ளிரவில் ஆந்தைகள் அலறி இரைதேடப் புறப்படுவதுபோல மாலை ஆறுமணிக்குமேல் அத்தனை வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வாய்க்கூட்டை திறந்து தொடர் ஆந்தைகளை அலறவிட்டுவிடும்.

                           தெருவில் போடப்பட்டிருந்த நான்கு சோடிய வேப்பர் விளக்குகளில் இரண்டு எரியவில்லை. எனவே பாதி வெளிச்சமும் பாதி இருளுமாகத் தெருவிருந்தாலும் நடந்துபோகிறவர்கள் எதிரில் வருகிறவர்கள் தென்படுகிற சூழல் இருந்தது.

                              இப்படியான தெரு ஒன்றில்தான் உடல்சோர்வும் மனச்சோர்வும் ஒன்றிணைந்து வாட்ட ராகவன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.

                              படிக்கிறபோது கொஞ்சம் கனவுகள்

                              படித்து முடித்ததும் கொஞ்சம் கனவுகள்

                              வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கொஞ்சம்
கனவுகள்.

                              அதன்பின் மனதுக்குப் பிடித்தவளை மனைவியாக்கும் தருண நிகழ்வுகளைப் பெண் பார்க்கத் தொடங்கி மணவறையில் தாலி கட்டுவதுவரை எனக் கொஞ்சம் கனவுகள்.

                               பார்க்காமல் விட்ட பொருள்களைக் கரையான் அரித்ததுபோல
படித்து முடித்ததுமே அத்தனை கனவுகளும் அரிக்கப்பட்டுவிட்டன பயனற்று.

                               தொடக்கத்தில நம்பிக்கையோடு இருந்தான்.

                                அப்புறம் போராடவேண்டும் என்பதை உணர்ந்தான்.

                                போராடினான்.

                                 முடியவில்லை.  ஐநதாண்டுகள் கடந்துவிட்டன பட்டப்படிப்பு
என்று ஒன்றைக் கையில்வாங்கி ஆனால் வேலை அமையவில்லை.

                                  ஆயிரம் ரூபாய்க்கு அமெரிக்கா ஒப்பந்தம் போலப் பேசினார்கள்.

                                   கஷ்டக் காலத்திற்குப் பொருள்களை அடகு வைக்கலாம்.

                                   தவறில்லை.

                                    ஆனால் படித்த சான்றிதழ்களை அடகு வைக்கமுடியாது.

                                    சொற்ப சம்பளத்திற்கு மூலச் சான்றிதழ்களைக் கேட்டார்கள். உண்மையில் நல்ல வேலை கிடைக்கும்போது அவர்களிடம் வாங்க முடியாது. சட்டம் பேசுவார்கள். அவர்கள் பேசுகிற சட்டத்திற்கு முன்னால் தான் செல்லாக்காசுதான் என்று ராகவன் நினைத்து மறுகினான்.

                                     இடித்துப்போட்ட கட்டிட சிதைவுகளுக்குள் நடப்பதற்குத் தடுமாறுவதுபோல உடைந்த  தன் கனவுகளில் தடுமாறினான்.

                                      எல்லா வீட்டு வாசல்களிலும் வாசல் விளக்குகள் எரிந்துகொணடிருந்தன. உள்ளே தொடர் புதைமணலில் புதைந்துகொண்டிருந்தார்கள்.

                                       ராகவன் இவ்வளவு எளிதாக வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்பவே முடியாமல் ஏதோவொன்று
நெஞ்சடைத்துக் கிடந்தது.

                                      அப்பாவை நினைத்துப் பார்த்தான்.

                                      அடிக்கடி தன்னுடைய கதையைச் சொல்வார் அப்பா.. 67 சம்பளத்துக்கு வேலைக்குப்போனேன். அஞ்சு பிள்ளைங்க  என்ன பாடு பட்டிருப்பேன். ஒரு சொந்தக்காரன் சல்லிக்காசு உதவலே.. கழைக்கூத்தாடி
வாழ்க்கை வாழ்ந்தேன்.

                                          வுடுப்பா சதா புராணம் பாடறே... என்று விட்டு விலகி
ஓடுவோம்.

                                          இல்லடா தம்பி.. குடும்பக் கஷ்டம் உணர்ந்து நடக்கற புள்ளங்கதான் உருப்பட்டு கரையேறும்பார் பொறுமையாக.

                                          எதற்கும் கோபப்பட்டோ கை நீட்டி அடித்தோ அப்பாவைப் பார்த்ததில்லை.

                                          வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் அனுபவிக்கிற போது   தான் அப்பா அதற்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பதை.

                                           இருக்கும் வரை அப்பா புரியவில்லை. இறந்தபிறகு வாழ்க்கை தெரியவில்லை.

                                          ஒவ்வொன்றுக்கும் குட்டிக்கரணம் போடாத குறைதான். அப்போதுதான் அப்பா எத்தனை பாடுபட்டிருப்பார். ஆனால் எதையும் காட்டிக்
கொள்ளமாட்டார். கேட்டது கொடுக்கும் கற்பகவிருட்சமாகத்தான் இருந்தார்.

                                           மின்சாரம் வசதியில்லாத சிம்ளி விளக்கு ஏற்றப்படும்
வீட்டைப்போல ஆகிவிட்டது வாழ்க்கை.

                                           ராகவன் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே
நடந்தான்.

                                          யாருக்கு இல்லை பிரச்சினை. போராடிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். தலைக்குமேல் போனபிறகு சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன என்பதுபோல எல்லாவற்றையும் உதறிவிட்டு ஆறு மணிக்கு மேல் டிவி முன்பு நடுகல்லாகிவிடுகிறார்கள். கண்களில் மட்டும் உயிர் வைத்துக்கொண்டு.

                                         வாழ்க்கையின் எதார்த்தத்தைக் கொன்று  புதைக்கும்  ஒரு மெல்லக் கொலலும் விஷமாகத் தொடர்கள் இருப்பதையுணராத வாழ்க்கையில் அவர்கள் மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.

                                           உறவறுக்கும் மாயச்சுழலாக தொலைக்காட்சிப்
பெட்டி மாறிக்கொண்டிருந்தது.

                                          வாசல் கதவு திறந்து கிடந்தது. உள்ளே போனான்.
வீடு நிசப்தமாக இருந்தது. அம்மா படுத்துவிட்டிருப்பாள். அவளுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிக்
கொண்டிருந்தாள்.வாயைத் திறந்து கேட்கவில்லை. கேட்க முடியவில்லை. அவள் உரிமையாகக் கேட்டுப்பெறுபவர்களில் அப்பா இப்போது இல்லை.
ராகவன் மட்டுமே இருக்கிறான். ஆனாலும் அவனால் ஒரு தொலைக்காட்சி
பெட்டி விலைக்குக்கூட ஒரு வேலை கிடைக்கவில்லை.

                                         இந்த ஐந்தாண்டுகளில் அவன் பல வேலைகள் பார்த்துத்தான் இருந்தான். அதிலெல்லாம் அவனுக்கு மிஞ்சியது அவமானங்கள்தான். காயங்கள்தான். அவற்றில் இன்னும் சில ஆறாமல் பயன்படாமல் நாறிக்கொண்டிருக்கும் நீர்க்குட்டைகள் போல உறுத்திக்
கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் வாங்குகிற சம்பளத்தில் இரண்டு வேளை உணவு மட்டுமே உறுதியாக இருந்தது.

                                         இவனுடைய நண்பர்கள் எல்லாரும் ஏதேதோ வேலை தேடி சென்னை. திருப்பூர் மும்பாய் திருநெல்வேலி என்று சிதறியிருந்தார்கள்.
இவனால் அப்படிப் போகமுடியாது. தனக்கு மேலே வளர்ந்து கிடக்கிற பெண் பிள்ளைகளைக் கரைசேர்க்கவேண்டும்.

                                         அப்பா இறந்துபோகும்போது நான்கு பெண்களுக்கும் சேர்த்து ஐந்து பவுன்தான் சேர்த்து வைத்துவிட்டுப்போயிருந்தார்.கூடவே ஒரு
சின்ன ஓட்டுவீடு. அறைகளேயில்லாத திருமண மண்டபத்தைப் போல.

                                         ஐந்து பவுனை வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையின் நுழைவுக் கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாது.

                                         இவன் உள்ளே வாசனை உணர்ந்து ராகவன் அம்மா
விளக்கைப் போட்டாள்.
                                          வெக்கையா இருக்கு. குளிச்சிட்டு ரசம்தான் வச்சிருக்கேன்.கொத்தரவத்தல் வறுத்திருக்கேன். சாப்பிடு. இன்னிக்கு காய் வாங்க முடியலேப்பா..

                                         குளித்ததும் உடல் முழுக்க ஒரு களைப்பு அழுத்தியது.

                                         கண்கள் செருகின. அப்படியே படுத்துவிட்டான்.

                                         ராகவன் அமமா பதறிப்போனாள்.

                                         என்னப்பா ஆச்சு?  சாப்பிடலே... நான் போட்டுக் கொண்டு வரவா?
                                         வேண்டாம்மா. அலைஞ்சது காலெல்லாம் வலிக்குதும்மா. துர்ங்கறேன் பசித்தா அப்போ எழுந்து சாப்பிட்டுக்கறேன். என்றபடி அப்படியே தரையில் சரிந்து படுததுறங்கிப்போனான்.

               நள்ளிரவில் விழிப்பு வந்தது. பசி. மெல்ல எழுந்து வந்து  அடுப்புக் கருகில் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு  ரசக் கிண்ணத்தையும் அருகில் எடுத்துவைத்துக்கொண்டான். சாதம் இருந்த அலுமினியப்  பாத்திரத்தைத் திறந்தான். உள்ளே நாலைந்து கரப்பான் பூச்சிகள் நுழைந்து  இறந்து
கிடந்தன.

                                                                                                                 (நாளை முடியும்)