Wednesday, October 16, 2013





                                                       குறை தீர்க்கும் நாள்


                                  அன்றைக்கு சிங்கத்திற்கு அலுப்பாக இருந்தது வேட்டைக்குப் போவதற்கு. ஆனாலும வயிறு பசிக்குமே என்கிற கவலையும் இருந்தது.

                                யோசித்துகொண்டேயிருந்தது.

                                அதற்குள் விடிந்து கதிரவனும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டான்.

                                  அப்போது ஒரு நரி வந்தது.

                                  நரியை அடித்துத் தின்றுவிடலாம் என்று யோசித்தபடியே நரியைப் பார்த்தது. சிங்கத்தின் கண்பார்வையிலேயே நரி புரிந்துகொண்டுவிட்டது. இருப்பினும் ஒடனே ஓடிவிடவும் முடியாது.சிங்கம் எப்படியும் கொன்றுவிடும் என்று அதற்குத் தெரியும்.

                                   நரி யோசித்தது.

                                   பின் சொன்னது

                                  என்ன மகாராஜா இன்றைக்கு வேட்டைக்குப் போகாமல் இருக்கிறீர்கள்?  நான் வரும் வழியில்தான் ஒரு இளம்மான் கூட்டத்தைப் பார்த்தேன். அத்தனையும் பிஞ்சுமான்கள்.

                                  சற்று நிறுத்தி  தான் வீசிய வலையில் சிங்கம் நுழைந்ததா என்று நோட்டம் பார்த்தது.

                                  பிஞ்சு மான்கள் என்றதும் சிங்கத்திற்கு எச்சில் ஊறியது. சட்டென்று அடக்கியபடி சொன்னது

                                    இல்லை நரியாரே இன்றைக்கு அலுப்பாக இருக்கிறது. எனவே வேட்டைக்குச் செல்லும் எண்ணம் இல்லை. ஆனாலும் வயிறு இப்போதைக்கு லேசாகப் பசிக்க ஆரம்பித்திருக்கிறது.

                                  அப்படியா அப்படியானால் நானொரு யோசனை சொல்கிறேன் என்றது,

                                  சிங்கம் தலையாட்டியது உடனே.

                                  நரிக்கு தான் தப்பித்துவிட்டோம் என்று உறுதியானவுடன் அந்த யோசனையை சொன்னது சிங்கத்திடம்.

                                 சிங்கம் அந்த யோசனையைக் கேட்டதும் மகிழ்ச்சியானது.

                                 உடனே காடெங்கும் அந்த அறிவிப்பு  ஒலித்தது.

                                  இன்றைக்கு வேட்டைக்கு செல்ல விருப்பமில்லாத நமது ராஜா அவர்கள் குறைகளைக் கேட்கவுள்ளார். எந்த விலங்காக இருந்தாலும் அதன் குறைகளைச் சொல்லலாம் உடனே தீர்த்து வைக்கப்படும். யாரும் வராமல் இருக்கக்கூடாது. இது அரச கட்டளை.

                                   எல்லா மிருகங்களும் ஓடோடி வந்து சிங்கக் குகை வாசலில்
குழுமி நின்றன.

                                     சிங்கம் எல்லோரையும் நோட்டமிட்டது.

                                     நரி சொன்னது பொய்யில்லை. நிறைய இளம் மான்களும் சற்றே பெருத்த விடலை மான்களும் நின்றுகொண்டிருந்தன.

                                     சரி ஒவ்வொருத்தராகக் குறைகளைச் சொல்லுங்கள்..

                                    முதலில் ஒட்டகச் சிவிங்கி வந்து சொன்னது.

                                     இந்த யானைகள் எல்லா மரங்களையும் முறித்துவிடுகின்றன. எனவே எங்களுக்கு இலை தழைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

                                     சரி. யானைகளே சில மரங்களை விட்டுவிடுங்கள். ஆமாம் இல்லையென்றால் நான் கொன்றுவிடுவேன் உங்களை.

                                     சரி மகாராஜா என்றன யானைகள்.

                                     இப்படி ஒவ்வொன்று ஒரு குறையை சொல்லச் சொல்ல அதனை மாற்றி மாற்றி மற்ற மிருகங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது சிங்கம்.

                                    அதற்குள் நன்றாக வெயில் வந்துவிட்டதால் சிங்கத்திற்கு பசி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

                                    குறைகள் சொன்னவர்கள் போகலாம் என்றது.

                                    கடைசியில் சில முயல்களும் நாலைந்து மலையாடுகளும் இளம் மான்களும் மிஞ்சியிருந்தன.

                                      சரி மான்களே உங்கள் குறை என்ன? என்றது சிங்கம்.

                                      மகாராஜா... நாங்கள் மேயும் புல்வெளிகளில் எல்லாம் பன்றிகளும் எருமைகளும் சேற்றோடு உருண்டு புரள்கின்றன அதனால் புல் மேயமுடியாமல் பட்டினியாகக் கிடக்கவேண்டியிருக்கிறது. எனவே உடம்பு பாதித்திருக்கிறது. சரி தண்ணீரை குடிக்கலாம் என்றாலும் இவைகள் குட்டைகளையும் குழப்பிவிடுகின்றன. சேற்று தண்ணீர் தெளியும்வரை காத்திருப்பதால் பட்டினியால் உடல் சோர்ந்துபோய்விடுகிறது  என்றன.

                                      அடடா,, இதென்ன பரிதாபம்.. அதனால்தான் எல்லோரும் மெலிந்து கிடக்கிறீர்கள்.. பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. என்னுடைய  காட்டில் யாரும் பசியாக இருக்கக்கூடாது.. சரி உங்களுக்கு மட்டும் அனுமதி தருகிறேன்..என் குகையைச் சுற்றி பசும்புற்கள் பரந்து கிடக்கின்றன நீங்கள் தினமும் வந்த மேய்ந்து பசியாற்றிக்கொள்ளலாம்.

                                  அரசே உங்களின் பெருந்தன்மையே பெருந்தன்மை என்று  பாராட்டின நரிகள்.

                                  மான்களும் மகிழ்ந்துபோயின.

                                  சரி வாருங்கள்..இன்றைக்கே உங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது சிங்கம்.

                                   மான்களும் உற்சாகமாய் ஓடிப்போய் மேய ஆரம்பித்தன.

                                   குகைக்கு அந்தப் பக்கம் பாருங்கள் எத்தனை பச்சையென்று.

                                  சிஙகம் காட்டிய இடத்திற்கு சென்றன சில மான்கள். அவற்றை யாருமறியாமல் அப்படியே வாயால் கவ்விக்கொண்டு குகைக்குள் போய் சாப்பிட ஆரம்பித்தது சிங்கம் உற்சாகமாய்.

                                  இதையறியாமல் மான்கள் குகையைச் சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன.

                                                    ====

Tuesday, October 15, 2013

நத்தையோடடுத் தண்ணீர் .....விமர்சனம்..


அன்புள்ள 

                        வணக்கமுடன் ஹரணி.


                       என் நுர்லான நத்தையோட்டுத் தண்ணீர் பொதுவான நமது விழுமியங்களின் தன்மைகளை நினைவில் தக்க வைக்கும் முயற்சியாக 14 கட்டுரைகளைத் தாங்கியதாகும். இதுகுறித்து பலரும் பல விமர்சனங்களை

முன்வைக்கும் சூழலில் அவர்களின் கருத்திற்கேற்ப மறுபடியும் பல சேர்க்கைகளுடன் மறுபதிப்பிற்காக அச்சில் இருக்கிறது. முதலில் அச்சிட்ட படிகள் (100 படிகள்) தீர்ந்துவிட்டபடியாலும். 

                         ஒவ்வொரு விமர்சனமும் எனக்குப் பெருமையானது. மதிப்பிற்குரியது. என்மேல் அவர்கள் கொணடிருக்கும் அன்பின் விளைவர்ல் விளைவது. அவற்றைப் பொன்னேபோல் போற்றி வைத்திருக்கிறேன். அதேசமயம் அவற்றை மற்றவர்களும் படிக்கப் பதிவிட்டும் வருகிறேன்.

                       தற்போது என்னுடைய சமகால எழுத்தாளன். நண்பன். சகோதரன் இப்படியும் இதற்குமேலும் சொல்லும் பேரன்பிற்குரியவன் மதுமிதா என்கிற பொன். சந்தானகிருஷ்ணன். பள்ளியில் தொடங்கிய நட்பு கல்லுர்ரி முடித்தும் வேலைக்குச் சென்றும் இன்றுவரை குடும்ப நட்பாக அன்புச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது அது. 


                        திரு சந்தானகிருஷ்ணனின் மாமியார் மரியாதைக்குரிய திருமதி ஆர். மங்கையர்க்கரசி நல்ல படிப்பாளி. அதேசமயம் விமர்சகரும்கூட. என்னுடைய நத்தையோட்டுத் தண்ணீரை வாசித்தவுடன் கைபேசியில் பேசினார்கள். என் நுர்ல் குறிதது அவர்கள் விமர்சனம் எழுதியனுப்புவதாகச் சொன்னார்கள். அவசியம் தாருங்கள் அது எனக்கு மிகவும் பெருமையானது என்று கூறினேன். உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை அப்படியே உள்ளது உள்ளபடியாகத் தாருங்கள் என்றேன். இன்றைக்குத் துர்து அஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அதை அப்படியே இங்கே பதிவிடுகிறேன். 


                      அதே தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஆர். மங்கையர்க்கரசி

                      பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய திரு ஹரணி அவர்களுக்கு
வணக்கம்.

                      தங்களின் உன்னத படைப்பான நத்தையோட்டுத் தண்ணீர் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. முக்கியமான காரணங்களில் ஒன்று வாசிப்பு - அது என்றென்றும் சுகமானது எனக்கும்,

                     திருவள்ளுவரின்  துணைவியார் வாசுகி அம்மையாரின் சிறப்பியல்புகளையும் நத்தை ஓட்டுத் தண்ணீரும் ஊசியும் எதற்காக உணவு உண்ணும்போது வைக்கப்பட்டது என்பது பற்றிய விளக்கங்களையும் எனது தந்தையார் எங்களுக்கு விளக்கியுள்ளார். மேலும்  அவரும் சாப்பிடும்போது ஒரு கிண்ணத்தில் வைத்துள்ள தண்ணீரில் சிதறிய பருக்கைகளை சுத்தம் செய்து மோர் சாதம் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடுவார். அவரது குதிங்காலிலும் வெடிப்பின்றி சுத்தமாகவே இருந்தது இறுதிவரை. தங்களின் வழிகாட்டிகள் படிக்கும்போது என் தந்தையை நினைவுபடுத்தி கண்களில் நீரை வரவழைத்தது,

                  அதுபோன்றே எனது மதிப்புமிக்க ஆசிரியர் திரு நாராயணசாமி அவர்கள் என்னைத் தனது சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்று உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க எனது பெற்றோருடன் போராடி வெற்றி கண்டார். அன்று அவரின் பேருதவி இல்லையேல் இன்று நான் பட்டதாரி ஆகியிருக்க முடியாது.

                   எனது தாய்மாமா திரு அகிலன் அவர்களின் துர்ண்டுதலால் புத்தகங்கள். கவிதைகள் படிக்கும் பழக்கமும் கடிதம் எழுதும் முறையையும் கற்றுக்கொண்டேன், மகிழ்ச்சி-யில் ச் என்ற எழுத்தை எழுதாமல் இருந்த எனது கடிதத்தின் பிழையை கடிதம் மூலமாகத் திருத்தியவர். மேலும் முறையே என்ற சொல்லையும் பயன்படுத்தப் பழக்கியவர் அவரே. என் வாழ்க்கையிலும் பலர் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். எனது பொக்கிஷங்களில் இடம் பெற்றுள்ளது இவரின் கடிதங்களும்.

                 உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் நீதி போதனையின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்துள்ளேன்.

                 சபை நாகரீகம். நீதிபோதனை போன்றவைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது என்போன்ற வாசகர்கள் பலரின் எண்ண எழுச்சியாக உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத வாழ்க்கை சீர்மை பெறுவது இல்லை அல்லவா?

                தமிழார்வமும் சமூக சிந்தனையும் மிகப் பெற்றத் தங்களுடன் உரையாடவும். சந்தித்துப்பேசவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன். நம் சமூகத்தைச் சீர்படுத்தத் தங்களின் நத்தையோட்டுத் தண்ணீர் பயன்படும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும்,

                                             ஆர். மங்கையர்க்கரசி  11/10/13,


என் குறிப்பு

                        ஒரு படைப்பாளனுக்கு இதைவிடவா விருது வேண்டும்?
சரியான இலக்கில் அந்த படைப்பாளன் இந்த சமுதாயத்தில் பயணிக்கிறான் தன் எழுத்துக்களுடன் என்கிற அங்கீகாரம் சரியாகப் புரிந்துகொள்ளப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் நிறைவும் விட  உயர்ந்தவை எதுவும் உண்டா?



Monday, October 14, 2013

கல்விக் கண்ணீர்....



கல்விக் கண்ணீர்..


                   ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வருகின்ற கொலை. கொள்ளை தொடர்பான அடிக்கடி வருகின்ற செய்திகளைப் போன்று கல்வித் தொடர்பான பிறழ்வு செய்திகள் மனத்தை வேதனைப்படுத்துகின்றன.
பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரின் உயிர் பறிப்பு. மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான பாலியல் வன்முறையை மேற்கொள்வது போன்ற செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் ஒரு கல்லுர்ரியின் முதல்வர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். இறந்துபோன அந்த முதல்வரின் ஒரே மகள் சிறு வயது அவளின் சொற்கள் இவை

                      அங்கிள்... அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே,
                      ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா அப்பா
                      இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?
                     (நன்றி தி இந்து நாளிதழ்...12.10.2013)

நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன தந்தையை இழந்த மகளின் வேதனை.

                 இது இப்படியே தொடர்ந்தால் எதிர்கால கல்வியின் நிலை என்னவாகும்? எதிர்கால சமுதாயம் எப்படி நல் சமுதாயமாக மலரும். எப்படி ஆயினும் இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் வேதனையானதுமாகும். இதற்குரிய நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. உரியவ்ர்களுக்குத் தண்டனையும் உறுதி. என்றாலும் படிக்கவேண்டிய நிலையில் அந்த மாணவர்களின் மனத்தில் இத்தனை வன்மம் வளர்த்தது எது.

                    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்லாசிரியர் இயல்புகளையும் மாணாக்கர் இயல்புகளையும் ஆசிரியர் பாடங் கற்பிக்கும் முறையையும் மாணவர்கள் பாடம் கேட்கும் முறைகளையும் குறிப்பிட்டு இலக்கணம் வகுத்திருக்கிறது.

                  இவற்றுக்கான தீர்வு என்பது ஆசிரியர்களும் சரி மாணர்க்கர்களும் சரி தரமாக உருவாக்கப்படவேண்டும் என்பதுதான்.

                   இன்றைக்கும் ஆசிரியர் பணியை உப தொழிலாகக் கருதும் ஆசிரியர்களின் விழுக்காடுதான் அதிகமாக உள்ளது. ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன்பும் சரி வந்தபின்பும் சரி பணம் சம்பாதித்தல்  என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள ஆசிரியர்கள்தான் அதிகம்.  தன்னை மேன்மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதுமில்லை. மாணவர்களுக்குப் பாடம் சொல்வதில் சரியான பயிற்சியின்மையும் உள்ளது.

                கல்வி குறித்து சித்பவானந்தர் குறிப்பிட்டுச் சொல்கிறார்

                 ஆசிரியர்கள் என்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும்
                  ஈடுபாட்டோடும் எளிமையாகவும் இருக்கவேண்டும்.
                 ஏனென்றால் அவர்களை எப்போதும் மாணவர்கள்
                 கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள் என்று.
                 நாட்டிலுள்ள ஒழுக்கக் கேடுகளுக்கு ஒழுக்கமின்மையே
                 காரணம். ஒழுக்கசீலர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும்
                 இருத்தல் வேண்டும். எப்போதும் ஒழுக்கத்தையும் அறிவையும்
                 மேம்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
             

மேலும் காந்தியடிகள் குறிப்பிடும்போது

                     எந்தக் கல்வியின் இறுதிநோக்கமும் தொண்டாகவே இருக்க
                     வேண்டும். இப்படியொரு வாய்ப்பு ஒரு மாணவனுக்குக்
                      கிடைத்தால் அதனை அரிய வாய்ப்பாகவும் கருதவேண்டும்..  


ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
                 
                       Teach him always to him to sublime faith himself and faith in mankind.
                       Teach his never put a price tag on his heart and soul

தன்மீது தன்னம்பிக்கையும் இந்த மனிதகுலத்தின் மீது மாறாத அன்பு செலுத்துபவனாகவும் தன்னுடைய இதயம் மற்றும் ஆன்மாவின் மேல்
விலைப்பட்டியல் ஒட்டாத கல்வியையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் என வேண்டுகிறார்.

                    இந்துஸ்தானத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்ட ஔரங்கசீப்  தனக்குப் பள்ளிப்பருவத்தில் ஆசிரியராக இருந்த முல்லா சாகேப் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

                             மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத் தத்துவங்களை
                              நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனத்தை நிதானத்தில்
                             வைக்கப் பயன்படும். அரிய தத்துவங்களைப் போதித்திருந்தால்
                             ஒருவேளை அதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டு செல்வத்தில்
                             திளைத்துக்கிடந்தாலும சரி.. துரதிர்ஷ்டத்தில் தாக்கப்பட்டு
                             தோல்வியைத் தழுவினாலும் சரி இரண்டுக்கும் மயங்காத
                             மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள்
                             போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன?
                             எப்படி இந்த பூமி இயங்குகிறது என்பதையெல்லாம் உணர்ந்து
                             கொள்ள எனக்கு இந்தக் கல்வியைப் போதித்திருந்தால்
                              உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டனவாக இருந்திருப்பேன்
என்று எழுதுகிறான்.

                              எனவே ஆசிரியரின் நேர்மை. ஒழுக்கம். தரம் . தன்மை. திறமை இவற்றைப் பொறுத்தே மாணவர் சமுதாயமும் உருவாகிறது. எனவே எப்படியாயினும் இனிமேலாவது ஆசிரியர் தெரிவில் முழுக்க முழுக்கத் தகுதி திறமையை மட்டும் கொண்டவர்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் எதிர்காலச் சமுதாயம் பண்படும் தரமான மாணவர்களும் உருவாவார்கள். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் எவ்வித ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் முழுக்க கல்வித்தகுதியையும் அதற்கான திறனையும் கொண்டவர்களை மட்டுமே தெரிவு செய்தால் மிகுந்த நலமுடைய சமுதாயம் உருவாகும்.

                               இப்படியில்லாத சூழமைவில் நல்லாசிரியர்கள் இப்படித்தான் வன்முறைக்குப் பலியாகிப்போவார்கள். மாணவர்களும் நொடியில் ஏற்படும் மனச் சலனத்தில் ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து சிதைந்துபோவார்கள். கல்வி. மருத்துவம் இரணடும் உயிர்காப்பவை. இவற்றில் எவ்வித எதிரான நடவடிக்கைகளுக்கும் இடம் தந்துவிடக்கூடாது. அப்படி கடுகளவு  ஓட்டை விழுந்தாலும் அது பெரிய பிளவாகி எல்லாவற்றையும் விழுங்கிவிடும்.

                          கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின் பிரிவால வாடும் அந்த பெண் குழந்தைக்கும் மனதால் அஞ்சலியும் ஆறுதலையும் வாரி வழங்குவோம்.

                               ஒரு ஆசிரியனாக மனம் கசிகிறேன் அடக்கமுடியாமல்.
                                               



Sunday, September 1, 2013

கதம்பக்கூடை

கதம்பக்கூடை....



                           வணக்கம்.

                           சில மனவோட்டங்களின் பகிர்வாக இப்பதிவு.

                         

         
                              சில தினங்களுக்கு முன்பு தினமணியில் தமிழக முதல்வர் அவர்கள் விலங்குகளுக்கென குறிப்பாக யானைகளுக்கென அவை ஊருக்குள் வந்து மக்களுக்கு இன்னல் விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக அவற்றுக்கென நீர்நிலை வசதி.. அதற்கென ஆழ்குழர்ய் கிணறுகள்.. நீர்தேக்கத் தொட்டிகள்.. விலங்குகளுக்குப் பிடித்தமான பயிர் விளைவித்தல் இவற்றுக்கென சில கோடி ரூபாய்களை ஒதுக்கியிருந்தார்கள். மேலும் விலங்குகளின் பசி தாகத்தை நீர் தாகத்தைத் தணிப்பதற்கும் காடுகள் தீப்பற்றிக்கொண்டால் அணைப்பதற்கும் என பல்வகை முனைப்புக்களில் அத்திட்டம் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.

                           முழுமையாகப் படித்தவுடன் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வனவிலங்குகளைப் பராமரிக்கும் எண்ணமுடனான இத்திட்டம் உண்மையில் வெகுவான பாராட்டிற்குரியது. ஒரு கவிஞர் வேடிக்கையாகக் கவிதை ஒன்று எழுதியிருந்தார் யானைகளா வீட்டிற்குள் வருகின்றன நாமல்லவா அவற்றின் வீடுகளில் வசிக்கிறோம் என்று. உண்மைதான் காடுகளின் எல்லைகளைக் குறுக்குவதால்தான் அவைகள் நம்மைநோக்கி வருகின்றன. எனவே இத்திட்டம் தொடர்ந்து செயல்படின் வனவிலங்குகளைப் பராமரிக்கும் பரிவு கொண்ட அருமையான திட்டமாக அமையும். தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


மறுபடியும் ஒரு பெண்  (புகைப்பட நிருபர். மும்பை) மீதான பாலியல் பலாத்காரம் மனதை வேதனைப்படுத்துகிறது. வழக்கம்போலவே கைதும்  விசாரணையும் எனத் தொடர்கிறது. இதுபோன்ற நிலைப்பாடுகளில் கடுமையான தண்டனைகளோடு இவற்றை ஒருபோதும் மனமெண்ணாத வகையில் மாறுபட்ட சிந்தனைகளுடன்கூடிய கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இதற்கான மூலக்காரணிகளை சமுகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் இருந்து அறிந்து அகற்றுதல் வேண்டும். அது முளையிலேயே கிள்ளியெறிவதாகும்.

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

குழந்தைகள் என்றாலே மனம் பதறுகிறது. சிரியாவில் ரசாயன குண்டு வீச்சிற்கு வாயில் நுரைதள்ளி சாலையில் கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் நெஞ்சையறுக்கின்றன. இது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்பதுதான் உண்மை. நியாயத்திற்கு சரியான மருந்திடவேண்டும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஐ.நா.வின் சார்பில் மதிப்பிற்குரிய நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருப்பது பொறுப்பான ஒன்றாகும். இதற்கு இலங்கையின் பொறுப்பான பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர் நான் வேண்டுமானால் அவரைத் திருமணம் செய்துகொண்டு இலங்கையை சுற்றிக்காண்பிக்கிறேன் என்று கூறியிருப்பது குறித்து திருமிகு வைகோ கண்டனம் தெரிவித்திருப்பது அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். பொறுப்பான பதவியிலிருக்கும் அமைச்சர் ஒருவரின் இத்தகைய பேச்சு எப்படி பண்பாடாகும்?  கவலைக்குரியதாக இருக்கிறது இதுபோன்ற நிகழ்வுகள்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


எனக்கு  வலைப்பக்கம் உருவாக்க உதவி செய்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழத்துறையில் பணியாற்றும் திருமதி கல்பனா சேக்கிழார் அவர்கள். அவர்களுக்குத்  தற்போது சிறந்த இளம் தமிழறிஞருக்கான செம்மொழி விருது கிடைத்துள்ளது. அவருக்கான பாராட்டை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அவருடைய வலைப்பக்க முகவரி sekalpana.blogspot.com

இதே விருதை பெற்றிருப்பவர்கள்

  எனது அன்பிற்குரிய நண்பர்கள்  நாமக்கல் அரசு கலைக்கல்லுர்ரியில் பணிபுரியும் பேராசிரியர் முனைவர் இரா.சந்திரசேகர் அவர்கள்.

         சேலம் ஆத்துர்ர் கலைக்கல்லுர்ரியில் பணிபுரியும் நண்பர்
பேராசிரியர் முனைவர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்.

             இவர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.



/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

     

     இந்திய ரூபாயின் மதிப்பு மதிப்புக் குறைந்துகொண்டேபோகிறது.
இது எங்கே போய் முடியும்? என்று தெரியவில்லை. நாம் பல்வேறு நிலைப்பாடுகளில் மதிப்புக்களை இழந்துகொண்டுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////                
                         

Friday, August 16, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்..... சிவஒளி...


 அன்புள்ள

                  ஹ ர ணி வணக்கமுடன்.

                  திருவாரூரிலிருந்து சிவஒளி எனும் ஆன்மீக இதழ் வெளிவருகிறது. அதில் என் நுர்லுக்கு வந்துள்ள விமர்சனம்.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      உலகில் நல்லவை. அல்லவை எனப்படுவது வாழ்க்கை என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இந்த இரண்டனுள் ஒன்றில்லாவிட்டால் அர்த்தம் நீர்த்துப்போகும். இதைத்தான் ஹரணியின் நத்தையோட்டுத் தண்ணீர் நம் மீது தெளிக்கிற தீர்த்தவாரியாகும்.

           அவரது எண்ணங்கள் பதினான்கு சிறு தலைப்புக்களில் பெரும் புவனங்களாக உருக்கொள்கிறபோது ஒன்றே பலவனவாக இருக்கிறது. தெய்வத்திற்குப் பெயர்களும் குணங்களும் உருவங்களும் கிடையாது. காரணம் எல்லா குணங்களும் பெயர்களும் அதனுடையதாகவே மிளிர்கிறது. இதுபோலவே ஹரணியின் நத்தையோட்டுத் தண்ணீரில் வ(ர்)சிக்கும் ஒவ்வொருவரின் எண்ணற்ற கனமான சிந்தனைக் கப்பல்களும் சிரமமின்றி எளிதாகப் போக்குவரத்து நடத்துகின்றன.

              ஆம் அவரது முதல் அத்தியாயமான வாசித்தல்....சுவாசித்தல்
              அறிவு நோக்கில் வாசிப்பு முக்கியமானது
              ஆய்வு நோக்கில் அதைவிடக் கூர்மையானது
              அறிவு நிலையில் உரிய வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வாசிப்பு
              உதவுகிறது
என்றும்

         பிறிதோரிடத்தில் வாசிப்பு பிள்ளைகளைப் பண்படுத்துகிறது. தவறான வழியைத் தேர்ந்து எடுப்பதைத் தவிர்க்கிறது சக நேயத்தைத் தக்க வைக்கிறது. உறவுகளை நேசிக்கக் கற்றுத் தருகிறது. உயர் பண்புகளைப் பெற்றெடுக்கக் கூடவே நிற்கிறது. பிறருக்கு உதவும் மனோபாவத்தைக் கற்றுத் தருகிறது. எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை நோக்கி வழிகாட்டுகிறது. நம்பிக்கையோடு எதனையும் எதிர்கொள்ளும் திறனைப் பெருக்குகிறது. என்றும் சொல்லி இன்றைய சமூகத்தின் பிறழ்வான இருத்தலியல் சூழலில் இந்த தேசத்தின் எதிர்காலத் தலைமுறை தடம்பிறழாத வாழ்க்கைக்கு வாசிப்பு எத்தனை அவசியம் என்று இதமாக இந்த நுர்லில் எடுத்துக் காட்டுகிறார்.

         அடுத்து மூன்றாவது அத்தியாயமான மடலேறுதல் இப்படிப் பேசுகிறது. எல்லாம் கைப்பேசி மயம் . காலன் கைக்குள் சிக்கிய உயிர்போல கைப்பேசிக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த வாழ்வையும் கைப்பேசிக்குள் புதைத்துக்கொண்டிருக்கிறோம். கைப்பேசி காலன்தான். செல்லரிக்கும் வாழ்க்கை என்றும் அதே அத்தியாயத்தின் பிறிதோரிடத்தில் கடிதம் வாழ்வின் பேறாக நின்றது. வேராகக் கண் பிடித்தது. குடும்ப அமைப்பைச் சார்ந்தது. குலப்பெருமையைப் பறைசாற்றியது. தவறுகளைத் திருத்திக்கொள்ள. ஒழுக்கமாகப் பண்புகளைப் போற்றிட. அன்பு காட்ட.. உறவுகளைக் கட்டிக்காக்க செய்த தவறுக்குப் பிராயசித்தம் தேட பரிகாரம் செய்துகொள்ள இப்படி எல்லாவற்றையும் சுமைதாங்கியில் இறக்கி வைப்பதுபோல கடிதத்தில் இறக்கிவைத்தார்கள்.

            கடிதம் வல்லமை பெற்ற கடவுள் போல. வரம் கொடுக்கும் சாமி போல. எல்லாமும் கொடுத்தது, எல்லா குறைபாடுகளையும் போக்கியது. தனிமையில் அது உற்ற தோழமையாய் கவலையுண்ட மனதிற்கு மாமருந்தாய்  கடிதம் தன்னைப் பங்கிட்டுக்கொண்டது. கடிதம் எழுதுங்கள். அது நம்மைப் பண்படுத்தும். வாழ்க்கையை வாழச் சொல்லும் சுகமாய் அனுபவிக்க வைக்கும். கடிதம் ஒரு வரலாற்றுப் பதிவு.

          செல்லால் செல்லரித்துப் பழுப்பேறும் வாழ்வில் எழுத்துக்களால் பசுமையைப் பயிரிடத் துர்ண்டுகிறார் ஹரணி. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு தஞ்சையில் நிகழ்ந்தபோது நானும் தஞ்சை ப்ரகாஷ்ம் சேர்ந்து தமிழில் முதன் முதலாகச் சாளரம் என்கிற கடித இலக்கியத் திங்களிதழை முழுக்க முழுக்க கடிதங்களாலேயே நடத்தினோம். தமிழகம் முழுக்க அலைந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை சேகரித்தோம். தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மடலில் கடிதங்களாலேயே முழுக்க முழுக்க வெளியாகும் இதழ் இதுவாகத்தான் இருக்கும் என்று முன்மொழிந்தார்கள். அப்போது கி.ராஜநாராயணன் எழுத்தாளர்கள் சிலரோடு தாமும் இணைந்து ஊஞ்சல் என்ற பெயரில் கடிதங்களில் எண்ணங்களை பங்கிட்டோம். ஆனால் அச்சில் அது வரவில்லை. நாங்கள் வெளிக்கொணர்ந்த சாளரம் என்ற தமிழின் முதல் கடித இலக்கிய இதழில் க.நா.சுப்ரமணியம். தொ.மு.சி.ரகுநாதன். புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலரது கடிதங்களைப் பதிவுசெய்தோம். இதை ஏன் நான் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் கலக்கவேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஹரணியின் மனத்தில் இன்றைக்கு வெடித்துக் கிளர்ந்தெழுந்திருக்கிற ஏக்கம். ஆதங்கள்ம அப்போதே எங்களை ஆட்டிப் படைத்தது என்பதைக் குறிக்கவே.

          ஈரேழு பதினான்கு புவனங்களும் படைப்புக்களும் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மிதக்கின்றன. அவரவர் கையளவு அள்ளி அருந்தலாம். என்ன நீங்கள் தயாரா?

            தஞ்சைப் ப்ரகாஷ் சொல்லுவார் இலக்கியம் பலி கேட்கிறது. அதன் பசி தீர நாம் பலியாக வேண்டுமென்று. ஹரணியின் எழுத்துக்களும் இந்த வரிசையில் சேருகிறது.

                                   (நன்றி ......சிவஒளி.....கா. விஜயராகவன்...ஆகஸ்ட் 2013)

Thursday, August 15, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்.....விமர்சனம்




           நத்தையோட்டுத் தண்ணீர்..... குமுதம் விமர்சனம்..



              தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும்
நமக்குள்ளேயே நடந்தேறிவிடுவதை நாகரிகமான முறையில்
நம்முன் எடுத்து வைக்கிறார் ஹ ரணி. வாசிப்பு அனுபவம் நம்மை
அடையாளப்படுத்தும் என்கிறார்.

            சுட்டிக் காட்டுவது நட்பு. சுடப்படுவது நட்பல்ல என்கிறார்.
காற்று நுழைய முடியாத இடத்தில்கூட கடித உணர்வுகளை
நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க
உதவுகிறார்.

            வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்களையும்
இனம் காண வைக்கிறார்.

                மொத்தத்தில் ஹ ரணி தம் மனவோட்டத்தை நத்தையோட்டுத்
தண்ணீரில் வானம் பார்ப்பதுபோல் பகிர்ந்துகொள்கிறார்.


                                                                             - இரா. மணிகண்டன்


(நன்றி.. குமுதம் (21.8.2013)  நன்றி இரா. மணிகண்டன்)

Saturday, August 10, 2013

கொஞ்சம் கவிதைகள்......




                     அகன்ற தெருக்கள்
                     அடர்ந்த மரங்களின் நிழல்கள்
                     அகன்ற உயர்ந்த
                     பாதுகாப்புச் சுவர்கள்
                     பெரிய பெரிய பங்களாக்கள்
                     எப்போதும்
                     கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
                     குரைப்புகள்
                     கடக்கும்போதெல்லாம் அவற்றை...
                     விரட்டலுக்காக? விடுதலைக்கா?

                     0000


                     நிறைய மழை
                     நிறைய சோர்வு
                     நிறைய இருட்டு
                     நிறைய பேச்சுக்கள்
                     நிறைய சப்தம்
                     கண் செருகுகையில்
                     இறங்கவேண்டிய சந்திப்பிற்குள்
                     நுழைகிறது  ரயில்
                     இதையாவது எழுது என்று
                     கத்திவிட்டோய்கிறது
                     காலடியில் சிறுநதியான மழை
                   

                     00000


                     அவனுக்கு
                     எதுவும் தெரியாதென்பதை
                     உரத்துச் சொல்லிக்
                     கெர்ண்டிருக்கிறான்
                     எதுவாயினும் தெரியுமெனக்கு
                     என்பதை மௌனமாக
                     சொல்லிக்கொண்டிருக்கிறேன்
                     நான்.
                     அவனுக்கான காதுகள்
                     நீண்டுகொண்டேயிருக்கின்றன
                     எனக்கான காதுகளையும்
                     அறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


                      0000



                      நம்பிக்கையை
                      ஊசியைப்  போலவும்
                      உழைப்பை
                      நெருப்பைப் போலவும்
                      பயன்படுத்துங்கள்
                      எப்போதும் ஆபத்தில்லை
                      எப்போதும்...

                     000000000
     

                  

Saturday, July 27, 2013

புதிய தரிசனம்.....வலைக்காடு



       புதிய தரிசனம் என்ற இதழில் வலைக்காடு எனும் பகுதியில் எனது வலைப்பக்கம் பற்றி  திருமிகு இரா.எட்வின் அவர்கள் எழுதியிருப்பது.

5. ஹரணி பக்கங்கள்…


ஹரணியின் வலை இது.மக்களுக்கான எழுத்தாளாளரான இவரிடமிருந்து ஒரு   டஜன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன.மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்த   வலையின் நெடுகிலும் நம்மால் பார்க்க இயலும்.

“ கை அளவு கற்க ஆசைகடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.”   என்பதாகப் பிரகடனப்படுத்துகிறது இவரது வலைஆனால் இது கடலுக்காக     வீசப்பட்டவலைகடல் எதுவும் இந்த வலையில் இதுவரை அகப்படவில்லை   எனினும் நிறைய நதிகள் சிக்கியிருக்கின்றன இவரது வலையில்

எல்லாம் இருக்கிறது இந்த வலையில்அன்புகாதல்காமம்கருணைதாய்மைமொழி குறித்த அக்கறை,தொன்மம் பற்றிய புரிதல்கோவம்ஆதங்கம்இலக்கியம்,   என்று எல்லாம் கிடைக்கிறது.

யாருடைய ஆத்திச்சூடியோடும் இந்த வலையில் இருக்கக்கூடிய ஹரணியின்   ஆத்திச் சூடிகளை நாம் ஒப்பிட்டுப்பேச முடியும்.  சமூக அக்கறையோடு கூடிய ஆத்திச்சூடிகள்அவற்றில் மூன்றைச் சொல்ல   வேண்டும்.

1 . அன்புசால் உலகு செய்
2 . ஓடி ஓடி உறவுகொள் வளர்.
3 . ஊரின் நியாயம் கேள்.

இந்த மூன்றிற்காக மட்டுமே இவரது வலையைக் கொண்டாடலாம்.

“ நான் பார்த்து
  வளர்ந்தவன் இப்போது
  நகராட்சி கவுன்சிலர்
  இவர் பிறந்தது தெரியுமென்று
  சான்று தருகிறான் எனக்கு ” என்பது மாதிரி நறுக்குக் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன இவரது வலையில்.

விரலிடுக்கில் கசியும் நீரைப்போல ஏராளமான நல்லதுகளை நாம் கசியவிட்டிருக்கிறோம். மரப்பாச்சி பொம்மைகளும் அவற்றில் ஒன்று. மரப்பாச்சி என்ற சொல்லைக் கேள்விப் படும் பொழுதெல்லாம் லபக்கென்று நமது மனது ஜெயகாந்தன் எழுதிய ஒரு கதைக்கு ஓடிவிடும். “ மரப்பாச்சியா” அல்லது “ மரப்பாச்சி பொம்மையா ” என்று சரியாய் நினைவில்லை.

பக்கத்து பணக்கார வீட்டுக் குழந்தை ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடும். அதைப் பார்த்த பக்கத்துக வீட்டுக் குழந்தை தனக்கும் விளையாட அதுபோல ஒரு மரப்பாச்சி பொம்மை வேண்டுமென்று அடம்பிடிக்கும். அவர்கள் வீட்டில் பாப்பாக் குழந்தை இல்லாததால்தான் அவளுக்கு விளையாட மரப்பாச்சி தேவைப் பட்டதென்றும் இவளுக்கு விளையாட தம்பிப் பாப்பாவே இருப்பதால் மரப்பாச்சி தேவை இல்லை என்றும் ஒரு வழியாக சமாதானப் படுத்துவார்கள்.

ஒரு வழியாக சமாதானமடைவாள் குழந்தை. பணக்காரக் குழந்தை பரப்பாச்சிக்கு சோப்பு போட்டு அதை தண்ணீர்த் தொட்டியில் முக்கி குளிப்பாட்டுவாள். இதைப் பார்த்த இந்தக் குழந்தையும் பாப்பாவிற்கும் சோப்பு போட்டு தண்னீர்த் தொட்டியில் முக்குவள். குழந்தை செத்துப் போகும். அய்யோ அப்படி ஒரு வலி இருக்கும்.

ஏழ்மையை சொல்ல ஜெயகாந்தனுக்கு கருவியாக வாய்த்த, தொன்மச் சிறப்புமிக்க தமிழ்க் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான மரப்பாச்சியை இந்தத் தலைமுறை முற்றாய் இழந்திருக்கிறது. இதைப் பற்றி அக்கறையோடு ஹரணி சொல்கிறபோது இன்னும் என்னத்தையெல்லாம் இழக்கப் போகிறோம் என்று தோன்றுகிறது.

“ காந்தியும் குமரேசனும் ” என்றொரு குழந்தைகளுக்கான சிறு கதை இருக்கிறது. இதே தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பிலும் இது இருக்கிறது. பொதுவாகவே குழந்தைகளைப் பற்றி இலக்கியங்கள் வருமளவிற்கு குழந்தைகளுக்கான இலக்கியங்கள் வருவதில்லை என்றொரு குறை இருக்கிறது. அந்தக் குறையையும் போக்குகிற முயற்சி இந்த வலையில் இருக்கிறது. குழந்தைகள் வாசிப்பதற்கான நிறையப் படைப்புகளை இவர் தர வேண்டும் என்று கேட்கிறோம். குறைந்த பட்சம் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தையுமேனும் இவர் வலையில் வைப்பது அவசியம்.

முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி குறித்து இப்போது பரவலாக வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளும் ஹரணி நல்லவைகளும் இருக்கவே செய்கின்றன என்பதை ஆதாரத்தோடு சொல்கிறார். சரவணன் என்ற பார்வையற்ற இளைஞன் உழைத்து, அடுத்தவர்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு குறிப்புகள் தயாரித்து செறிவான ஆய்வினைத் தந்துள்ளதை பெருமிதத்தோடு பதிகிறார்.

இதை இன்றைய ஆய்வாளர்கள் வாசித்தால் நல்ல செறிவான ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும்.

அவரது தந்தை எழுதிய கவிதை ஒன்றினைப் பரணில் கண்டெடுத்தவர் அதை நமக்கு பந்தி வைத்திருக்கிறார். மிகுந்த எள்ளலோடு இருக்கிறது. ஹரணி குறைந்த பட்சம் இரண்டாவது தலைமுறை என்பது புரிகிறது.

சிறுமை கண்டு சீறுதல் தமிழின் ஆகப் பெரிய மேன்மை என்பதை இவர் பாரதி கொண்டு நிறுவ முயன்றிருப்பது அழகானது.

சகுணியின் வலையில் முற்றாய் விழுந்த தருமன் திரௌபதையை சூதில் வைத்து தோற்கிறான். இது பாரதியை பேரதிகமாய் கோவப் படுத்துகிறது.

எல்லா தருமங்களையும் கற்றுணர்ந்த தருமன் இந்தக் கேவலத்தை செய்திருப்பது கண்டு கொதிநிலைக்குப் போன பாரதி பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறான்,

” ஆயிரங்களான நீதி
  அவை உணர்ந்த தருமன்
  தேயம் வைத்திழந்தான்
  சீச்சி சிறியர் செய்கை செய்தான் ”

தருமனிடமிருந்து அறத்தை எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்க தமிழோ அவனது அறத்தைக் கேள்வி கேட்டது.

“ உன் தத்துவம் தவறென்று தரணிக்கு சொல்லவும்
  தமிழுக்கு உரிமை உண்டு “

என்று சொல்வதற்கு அவ்வைக்கு தைரியத்தைக் கொடுத்ததும் தமிழ்தான்.

ஆக, சிறுமை கண்டு சீறுதல், இறைவனே அறம் பிறழ்ந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுதல் போன்ற குணங்கள் தமிழுக்கு இருப்பதை அழகியலோடு சொல்கிறது இந்த வலை.

நதிகள் விளையாடும் வலை இது. பாருங்கள்,


நன்றி: புதிய தரிசனம்

கணையாழி கவிதை



     அனபுள்ள சகோதரி கீதமஞ்சரி அவர்கள்

                        என்னுடைய விருதுபெற்ற கவிதையைக் கேட்டிருந்தார்கள்.
அதனை முன்பே செய்திருக்கவேண்டும். தற்போது எல்லோரின் பார்வைக்கும் அந்த விருது பெற்ற கவிதையைப் பதிவிட்டிருக்கிறேன். நன்றிகள்.


ஆறுதல்....


                       அது எனக்கான அறையாக இருந்தது
                       என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை
                       என்றைக்கும் நிறைவேறாத கனவுகளை
                       யாருமறியாமல் கொட்டித் தீர்த்த துயரங்களை
                       எப்படி சுருண்டாலும் ஏற்றுக்கொண்ட
                       மாண்பை

                       கொட்டிக்கவிழ்த்த சொற்களை ஏந்திக்
                       கொண்ட பழுப்பேறிய தாள்கள்
                       முன்பு எழுதப்பட்ட முனை மழுங்கிப்போன
                        புழுக்கைப் பென்சில்களை

                        என்றைக்கும் யாருடனும பகிர்ந்துகொள்ள
                       முடியாத வாழ்வின் ரகசியங்களைப்
                        பேணிக் காத்த எல்லாவற்றையும் வாரிக்
                        கொட்டுகிறார்கள் குப்பையோடு குப்பையாய்..

                       ஓடிவந்து முகரும் நாய்களைப்போல
                       மனமோடிக் கலைக்கிறது குப்பைகளில்
                       உனக்கு வேறு இடம் இருக்கிறதென்று
                      ஆறுதல் பேசும் அம்மா வறுமையை
                       மறைக்கிறாள் பெற்ற முன்பணத்தில்...
                       ஒரு கவிதையாய் எழுதிவைக்கிறவை

                       என்றைக்கும் உயிலாக
                       மாறுகிற சாத்தியமில்லையென்றாலும்
                       மனமறியும் ஒரு வாசிப்பாலும்
                       வலியாலும்
                       வாழ்ந்த வாழ்க்கை
                       பேசப்படலாம்  என்பதாகவே
                       இன்றைக்கான ஆறுதல்...


                            (நன்றி. கணையாழி மே 2013   நன்றி வளரி )
                     

Thursday, July 25, 2013

மூன்று செய்திகள்.....



அன்புள்ள...


                     ஹ ர ணி வணக்கமுடன்.

                     மூன்று செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மகிழ்கிறேன்.


                    ஒன்று


                                புதிய தரிசனம் என்று ஒரு இலக்கிய மாதமிருமுறை இதழ்
வெளிவருகிறது. இதில சிறந்த வலைப்பக்கங்கள் பற்றி மதிப்பிற்குரிய திரு எட்வின்(நோக்குமிடமெல்லாம நாமன்றி வேறில்லை வலைப்பக்கம்) அவர்கள் எழுதப் பத்திரிக்கை கேட்டுள்ளது. அதன்படி இந்த மாதம்
இரண்டாம் இதழில் என்னுடைய வலைப்பக்கம் பற்றி எழுதியுள்ளார்.

                  இரண்டு

                                 மானா மதுரையிலிருந்து  வளரி எனும் இலக்கிய இதழ் வருகிறது. இதன் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன். ஒருநாள் இரவில் என்னுடன் கைப்பேசியில் தன்னை அறிமுகம் செய்துகொண்டு நாங்கள் மாதா மாதம் இலக்கிய இதழ்களில் வரும் சிறந்த கவிதைகளைத் தெரிவு செய்து அதற்கு கவிப்பேராசான் மீரா விருது அளிக்கிறோம். அந்தவகையில் சென்ற மே மாதம் கணையாழியில் வந்த எனது கவிதை ஆறுதல் என்னும் தலைப்பிலானது தெரிவுசெய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்து வாழத்துத் தெரிவித்தார். உங்களின் முன்னதாக அவருக்கு மீண்டும் எனது நன்றிகளைத்
தெரிவித்துக்கெர்ள்கிறேன்.

                  மூன்று

                  மொரீஷியசில் மகாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஒன்று உள்ளது. இது அரசு கல்வி நிறுவனமாகும்.  இதில் என்னுடைய நண்பர் பேரா. கேசவன் சொர்ணம் தமிழ்த்துறையின் தலைவராக உள்ளார். அவருக்கு என் சில புத்தகங்களை அனுப்பிவைத்தேன். அதில் ஒரு புத்தகம் பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா  என்பதாகும். இது அவர்கள் கல்வி நிறுவனத்தில் பார்வை நுர்லாக வைக்கப்பட்டுள்ளதையும் பாடத்திற்கு உதவியாக உள்ளதையும் தெரிவித்தார்.

                       இது உங்களின் பகிர்தலுக்கு.

                     
                    0000000000000000


                   அடுத்த குறுந்தொடரின் தலைப்பு ..........

                                              எழுதப்படாத உயில்...





ஜால்ரா... குறுந்தொடர் 8




                         கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

                          எல்லா வேலைகளும் துரிதமாக முடிந்துவிட்டன.

                          வேணுகோபால் சுழன்று சுழன்று முடிநத்வரை வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார். கோயில் காரியம். தன்னுடைய பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தார். அடுத்த கும்பாபிஷேகத்திற்கு தன்னுடைய ஆயுள் இடங்கொடுக்கவேண்டுமே என்ற தீர்மானத்தில் செய்து
கொண்டிருந்தார்.

                           தாமோதரனும் இன்னொருபுறம் எது தேவையோ சொல்கிறார்களோ அதை செய்து கொடுத்தர்ர்.

                           அன்று மாலை குமரேசன் கோயிலுக்கு வந்தான்.

                           சங்கடஹர சதுர்த்தி என்பதால்  கோயிலில் கூட்டம் இருந்தது.

                          வேணுகோபால் யாரு? என்று விசாரித்தான்.

                          நான்தான் என்று முன்னால் வந்தார்.

                          வாங்க கோயில் உள்ள வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
என்றான்.

                          உள்ளே போனார்கள்.

                          சற்றுக் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தார்கள்.

                          விழாக்குழு மட்டும் இருந்தது. தாமோதரனும் இருந்தார். யார் இவன் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

                          குமரேசன் பையிலிருந்து ஒரு சிறிய பையை எடுத்து அதை வேணுகோபால் கையில் கொடுத்தான்.

                              என்ன இது? நீங்க யாரு ? என்றார் வேணுகோபால்.

                           நர்ன் கோயில்ல மேளம் வாசிக்கிறவன். தனத்து அக்காவுக்கு தெரிஞ்சவன். ரொம்ப உறவுமுறையும் கூட. உங்ககிட்டே அக்கா இதைக்
கொடுத்திடச் சொன்னாங்க..இதை கோயில்ல விநாயகருக்கு முன்னால வச்சிப் பிரிக்கச் சொன்னாங்க.. என்றர்ன்.

                              ஆச்சர்யமுடன் வேணுகோபால் அந்தப் பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்தார்.

                               அதனுள் பளபளவென்றிருந்த ஒரு ஜால்ரா.

                              ஐம்பொன்னால் செய்யப்பட்டிருந்தது.

                              அக்கா இதை என்கிட்டதான் செய்யச்சொன்னாங்க,, செய்து கோயில்ல கொடுக்கச் சொன்னாங்க,, இந்தக் கடிதத்தையும் கொடுக்கச்
சொன்னாங்க,,

                                 கடிதத்தைப் பிரித்து உரக்கவே படித்தார்,

                               அன்புள்ள ஐயாவுக்கு...

                                முப்பது வருஷமா கோயில் வாசல்ல குடித்தனம் இருந்தேன்.
கூட்டுறதும் பெருக்கறதும் நமக்கு கிடைச்ச வரம்னு செஞ்சுக்கிட்டிருந்தேன்,
என் புருஷன் செத்துப்போன பிற்பாடு எனக்கும் என் மவளுக்கும் எல்லாமும் அந்த விநாயகருதான்,, அப்படித்தான் நெனச்சிக்கிட்டேன்.. செஞ்சதெல்லாம் போதும்னு அங்கருந்து கௌப்பிட்டாரு.. சும்மாவா கௌப்பினாரு.. ஜால்ரா திருடுன பாதகின்னு ஒரு பட்டப்பெயரோட,, எத்தனை நாள் அழுது துடிச்சிருப்பேன்.. ஏன் இப்படி பண்ணே விநாயகரேன்னு.. யோசிச்சுப் பார்த்தேன்.. கோயில் கும்பாபிஷேகம் வருது.. எல்லாரும் என்னென்னமோ
கோயிலுக்கு செய்யறாங்க.. நம்மால முடியலியேன்னு விசனப்பட்டுக் கிடந்தேன். அப்பத்தான் திருட்டுப் பட்டம் கட்டுனாரு விநாயகரு... யோசிச்சு பார்த்தேன். என்புருஷன் போனபொறவு எனக்கிருந்தது ஒரு வீடும் அறுத்துப் போட்ட தாலிப்பவுனும்தான்,, வீடு போயிடிச்சி..மிச்சம் தாலிதான்,, ஆளுக்காள் செய்யும்போது நீயும் செய்யலேன்னு கவலைப்படாத தாலிய வித்து செய்யுன்னுதான் இந்த திருட்டு நாடகத்தை ஆடினாருன்னு நினைச்சிக்கிட்டேன். அப்படி சமாதானபப்டுத்திக்கிட்டேன். தாலிய வித்து இந்த ஜால்ராவ செஞ்சுட்டேன்.. அவர் வேண்டியத கேட்டு வாங்கிட்டாரு.. ஆனாலும் மனசு ஆறலே....திருட்டுப் பட்டம் வாங்கிட்டோம்னு.. என்னால முடிஞ்ச பரிகாரம். என் மேல விழுந்த பழிய துடைச்சிட்டேன்.. எல்லாரும் மனசுவந்து ஏத்துக்கணும்...

                                எல்லோரும் ஒருநிமிடம் கண்கலங்கினார்கள் தனத்திற்காக.
வலம்புரி விநாயகரைப் பார்த்தார்கள். அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.
தங்கள் கைப்படவே அதை திருஞானச்சம்பந்தரின் திருக்கரங்களில் வைததார்கள். அளந்து பார்த்து செய்ததுபோல் அது அவரின் பொற்கரங்களில் பொருந்தி நின்றது.

                               தாமோதரன் மனமெங்கும் உறுத்தல் தேள்கள் ஊர்ந்து
கிடந்தன.

                               ஒவ்வொன்றும் கொட்ட ஆரம்பித்தது.

                              உடலெங்கும் மனமெங்கும் வலி ஊடுருவியது.

                              கூட்டத்திலிருந்து எழுந்தார். விநாயகரை மனசார
வணங்கினார். பின் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்..

                             எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய வேண்டுகோளைக்
கேளுங்கள். என் விருப்பத்திற்கு உங்க எல்லாருடைய அனுமதியும் வேண்டும்னு பணிவோடு கேட்டுக்கறேன். நான் சிறுபிள்ளைத் தனமாக எது பேசியிருந்தாலும் என்னையும் என் குடும்பத்தாரையும் மன்னிச்சிடுங்க.. இந்தக் கோயில்ல விவரம் தெரிஞ்சு என்னென்ன பொருள்கள் இருநது இப்ப
காணாமப் போயிடிச்சோ அத்தனைனையும் ஒண்ணுவிடாம நான் வாங்கி வச்சிடுறேன், இது சத்தியம். எல்லாரும் ஏத்துக்கணும். இந்த சன்னதியில் தனலெட்சுமிமேல அந்தத் திருட்டுப்பழியைக் கட்டிப் பேசினது நான்தான்.
விநாயகர் முன்னால தனத்துக்கிட்டே மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன்.
அவ முன்னாடி நான் ரொம்ப பாவியாயிட்டேன்... தனம் என்னை மன்னிச்சிடு.. என்று கண்கலங்கினார்.

                           எல்லோருமே விநாயகரை வணங்கினார்கள்.

                            குமரேசன் ஐயா.. நான் கிளம்பறேன் என்றான்.

                            வேணுகோபால் சொன்னார்..  தம்பி.. அடுத்தவாரம் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் .. அவசியம் தனத்தை வரச்சொல்லுங்க...

                             அவங்க வரமாட்டாங்கய்யா என்றான்.

                             ஏம்பா?

                            அவங்க உடம்பு முடியாம இருந்து போனவாரம் செத்துப்
போயிட்டாங்கய்யா,,

                                                        (ஜர்ல்ரா ஓய்ந்தது)


                              

Monday, July 22, 2013

ஏழைதாசன் இதழ்......என்னைப் பற்றி,,,,


            அன்புள்ள

                             வணக்கம். ஏழைதாசன் என்றொரு இலககிய 25 ஆண்டுகளுக்கு மேலாகப் புதுக்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. இவ்விதழ் அயல நாடுகளிலும் தன்னுடைய கால் பதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                             இவ்விதழில் என்னைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரை
வந்துள்ளது  இந்த வலைப்பதிவு வழியாக ஏழைதாசன் இதழின் ஆசிரியர் திருமிகு விஜயகுமார் அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                             இந்த இதழின் முகப்பையும் அட்டைப்படக் கட்டுரை செய்திகளையும் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க ஸ்கேன் செய்து உதவிய கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

                               இனி உங்களின் பார்வைக்கு.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////





















/

Lyricist Vaali who died at a hospital in Chennai on Thursday was cremated on Friday. File photo





   வாலி.....
   ஒரு பாடல் சகாப்தத்தின்                                                                               முடிவு....


   அஞ்சலி...

               
   எத்தனையோ எழுதினாய்
   அத்தனையும் அருவியாய்
   கொட்டினாய்...

  எதையும் எழுதமுடிந்தவன்தான் நீ


                               அதற்காக
                               மரணத்தின் பாடலை உனக்கே
                               எழுதிக்கொண்டாயா?

                               மரண இசைக்குறிப்பிற்கு
                               நீயேவா பாடலாவது?

                               மண்ணுலகையெல்லாம்
                               பாட்டில் வைத்தாய்
                               அதனால் தீர்ந்ததென்று
                               விண்ணுலகம் சென்றாயா
                               சொல் தேடி?

                               உனக்காக அழக்கூட சொல்லில்லை
                               எங்களிடத்தில்
                               எந்தச் சொல்லும் உன் கைப்பட்டதல்லவா
                               என்றே ஒரு சொல்லை உலகுதிர்க்க
                               நின்றவனல்லவா?

                               வாலிக்கு வசப்படாத ஒன்றுண்டா
                               என்றே வசப்பட்ட புகழிற்கு
                               மயங்கி மரணத்தையுமா
                               வசப்படுத்துவாய்?

                               நெருப்பு உன்னுடலில்
                               பல்லவியெடுத்து சரணம்தொடுக்க
                               மௌனச் சொற்களால் நீ எழுதிக்
                               கொண்டிருக்கும்
                               பாடலே எங்களுக்குக் கடைசியாய்
                               கண்ணீரில் சேகரித்துக்கொண்டிருக்கிறோம்..

                                உன் பாணியில்
                                சொல்வதென்றால்

                                வாலியுன் பிரிவு
                                பிரிக்கமுடியாத வலிதான்

                                இசைக்கு இன்பம் எழுதியவன் நீ
                                இசைந்தது மரணத்திற்கு இன்பமானது
                             
                                எங்கள் கண்ணீரின் இசைக்கு
                                உனது மரணத்தைப் பாடலாக்கிய
                                மகத்துவத்தை என்றைக்கும்
                                மறக்காதிருக்க எழுதிப் போனாயோ?

                               0000000000000

                             

                             
                             
                             
                             
                                .

                               

                           

                             









Tuesday, July 16, 2013

ஜால்ரா.....குறுந்தொடர்,,,7




                          வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் தொடங்கியிருந்தன.

                           வெளிச்சுவர் முழுக்க சரி செய்தாகிவிட்டது.

                           வேணுகோபால் தன்னுடைய செலவில் குங்கும வண்ணமும் யானைத் தந்த வண்ணமுமான டைல்ஸ்களை ஒட்டி அழகாக்கியிருந்தார்.
துர்ரத்தில் இருந்து பார்த்தாலும் தெரிந்துவிடும் அது கோயில் என்று.

                             அது சரியான கோயில் வண்ணத்தில் பொருந்தியதில் வேணுகோபாலுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.

                            யாராவது கேட்டால்  எனக்கென்னங்க தெரியும்.. அவருக்குத் தெரிஞ்சிருக்கு.. என்ன் செய்யுடான்னு கேட்டு வாங்கிட்டாரு..என்ன அம்சமா இருக்கு பாருங்க சுவரு... என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அப்படி பேசும்போதெல்லாம் வலம்புரி விநாயகரையும் பார்த்து கும்பிட்டுப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டார்.

                              வீட்டில் தாமோதரன் மனதுக்குள் பல திருட்டுப் பூனைகள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தன.

                               சேச்சே.. அந்த  சாமியார் சிலை அவன் வீட்டுல மாட்டிடிச்சி...
தெரிஞ்சிருந்தா அப்பவே மாத்தியிருக்கலாம்.. இன்னைக்கெல்லாம் லட்சக்கணக்கில போவும்.. என்ன அம்சமா இருக்கு.. அது கையில இருந்த ஜால்ராவே அன்னிக்கு நல்ல விலை ஐம்பொன்னுன்னு அள்ளிட்டுப் போயிட்டான்.. அதுவும் ஞானப்பால் குடிச்ச குழந்தைக்கிட்ட இருந்ததுதுன்னு பெருமையா வரலாறு சொல்லி வாங்கிட்டுப்போயிட்டான்.. இனி ஒண்ணும் பண்ணமுடியாது.. பேசாம வாய விடாம இருந்திருந்தா அவன் வீட்டுலேயே வச்சிருப்பான்.. சமயம் வரும்போது ஆட்டய போட்டிருக்கலாம்.. நம்ப வாயாலே பேசி அவனை கோயில்ல கொண்டு வந்து வக்க வச்சிட்டோம்.. பாப்போம்.. சமயம் கிடச்சா மாத்திடலாம்.. அதுக்குள்ள அதுமாதிரி ஒரு மாதிரி எடுத்து வச்சிடணும்.. கும்பாபிஷேகம் முடியட்டும்..

                              சட்டென்னு சட்டையை மாத்திக்கொண்டு கோயிலுக்கு வந்தார்.

                              ஆட்கள் உள்வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

                              எப்பய்யா முடிப்பீங்க?

                              முடிச்சிடுவோங்க... இன்னும் பின் பிரகாரச் சுவரு மட்டும்தான் பாக்கி..

                               இதையேதான் நாலுநாளா பேசறீங்க?  வாய்தான்.. வேலை ஓடமாட்டேங்குது..

                              இல்லங்கய்யா முடிச்சிடுவோம்..

                              அந்த வேணுகோபால் தானே உங்கள வச்சது.

                              ஆமாங்கய்யா..

                              ஆமா வேலைய இழுத்து செய்யறதுக்கு எவ்வளவு கமிஷ்ன் பேசியிருக்கீங்க அவன்கிட்ட

                               ஐயா.. என்ன இப்படி கோயில்ல தப்பா பேசறீங்க.. அவரு எங்ககிட்ட கோயில்காரியம் கொறச்சு வாங்கிக்கங்கன்னாரு.. நாங்களே ஒருநாள் கூலிய வேண்டாம்னுட்டுத்தான் செய்யறோம்.. கோயில் காரியம்.. எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டும்னு...

                                நல்லா பேசறீங்கய்யா.. சரி.. வேலைய முடியுங்க..

 என்றபடி உள்ளே திருஞானசம்பந்த்ர் சிலையைத் தேடினார்.

                              உள்ளே கருவறைக்குள் போனார். உள்ளே இடது பக்கத்தில் நின்றிருந்தார் ஞானசம்பந்தர்.

                              சட்டென்று தன்பையில் இருந்து கேமிரா செல்போனால் அதைப் படம்பிடித்தார்.. மாதிரி வேண்டுமே..

                              பிடித்துவிட்டு வெளியே வரும்போது வேணுகோபால் நின்றுகொண்டிருந்தார்.

                              என் பையன் அருட்பிரசாத கவரு ஆயிரம் போடணும்னு சொன்னான்.. அதான் விநாயகரைப் படம் பிடிச்சேன்... தானாகப் பேசினார்.

                             நான் எதுவும் கேக்கலியே... எதாச்சும் செய்... என்றார் வேணுகோபாலன்.

                              நமக்கு வாயிலேயே சனி என்று நினைத்துக்கொண்டு தாமோதரன் தனக்குள் பேசியபடி கோயிலை விட்டு வெளியே வந்து வீடு நோக்கிப்போனார்.

                             எதிர்வீட்டில் எப்எம் பாடியது.. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..

                             வலம்புரி விநாயருக்குப் பெரிதாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேணுகோபால் அப்படியே தரையில் உட்கார்ந்துகொண்டார். வெளியிலிருந்து காற்று சிலீரென்று உள்ளேபோய் அவரின் முகத்தில் மோதியபோது உடம்பு மனசு எல்லாம் குளிர்ந்ததுபோலிருந்தது. ஒருமுறை திரும்பி விநாயகரைப் பார்த்துக்கொண்டார்.

                             தனம் மனம் முழுக்க வேதனைப் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன, இத்தனைகாலம் கோயில் வாசலில் கிடந்ததுக்கு இப்படியொரு பழியா?

                             மனம் கொள்ளாமல் தவித்தாள்.

                             துவண்டு துவண்டு படுத்தாள்.

                             என்னம்மா ஆச்சு? என்றாள் மகள்.

                             ஒன்றுமில்லையென்று  சொல்லி சமாளித்தாள்.

                              அன்று மாலை குமரேசன் வீடுதேடிப் போனாள். குமரேசன் தவில் வித்வான். தன்மையானவன்.

                               வாங்க  தன்த்தக்கா என்றான்.

                                நல்லாயிருக்கியா தம்பி..

                                நல்லாயிருக்கேன் அக்கா.. சொல்லுங்க என்ன செய்தி? என்றான்.

                               உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா.
என்றாள்.

                                சொல்லுங்கக்கா.. என்றான்.

                               தன் இடுப்பு சுருக்குப் பையை விடுவித்து அதிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

                                  என்னக்கா இது?

                                  பிரிச்சுப் பாருப்பா... என்றாள்.

                                                                                                          (ஜால்ரா ஒலிக்கும்)