Friday, June 26, 2015




அடுத்தவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தொடங்குகிற 
அந்த தருணத்திலிருந்து நம்முடைய தவறுகளை
 மறைக்கத் தொடங்குகிறோம்.

000


ஆயிரம் அரசியல் இருக்கட்டும்
ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்
ஆனாலும் ஹெல்மெட் அணியுங்கள்
ஊனமுற்றாலும் உயிர்காக்கும்


0000


விடுமுறை நாளில்
மாடத்தில் முட்டையிட்டிருந்த
புறாவின் முட்டைகள் உடைந்துகிடந்தன
நான் அந்தப் பூனையைத் தேடுகிறேன்
கெட்டுப்போகாது என்று பிரிட்ஜில் வைத்த
கெட்டுப்போன பால்பாக்கெட்டை
எண்ணியபடியே
பாலும் கெட்டது முட்டையும் கெட்டது


000
Like · Comment · 

Wednesday, June 24, 2015

ஔவையின் நல்வழியிலிருந்து ஒரு பாடல்.



கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றுஎடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயின் சொல்.



பாடலின் பொருள்


படிக்காதவனாக இருந்தாலும் அவனிடத்தில் காசு இருந்தால் எல்லாரும் சென்று அவனை எதிர்கொள்வர். கொண்டாடுவர். காசில்லாதவன் என்னதான் படித்திருந்தாலும் அவனை மனைவியும் வெறுப்பாள், ஈன்ற தாயும் வேண்டாது மறுப்பாள் ஒருபோதும் செல்லாது அவன் வாய் சொல். செல்லாச் சொல்.


பாடலின் பொருளை எளிதில் புரிந்துகொள்ள சற்று விரிவாக்கி எழுதியிருக்கிறேன்.


என்றைக்குப் பாடிய பாடல் இது. இலக்கியம், மனிதநேயம், படைப்புக்கள், குழுக்கள், லட்சியம், சாதனை, நேர்மை...மனசாட்சி... ஒழுக்கம்.. போடுங்கள் குப்பையில் என்று சொல்லலாமா?
Like · 

Sunday, June 21, 2015

நிகழ்வுகள்....நிகழ்வுகள்...

நிகழ்வுகள்...
1, நேற்று நண்பர் கல்வெட்டியல் பேராசிரியர் சோ.கண்ணதாசன் அவர்கள் அலைபேசியில் அழைத்து செய்திசொன்னார். செய்தி இதுதான்.
அரசியல் காரணமாக தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்வழி பயிற்ற்ல் என்பது அருகிகொண்டிருக்கிறது. மொழிப்பாடமாக வேண்டுமானால் ஆங்கில்ம் மட்டுமல்ல எந்த மொழியும் இருக்கட்டும். அது பிரச்சனையில்லை. அடிப்ப்படையில் ம்ற்ற பாடங்களைக் கட்டாயம் தமிழ்மொழியில்தான் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக கவலைகொண்ட தமிழறிஞர்கள் கூடிய நிகழ்வுதான் அது.
கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இந்நிகழ்விற்கு அடிப்ப்படை காரணம் கோவை பேரூர் ஆதினம். அவர்க்ள தொடங்கியுள்ள வளர்தமிழ மன்றத்தின் சார்பாக இயக்கம் போல இயங்கி தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் தாய்மொழிக்காக அயராதுபாடுபட்டுவ்ரும் தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைந்து ஒன்றாகப் போராடி தமிழ்வழி பயிற்றலைக் கட்டாயமாக்க அரசினை வற்புறுததவேண்டும் என்பதுதான் நோக்கம். மூத்த ஆசிதினத்தில் அருளாசியுடன் இளையபட்டம் அருள்மிகு வேதாசலம் அடிகளார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி, கரூர், திருச்சி என்று தொடங்கி தஞ்சை வந்திருந்தார்கள். குறுகிய காலக் கூட்டம் என்றாலும் நோக்கம் மிக உயர்வானது பொறுப்பானது அவசியமானது என்கிற நிலையில் கிட்டத்தட்ட ஒரு வகுப்பறை முழுக்க தமிழார்வலர்கள் கூடியிருந்தார்கள்.
கூட்டத்தினை ஒருங்கிணைத்தவர் தமிழுக்காக கடைசி மூச்சுவரை செலவழித்து மறைந்த தமிழ்ப் புலமையாளர், பேரறிஞர் தெய்வத்திரு சொ.விருத்தாசலனார் அவர்களின் திருமகனார் திருமிகு பாரி அவர்கள்.
வரவேற்புரையை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் கணிதவியல் ஆசிரியர், வலைப்பூவில் தமிழுக்காகப் பல பதிவுகளை இட்டுவரும் கி.ஜெயக்குமார் அவர்கள்.
வளர்தமிழ மன்றத்தின் நோகக்ம் குறித்து திரு அப்பாவு அவர்கள் விளக்கிச்சொல்ல அதனைத் தொடர்ந்து இளையபட்டம் அவர்கள் விரிவாக வளர்தமிழ மன்றத்தின் அரிய இப்பணியை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திருமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை முன்மொழிய தொடர்ந்து அங்கு வந்திருந்தத ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்து இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதாக தங்கள் ஆலோசனைகளை முன் வைத்தார்கள். இறுதியில் பாரி அவர்கள் நன்றியுரைக்கக் கூட்டம் முடிந்தது.
வேண்டுகோள்
உலகின் எல்லா நாடுகளிலும் அடிப்படைக் கல்வி தொடங்கி விருப்பக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில்தான் பயின்று வருகிறார்கள். இச்சூழல் தமிழ்கத்தில் இல்லை. ஆயிரமாயிரம் குழுக்கள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல்போல பெருகிவருவது பெருஙகவலைக்குரியது. எனவே தமிழைக் கட்டாயமாகப் பயிற்றுமொழியாக்குவது என்பது காலத்தின் தேவையாகும். இருப்பினும் தமிழைப் போற்றுகிற பலரும் பல்வித அரசியலைக் கைக்கொண்டு அதனை பிழைப்புக்கருவியாகவே பயன்படுத்திவருகிறார்கள் என்பதும் கண்கூடு..
எனவே பேரூர் ஆதினம் எடுத்திருக்கும் இந்தமுயற்சி மிக முக்கியமானது. தமிழின் மீது அக்கறை கொண்ட யாரும் இதனை எவ்வாறு செய்ற்படுத்தினால் இது வெற்றிபெறும் என்பதறகான பயனான ஆலோசனைகளை முன்வைக்கலாம். அவற்றைப் பேரூர் ஆதினத்திற்கு எழுதியனுப்பலாம். தமிழைக் கற்கவேண்டும். தாய்மொழியில்தான் உலகறிவைப் பெறவேண்டும். உயரவேண்டும் என்கிற உணர்வுடன் நாம்எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
என்றாலும் இவற்றின் பின்னால் இருக்கக்கூடிய
பல சிக்கல்களும் இருக்கின்றன.
தமிழை உயிராக எண்ணிப் படித்தவனுக்குத் தமிழ்நாட்டில் மரியாதை இல்லை.
அவன் பிழைக்க எந்த ஒரு வேலையும் இல்லை.
தாய்மொழியில் படித்தால் நீ சாகமாட்டாய் உயிர்வாழ்வாய் என்கிற உத்திரவாததையடக்கிய நம்பிக்கை இல்லை.
தமிழ்ப் படித்தவர்கள் தமிழையே அறியாதவன் நடத்துகின்ற கல்விநிறுவன்த்தில் கைகட்டி சொற்ப சம்பளத்திற்கு வாழவேண்டிய அவலம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
அரசு பணியாளர் தேர்வு மையம் தவிர மற்றவற்றில் தாய்மொழியில் கலந்துகொண்டு தேர்வு எழுதமுடியாத இடர் நீண்டிருக்கிறது.
தமிழை மூச்சாக எண்ணுபவன் என்ன நினைப்பான். அவன் உள்ளம் எத்தயை இன்னல்களைத் தாங்கும்?
கடைத்தெரு பெயர்ப்பலகை தொடங்கி வெகுசன ஊடகம் வரை தாய்மொழி அக்கறை இல்லை. பிழைகள் மலிந்த செயற்பாடுகள் மனத்தை புண்படுத்துகின்றன.
இவையெல்லாம் நம்முன் இருக்கும் பிரச்சினைகள். தீர்க்க்ப்படவேண்டும் என்பதும் முக்கியமானது. அவசியமானது.
எனவே தாய்மொழியில் பயிற்றுவித்தல் என்பதை நாம் பலப்படுத்த பலப்படுத்த மேற்சொனன் பிரச்சினை சூரியன்கண்ட பனித்துளி போல விலகிவிடும்.
பேரூர் ஆதினத்தின் ஒப்பற்ற இந்த தமிழ்தொண்டிற்குக் கைகோர்க்க வாருங்கள்.
இதுகுறித்த் உங்கள் கருத்துக்களை பேராசிரியர் இளமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருவருள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி, வெண்ணாற்றங்கரை அஞ்சல், தஞ்சாவூர் எனும் முகவரிக்கும் அனுப்பலாம். ஊர்கூடித்தான் தேரிழுக்கவேண்டும். தமிழ்த்தேர் இழுக்க வடம்பிடிக்க வாருங்கள் தமிழ்ச் சமூகமே.
இரண்டு
இன்று தந்தையர் தினம்.
என் அப்பாவை நினைக்கிறேன்.
சிறுவயது முதலே விளையாட்டாகக் கூட கைநீட்டாமல்... தம்பி என்றே கடைசிவரை அழைத்து.. எந்த ஒரு செயலையும் வளவளவென்று பேசாமல் ஒருமுறை சொல்லி.. இது நன்மையானது எடுத்துக்கொள் இது தீமையானது விட்டுவிடப் பழகு..என்று அறிவுறுத்தி... உணவுவேளை தவறாமல் உண்ணும் பழக்கத்தையும்.. எப்போது படுத்தாலும் அதிகாலை எழுந்துவிடு.. என்றும்.. எதனையும் தள்ளிப்போடாதே... நாலுபேர் பார்ப்பதற்காக ஒரு செயலைச் செய்யாதே.. மனசாட்சிப்படி உழை.. ஒழுக்கமும் நேர்மையும் உன் மரணம்வரை மாறாதிருக்கவேண்டும்.. கடுஞ்சொல் பேசாதே... யாராக இருந்தாலும் எடுத்தெறிந்துவிடவேண்டாம்.. எல்லோரையும் மதிக்கப் பேசு.. என்றெல்லாம் சொல்லிய பல்வேறு தருண்ங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இவற்றிலெல்லாம் அப்பா வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.
மூன்று
சுகன்
சுந்தரசுகன்
சௌந்தர சுகன்..
எழுத்துப்போராளி... எழுத்தாய் வாழ்ந்தான்.. எழுத்தாய் மறைந்தான்..
இன்று அவனுக்கு நினைவேந்தல்... தஞ்சை பெசண்ட் அரங்கம்..மாலை 6 மணி
அவரவர் உள்ளத்திலிருந்ரு ஒரு துளி நீர் தாருங்கள் அவனின் ஆன்மாவிற்கு. போதும்.
நன்றி.

Friday, May 29, 2015

பத்தி வாசனை...


அந்தத் தெருவிலேயே
எங்கள் வீட்டில்தான் முதலில்
தொலைக்காட்சி பெட்டி வந்தது.

வெள்ளிக்கிழமைதோறும்
தெருவே ஒலிஒளியுமாக இருந்தது
ஓர் அரங்கத்தைப் போல
வருவோரை ஒழுங்குப்டுத்தி 
உட்காரவைத்து அப்பா மட்டும்
நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார்..

ஒரு பத்தியை ஏற்றி வைக்கச்
சொல்லுவார் பலரின் மூச்சுக்
காற்று ஒரே இடத்தில் என்று..
அம்மாகூட இதை அடக்கிய
பெருமையாகப் பேசித் திரிந்தாள்.

அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
தெருவில் இன்னும் மரியாதை கூடியது..

என் பிள்ளைகளும் அக்காவின்
பிள்ளைகளும் தெருப்பிள்ளைகளும்
என வீடே குழந்தைகளின்
தோட்டமாக இருக்க அப்பாவே 
எல்லாருக்குமான இசையாக இருந்தார்.

அப்பா இறந்துபோன பின்
ஒவ்வொன்றாய் காலையில் 
மாலையில் உதிரும் பூக்களாய்
உதிரத் தொடங்கிவிட்டன

இப்போது யாருமற்ற
வீட்டில் அம்மாவும் அவள்
தனிமையும்தான்..

எப்போதாவது யாரேனும் இருவர்
கூடினால்கூட அந்த வீட்டில்
ஏற்றாமல் வருகிறது
அப்பா ஏற்றிய பத்தி வாசனை.

0000

Thursday, May 28, 2015

உங்களுக்குண்டா?

உங்களுக்குண்டா?


                           1  சிலரை  நமக்குப் பிடிக்காது.  வேண்டாம்  என்று விலக்குவோம். ஆனால் முக்கியமான நேரத்தில் யாரை விலக்கினோமோ அவர்களிடத்துதான் உதவி கேட்டு நிற்கவேண்டிய சங்கடம் வரும்..

                                            உங்களுக்குண்டா?


                          2.   நமக்கு உற்ற உறவுகளில் யாரேனும் இறக்கும்போது திட்டமிட்டதுபோல அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல், வரமுடியாமல் போகிறது.

                                           உங்களுக்குண்டா?


                          3.    மனசு கேட்காமல் போய் அன்பு காட்டுவோம். உதவியும் செய்வோம்.  நம்முடைய பேச்சு அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கும்.  அலட்சியம் செய்வார்கள்.   அடுத்தமுறை என்ன ஆனாலும் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் மனசு கேட்காமல் மறுபடியும் அவமானத்திற்கு ஆளாவோம்.  அந்த துயரம் சொல்லமுடியாது.

                                              உங்களுக்குண்டா?


                            4.   பல முறை ஒன்றிற்காகப் போராடுவோம். கிடைக்காது. சரி இனி வேண்டாம் என்று விடும்போது அது எளிதாக மற்றவருக்குக் கிடைத்துவிடும். ஏன் இப்ப கேட்டிருந்தா கொடுத்திருப்போமே என்பார்கள். மனசு நொந்துபோகும்.

                                              உங்களுக்குண்டா?

                           



Saturday, May 16, 2015



                                         ஒரு கன்றுக்குட்டியின் வாழ்க்கை...


                      பிறந்தவுடன் தாயை இழந்துவிட்டது அந்த கன்றுக்குட்டி.

                     எனவே அது மிகுந்த துயரத்துடன் கடவுளை வேண்டி நின்றது.

               
   கடவுள் உடனே பிரசன்னமானார்.

                     என்ன வேண்டும் கன்றே? என்றார்.
             
                      ஏன் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள் என்றது.

                      நான் கொல்லவில்லை. அது உன்னோட தாயின் விதி.

                      சரி நான் எப்படி வாழ்வது? என்றது கன்றுக்குட்டி.

                     உடனே ஒரு புல்வெளியை உருவாக்கித் தந்தார்.  இது உன் வாழ்நாள் வரைக்கும் பசியைத் தீர்த்துவிடும் என்றார்.

                     தாகத்திற்கு என்றது கன்று.

                     உடனே ஒரு சிறிய சிற்றோடையை அழகாக ஓடச்செய்தார். பளிங்கு முகம் காட்டி அந்த சிற்றோடை ஓடியது. ஒருமுறை கன்று அதில் இறங்கி தன் முகம் பார்த்து திருப்தி கொண்டது.

                     வேறு ஏதேனும் ஆபத்து எனக்கு நேராதா? என்றது.

                     உடனே கடவுள் அந்த புல்வெளியைச் சுற்றி பலத்த வேலியை ஒன்று உருவாக்கினார்.
 
                    அந்த வேலிக்குள் மனம்போல சுற்றிசுற்றி மகிழ்ந்தது.

                    நான் போகலாமா என்றார் கடவுள்.

                   இடி, மழை வந்தால், வெயில் அடித்தால்  என்ன செய்வது என்றது கன்று.
                   உடனே அது ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகையை உருவாக்கினார். மூங்கிலால் அழகான கொட்டகை உருவானது.

                   உள்ளே ஒடிப்போய் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு வெளியே வந்தது கன்று.

                    இப்படி யோசித்து யோசித்து கன்று எல்லர்ம் கேட்கக் கடவுள் பொறுமையாகத் தந்துகொண்டேயிருந்தார்.
 
                      இரவாகிவிட்டது கடவுள் சென்று வரட்டுமா என்றார்.

                      சரி.. நான் கூப்பிடும்போது வரவேண்டும் என்றது கன்று.

                      அது முடியாது ஒருமுறைதான். இந்த முறைதான் எனவே இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டுவிடு என்றார் கடவுள்.

                          நெடுநேரம் யோசித்துவிட்டு கன்று சொன்னது... எனக்கு அம்மா இல்லை.. தனியா இருக்க பயமா இருக்கும்ல... எனக்கு விளையாட ஒரு பிரெண்ட்ட தா... என்றார்..

                           கடவுள் இன்னொரு கன்றைத் தந்தார்..

                            அந்தக் கன்று கடவுளிடம் இந்த கன்று கேட்டதையெல்லாம் கேட்கத்தொடங்கியது.

                                                                00000

                           

Thursday, May 14, 2015


      
       000
       மூலையில்
       அப்படியே கிடக்கிறது
       சிலந்தி வலைபின்னியபடியும்
       அந்துப்பூச்சிகளுடனும்
       ஆனாலும் நிறம்மாறாமலும்
       அந்தக் குடை
       அதைப் பயன்படுத்தும் அப்பாவின்
       மரணத்தை மறக்கமுடியாத்துபோல....

       000

       கடைசிவரை மாறவேயில்லை
       கட்டிய கைக்கடிகாரம்
       அணியும் செருப்பு மாடல்
       பெளண்டன் பேனா
       சில்வர் பொடி டப்பா
       ஏழு மணிக்குள் காலையுணவு
       பன்னிரண்டு மணிக்குள் மதிய உணவு
       எட்டு மணிக்கு இரவு உணவு
       ஒன்பது மணிக்குமேல் விழிக்காமை
       எதுவுமே அப்பாவிடம் இம்மியும்
       கடைசிவரை மாறவேயில்லை
       அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களே
       பிள்ளைகள்தான் பிள்ளைகளாக இல்லை...

       000            
         
         அடிக்கடி மறந்துபோகிறது
         குடையெடுத்துப்போக
         எடுத்துப் போகும்போது
         தவறாமல் மறந்துபோகிறது
         எடுத்துவர
         குடையெடுத்துப் போகையில்
         மழை வருவதில்லை அல்லது
         நனைவதில்லை
         குடையெடுக்காமல் போகும்போது
         கட்டாயம் பெய்கிறது
         வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும்
         என்று யாரேனும் பாராட்டினால்
         குடையைத் திட்டி தீர்க்கிறேன்
         000
             ஒவ்வொரு நாளும்
         எத்தனை சொற்களை
         இழந்தாலும்
         பிணத்தின் மூடிய கைகளுக்குள்
         சிக்கிய பொருளைப்போல
         எடுக்கமுடியாமல்
         காத்திருக்கும் நம்பிக்கை
         மறுநாளின் சொற்களைப்
         புதுப்பிக்கிறது வாழ்வதற்கு..
     மீட்டெடுக்கவும்..
      000           
           மின் கம்பியில்
           சிறகு பரத்தி
           அடிபட்டு வீழ்ந்துபோகும்
           காகமொன்று
           சுற்றி நின்று கரையும்
           கூட்டம்
           எங்காவது கேட்கும்
           அமாவாசைக் குரலுக்கு
           விரைந்துபோகும்
           எல்லாம் மறந்து..

            000

            வற்றிய ஆற்றின் கரையில்
            தீராநதி
            விதவையின் வீடு..

            000

            வலை வீசுதலில்
            மீன்கள் சிக்குகின்றன
            ஒருபோதும்
            நதியல்ல..

            000

            கனவினுர்டாகப்
            பயணித்தாலும்
            நம்பிக்கையின்மீதே
            இளைப்பாறவேண்டும்
         0000                    

                     

           

         
                     
              


        


Wednesday, May 13, 2015

.என்னமோ நடக்குது...





                                                    என்னமோ நடக்குது....


                              மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வந்தார்கள்.  இரவின் வானத்தில் நிலவு இன்றைக்கு அழகு மங்கிப்போயிருந்தது. மணப்பெண் நர்மதாவின் அழகிற்கு முன்னால்  அது தோற்றுப்போயிருந்தது.

                               இன்னும் சற்று நேரத்தில் அவளை ஒருவனிடத்தில் ஒப்படைப்பதற்கான நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது.

                                உணவு தேடியலையும் எறும்புகளைப்போல அந்த மண்டபத்தில் உறவினர்கள் சிதறியிருந்தார்கள்.

                               மகிழம்பூ மரத்தின்கீழே உதிர்ந்துகிடக்கும் மகிழம்பூக்களைப் போல  அவர்கள் சிரித்தும் கிடந்தார்கள்.

                                சிறுவர்களும் சிறுமியர்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்புகளை மண்டபமெங்கும் மழை பெய்வதைப்போல பெய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்தார்கள் மனம்போன போக்கில்.

                                 அந்த இரவின் பழைய பேருந்துநிலைய அருகில் காந்தி சிலையில் மேலிருந்த விளக்கு அழுது வடிந்துகொண்டிருந்தது. காந்தியின் முகம் இருளடைந்திருந்தது அதனால்.  கையிலிருந்து கைத்தடி கொஞ்சம் உடைந்திருந்தது.

                                 அவர்தான் அந்த விபத்திற்குச் சாட்சி.  பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையுமாக இருந்த அந்த இளைஞன் சாலையைக் கடக்க முயன்றபோது ஒரு சிறுவேன் அடித்துப்போட்டுவிட்டுப்போய்விட்டது.

                                பதறித் தவித்த அவனோடு வந்த கூட்டம் அவசரமாக 108 க்கு போன் செய்திருந்தார்கள். உயிர் இருந்தது.

                                 யாரோ போனில் உரக்கக் கத்தினார்..  மண்டபத்திற்கு வரமுடியாது... என்றார்.

                                 காந்திசிலை அருகே கிடந்த பொட்டலத்திலிருந்து கேக்கை நாயொன்று நக்கி சாப்பிட ஆரம்பித்திருந்தது.  போலிஸ் வந்தது சம்பவ இடத்திற்கு.

                                 கற்பகவினாயர் கோயில் தெருவில் ஒரு வீட்டின்  முன் வாசலில்  தாயும் சிறுபெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

                                  அப்பா எப்பம்மா வருவாங்க?
                                   இப்ப வந்துடுவாங்க..
                                  எங்கம்மா போயிருக்காங்க..
                                   காந்திசிலைக்கிட்ட உள்ள மண்டியிலே லோடை இறக்கிட்டு வந்துடுவாங்க..
                                   அய்...யா... எனக்கு சாக்லெட் கேக் வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க.. அப்பா..

                                    வாங்கிட்டு வருவாரு..

                                    இன்னொரு முக்கில்

                                    என்னடா ஆச்சு?

                                    லோடு இறக்க வந்தேன்.. மண்டிக்கு..

                                    சரி..

                                    ஒரு ஆளு குறுக்கே வந்துட்டான்.. புது மாப்பிள்ளை போலருக்கு..

                                     என்னாச்சு?

                                     அடிபட்டுட்டான்..  நான் வண்டிய  எடுத்துட்டு வந்துட்டேன்.. எவனாச்சும் நம்பர பாத்திருப்பான்..

                                      எனக்குத் தெரிஞ்ச வக்கிலு இருக்காரு பார்க்கலாம்..

                                      என் வூட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுடா... பத்து நாளாச்சுடா.. வீட்டுக்குப் போய்..

                                       சரி..

                                       108 அவர்களைக் கடந்துபோனபோது அவன் அதை மிரண்டு பார்த்துக்கெர்ண்டிருந்தான்.

                                       வண்டி நம்பர யாராச்சும் பாத்தீங்களா?

                                       ஒருவரும் பார்க்கவில்லை.

                                       ம்ண்டபத்தில் யாரோ சொன்ன நகைசுவைக்கு மணப்பெண் சிரித்துக்கொண்டிருந்தாள்..

                                       சற்று நேரத்தில் மாப்பிள்ளை உள்ளே வந்தான்., நண்பர்கள் சூழ..

                                       நிச்சயதார்த்தம் தொடங்கியது.

                                       அதோ பாருடா உங்கப்பா..

                                       அப்பா சாக்லெட் கேக்...

                                       இந்தாடா?

                                       நாக்கு செத்துப்போச்சிடி... பத்து நாளாச்சு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு.. என்ன பண்ணியிருக்கே..

                                       கோலா உருண்டை போட்டு குழம்பு வச்சிருக்கேன்..  கோழி வறுத்திருக்கேன்.. சாப்பிடலாம்..

                                       நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..

                                       மருத்துவமனை வாசலில் 108  நிற்க அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்கள்.. அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். நல்லவேளை அவனுக்கு முன்பக்கம்தான் அடிபட்டிருந்தது.  காலில் நல்ல அடி. இடுப்பு எலும்பு நகர்ந்துபோயிருந்தது.

                                      மருத்துவமனை வாசலுக்கு வெளியே ஓடிவந்தாள் அவனத தாய்..
                                      என்னாச்சு எம்புள்ளக்கி....

                                      சார்... இத்தோட காட்சிய நிறுததிடுங்க.. என்றார்  டைரக்டர் சங்கர்.

                                      ஏன் சார்?

                                      மிசச்த்தை நாளைக்கு வச்சுக்கலாம்...  என் நண்பனோட நிச்சயதார்த்தம் இன்னிக்கு.. நான் மண்டபத்துக்குப் போயிட்டு வந்துடறேன்.. சென்டிமெண்டா வேணாம்.. நாளைக்கு மிச்சத்தை வச்சுக்கலாம்..

                                      ஓகே சார்..

                                                                                               0000000000000

                                     

                                     
                                 

Tuesday, May 12, 2015

கொஞ்சம் இலக்கியம்...




                      கணவன் மனைவி என்கிற உறவு குடும்பம் என்கிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ளது.

                       நம்முடைய அப்பாக்கள் வாழ்ந்த காலத்தில்  கணவன் மனைவியாக இணைந்தவர்கள் பெரும்பாலும் விவாரத்து என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருந்தது.

                       திருமணம் ஆகி சில தினங்களிலேயே கணவனை இழந்தார்கள். என்றாலும் பிள்ளைகளை வளர்க்க கடைசிவரை விதவையாகவே வாழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். பிள்ளைகள் தவறு செய்தால் அடிக்கடி சொல்வார்... கம்னாட்டி வளர்த்த புள்ள கரைசேராதுன்னு சொல்ல வச்சிடாதே.. உங்கப்பன் விட்டுட்டுப் போனபொறவ நான் பட்டது அந்த சிவனுக்குத்தான் தெரியும் என்பார்கள்.

                      பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். சண்டையிட்டிருககிறார்கள்.  அடி வாங்கியிருக்கிறாள் மனைவி.  அடிக்கப்பட்டிருக்கிறான் கணவன் கண்டிப்பு என்கிற பெயரால். இருந்தும் அங்கே உறுதிப்பாடு என்பதைக் குடும்பம் என்கிற சொல் இணைத்து வைத்திருந்தது.

                         ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் தொடுப்பாகவும் வைத்திருந்தார்கள். அவற்றையும் அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

                        என்றாலும் முக்கியமான நிகழ்வகளில் அது இறப்பாக இருந்தாலும் சரி.. பிறப்பாக இருந்தாலும் சரி.. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளிலும் சரி.. மனைவிக்கே உரிமை இருந்தது. அதனால்தான் சங்க இலக்கியம் மனைவியர் என்பதற்கு உரிமை மகளிர்... மனையாள்.. இல்கிழத்தி.. இல்லாள் என்கிற சொறக்ளைக் கையாண்டிருக்கிறது.

                        பரத்தை வீட்டுக்குப் போய்வந்த தலைவன் ஒருவனுக்கு மனது உறுத்துகிறது. தலைவி தன்னிடத்து அன்பாக இருப்பாளா என்று. அவனுடைய சந்தேகத்தை உணர்ந்துகொள்கிறாள். நிரம்பவும் தெளிவாக தலைவி உரைக்கிற இப்பாடல் குறுந்தொகையில் உள்ளது. அற்பதமான பாடல் மட்டுமல்ல ஒரு பெண்ணின் குடும்பத் தலைவியின் உண்மையான அழுத்தமான பண்பாட்டு உணர்வை, பண்பை உணர்த்துகிற பாடல் இது.

                   அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
                   மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
                   இம்மை மாறி மறுமை ஆயினும்
                   நீயா கியரெம் கணவனை
                   யானா  கியர்நின் நெஞ்சுநேர் பவளே
                                                                குறுந்தொகை. பா.49 அம்மூவனார்.

பாடலின் பொருள்

                    அணிற்பல்லைப் போன்ற கூரிய முட்கள் நிறைந்த மணம் முதிர்ந்த தாழையினையும் (தாழம்பூ) நீலமணியின் ஒளியைப் போலும் கரிய நீரையுமுடைய (நெய்தல் நிலத்துப் பாடல் - கடலைக் குறிப்பது) தலைவனே. நீ கொடுமை செய்கிறாய் இந்தப் பிறவியில். சரி போகட்டும் அடுத்த பிறவியிலும் நீதான் கணவனாக இருப்பாய் நான்தான் உன் நெஞ்சுக்குப் பிடித்தவளாக இருப்பேன். அப்படி ஆகிவிடு.

                  என்கிறாள். தலைவனுக்குக் குறிப்பால் தன் அன்பையும் உணர்வையும் புலப்படுத்தும் பாடல்.  இன்னும் ஆழமாகப் பார்த்தால் இப்பிறப்பு மட்டுமன்றி மறுபிறப்பிலும் கொடுமை செய்கிற கணவனே அது உன் தன்மையாக இருந்தாலும் நீதான் எனக்குக் கணவன். உன் நெஞ்சுக்குப்பிடித்தவள் நான்தான் என்றும் உணர்த்துகிறாள்.

                          அனுபவிக்கவும் உணரவுமான பாடல் இது.

                          

Monday, May 11, 2015

வைரமுத்து சிறுகதைகள்




                         வைரமுத்து சிறுகதைகள்...


                ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென  கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல முயற்சி.

                தொடர்ந்த வாசிப்பில் இச்சிறுகதைகள் குறித்து எழுதவேண்டும் என்று தோனியது. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்த்தது.

                  கவிஞராக இருக்கும் படைப்பாளி சிறுகதைகள் படைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. சிறுகதைக்கென்று இருக்கும் தன்மைகளில் அவை சில மாற்றங்களை நிகழ்த்தும்.  சிறுகதைக்கான கரு சரியாக அமைந்தாலும் அவற்றை சிறுகதையாக்கும்போது கவிஞருக்குள் இருக்கும் கவிதைக்குணமே முன்னிற்கும். இயல்பாக அமையவேண்டிய நிகழ்வுகளில்கூட இந்த கவிதைக்குணமே துருத்திக்கொண்டு நிற்கும். இது தவிர்க்கமுடியாதது என்றாலும் அது சிறுகதையின் ஓட்டத்திறகுத் தடையாகும். ஏனென்றால் கவிஞனாக இருக்கும் நிலைப்பாட்டில் பார்க்கிற எந்தக் காட்சியிலும் அதனை எதனோடாவது ஒப்பிட்டுக் காட்ட முனையும் மனத்தைத் தடுத்துவிடமுடியாது. சிறுகதையைக் கவிதைபோல சொல்வதும் கவிதைக்குள் சிறுகதையின் தன்மையைக் கொண்டுவருவதும் உத்தி என்றாலும் அவை இயல்பானவையல்ல. அந்தந்த இலக்கியப் பிரிவினை அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடும். இப்போக்குகளை கவிஞர் வைரமுதது அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக யுத்தம்  இவற்றில் காணலாம். என்றாலும் இவற்றையும் தாண்டி அவை பிரமிப்பை உண்டாக்கிய நாவல்கள். தற்போது இத்தன்மையை குமுதத்தில் எழுதி வரும் சிறுகதைகளிலும் காணமுடிகிறது என்றாலும் அதைத்தாண்டி கவியரசு எடுத்துக்கொண்டுள்ள சிறுகதைக்கான  கதைக்கரு அதனை வெளிப்படுத்தல், காட்சிப்படுத்தல் இக்கூறுகளில் மேலெழுந்து நிற்கிறது. இவை இக்கதைகளின் வெற்றி எனலாம். இருப்பினும் சிறுகதைக்கான சோதனைத்தளம் எனும் நிலையில் சிறுகதைக்கான வளர்ச்சிப்பாதையில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.
             சிறுகதையின் தொடக்கம், பின்னல், விவரிப்பு, முடிப்பு எனும் நிலைகளில் இச்சிறுகதைகள் அபாரமான உயரத்தை எட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு சிறுகதையிலும் சிறுகதைக்கான கரு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது புதுச் சொல்லாளுமையில் மெருகேறித் திளைக்கின்றன.  புதுமைப்பித்தன் சிறுகதைகள் போல, மௌனியின் சிறுகதைகள் போல, அழகிரிசாமியின் சிறுகதைகள் போல, சுந்தரராமசாமியின் சிறுகதைகள் போல, திஜாவின் சிறுகதைகள் போல, சூடாமணியின் சிறுகதைகள் போல, ஜெயகாந்தன் சிறுகதைகள் போல, மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள் போல, கோணங்கியின் சிறுகதைகள் போல, அ.முததுலிங்கத்தின் சிறுகதைகள் போல ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரின் வீச்சை அடையாளப்படுத்தினாலும். இவை எவற்றின் ஒட்டுதலும் இல்லாமல் கவியரசுவின் தனித்துவப் படைப்பாளுமையின் மூல அச்சில் வைரங்களாக இச்சிறுகதைகள் சுடர்விடுகின்றன.

              சான்றாக இந்தவாரம் வெளிவந்துதுள்ள சிறுகதை யாருக்கும் வாழ்க்கைப் பக்கமில்லை என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்.

                 சாதாரண சொற்கள் ஆனால் அழுத்தமான பண்பாட்டுக் கருவறையிலிருந்து வெளிவருகின்றன. எதார்த்தமான விவரிப்பு. போகிற போக்கில் நினைத்துப் பார்க்கமுடியாத காட்சிப்படுத்தல். புதுச்சொல்லாக்கம். படிப்போரின் மனசுக்குள் கைப்பிடித்து அழைத்துப்போகும் திறன்.. கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போலப் படியும் சோகம். என்றாலும் இப்படித்தான் என்று வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிற  கருவாயன் அல்லது அவனை ஏற்றுக்கொள்ள வைக்கிற தமிழ்ச்சமுதாயப் பண்பு இவற்றை அழகான மகிழம்பு கோத்ததுபோல இணைக்கிறார் கவியரசு.

                             நறுக்குச் சவரம்
                             சீயக்காய் போட்டு பெருந்தேய்ப்புத் தேய்த்த பிறகும்
                             தலைமுடியில் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருந்தது
                             செம்மறியாட்டுச் சிறுநீர் வாசம்...(ப.142)

                             பல்விழுந்த சீப்பின் பல்விழாத ஓரங்களில்...

                             தோற்றம் என்ன தோற்றம்? இந்த பூமிக்கு வந்துபோகும்
                             கோடிகோடி சராசரி அற்புதங்களில் அவனும் ஒருவன்.
                             தான் வாழ்கிறானோ இல்லையோ வாழ்வுக்குச்
                             சம்பவங்கள் கொடுப்பவன்  (இங்கேயே இச்சிறுகதையின்
                             முடிவை உணர்த்திவிடுகிறார் நுட்பமாகக் கவியரசு)

        இவை கவித்துவமான வரிகள் என்றாலும் சிறுகதையின் ஓட்டத்தில் தடையில்லை.

                           உலகச் சிறுகதைக்கு நிகரான காட்சிப்படுத்தல் எல்லாச் சிறுகதைகளிலும் (கவியரசுவின் சிறுகதைகளுக்குள்ளேயே) ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறது வேறு எதனோடும் ஒப்பிடத் தேவையில்லாமல்.

                        ஒத்த ஆலமரம் தாண்டி பெருமாயி ஊருணி பிடித்து
                       முனியாண்டி கோயில் கடந்து சூராங்கரடு ஏறி இறங்கினால்
                       பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சாவடிப்பட்டி சித்தோடை..
                       கடந்து கரையேறினால் ஊர் வந்துவிடும் (ப.143)

இது மதினியின் ஊருக்குப் போவது.

                         சித்தோடை கடந்து சூராங்கரடு ஏறி முனியாண்டி கோயில்
                        முட்டி பெருமாயி ஊரணி புடிச்சு ஒத்த ஆலமரம் தாண்டுனா
                         பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சல்லிப்பட்டி...

இது மதினியின் ஊரிலிருந்து திரும்பி வரும்போது..

                          இரண்டும் ஒரே காட்சிப்படுத்தல் என்றாலும் சொற்களில் கதையின் பின்னல் தெரிகிறது. முனியாண்டி கோயில் கடந்து...முனியாண்டி கோயில் முட்டி... கரையேறினால் ஊர் வந்துவிடும... ஆனால் வாழ்க்கை...?

                         மதினியைப் பெண் கேட்கப் போகும்போது எதுவும் சிரமமில்லை.

                          காடு கடுங்காடு..முள் மண்டிய பெருங்காடு..கொளுத்துகிறது.
                          சித்திரைக்கோடை. வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று
                          உருக்கப் பார்க்கிறது........சில்லிமுள்ளும் செந்தாழையும் திருகு
                          கள்ளியும், சப்பாத்திக்கள்ளியும் இலந்தையும் நெருஞ்சியும்
                          குராஞ்செடியும் உடைசாலியும் சிவானர் வேம்பும் வேலும்
                          கருவேலும் இலைக்கற்றாழையும் வேலாந்தழையுமென
                          முட்காடாய் விரிந்துகிடக்கும் வெம்பாலை நந்தவனமாய்
                          தெரிந்தது நம்ம பயலுக்கு.. (ப.144)

ஆனால் மறுபடியும் நந்தவனம் வெம்பாலையாகிவிட்டது கருவாயனுக்கு.

                               ஒருசாலை மேய்ப்பர்கள்

                               உச்சந்தலையில் வழுக்கையில் ஒத்தமுடி முளைச்சது
                               மாதிரி ஊருணிக்கரையில்  துண்டா நிற்கிறது ஒரு
                               பூவரசமரம். . (ப.145)

கருவாயனும் இப்படித்தான்..

                                எப்போதும் உறவுகளை உணர்வுகளை அன்பைத் தாண்டிப் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது வாழ்க்கையில் என்றாலும் அதைத்தாண்டி அன்புதான் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துகிறது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இக்கதை.

                              வாசிப்பில் சில சிறுகதைகளில் சிற்சில தடுமாறல்கள் வந்தாலும் இச்சிறுகதைகள் எதிர்காலச் சிறுகதை வரலாற்றில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக நிற்கும் என்பதைக் கவியரசு உறுதிப்படுத்துகிறார்.

                           
                                               

                       

Sunday, May 10, 2015



 அன்புள்ள

                       வணக்கம்.

                       இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு.

                       தொடர்ந்து நாளையிலிருந்து  பதிவுகளுடன்.

                       எப்போதும்போல அன்பு காட்டுங்கள்.

                       நன்றி வணக்கம்.




                        

Sunday, April 19, 2015

விகடனில் வந்த என் கவிதை

எனக்கு எல்லாமும் தெரியும்
என்று ஒருபோதும்
சொல்வதில்லை
எல்லாமும் தெரிந்தவன்...
உயர்ந்தோங்கிய
மலையின் மாண்பிலிருந்து
பேரிரைச்சலால்
கீழிறங்கிவிடுகிறது அருவி..
தவளைகளின் பல்வகைக்
கத்தல்கள் என்றைக்கும்
இசையானதில்லை.
ஆனாலும் ஆரவாரமும்
ஆர்ப்பாட்டமும் மிக்கதுகள்
தவளைகளை மதிப்பிற்குரியனவாக
மாற்றிவிடுகின்றன..
தேர்ந்த கல்லின்
தேர்ந்த சிலை உணர்த்தும்
தேர்ந்த சிற்பியைப் போல
பலர் இந்த உலகின்
மனித வாழ்வை
செதுக்கிக் கொண்டே
இருக்கிறார்கள்...
நன்றி... ஆனந்தவிகடன்

Friday, April 3, 2015

மகன் எழுதிய கவிதை

அன்புள்ள

                   வணக்கம்.

                   என் மகன் எழுதிய கவிதை இது.

                   உங்களின் வாழ்த்திற்கும் பார்வைக்கும்.

                 
                                இலட்சிய இட மடைந்தேன்; புது
                                நண்பர்கள் படை புகுந்தேன்; எழில்
                                மும்பையில் மனம் மகிழ்ந்தேன்; தனிக்
                                காட்டினில் தின மலைந்தேன்; புகழ்
                                உலகினில் நான் மிதந்தேன்; இரவினில்
                                இனம்புரியாயொரு தனிமையை நானுணர்ந்தேன்; என்
                                 நிலைதனை எடுத்துரைக்கத் தமிழினை நாடிவந்தேன்....

Sunday, December 28, 2014

உரையாடல் சுவை....




               இலக்கியங்கள் சுவையானவை.  அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்பது சொற்சுவை, பொருட்சுவை, கருத்துச்சுவை, ஓசை எனப் பல்வகை சுவையும் கொண்ட இலக்கியம் அதிலிருந்து சிறு உரையாடல். இது சிங்கனுக்கும் சிங்கிக்கும் நடந்த உரையாட்ல்.

              உலா வரும் திருக்குற்றால நாதரிடம் ஏழுவகைப் பெண்களிடம் ஒருத்தியான வசந்தவல்லி என்னும் அழகி அவர் மேல் காதல் கொள்கிறாள். அவளுக்குக் குறி சொல்ல வருபவள் குறத்தி. அவள் குறி சொல்லி ஏராளமான பரிசுகளைப் பெறுகிறாள். அவள் கணவன் குறவன். இவர்கள்தான் சிங்கனும் சிங்கியும்.

             சிங்கியைக் காணாமல் சிங்கன் பல இடங்களில் தேடிக் கடைசியில் திருக்குற்றாலத் தெருவில் அவளைக் கண்டுபிடிக்கிறான். அவள் உடம்பெங்கும் அணிகலன்களையும் புதிய புடவையையும் அணிந்திருக்கிறாள். சிங்கன் அவற்றில் மயங்குகிறான். அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாட்ல் இது. வெகு சுவையாக உள்ளது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.


சிங்கன்  -  இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி?
சிங்கி     -   பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா.


சிங்கன் -   உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும்
                     இருக்குதடி சிங்கி.
சிங்கி     -   அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா.


சிங்கன்  -  உன் காலுக்கு மேலே பெரிய வீரியன் பாம்பு கடித்துக் கிடப்பானேன்
                     சிங்கி?
சிங்கி     -   சேலத்து நாட்டில் குறிச் சொல்லக் கிடைத்த சிலம்பட அது சிங்கா.


சிங்கன் -   சிலம்புக்கு மேலே ஏதோ திருகலும் முறுகலும் அது என்னடி சிங்கி?
சிங்கி     -   அது கலிங்க நாட்டார் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா.


சிங்கன் -   நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல  நெ ளிவு அது
                      என்னடி சிங்கி?
சிங்கி     -   பாண்டியனார் மகள் கேட்ட குறிக்கிட்ட பாவிகமடா சிங்கா.


சிங்கன் -   செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி?
சிங்கி    -   குற்றாலருடைய சந்நிதியில் வாழும் பெண்கள் தநத மணிகொச்ச
                     மடா சிங்கா.


சிங்கன் -  உன் சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்
                    சிங்கி?
சிங்கி     -  கண்டிய தேசத்தில்  நான் பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.


சிங்கன் -  உன் தொடைமேல வாழைக்குருதை இப்படி விரித்து மடித்து
                     வைத்தது யாரடி சிங்கி?
சிங்கி    -   திருநெல்வேலியார் தந்த சல்லாச் சேலைதான் அது சிங்கா.


சிங்கன் -  உன் தொடைகளின்மேல சாரைப்பாம்புபோல கிடப்பது ஏதடி
                     சிங்கி?
சிங்கி     -  சோழ அரச குமாரத்தி தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா.


சிங்கன் -   உன் மார்புக்கு மேலே கொப்புளஙகள் அது ஏனடி சிங்கி-
சிங்கி    -    காயப் பட்டினத்தால் தந்த பெரிய முத்தாரமடா சிங்கா.


சிங்கன் -  எட்டுப் பறவைகள் குமுறுவதுபோனறு குரல் எழும்பும் கமுகு
                    போன்ற உன் கழுத்திலே எட்டுப் பாம்புகள் ஏதடி சிங்கி?
சிங்கி     -  குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா.


சிங்கன் -   காதில் கள்ளிப்பூ பூத்திருக்கேடி சிஙகி?
சிங்கி     -   அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டியடா சிங்கா.


சிங்கன் -    குமிழமலர்  மூக்கில் புன்னை அரும்பு ஏதடி சிங்கி?
சிங்கி     -    முத்து மூக்குத்தியடா சிங்கா.


சிங்கன் -   சொருகி முடித்த உன் கூந்தலில் துர்க்கணாங்குருவிக் கூடு ஏதடி
                      சிங்கி?
சிங்கி    -    தென் குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா சிங்கா.


இப்படியாக நீண்டுபோகிறது உரையாடல் . இறுதியில்


சிங்கன் - விந்தைக்காரியான உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது சிங்கி.
சிங்கி     - அதில் சந்தேகமோ, உன் தலைப்  பேனைக் கேளடா சிங்கா.


என்கிறாள்.

                    எத்தனை இலக்கியவளமும் சுவையும் பாருங்கள்.



Tuesday, December 23, 2014

ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்



வணக்கம்.

                       என்னுடைய  குரு  பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன். இதுவரை 64 நுர்ல்களை எழுதியுள்ளார். ஒவவொரு புத்தகம் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவை.

                         இவரைப் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவு நெடுநாட்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

                          இந்தப் பதிவு இவருடைய ஒரு நுர்ல் பற்றி.

                          நுர்லின் பெயர்  ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்.

                          எத்தனையோ சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. என்றாலும் இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்டது.

                         காலங்காலமாக நமக்குச் சொல்ப்பட்டு வந்த நீதிக்கதைகள் பல தந்திரங்களை உள்ளடக்கியவை. இவற்றை தன்னுடைய அனுபவத்தில் வேறாகப் பார்த்துப் புதிய சிந்தனையை உண்டாக்குகிறார் பேராசிரியர் அவர்கள்.

                       இதற்கு இன்றையக்கான அவசியம் நேர்ந்திருக்கிறது.


                     இன்றைய சமுகத்தை மாசுபடுத்துபவர்களை ஒரு சிறிய
                     ஊசியாலாவது குத்திப் பார்க்கவேண்டுமென்ற துடிப்பு
                    எனக்கிருந்தது. பெருமைப்படத்தக்க சில உண்மை நிகழ்வு
                     களை எடுத்துச் சொல்லி இவற்றில் உள்ளதுபோல வாழ்ந்து
                     பாருங்களேன் என்று இளைஞர்களைத் துர்ண்டும் நோக்கம்
                     எனக்கிருந்தது. இவற்றின் விளைவே இந்த நுர்லாகும்.


என்கிறார். ஆனால் உண்மை மிகக் கசப்பானது. எப்படியென்றால் இன்றைக்கு தேவை ஊசிகளல்ல கடப்பாரைகள். லட்சக்கணக்கில் கடப்பாரைகள் தேவை. ஆனால் கடப்பாரைகள்தான் முறிந்துபோகும் செயலற்று. இப்படியெண்ணி மறநதுபோகலாம். இங்கு குவெபா அவர்கள் ஊசியால் குத்துவது என்பது உண்மையின் ஊசியால் மனத்தில் தைப்பது என்கிறபொருளாகும்.

                       .........................நீதிக் கருவூலங்கள் இன்று பூட்டுத் திறக்கப்படாமல்
                     இரும்புப் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்டுவிட்டன. அந்த வாழும்
                     மறைகள் வாழ்க்கை மறைகளாகவில்லை. அந்த நீதிகளை எளிமை
                     யாக என் அனுபவக் கல்வியில் பெற்ற பயிற்சியோடு சேர்த்து இந்த
                     நுர்லை உருவாக்கி உங்கள் முன் அளிக்கின்றேன். இளைஞர்களின்
                     வாழ்க்கையில் இந்த நுர்ல் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்
                     என்பது என் உறுதியான நம்பிக்கை. வெறுங்கதை சொல்லிச் சிரிக்க
                     வைத்துப் படிப்போர் பொழுதை வீணடிக்க நான் விரும்பவில்லை.
                     விழலுக்கு நீர்பாய்ச்சுவதால் பயன் ஏது? விளைவயல்களாக இருக்க
                     வேண்டிய இளைஞர் உலகில் களைகள் மண்டிக் கொண்டிருக்கின்றன.
                     பொழுதுபோக்கே வாழ்க்கை நோக்கம் எனப் பூரித்துப் போயிருக்கிறது.
                     இளைஞர் உலகம். அதனைத் திசை திருப்பவே இந்நுர்ல் ஆக்கப்
                     பட்டுள்ளது.


                              கதைத்தொகுப்பின் நோக்கம் இது.

                        இத்தொகுப்பில் 45 கதைகள் உள்ளன.  இரு கதைகள் உங்களின் பார்வைக்கு சான்றாக.

                            ஆற்றில் விழுந்த கோடாரி என்கிற கதை எல்லோரும் அறிந்ததுதான். விறகு வெட்டியின் நேர்மையால் தங்கம், வெள்ளி, இரும்பு எனக் கோடரி கிடைத்தது. இதனைப் பின்வருமாறு மாற்றி யோசித்து நம்மையும் பலமாக சிந்திக்கத் துர்ண்டுகிறார்.

                   விறகு வெட்டுபவரே ஆற்றில் கோடரி விழுந்துவிட்டதா? பரிவோடு
              கேட்டது தேவதை. 

                     ஆம் அம்மா. அவன் இயல்பாகக் கூறினான்.

                    கவலைப்படவேண்டாம் நான் இந்த ஆற்றில் மூழ்கி உன் கோடரியை
              எடுத்துத் தருகிறேன் என்றது வனதேவதை.

                     ..................நீ போய்வா.. நான் நீந்தத் தெரிந்தவன்.. நான் கைதவறவிட்ட
              கோடரியை நானே எடுத்துக்கொள்வேன் என்றான் கோடரிக்காரன்.

                      ...........................................

                       காலகாலமாக இப்படித்தானே கதை சொல்லி வருகின்றனர். ஆனால்   என் கதை வேறு. கோடரி என்றால் அது விறகு பிளக்கவேண்டும். தங்கத்தால் செய்த கோடரி வீட்டின் தரித்திரத்தை மாற்றலாம். ஆனால் உழைப்பை மறக்கடிக்கும். அதை அணிகலனாகச் செய்து அணிந்துகொண்டால், கடினமான   உழைப்பைப் புறக்கணிக்கும். பாதுகாப்பாக வைக்கப் பெரிய இடம் கேட்கும். பிறகு உதவிக்கு ஆள்கேட்கும். வெள்ளிக்கோடரியை அழகிய தட்டாக்கி உணவு     உண்ணலாம். ஆனால் நான் குடிக்கும் கூழுக்கு அது மிகை. ஆகவே என்    உழைப்பு மூலதனத்திற்கு ஏற்ற துணைக்கருவி இரும்புக் கோடரிதான். அதை ஆற்றில் மூழ்கி நானே எடுத்துக்கொள்வேன். வேலைசெய்யும் நேரம் உன்னோடு பேசி வீணாகிவிட்டது. உன் பட்டாடை கசங்காமல் அணிகலன்கள் பறிபோகாமல்
              பத்திரமாகப் போய்வா என்றான் விறகுவெட்டி.
இன்னொரு  கதை

       நான் யார் தெரியுமா? என்கிற கதை. இக்கதையில் வரும உரையாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும்.

                  திரு கந்தசாமி அவர்களே உங்கள் சிறப்புத்தகுதி?

                     ஐயா, நான் கலியுகக் கலைக்காவலர் என்ற சிறப்புப்
                     பெயரைப் பெற்றவன்.

                  அப்பாடா, கவலை இல்லை. இந்த யுகமுழுவதும் நீங்கள்
                  கலைகளைக் காப்பாற்றி விடுவீர்கள். அது சரி இந்தப் பட்டத்தை
                  உங்களுக்கு யார் கொடுத்தார்கள்.

                      கள்ளிக்காரன் புதுக்குடி மழலையர் பள்ளித் தொடக்க
                  விழாவின்போது அதன் தாளாளர் மாட்டுத்தரகர் மாடசாமி
                  கொடுத்தது.

                      மிகச் சிறப்பு கந்தசாமி அடுத்து சண்முகவேலன் அவர்களே
                   உங்கள் சிறப்புப் பெயர்?

                           சாதிக் கழக்கறுத்த சண்டமாருதம் சண்முகவேலன் என்பார்கள்
                    என்னை.

                           உங்களுக்கு இந்தப் பட்டத்தைத் தந்தவர்?

                        கொண்டையாம்பட்டி கோபாலகிருஷ்ணக் கோனாலும் ஐயன்வாடி
                    சுந்தரசாமித் தேவரும் ஐயா.

                          மிக நன்று பாராட்டுகள் அடுத்து நீங்கள்.

                     புரட்சி எழுத்துப் புயல்வேகச் சிந்தனை வேந்தன் பொழிலன்.

                          உங்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்கியவர்
.
                     மனவளர்ச்சியற்ற மக்கள் மன்றத்தார்.

                          எதற்காகக் கொடுத்தார்கள்?

                     அவர்கள் மன்றத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.

                     அதற்கு ஒரு மரியாதையாக.

                           மிக நன்று நர்மதா உங்கள் தகுதி.

 நாட்டியக்கலை அரசி அபிநயக் கூடாரம் அங்கலாவண்யள அழகு சித்திரம்    என்பது நான் பெற்ற பட்டம்.

                            இவற்றை வழங்கியவர்.

                            என் பாட்டி பிறவி நாட்டியக் கலாராணி பிரேமலதா அவர்கள்.

                            அவர்கள் அவ்வளவு சிறப்பாக ஆடுவார்களா?

                            அவர்கள் நடப்பதே நாட்டியம் போல இருக்கும்.

                            ஏன்?

                            பிறவியிலேயே அவர்களுக்கு ஒரு கால் ஊனம்.

இதுபோன்று ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஊசியாய் தைக்கின்றன. நியாமுள்ளவர்கள் தர்மவான்கள் என்பதுபோல இது சரியான தளத்திற்குச் சென்றால் உரிய நியாயத்தின் முத்திரையாகப் பதியும்.

                அவசியம் படிக்கவேண்டிய தொகுப்பு இது. 

               புத்தக விவரம் . அனுராதா பப்ளிகேஷன்ஸ்
                               விடையல் கருப்பூர், கும்பகோணம். 612 605.
                                  பேச. 04366-262237, 263237