Friday, January 13, 2012

தமிழின்பம்...



                         தமிழின் இலக்கியங்களில பல கனிச்சுவைகள நிறைந்து கிடக்கின்றன. இவற்றின் ஈடற்ற சுவைக்குக் காரணம். சொல்வளம்.
ஒரு மொழியின் நிலைபேற்றிற்கும் இறவாத் தன்மைக்கும் அழியாப்
புகழிற்கும் அம்மொழியின் நிரம்பிய சொல்வளமே காரணம். எனவே அவற்றின்
சொல்வளச் சுவையை பருகிமகிழலாம்.

                         சில சொற்களை அடையாளப்படுத்தலாம். இவற்றை நீங்கள் படித்து சுவைக்கலாம். மறந்தும்போகலாம். ஆனாலும் இதன் சுவை என்றைக்காவது நினைக்கும்போது சுவைக்கும். தமிழ்ச்சுவை என்றைக்கும் சுவைக்கும்.

                     இவற்றில் பல வகைகள் உண்டு. அவற்றில் அன்றைக்குப் புழங்கிய சில சொற்களுக்கான பொருள்களை மட்டும் முதல் வகையாக சுவைக்கலாம்.

                           ஏரின் வாழ்நர்=உழவர் (ஏரைத் தொழிலாகக் கொண்டு
                                                                                        பிழைப்பவர்)

                           கவைமுட்கருவி=அங்குசம்
                                                                 ( கவை போன்று வளைந்தும்
                                                                    நுனியில் முள்ளை உடையதும்
                                                                    ஆன கருவி)

                            வெண்கல் = உப்பு

                            அவிழ்பதம்= சோறு

                             கழிகலமகளிர்=விதவை (அணிகலன்களை நீக்கிய
                                                                                                               மகளிர்)

                             அறுகாற்பறவை/=வண்டு (ஆறு கால்களையுடையது)

                             
                              நேர்வாய்க்கட்டளை= சன்னல்

                               உரிமை மைந்தர் = கணவர்

                               மனை முதலோள்= மனைவி (வீட்டிற்கு முதல்வள்)

                               குளிர்= நண்டு

                               அணங்கு=பேய் (பெண் என்பது இன்றைய பொருள்)                                                                                                 

                               சுவையும் வகையும் தொடரும்.
                           
                           
                         
                             

Thursday, January 12, 2012


\ஒரு கனவு கொல்கிறது
ஒரு கனவு காயப்படுத்துகிறது
ஒரு கனவு ஆனந்தப்படுத்துகிறது
ஒரு கனவு நம்பிக்கையூட்டுகிறது
ஒரு கனவு எதிர்பார்க்க வைக்கிறது
ஒரு கனவு திறக்கிறது
ஒரு கனவு மூடிவைக்கிறது
ஒரு கனவு நிராசையாகிறது
ஒரு கனவு பேராசையாகிறது
ஒரு கனவு அலைக்கழிக்கிறது
ஒரு கனவு நிம்மதியாக்குகிறது
ஒரு கனவு கனவாகவே இருக்கிறது
ஒரு கனவு பயமூட்டுகிறது
ஒரு கனவு பதட்டப்படவைக்கிறது
ஒரு கனவு தைரியப்படுத்துகிறது
ஒரு கனவு குழந்தையைப்போல
ஒரு கனவு அப்பாவைப்போல
ஒரு கனவு அம்மாவைப்போல
ஒரு கனவு அக்காவைப்போல
ஒரு கனவு நட்பைப்போல
ஒரு கனவு காதலைப்போல
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
கனவு ஒவ்வொருவிதமாய்
ஒரே மனதுதான் ஒரே மனதுதான்
ஒரே கனவுதான் என்று உணர்த்தினாலும்
ஒரு கனவுதான் உறுதிசெய்யவேண்டும்...\\

Wednesday, January 11, 2012

முயல்குட்டி கவிதைகள்....



                           பூமியின்மேல் விழுந்த

                          சூரிய சூட்டைத் தணிக்கிறது
                          ஒரு குழந்தையின் நிழல்....

                          00000

                          வளையல் அணியும்  சிறுமி
                          வளைகிறதா
                          வளைக்கப்படுகிறதா?

                           0000

                           ஒரு குழந்தையை
                           மொழிபெயர்த்தேன்
                            வாழாத  வாழ்க்கை
                           கிடைத்தது...

                           ஒரு கடலை
                           மொழிபெயர்த்தேன்
                           ஆழத்தின் அறிவு
                            கிடைத்தது...

                            ஆகாயத்தை
                             மொழிபெயர்த்தேன்
                            மௌனத்தின் வரம்
                            கிடைத்தது...

                             பூமியை
                             மொழிபெயர்த்தேன்.
                             அழியாத நம்பிக்கை
                             கிடைத்தது...

                             ஒரு மனிதனை
                             மொழிபெயர்த்தேன்
                              என்னைத் தேடும்
                              தகவல் கிடைத்தது...

                              00000





                             
                           
                         

                                                

Tuesday, January 10, 2012

பயணம்


                     
                         அண்ணாமலை அரசரின் கருணைத் திறத்தால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அஞ்சல் வழியில் வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பில் அந்தந்த ஊரிலுள்ள சிறுசிறு கோயில்களைத் தரிசிப்பது கரும்புத் தின்ன கூலிபோல கிடைத்த வாய்ப்பாகும்.

                          இம்முறை தேனீ செல்லும் வாய்ப்பில் சனிக்கிழமை மாலையில் தேனியிலிருந்து அரைமணிநேரப் பேருந்து பயணத்தில் (அல்லது ஆட்டோ எனில் 100 ரூபாய்) குச்சனுர்ர் எனும் இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தமான கோயிலாகும். தானே  சுயம்புவாய் தோன்றிய கோயில் என்று அர்ச்சனை செய்யும் வயதான அர்ச்சகர் அதன் வரலாற்றைக் குறிப்பிட்டு சொன்னார். கிட்டத்தட்ட 10000 ஆண்டுகள் பழமையானது என்றும் சுவடிச் சான்று மூலம் 17 ஆம் நுர்ற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார். பல முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டின் தலைவர்கள் இக்கோயிலுக்கு வந்துசென்ற நிகழ்வையும் சொன்னார்.

                      பொதுவாக சனிஸ்வரர் கோயிலுக்கு செல்பவர்கள் அர்ச்சனை செய்ததும் எதனையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இக் கோயிலில் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம் எந்தக் கெடுதலும் இல்லை என்றும் சொன்னார். இக்கோயிலுக்கு இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் என பிற மதத்தவர்களும் வந்து வணங்கிச்செல்வதும் சிறப்பானது. இஸ்லாமியர்கள் இந்த சனீஸ்வரனை அப்துல்காதர் என்று பெயரிட்டு அழைப்பதாகவும் சொன்னார்.

                      கோயிலில் அர்ச்சனை தட்டோடு பொறி, உப்பு, மண் உருவிலான காகம், கருப்புத்துணி, அப்புறம் வழக்கமான தேங்காய் பூ பழம் போன்றவை.  பொறியைப் பிரித்து மனக்குறையை நீக்கு என்று அதற்குரிய இடத்தில் கொட்டச் சொல்கிறார்கள். உப்பு பரிகாரத் தீர்வாக அதற்குரிய தொட்டியில் கொட்டச் சொல்கிறார்கள். காக்காய் உருவத்தை தலையை ஒன்பது முறை சுற்றி காக்கைபோல குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் வாக்கில் நல்ல சொல் வரவேண்டும் என்றும் வேண்டி காக்கா மண்டபத்தில் அதனைப் போட்டுவிடவேண்டும்  அதன் பின்னர் அர்ச்சனை நடக்கிறது.

                கோயிலுக்குப் பக்கத்திலேயே அழகான வாய்க்கால் ஓடுகிறது குளித்துவிட்டு வழிபடவும் அல்லது கை. கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வழிபடவும் என.

               சிறிய கோயில் என்றாலும் சிறப்பாக இருக்கிறது.மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் என்றும் குறிப்பு உள்ளது.  இக்கோயில் பற்றி கோயிலில் இருந்த குறைவான நேரத்தில் சேகரித்த செய்திகள் இன்னும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்

                         ஒருமுறை போய்வரலாம்.

                          திருச்சி திண்டுக்கல் தேனி என்று பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்.

                         தேனியில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள்.

                        1, தேனியிலிருந்து குமுளி வழியாக 61 கி.மீட்டரில் தேக்கடி.

                        2, தேனியிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் குச்சனுர்ர் சனீஸ்வரர்
                             கோயில். -  அருகிலேயே  உள்ள  குருகோயில்.

                        3. தேனியிலிருந்து 25 கி.மீட்டரில் சின்னமனுர்ர்  என்ற இடத்தில்
                            இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் சென்று தெற்கு காளஉறஸ்தி
                            எனப்படும் (சின்ன திருப்பதி) தலத்தையும் சிறப்பாக வழிபடலாம்.

                        4. குச்சனுர்ர் அருகில் சிவகாமியம்மன் கோயில் உள்ளது.

                        5. தேனியிலிருந்து  30 கி.மீட்டர் தொலைவில் வீரபாண்டி எனும்
                             இடத்தில் ஆற்றின் கரையில் கௌமாரியம்மன் கோயில்
                             அமைந்துள்ளது.

                           தேனியிலிருந்து இரு வழிகள் வழியாக குச்சனுர்ர் செல்லலாம். ஒன்று சின்னமனுர்ர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லாம். இன்னொன்று தேனியிலிருந்து நேரடியாக குச்சனுர்ர் கோயில் அருகில் இறங்கிக்கொள்ளலாம். பேருந்து வசதி உள்ளது. குமுளி. கம்பம் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம்.

                           இரண்டாவது பயணம்

                           தேனீ . கோயம்புத்துர்ர் சென்று அங்கிருந்து சேலம் வழியாக சின்ன சேலம் வந்து தலைவாசல் எனும் ஊரில் இறங்கி கூகையூர் எனும் ஊருக்கும் செல்லும் வழியில் பல கிராமங்கள் உள்ளன. இவற்றில் அருகருகே சில கிலோமீட்டர் தொலைவுகளில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளன. இவையும் குறிப்பாக வழிபாடு செய்யவேண்டிய வரலாற்றுத்தலங்கள். இவை ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக எழுதுகிறேன். 



                         கடந்த சில தினங்களாக
                         இடுகையில் ஏற்பட்ட
                         பல்வேறு தொழில்நுட்பச்
                         சிக்கல்கள் காரணமாகப்
                         பலருக்கும் ஏற்பட்ட
                         இன்னல்களுக்குப் பொறுப்பேற்று
                         மன்னிக்க வேண்டுகிறேன்...


                          எனக்காக இடுகையைச சரியான
                          மொழியில் மீண்டும் பதிவிட்டுக் காட்டிய
                          கீதா அவர்களுக்கு
                           நான் என்றென்றும் நன்றி கடப்பாடுடையேன்..
                           மிகுந்த நன்றிகள் கீதா...


                          

Monday, January 9, 2012


நிறைய அதிர்ச்சிகள்
கிடைக்கின்றன...
சாதிசந்தையில் ஒரு கவிஞன்
தன் கவிதைகளை எதையெடுத்தாலும்
என்று கூவி விற்கிறான்...
இலக்கியக்கூட்டங்களில் சாதிய நரிகளின்
ஊளைகள் காற்றைக் கிழிக்கின்றன...
விளைமாதர்களைவிடக் கேவலமாய்
சாதியைப் புணர்கிறார்கள்...
எல்லாப் போராட்டங்களிலும்
வென்றெடுப்போம் என்கிறார்கள்
பன்றிகளின் தொங்கும் வயிறுகளைப்போல
வயிற்றை நிரப்பியபடி கூடுவோமென்று
புணர்ச்சிக்களையும் நாய்களைப்போல
எச்சில்வழியும் நாக்குகளைப் புரட்டியபடி...    
  
                  

Sunday, January 8, 2012

யாரிடமேனும்....




யாரிடமேனும்
எதையேனும்
எப்படியேனும்
பேசிவிடத் துடிக்குது
மனசு
யாரும்
எதையேனும்
எப்படியேனும்
வெறுப்புக் காட்டும்
தருணத்திலும்..

Saturday, January 7, 2012

தொலைக்க சில பொம்மைகள்...


ஒரு குழந்தையின் பொம்மை 
தொலைந்துவிட்டது
என்ன பொம்மையென்று
சொல்லத்தெரியவில்லை.
ஆனால் அழுகிறது தொலைந்த 
பொம்மைதான் வேண்டுமென்று 
பிடிவாதத்துடன் 
தொலைந்த பொம்மையைத் தேடுவதிலும் 
குழந்தையை சமாதனப்படுத்துவது எளிதென்று 
ஒரு யோசனை சொல்லப்படுகிறது 
அது சரியாகாது பிடிவாதத்திடம்
என்று சொன்னால் உங்களைபோல்தான்
பிள்ளையும் பிறந்திருக்கிறது என்கிறார்கள்.
எதை தொலைப்பது ? எதை தேடுவது ?
இந்த தொலைந்தும் தேடும் வாழ்க்கையில்
    
    

நிர்பந்தம்

இம்சையாகவே இருக்கிறது 
இயலாமையிலும் சங்கடத்திலும் 
சகித்துக்கொள்ளமுடியாமலும் 
அவமானத்திலும் காயங்களிலும் 
சிலசமயம் சில மிருகங்களிடம் 
பொழுதுகளை தொலைக்கவேண்டியிருக்கிறது   
ஆனாலும் 
வாழ்வின் கடைசி இருப்புவரை அவை 
மிருகங்களாகவே வாழ்ந்து மிருகங்களாகவே சாகும் 
என்ற ஊழ்வினையின் நிறைவில் 
மிச்ச வாழ்வு மீந்தேரும் எப்பொழுதும்...   
   

Thursday, January 5, 2012

விருதும் விவகாரமும்

விருது என்பது ஒரு படைப்பினை வெகுவாசிப்பின் தளத்தில் கொண்டு நிறுத்த உதவும் ஒரு சிறுகூறு.அவ்வளவே. பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளுக்காகவும் தனித்த செயல்களுக்காகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன. படைப்பிலக்கியத்தில் இப்படியான பல விருதுகள் வழங்கப்பட்டு வருவது நடைமுறையிலுள்ளது. ஆனால் தொடர்ந்து முற்றுப்பெறாமல் தீர்க்க முடியாத நோயைப்போல இந்த சாகித்திய அகாதெமி விருது மட்டும் நீண்ட பிரச்சினைகளின் இருப்பாகவே இருக்கிறது என்பதை ஒவ்வோராண்டும் அதுகுறித்த பல்வகைப் படைப்பாளிகளின் பேச்சுக்கள். விவாதங்கள் எடுத்துக்காட்டிக்கெர்ண்டேயிருக்கின்றன. இது எப்படி நலம் பயக்கும் என்கிற கவலைதான் இந்தப் பதிவை எழுத வைத்த காரணம்.

திருமிகு சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் எனும் நாவலுக்கு இவ்வாண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. நாவல் வெளிவந்ததிலிருந்து அது ஆயிரம் பக்க அபத்தம், நாவலுக்கான தகுதி அதற்கு இல்லை.. தரமற்றது... வெறும் குப்பை எனப் பல கருத்துபேதங்கள் அதுகுறித்து வைக்கப்பட்டன. தற்போது அதையும்தாண்டி அதற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது சிந்தனைக்குரியதாகிறது.

சனவரி உயிர்மை இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இதுகுறித்து கடுமையான சொற்பிரயோகம் செய்திருக்கிறார்.

வருடாவருடம் சாகித்ய அகாதமி விருதை விமர்சித்து எழுதுவது என்பது ஏதோ செத்தவர்களுக்குத் திதி கொடுப்பதுபோல் ஆகிவிட்டது என்று கடுமையாகத் தொடங்குகிறது அந்த கருத்துகோர்வை. தமிழில் எந்த முக்கியத்துவமும் பெறாத ஓர் இளம் எழுத்தாளரின் புத்தகத்தைக கண்டுபிடித்து அவருக்கு விருது வழங்குவது இப்போது நான்காவதாக ஒரு வகைமாதிரியை அது உருவாக்கியிருக்கிறது.... என்று தொடர்ந்து உங்களுக்கு ஏதாவது அறிவு நாணயம் இருக்கிறதா? எப்போதாவது உங்கள் மனசாட்சியை நீங்கள் விழித்தெழ அனுமதிப்பீர்களா? சு. வெங்கடேசன் இந்த விருதைப் பெற்றுக்கெர்ள்வதன் வாயிலாக தனது முக்கியமான சக படைப்பாளிகளையும் மூத்த படைப்பாளிகளையும் இழிவுபடுத்தும் சாகித்ய அகாதமியின் செயலில் பங்கெடுத்திருக்கிறார்.

இத்தனை கடுமையான விமர்சனம் குறித்து தொடர்ந்து விவாதிக்க நான் அந்த நாவலை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு முன்பாக நானும் ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி ஒரு சராசரி வாசகனாக சில கேள்விகளை இந்தப் பதிவைப் படிக்கப் போகும் உங்களுக்கும் கவிஞர் மனுஷ்யப்புத்திரனுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. விருது என்பது ஒருவிதத்தில் படைப்பாளிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பதையும்
தாண்டி அது உள்ளுக்குள் படைப்பாளியைப் பலவீனப்படுத்துகிறது என்பது என்னுடைய
கருத்து.

2. சு.வெங்கடேசனுக்கு முன்னதாக மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பல
படைப்பாளிகள் மிகமிகத் தரமான படைப்பாளிகள் இருப்பது உண்மைதான். அவர்கள்
காட்டும் இந்த தீவிரம் இதுபோன்ற விருதுகளை முன்வைத்து துரத்துதல்தானா?

3. உண்மையான விருது என்பது பெரும்பான்மை மக்களின் வாசிப்பின் தீவிரம்தான்.
அவர்களின் அளவுகடந்த பேச்சுதான் விருதின் உச்சம். அப்படியிருக்க அதைவிட
சாகித்ய அகாதமிக்கான முனைப்பு ஏன்?

4. தமிழ்ப் படைப்புலகில் காலங்காலமாக குழுக்களாக அங்கங்கே செயல்பட்டுவரும
அவலம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. இப்படி இயங்கும் குழுக்களைச் சேர்ந்தவர்
கள் ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்வதும்.. அதுதான் பிழைப்பென்று தினமும்
இதழ்களில் சந்திசிரிக்கிற சண்டைகளை வாசித்ததுண்டு. அது மட்டுமல்லாமல்
ஒவ்வொரு குழுவின் படைப்பாளிகளுக்கும் தாங்கள்தான் தரமான இலக்கியத்தை
படைக்கிறோம்..அதற்கு இதுபோன்ற விருதுகள் அவசியம் தரப்படவேண்டும்
என்பதை ஒரு தொழிலாகவே செய்துவருகிற வேதனையையும் பகிர்ந்துகொள்ளத்
தான் வேண்டியிருக்கிறது. குழு மனப்பான்மையை விட்டு அகலமுடியாத இன்றைய
சூழலில் இவர்கள் விருதை மட்டும் நோக்கி போருக்குச் செல்வது இவர்களின்
எத்தகைய செயலை முதன்மைப்படுத்துகிறது.

5. அறிமுக எழுத்தாளன் அல்லது எழுதிய முதல் படைபபிலேயே ஒரு எழுத்தாளன்
அங்கிகரிக்கப்பட்டால் அது தேசக்குற்றமா? இது திரு சு.வெங்கடேசனை நியாயப்
படுத்துவதில்லை. பாரதியாரின் கவிதையே நிராகரிக்கப்பட்ட வரலாற்றைப்
படித்துதானிருக்கிறோம்.

6. எனவே இதுகுறித்த ஒருசார்பான கருத்து எதிர்ப்பை அல்லது முரணை மட்டும்
ஒரு முடிவுக்கு வந்தவிடமுடியாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

7. முற்றாக தவறென்று மனுஷ்யப்புத்திரன் கருத்தையும் உதறிவிடமுடியாது.
ஏனென்றால் சாகித்ய அகாதமி விருது வழங்குவதில் பல அரசியல் செயல்படுவதை
ஆண்டுக்காண்டு அல்லது விருது வழங்கப்பட்டபின் அறிய முடிகிறது.


எனவே இயலுமாயின் அந்தக் காவல்கோட்டம் நாவலைப் படியுங்கள். உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். காத்திருக்கிறேன். பத்துபேர் கருத்தாக இருந்தால்கூட அதுகுறித்த எந்த் விவாதத்தையும் சாகித்திய அகாதமி குழுவோடு அல்லது இதுகுறித்து முரண்படுகிற படைப்பாளிகளிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்பது என் ஆசை.

காத்திருக்கிறேன். உங்களின் வசதிக்காக காவல்கோட்டம் நாவல் குறித்த ஒரு விமர்சனத்தை உங்கள் பார்வைக்காக. இது நாவலைப் படிக்க வைக்கும் என்கிற நம்பிக்கையில்.

வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 பக்கங்கள்: 1048 விலை: ரூ. 590
எங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம் - ஆ.இரா. வேங்கடாசலபதி

இந்த ஆயிரம் பக்க நாவலைப் படித்து முடித்ததும் ஏற்படும் உணர்வு மலைப்பும் பிரமிப்பும்-மலைப்பூட்டுவது ஆசிரியருக்கு நோக்கமாக இல்லாத போதும். மலைப்பு நீங்காத நிலையிலேயே இம்மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கையோடு தொடர்கிறேன்.

பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய "நல்ல நாவலும் மகத்தான நாவலும்" என்ற மலையாளக் கட்டுரையை- நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பில்- படித்தது நினைவுக்குவருகிறது. "காவல் கோட்டம்" நல்ல நாவல் என்பதில் ஐயமில்லை. மகத்தான நாவலா என்பதை இனி பார்ப்போம்.

ஒருவகையில் "காவல் கோட்டம்" உண்மையான வரலாற்று நாவல். வரலாற்றைப் போலவே நாவலிலும் காலம் என்ற கூற்றின் ஊடாட்டமே கட்டுக்கோப்பைத் தருகிறது. "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" நாவலில் மூன்றாண்டுகள் தொழிற்படுகின்றன என்றால் "காவல் கோட்டத்தில் அறு நூறாண்டுகள் தொழிற்படுகின்றன. சுந்தர ராமசாமி கையில் நுண்ணோக்காடி. சு. வெங்கடேசனிடம் தொலை நோக்காடி.

விரிவும் நுட்பமும்- ஆசிரியர் இடையிடையே குறுக்கிட்டுப் பேசாமல் இருந்திருந்தால் இன்னும் - ஆழமும் கூடியிருக்கும் நாவல் இது. பதிநான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக் காபூரின் மதுரைப் படையெடுப்பின்போது கொல்லப்படும் காவல்காரன் கருப்பணனின் மனைவி சடைச்சி தாதனூரில்- இது மதுரைக்கு மேற்கே சில கல் தொலைவில், சமண மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாகக் குறிப்பு-தன் கால்வழியை நிறுவிக் கிளை பரப்பும் கள்ளரின் கதை இது. இதைத் தாதனூர் மான்மியம் என்றும் சொல்லலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரை நகரக் காவல் உரிமை பெற்று, வெள்ளையராட்சியிலும் அதனை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் தாதனூர்க் கள்ளர்கள், குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டு (பெருங்காம) நல்லூர் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது.

இந்த நாவலைப் பற்றிப் பேசும்போது விரிந்த கித்தானில் வரைந்த ஓவியம் என்ற உருவகம் பயன்படுத்தப்படுவதைக் கேட்டேன். சுவரோவியம் என்பதே அதைவிடப் பொருத்தமாகலாம். எங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம்.
தெலுங்குச் சாதிகள் தமிழகத்தில் காலூன்றியது, பாளையப்பட்டுகள் உருவான கதை, யூனியன் ஜாக் கொடி கட்டிப் பறந்தது, வைகை அணைக்கட்டுத் திட்டத்தின் செயலாக்கம் எனப் பல்வேறு செய்திகள் கதைப் போக்கோடு இணைகோடுகளாக வரையப்பட்டுள்ளன.

வெளவால் வகைகள், கள்ளி வகைகள், வேட்டையின் நுட்பங்கள் எனப் பல்வேறு நுட்பங்கள் நாவலில் விரவியுள்ளன. போர், போர்முறைகள், கோட்டை அமைப்பு, கொத்தளம், வளரி, வல்லயம், அலங்கம் ... எனப் போர்ச் செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. (ஆனால் தமிழகக் கோட்டைகளின் சிறப்புக் கூறான சரக்கூடு பற்றி எங்கும் குறிப்பில்லை!)
கள்ளர் சாதியைப் பற்றிய விரிவான இனவரைவியல் செய்திகள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. கள்ளர் சமூக அமைப்பு, குடும்ப உறவுகள், வகையறாக்களின் தோற்றம், சாமிகளின் பிறப்பு, வழிபாடு, கவரடைப்பு எனும் விருத்தசேதனம், காது வளர்த்தல் என - லூயி துமோந்தின் ஆய்வு நூலில் கூடக் காண முடியாத-செய்திகள் நாவலில் பொதிந்துள்ளன.
தாதனூரின் மாந்தர்கள் நிணமும் தசையுமாக நாவலில் உயிர் பெற்றுள்ளனர். இவ்வளவு உயிரோட்டமான கிழவிகளைத் தமிழ்ப் புனைவுலகு இதுவரை கண்டதில்லை.
நாவலில் விவரிக்கப்படும் களவுக் கலைநுட்பங்களைச் சொல்லி மாளாது. "காவல் கோட்டம்" என்பதற்குப் பதிலாக இந்நாவலுக்குக் "களவியல் காரிகை" என்றே பெயரிட்டிருக்கலாம்.
தமிழின் சொல் வளத்தையும் விரிவையும் காட்டக்கூடியதாக மொழி அமைந்துள்ளது. தமிழ் அகராதிகள் இன்னமும் எவ்வளவு குறைபாடுடையவை என்பதைக் "காவல் கோட்டம்" உரக்கப் பறைசாற்றுகிறது.

கவரடைப்பு செய்தபின் சிறுவர்கள் கிணற்றுக்குள் குதிக்கிறார்கள். குருதி "மெல்லக் கசிந்து நீருக்குள் செம்மண் புழுப்போல ஊர்ந்து போனது..." என்ற படிமம் "பொடி மணலில் சுருளும் கபம்" என்பதைப் போல் மறக்க முடியாததாக மனத்தில் நிற்கிறது.

இருளைப் பற்றி- இருட்டைப் பற்றியல்ல - எவ்வளவு விரிவான வருணனைகள்! இருளில் இத்தனை நிறங்களா, அடர்த்திகளா, தன்மைகளா, நீர்மைகளா என வியக்கும்வண்ணம் நாவலெங்கும் பரந்து விரிகின்றது இருள். இருளுக்குள் துலங்குகிறது "காவல் கோட்டம்".

"காவல் கோட்டம்" என்ற நல்ல நாவலை மகத்தான நாவல் என்று உடனே அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத அளவுக்குச் சில தடைகள் இல்லாமலில்லை.
நீளம். ஆயிரம் பக்கம் என்பதனாலல்ல இந்தக் குறை. குறளுக்கு ஒரு சீர்கூட மிகை. கம்பராமாயணத்திற்குப் பல நூறு மிகைப் பாடல்களும் சாலும். கறாரான கத்தரிக்கோலால் ஓர் இருநூறு பக்கம் குறைவான ஆனால் செறிவான நாவலாகக் "காவல் கோட்டம்" அமைந்திருக்க முடியும். சில இயல்களை அப்படியே நீக்கியுமிருக்கலாம்.

பல ஆண்டுகள் விரிவான படிப்பு, வரலாற்று ஆவணங்களிலும் நூல்களிலும் தோய்வு, நேரிடையான கள ஆய்விலும் வாழ்விலும் பெற்ற தரவுகள் எல்லாவற்றையும் - இனி தன்னிடம் வண்ணங்களே இல்லை எனும் அளவுக்கு - கொட்டித் தீர்த்திருக்கிறார் சு. வெங்கடேசன். இதன் விளைவாக நாவலை எங்கு முடிப்பது எனத் திண்டாடியிருப்பதும் தெரிகிறது. இதனால் தாதனூர் பற்றிய கதை (பெருங்காம) நல்லூரில் முடியும் பொருத்தமின்மை தலைதூக்குகிறது.

அபாரமான வருணனைகள் நிரம்பிய இந்த நாவலில் சில விவரிப்புகள் - முக்கியமாக வரலாற்றுப் பின்புலத்தைச் சுருக்கமாகத் தீட்டிக் காட்டும் இயல்களில்-மிகத் தட்டையாக அமைந்துள்ளன.

நாவலின் வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத பலவீனமான தலைப்பு "காவல் கோட்டம்". ஒரு நல்ல பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பாராட்டுக்குரிய நாவலுக்கு இத்தனை ஒற்றுப்பிழைகளும், ஒருமை பன்மை மயக்கங்களும் ஏற்புடையனவல்ல. மேலும் நகைச்சுவை என்பது மிக அருகியே காணப்படும் ஒரு நாவலாகவும் "காவல் கோட்டம்" அமைந்துவிட்டது.
இவை எல்லாவற்றுக்கும்கூட அமைதி கண்டுவிடலாம். இந்நூலின் அரசியல்தான் மிகவும் இடறுகின்றது. "காவல் கோட்டம்" முன்வைக்கும் சாதிப் பெருமை கடுமையான விமரிசனத்திற்குரியது.

சட்டக் கல்லூரியின் துண்டறிக்கையில் டாக்டர் அம்பேத்கரின் பெயர் நீக்கப்படும் காலம் இது. இன்றளவும் மேலக் கள்ளர் நாட்டில் "மதுரை வீரன்" திரையிடப்படுவதில்லையாம். போக்குவரத்து நிறுவனத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கப்போய் திருவள்ளுவர் முதல் அனைத்துப் பெரு மக்களின் பெயர்களும் இல்லாமல் போயின.
"காவல் கோட்டம்" களவின் நியாயங்களை மட்டும் முன்வைக்கவில்லை. அதனை மகத்துவப்படுத்துகிறது, காவியப்படுத்துகிறது.

"எல்லாச் சொத்தும் களவே" என்றார் சோசலிச முன்னோடி புரூதோன். "சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்" என்றார் பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ.பி. தாம்சன். ஆனால் களவுக்குப் பின்பும் வர்க்கம் உண்டு. தாதனூர்க்காரர்களின் எல்லாக் களவுகளையும் காவியப்படுத்தியுள்ளார் சு.வெங்கடேசன். தாது வருஷப் பஞ்சத்தின்போது தானிய வண்டிகளைப் பசித்த ஏழை மக்கள் வழிமறிக்கிறார்கள். பதுக்கல் வியாபாரிகளின் சார்பாகத் தாதனூர் காவல்காரர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள். குடியானவன் உழைப்பில் உருவான ஏழு மாதப் பயிரை இரவோடிரவாகக் கதிர் கசக்குகிறார்கள். காவல் கூலி தண்டுவது போதாதென்று துப்புக்கூலியும் வாங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியரின் சார்பு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. காவல்காரர்களின் அக்கிரமங்களைத் தாங்க முடியாமல் மூன்று மாவட்டங்களில் விவசாய வெகுமக்கள் "பண்டு" திரட்டிக் கிளர்ந்தெழுகிறார்கள். இந்த முற்போக்கு நாவல் இவ்வெழுச்சியைக் கொச்சைப்படுத்துகிறது.

1899-இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில் மேலநாட்டுக் கள்ளர்கள் முக்கியப் பங்காற்றினர் என்பது வரலாறு. மதுரைக்கு வெளியே அமைந்த வண்டிப் பேட்டைக்குத் தாதனூர்க்காரர்கள் காவல் காத்ததைச் சொல்லும் "காவல் கோட்டம்" சிவகாசிக் கொள்ளையைப் பற்றி மௌனம் சாதிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது.
தாதனூரின் ஒவ்வொரு நபரும், பெரியாம்பிளையும், கிழவிகளும்- புத்திக்கூர்மை குறைந்த மங்குணிவார - தனித்த அடையாளங்களோடு விளங்கும் இந்த நாவலில் சேவைச் சாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அடையாளமுள்ள மனிதர்களாக இல்லை - அதே வேளையில், வேல. ராமமூர்த்தியின் "கூட்டாஞ்சோறு" நாவலில் உள்ளதுபோல் சுயமற்றவர்களாகவும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். பிறரின் வன்முறை கொடூரமாகச் சித்தரிக்கப்படும் இந்நாவலில், கள்ளரின் வன்முறை இயல்பானதாகவும் கொண்டாட்டத்திற்குரியதாகவும் காட்டப்படுகிறது.
இந்த நாவலும் இதன் ஆசிரியரும் இக்கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்?

கான முயல் எய்துவதற்காக சு.வெங்கடேசன் அம்பேந்திச் செல்லவில்லை. ஆனால் அவர் கையில் வேலும் இல்லை. ஏனெனில் மகத்தான நாவல் என்ற யானையின் மத்தகத்தில் அது செருகியுள்ளது. யானை விழுமா விழாதா என்பது காலத்தின் கையில்.

(நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் - காவல் கோட்டம் (நாவல்), ஆசிரியர்: சு. வெங்கடேசன், பக்: 1048, விலை: ரூ. 590, முதற்பதிப்பு: டிசம்பர் 2008, வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14)

விமர்சனம் - நன்றி தமிழ்கூடல்.

Wednesday, January 4, 2012



துர்த்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது தவறான மன்னிக்க முடியாத செயல். ஓர் உயிர் காக்கும் மருத்துவரைக் கொல்லுதல் என்பது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது. வலிக்கவே செய்கிறது. இருப்பினும் ஒவ்வொரு துறையிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக ஒட்டுமொத்தத் துறையையும் தவறென்று சொல்லிவிடுதல் முறையாகாது. நன்றாக நினைவுடன் சென்ற என் தந்தை ஒரு நரம்பியல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்று கடைசிவரை நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். இன்றைக்கும் அவர் ராசியான மருத்துவர் என்று கூட்டம் அலைமோதுகிறது. என்ன செய்யமுடியும். இயலாமையில் கோபப்பட்டு மன உளைச்சல்தான் மிஞ்சியது. இன்னொன்றும் சொல்லத் தோணுகிறது. இதழ்களும் பத்திரிக்கைகளும் மருத்துவச் செய்திகள், மருத்துவச் சிறப்பிதழ் என்று பல்வகை மருத்துவ விளம்பரங்களோடுஏராளமான கட்டுரைகளை வெளியிட்டு மக்களை வெகுவாக அச்சுறுத்தியே கொல்கின்றன.இக்கட்டுரைகளில் ஒரு நோய் குறித்து வேறுவேறுவிதமான அறிகுறிகளையும் ஒரு மருத்துவர் சொல்வதை இன்னொருவர் மருத்துவர் மறுத்தும் எனவும் வெளியாகின்றன. எனவே சாதாரண வலியைக்கூட பெரிய நோய்க்கான அறிகுறியாக எண்ணி மனசிதைவுக்கு ஆளாகும் மக்கள் அதிகம். எனவெ நோய் வருவதும் அதற்கு சிகிச்சை மேற்கொண்டு பிழைப்பதும் அல்லது இறப்பதும் தவிர்க்கமுடியாதது. அது இயல்பானது. அததது அதனதன் இயல்பான போக்கில் இருக்கட்டுமே..

காசு, பணம் சிகிச்சை இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானமிக்க பல மருத்துவர்களால்தான் உயிர்கள் பிழைத்துக்கிடக்கின்றன. இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சிலர் மருத்துவர்களாக இருந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளிலும், வேறு சில தொழில்களிலும், ரசிகர் மன்றங்களில் தங்களை இணைத்துகொண்டு இருக்கிறார்கள். மருத்துவர் பணி என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே வேறு ஈடுபாடின்றி உயிர் காக்கும் ஒன்றில் மட்டும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால் போதும். பணத்தை ஈட்டுவது எளிது. மனிதர்களை ஈட்ட முடியாது. எந்த விளைவும் விதியின் பயனால் மருத்துவர்களுக்கும் நேரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தால் போதும். தொழில் செய்தால் போதும்.

000000

புத்தரின் புன்னகையும்
மோனாலிசாவின் புன்னகையும்
ஒன்றல்ல..
ஒன்றாயிருப்பதெல்லாம்
ஒன்றையே உணர்த்துவதிலலை
உணர்த்துத்ல் என்பது
அவற்றின் வேலையல்ல
ஆனால்
உணர்தல என்பது
பொறுப்பும் உயிருமாகிறது..
மகாவீரரின் புன்னகை தவமும்
சிலுவையிலறையப்பட்ட ஏசுவும்
வேறல்ல
வேறாகயிருப்பதெல்லாம்
வேறுபாட்டை உரைப்பதில்லை
உரைப்பது வேலையில்லை
கரைவதுதான்
பொறுப்பும் உயிருமாயிருக்கிறது..

காந்தியின் புன்னகையும்
தெரசாவின் புன்னகையும்
வழிமொழிதல்தான்
மேன்மைமிகு வழிமொழிதல்தான்..

வழிமொழிதல் என்பதும்
வாழ்வதிலான கூறுகளில் ஒன்றுதான்
கடைசிவரை ஒன்றுதான்...

00000

Tuesday, January 3, 2012

இன்றைய வாசிப்பு

இன்றைய வாசிப்பில் கிடைத்த புத்தகம் இது.

தலைப்பு கணித மேதை சீனிவாச இராமானுஜன். இதன் ஆசிரியர் திருமிகு கி.ஜெயக்குமார் அவர்கள்.

புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அதன் ஆசிரியர் பற்றி குறிப்பிடவேண்டும்.


பொதுவாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருசிலரைத் தவிரப் பெரும்பான்மையானவர்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிப்பதிலும் அல்லது வேறு பல உப தொழில்களிலும் கவனம் செலுத்தி வருமானம் பெறுவது என்பதைத்தான் கவனத்தில் கொண்டிருப்பார்கள். இதுதவிர அவர்களின் பணிச்சூழலில் வகுப்புகள் எடுப்பதும், வகுப்புத் தேர்வுகள் நடத்துவதும், விடைத்தாள் திருத்துவதும், இன்ன பிற பணிகள் என அமைந்திருப்பதால் விட்டால் போதும் என்றிருப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து மாறுபட்டு ஒரு கணித ஆசிரியராக இருந்து தனது பணிகளை செய்துகொண்டும் வருமானத்திற்கு வழிதேடாமல் புத்தகம் எழுதுகிறார் என்றால் அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தானே? சொந்தமாகப் புத்தகம் போடுவது என்பது தற்கொலைக்கான முயற்சி. அதிலும் ஏனோதானோவென்று போடாமல் உண்மையான உழைப்பில் தேர்ந்த நடையில் முழுத்தகவல்களுடன் கணிதமேதை குறித்த இந்த புத்தகம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

அதற்காக ஆசிரியர் ஜெயக்குமாரை பாராட்டலாம். தவிரவும் இதுதவிர இன்னும் 3 புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றுவது தஞ்சையின் கரந்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கத்தின் உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியில். பாரம்பரியப் பெருமைமிக்க சங்கத்தில் இருந்து வந்துள்ள திரு ஜெயக்குமார் அதன் பண்பாட்டைப் பேணும் தகைமையைக் கொண்டவராக இருப்பதும் மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.


இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்குகிறது இப்புத்தகம். அவரின் கல்விச்சூழல் எத்தகைய இடர்களையும் வறுமையையும் கொணடிருந்தது என்று தொடங்கி அந்தக் கல்விக்காக அவர் பட்ட இன்னல்களையும் விவரிக்கிறது. மூன்று உடன்பிறந்தவர்களை இழந்து கணிதம் தவிர மற்றபாடங்களில் தோல்வியுற்றதால் உதவிதொகைப் பெறமுடியாமல் படிப்பை நிறுத்திவிட்ட சூழலில் ஊரைவிட்டு ஓடி இப்படி பல மனஉளைச்சல்களைச் சந்தித்தவர் ராமானுஜன். இருப்பினும் பல்வேறு உதவும் மனம்கொண்ட பலரால் அவரின் கணித அறிவுக்கு இலண்டன் சென்றால்தான் வெளிச்சம் கிடைக்கும் என்பதை உறுதிச்செய்யப்பட்ட சூழலில் இலண்டன் செல்கிறார். இதற்கிடையில் நடந்த பல்வேறு கடிதப் பரிமாற்றங்களை இப்புத்தகம் எடுத்துக் காட்டுகிறது. அவற்றின் வழி கணிதமேதையின் அறிவை உலகம் அறிய என்ன பாடுபடவேண்டியிருந்தது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

இல்ண்டனில் இராமானுஜனை நிலைக்க உறார்டியும் நெவிலும் மேற்கொண்ட செயல்கள் பெருமிதமானவை. இராமானுஜனின் கணித தேற்றங்களைக் கண்டு மலைத்துபோனவர் உறார்டி. ஏற்கெனவே கண்டறியப்ப்ட்டதும்... 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட தேற்றங்களும்.. இதுவரை கணித உலகம் கண்டறியாத தேற்றங்களும் என அவை குவிந்து கிடந்தன. ஏழாண்டுகளுக்கு மேல் இராமானுஜத்தின் கணித தேற்றங்களை ஆராய்ந்த உறார்டி குறிப்பிடுகிறார் இதுவரை இரண்டு அத்தியாயங்களை மட்டுமே ஆராய்ந்துள்ளேன் என்று. இது இராமானுஜத்தின் மிகப்பெரும் மேதையைமைப் பறைசாற்றும் சத்தியங்கள்.

பலவகைகளிலும் பாதிக்கப்பட்ட கணிதமேதை காசநோயால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவிக்கும் தாயாருக்கும் இருந்த முரண் அவரையும் பாதித்திருக்கவேண்டும். மன உளைச்சல் அவரைப் படுத்தியது. 1918 இல் அவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதும் அதனால் கைதானது பின்னர் விடுவிக்கப்பட்டதும் எல்லாம் படிப்போரை மனம் கசியவைக்கும் செய்திகள். பெலோ ஆல் ராயல் சொசைட்டியின் விருதையும் பெற்றார். மிகச் சிறிய வயதில் அதாவது 33 வயதில் கணித மேதை இறந்துபோனார்.

பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற மாமேதையின் மரணம் குறித்த செய்தி மிகவும் வேதனையைத் தருவதாகும். இப்புத்தகத்தில் ஆசிரியர் எழுதகிறார்..

தங்கள் சமுக நெறிகளை மீறி கடல் கடந்து சென்றதாலும் இந்தியா
திரும்பியபின் இராமேசுவரம் சென்று தன்னைப் புனிதப் படுத்திக்
கொள்ளாததாலும் இராமானுஜனது நெருங்கிய உறவினர்களில்
பெரும்பாலானவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை.


பாரதி இறந்தபோது அவன் உடலில் மொய்த்த ஈக்களைவிட அவன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் குறைவு என்று கேட்டதுண்டு. மாமேதைகளுக்குப் பாரத தேசம் தரும் கௌரவம் மரியாதை இதுதான் போலும்..

கணித மேதை இராமானுஜன் பற்றி அறிந்திருந்தாலும் நுர்லாசிரியர் இந்நுர்லைத் திறம்பட எழுதியுள்ளமை மறுபடியும் வாசிக்க வைக்கிறது. அவசியம் வாசிக்கலாம்.


புத்தக விவரம். கணித மேதை சீனிவாச இராமானுஜன். ஆசிரியர் கி.ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), உமாமகேசுவரனார் மேனிலைப்பள்ளி, கரந்தை, தஞசாவூர்/613 002.
புத்தகத்தின் விலை 60 ரூபாய்.

கி.ஜெயக்குமார் - Karanthaijayakumar.blogspot.com கைப்பேசி எண்.9443476716

Monday, January 2, 2012


இடறிவிழும்போது
எழுகின்ற வலி
வலிக்கவே செய்கிறது
யாரையேனும்
இடறச் செய்த வலியை
வலியுறுத்தி...

00000

புத்தாண்டில்
கடவுளுக்கும் எனக்குமான
விவாதம் நடந்தது
யார் யாருக்கு முதலில்
புத்தாண்டு வாழ்த்து
தெரிவிப்பது..
ஆச்சர்யமுடன் சொன்னேன்
இதென்ன கூத்து
எப்போதும் உலகின் முதல்வன் நீதானே
உன்னை வாழ்த்தி உன்பெயரால்
மற்றவர்களை வாழ்த்துதல்தானே
வழக்கம்..என்று..
கடவுள் சிரித்தபடி சொன்னார்
கோடானுக்கோடி யுகங்களாய்
உங்கள் வாழ்த்துக்கள்
குவிந்துவிட்டன..ஆனால் எதுவும்
வாழ்த்தாக இல்லை..
அதனால்தான்
ஒரேயொரு வாழ்த்தை
கோடானுககோடி உயிர்களுக்கு
சொல்கிறேன்..
முதலில் உங்களுக்கு
உண்மையாய் இருங்கள்...

00000



குட்டிக்கதைகள்..


புத்தாண்டில் கடவுள் பூமிக்கு வந்தார். விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் போய் உனக்கு ஒரு அற்புத வரம் தருகிறேன் கேள் என்றார். குழந்தை சட்டென்று திரும்பி ஓங்கிக் கடவுளை அறைந்துவிட்டு சொன்னது நான் சாமியோட விளையாடிக்கிட்டிருக்கேன்..போ.. என்று தன் விளையாட்டுப் பொருள்களுக்கிடையே கிடந்த கடவுள் பொம்மையைக் கைகாட்டிவிட்டு சிரித்தது. கடவுள் மறைந்துபோனார்.


0000


கொலு வைத்திருந்தார்கள். கடவுள் பொம்மைக்குப் பக்கத்தில் ஒரு நாய் பொம்மையை வைத்துவிட்டு பாப்பா சொன்னாள் சாமியை ஜிம்மி பாத்துக்கும்ல...

0000

ஒரு குடிகாரன் நிறைய குடித்திருந்தான். சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து பாதி சாப்பிடும்போதே மயங்கிவிழுந்துவிட.. வழக்கமாய் காத்திருக்கும் நாய் அந்த பொட்டலத்தைச் சாப்பிட்டு முடித்த்து. மறுநாள்..ஏம்பா இப்படி குடிச்சிப்புட்டு வயித்தைக் காயப்போடறே..பாதி சாப்பிடறே மிச்சத்தை நாயில்ல சாப்பிடுது...பரவாயில்ல சார்..எப்படியோ வீணாப் போவாம யாரோ சாப்பிட்டா சரி..

000



ஔவையார் அதியமான் இறந்தபோது ஒரு பாடல் எழுதினார். புறநானுர்ற்றுப் பாடல் அது. அது இலக்கணத்தை மீறிய பாடல். ஔவையாருக்கு மரபு தெரிந்திருந்தும் ஒரு இடத்தில் 4 சீரும் இன்னொரு இடத்தில் 5 சீரும் என இலக்கணம் மாறிக்கிடந்தது அப்பாடல். இதைப் பற்றி அப்துல் ரகுமான் குறிப்பிடும்போது கவிதைக்கு இலக்கணத்தைவிட உணர்ச்சி முக்கியம். அதியமானிடம் கொண்டிருந்த நட்புணர்ச்சி அப்படி. எனவேதான் அழுகை பெருகி வரும்போது அது ஆசிரியப்பாவுக்கு அடங்குவதில்லை. கண்ணீர் பெருக்கெடுக்கும்போது அது கட்டளைக் கலித்துறைக்குக் கட்டுப்படாது என்று எழுதினார். அற்புதமான ஆய்வுக்கருத்து இது. அனுபவிக்க அந்தப் பாடல் கீழே.

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கட் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெறுஞ்சோற்றாலும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
நரந்தம் நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று அவன்
அருநிறுத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

பாடலின் பொருள்

அதியமான் எனக்குத் தந்தை போன்றவன். அவனைக் கொன்ற மரணம் என்ற அம்பானது அவன் மார்பகத்தைத் தைத்தபின்..அவனை இரந்து வாழும் பாணர்களின் சோற்றுப்பானைகளை உடைத்தது..அவனின் சுற்றத்தினரின் கண்களைப் பறித்தது..அவனை நம்பி வாழ்ந்த என்போன்ற புலவர்களின் நாக்கையும் துளைத்தது..இனி பாடுவோரும் இல்லை.. பாடுவோர்க்குப் பொருள்தரும் அவனும் இல்லை..அப்படிப்பட்டவன் அதியமான். அவன் சிறிது கள் கிடைத்தால் எனக்கே கொடுத்துவிடுவான் அருந்த. நிறைய கிடைத்தால் எனக்கும் கொடுத்து அவனும் அருந்துவான். கொஞ்சம் சோறு கிடைத்தால் எனக்குத் தந்துவிடுவான். நிறைய சோறு கிடைத்தால் எனக்கும் கொடுத்து தானும் உண்ணுவான். பூவாசம் வீசம் கையால் கறிநாற்றம் வீசும் என் தலையைத் தடவி அன்போடு ஏராளமான பொருள்கள் தருவான். இப்போது எங்கே போனான்? நீர்த்துறையில் யாருக்கும் பயன்படாமல் அழியும் பகன்றை எனும் பூக்களைப்போல அதியமான் இல்லாமல் அழியப்போகிற உயிர்கள் இனி ஏராளம். ஐயகோ...

அனுபவிக்க தமிழ் ஆனந்தம் மட்டும் அல்ல. நட்பில் தந்தையையும் மகளையும் காட்சிப்படுத்தும் பாடல் இது.

0000

தமிழில் எல்லாம் இருக்கிறது என்றால் அது தவறு என்பார்கள். அறிவியலும் வானியலும் கணிப்பொறி அறிவியலும் பூகோளவியலும் மானிடவியலும் சுவையும் உளவியலும் எல்லாமும் ஒருங்கே பெற்றது தமிழ். அதனால்தான் பலமொழிகளைத் தேர்நது கற்ற பாரதி உரைத்தான் யாமறிந்த மொழிகளிலே....என்று.

000

ஜென் கவிதை ஒன்று..

மனிதன் சும்மா இருக்கிறான்
வசந்தம் வந்ததும்
மலர்கள் மலர்ந்துவிட்டன.

0000

Sunday, January 1, 2012

தமிழால் வாழ்வோம்...


தமிழ் வாழ்க... தமிழ் மாண்பு வாழ்க..தமிழின் மேன்மை வெல்க.

தழைய இழையும் அழகிய முயலாய்
தாவி செழிக்குது இவ்வாண்டு
தந்திரம் இல்லை மந்திரம் இல்லை
உண்மையும் நேர்மையும்
ஓய்ந்தொலிக்குது இவ்வாண்டு
நம்பிக்கை ஒளிருது
உழைப்பு சிரிக்குது
உண்மையில் இவ்வாண்டு...

தமிழும் இனமும்
தன்மான உணர்வும்
வளமாய் வாழ்வில் பெருகியே
வந்து நிலைக்குது இவ்வாண்டு...

தமிழ்தான் நமக்கு
தாயாய் அன்னமிடும்
தளிர் இலக்கியக் கரத்தால் அணைத்திடும்
தளராத வண்ண வாழ்வில்
தம்மோடு நம்மையும் இணைத்திடும்..

தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட
தமிழோடு இவ்வாண்டைக் கொண்டாடுவோம்
பதிவுலகில் தத்தமது இலக்கில்
தங்ககொடி நாட்டிடுவோம்...
தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட..


துன்பம் ஒழியுது தொல்லைகள் தொலையுது
நன்மைகள் சேருது நாலுதிசையும் நமக்குத்தான்..
அசையாத வேராய் நம்பிக்கை
அடிமனத்தில் கொள்வோம்...


வணக்கம் வணக்கம் புத்தாண்டு
வணக்கம் தமிழால்..சொல்வேன்...
உடலின் உயிர் நிலைக்கும்வரை...

Saturday, December 31, 2011

நம்பிக்கையும் வெற்றியும்




அன்புள்ளங்களுக்கு

வணக்கம்.

வழக்கம்போல இவ்வாண்டு முடிவுற்று இன்னும் சில மணிநேரங்களில் 2012 புத்தாண்டு மலரப்போகிறது.

எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு.
எல்லோருக்கும் திட்டமிடல்கள் உண்டு.
எதையாவது செய்யவேண்டும். கடந்த ஆண்டில் இயலாததை இவ்வாண்டிலாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பும் வேகமும் இருக்கும்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைத்துக்கொள்ளலாம்.
சில உண்மைகளைப் பேசத் துணியலாம்.
அச்சங்களைப் போக்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கலாம்.
பலரையும் நேசிக்க மனம் கனியலாம்.
வெறுத்தோரில் பலரும் நமது மனக் கனிவுக்கு கூடி வரலாம்.
எல்லாவற்றையும் கடந்து நாம் வாழத்தான் வந்திருக்கிறோம்.

இயற்கைக்குத் தப்பி...புயலுக்குத் தப்பி...மழைக்குத் தப்பி...பல பறவைகளுக்குத் தப்பி...பூவாகி..காயாகி..கனியாகி கைக்குக் கிடக்கிற பழங்களைப்போலவே நமது வாழ்க்கையும் வாய்த்திருக்கிறது நமக்கு வாழ.

இயல்பாய் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். ஏக்கமும் வேண்டாம். திட்டமிடல்கூட வேண்டாம்.

நேர்மை. நம்பிக்கை. உழைப்பு இது போதும்.



நம்பிக்கை அழுத்தமான வேரைப் போன்ற நம்பிக்கை எல்லாவற்றையும் நமக்கு ஈட்டித்தரும்.

வாழுகிற ஒவ்வொரு தருணத்தையும் அது எதுவாக இருப்பினும் அந்த உணர்வில் அதனை அனுபவித்து கடப்போம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோர் அதனை இறுகப் பற்றலாம்.

எல்லோருக்கும் எல்லாமும் குறைவற நிறைநதியாய் நிறைந்து பெருகட்டும். வளமான வாழ்வில் புத்தாண்டை எதிர்கொள்வோம்.

எல்லாமும் உடனடியாக கைக்குக் கிடைத்துவிடில் அதில் சுவையில்லை. அப்படியெதுவும் வாழ்வில் கிடைப்பதுமில்லை. இருப்பினும் பல்வேறு இடர்களுக்கிடையிலும்..சிறு துன்ப நிகழ்வுகளுக்கிடையிலும்.. சிக்கல்களுக்கிடையிலும்.. கிடைத்த வாழ்வைத்தான் பல சாதனையாளர்களும்..சரித்திர நாயகர்களும்...வாழ்வில் வெற்றிபெற்றவர்களும் பேசவும் எழுதவும் கண்டிருக்கிறோம்.

அதில்தான் வாழ்க்கையின் சுவை இருக்கிறது. அதில்தான் முழுநிறைவும் இருக்கிறது.

அடர்ந்த அனலுக்கிடையில் பதமாகும் சுவையாகும் உணவைப்போலவே அது அமைகிறது.

இப்படியே இந்த வாழ்வு இருந்தால் போதும்.

நம்முடைய நம்பிக்கையும் உழைப்பும் எல்லாவற்றையும் தரட்டும்.

என்னுடைய மனங்கவர்ந்த புத்தாண்டு மகிழ்ச்சியை பதிவுலக நண்பர்கள்..சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



தீதும் நன்றும் பிறர்தர வாரா.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அவரவர் எச்சத்தாற் காணப்படும்.

மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.

அன்பே சிவம்.

Monday, December 19, 2011

பகிரல்....

00000000
00000000

தமிழகத்தின் எல்லா இதழ்களும் வெகுஜன இதழ்களும் சரி...இலக்கிய இதழ்களும் சரி ஒருமித்த கருத்தை அதனதன் போக்கில் எடுத்துக்கூறியுள்ளன. கூடங்குளம் பிரச்சினையை. எப்படியாயினும் இது ஆபத்தை விளைவிப்பது என்பதுதான் அதன் சாராம்சமாக உள்ளது. எந்த ஒன்றும் மானிட இனத்தை மையப்படுத்திதான் அமையவேண்டும். அந்த மானிடர்க்குத் துன்பம் தரும் ஒன்றை மத்திய அரசு ஏன் விடாப்பிடியாய் கொண்டுவர நினைக்கிறது.

•••••••••
•••••••••

எல்லா அரசியல் முரண்களுக்கிடையிலும் விமர்சனங்களுக்கிடையிலும் தன் கொள்கையை விடாது முன்னேறுகிறது அரிமா அன்னா உறசாரே. வாழ்த்துக்கள்.

00000000
00000000

மதிப்பிற்குரிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு பொதுவான வேண்டுகோளை இன்றைய செய்தித்தாளில் தமிழக மக்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதே செய்தித்தாளில்தான் ஐயப்பத் தரிசனம் செல்லும் வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இரு மாநிலங்களிலும் இருதரப்பு மக்களும் பாதுகாக்கப்படவேண்டும்.

•••••••••
•••••••••

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் பெண்கள் இடம் பெறாமல் எந்த விளம்பரமும் இல்லை. இதுகுறித்த கருத்தாக்கங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு சில விளம்பரங்கள் மனதைக் காயப்படுத்துகின்றன. ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு வானிலிருந்து வாளோடு வானத்திலிருந்து ஒரு பெண் குதிப்பது போன்ற விளம்பரம். இன்னொன்றில் பள்ளத்தில் சிக்கிகொண்ட லாரியைக் கூந்தல் கட்டி இழுத்து வருவது. விளம்பரத்தில் குறைந்த பட்சம் நியாயமாவது இருக்கவேண்டும்.

•••••••••
•••••••••

இது அரசியல் அல்ல. பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் இன்று. 90 வயதை நிறைவு செய்திருக்கிறார். இதுவரை எந்த முரணிலும் சிக்காதவர். 90 வயது பெரிய வயது. ஆச்சர்யம்.

0000000000
0000000000

ஒரு சின்ன அனுபவம். நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நாமக்கல்லில் இருந்தேன். அலுவல்பணி. மாலையில் நாமக்கல் ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு தங்கத் தேரை இழுத்துவிட்டு எதிரில் இருக்கும் நரசிம்உறரையும் தரிசித்துவிட்டு கீழேயுள்ள மண்டபத்தின் இருளில் அமர்ந்திருந்தேன். தனிமையில். நண்பர்கள் மேலே தரிசனத்தில் இருந்தார்கள். அப்போது வளர்ந்த தாடியுடன் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் வந்து என்னருகே மண்டபத்தில் அமர்ந்து ஒரு 10 ரூ கொடேன் போஜனத்திற்கு என்றார். எதுவும் பேசாமல் எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் என்னைப் பார்த்துவிட்டு மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம்.

000000000
000000000

Monday, December 12, 2011

நினைவுபடுத்தல்


வணக்கம்.

இவருடைய இயற்பெயர் சுப்பையா. சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

தனது ஞானத்தால் 11 வயதில் பாரதி பட்டம் பெற்றவர். பின்னாளில் உலகம் போற்ற மகாகவி என்றழைககப்பட்டவர்.

சுதந்திர தாகத்தையும் நாட்டின் விடுதலையையும் மனதில் இருத்தி கடைசிவரை வறுமையில் இருந்து ஒரு யானை காரணமாக இறந்துபோனவர். சின்ன வயதில் இறந்துபோனவர்.

இவருடைய கவிதைகள் மிகச் சிறந்தவை என்று சொல்கிறார்கள். போற்றுகிறார்கள்.

இவர் பிறந்த தினம் நேற்றுதான். அதாவது திசம்பர் 11 வது நாள் 1882 ஆம் ஆண்டு. செப்டம்பர் 11 ஆம் நாள் 1921 இல் இறந்துபோனார்.

பலருடைய பிழைப்பு இவரது கவிதைகளால் நடக்கிறது.

இளைய பருவத்தில்தான் இறந்துபோனார். இளைஞர்கள் திசைகள் வேறுவேறாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. காலம்தான் இவர்களை மீட்டெடுக்கவேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி...

Monday, December 5, 2011

தமிழ் வாழ்க




ஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் பேருண்மைகளுக்கு அடித்தளமானது. அதற்கான வேர் மிகமிக ஊடுருவிய ஆழம் கொண்டது. தமிழ் பேசும் யாவரும் பெருமை கொள்ளத்தக்கப் பண்புகளை என்றைக்கும் அழியாமல் கன்னித்த்ன்மையோடு கொண்டிலங்குவது தமிழ்.

தொல்காப்பியனும் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் எனத் தமிழின் பரப்பை ஆண்ட ஏறுகள் தமிழுக்கு என்றைக்கும் குறையாத செழுமை இலக்கியங்களைத் தந்தவர்கள். இன்றைக்கு தமிழ் மொழியை விளையாட்டு மொழிபோல பயன்படுத்துவது என்பது சாதாரணமாக உள்ளது.

நமக்குச் சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைக்கு நடிகர் தனுஷ் பாடிய ஒரு பாடல் இணையம் முழுக்க ஊடுருவி (புல்லுருவி) இளைய சமுகத்தின் வேதம் போல அது உச்சரிக்கப்படுவதாக எழுதுகிறார்கள். திரையிசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் அதற்கு இசையும் கூட்டுகிறார்கள். தமிழின் பண்பாட்டை சிதைப்பதுபோல அவை பிறமொழிச் சொற்களின் கலப்பில் இப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கிற பொது அறிக்கையினிடையே அவை பாடலாகின்றன. அந்த வரிசையில் தனுஷின் கொலைவெறி பாடலும்.

நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம் தனுஷ். ஆனால் தமிழ் பேசி தமிழ்நாட்டில் பிறந்த தமிழனின் செயல் இதுவல்ல. அமரகவிகள் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இன்னும் பலரும் தற்போது வைரமுத்து வாலி அறிவுமதி நா.முத்துக்குமார் எனத் தமிழின் மேன்மை சொல்லும் பாடலாசிரியர்கள் மத்தியில் இப்படியொரு அறிவிலித்தனமாகப் பாடலை எழுதிப்பாடி அதுகுறித்து கூச்சமிலலாமல் காரணம் சொல்கிறீர்கள். தமிழ்மொழி ஆற்றல் மிகுந்தது. அதனை யாரும் அழிக்கமுடியாது. அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்தான் அழிந்துபோவார்கள். இதுதான் வரலாறு. இளைய வயது தமிழைப் படியுங்கள். அதன் இனிமையைச் சுவையுங்கள். அற்புதமாகப் பாடலாம் எழுதலாம். பொருள் ஈட்டுவது முக்கியமல்ல அது ஈட்டும் வழி ரொம்ப முக்கியம்.

உங்களுக்கு இது புரியுமா? என்றும்கூடத் தெரியவில்லை. ஆனால் இந்தப பாடலின் வெற்றி உங்களை கூசவைக்கவேண்டும் இனியொருமுறை இதுபோன்று அமையாதிருக்க.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு... பாரதிதாசன்.

Thursday, December 1, 2011

கொஞ்சம் அரசியல்

?



ஒன்று

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று நடைபெறும் கடையடைப்பு முழுமையாக இல்லை. பல கடைகள் திறந்துளளன. காரணம் அவர்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை போலும். இது அனுமதிக்கப்பட்டால் மீண்டும் வாணிபம் செய்ய வந்து நாட்டைப் பிடித்த கதையாகும். மாநில அரசுகளை வற்புறுத்தவில்லை. அவரவர் விருப்பம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தாலும் எதிர்காலச் சூழலில் கூட்டணியாக தேர்தல் களத்தில் நிற்கும்போது இது மாறுவதற்கு இடமிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் அதற்கடுத்த நிலையிலுள்ள சிறுபான்மை பலமுள்ள கட்சிகளும் உறுதியாக இருக்கவேண்டும். எச்சூழலிலும் அனுமதிக்கக்கூடாது இதனை. இதுவே நமது வேண்டுகோள்.



இரண்டு

நிலம் விற்றல், வாங்கல், நில அபகரிப்பு இவற்றில் தமிழக அரசின் நடவடிக்கை மிகத் திருப்தியாக உள்ளது. தங்கள் வாழவின் கனவும் இலட்சியமும் ஒரு மனைவாங்கி பின் கடன்வாங்கி வீடுகட்டுதல்தான் என்றிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது ஆறுதலான நடவடிக்கையாகும். எனவே தமிழக முதல்வரைப் பாராட்டலாம். இன்னும் பின்வரும் சில வேண்டுகோள்களைக் கருதிப் பாரத்தால் அது இன்னும் நலம் பயக்கும்.

1. மனைவாங்குபவர் யாராக இருந்தாலும் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத்
தெரிவிக்கவேண்டும். அதற்கான வருவாய் எங்கிருந்து ஈட்டியது என்கிற
விவரம் தெரிவிக்கவேண்டும்.

2. ஓரு மனை வாங்கியவர்கள் அடுத்த மனை வாங்குவது குறிப்பிட்ட சில
ஆண்டுகளுக்குப் பின் எனக் கட்டாயமாக்கவேண்டும்.

3. மனை விற்பவர்கள் மனை வாங்குபவர்களிடம் பத்திரப் பதிவு செய்து தருவதோடு
அதன் தொடர்பான மூல ஆவணப்பத்திரங்களையும் எவ்வித வில்லங்கமும் இல்லை
என்கிற சான்றிதழையும் தொடர்ந்து குறிப்பிட்ட மனைக்குரிய கூட்டுப்பட்டா,
தனிப்பட்டா எனத் தொடர்புடைய ஆவணங்களையும் வாங்கிக் கொடுத்துவிட
வேண்டும். இதற்குரிய தொகையை மனை வாங்குபவர்களிடம் வாங்கிக்
கொள்ளலாம்.

4. அவ்வாறு வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் திரும்ப மனையைப் பெற்றுக்
கொண்டு உரிய தொகையைத் திருப்பியளித்துவிடவேண்டும்.

5. எக்காரணத்தை முன்னிட்டும் எச்சூழ்நிலையிலம் விளை வயல்களை மனைப்
பிரிவிற்கு அனுமதிக்கக்கூடாது. இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

6. மாதத் தவணைத் திட்டம் வழியாக மனை விற்பவர்கள் பற்றிய முழு விவரங்
களை அரசு பெறவேண்டும். தவிரவும் இதில் பணம் செலுத்துபவர்களுக்கு
போடப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை அழைத்துச் சென்று காணபிக்கவேண்டும்.

7. மனைப்பிரிவுகளில் இவர்கள் ஒதுக்கும் இடங்களில் பூங்கா போன்றவற்றை
உடன் உருவாக்கித்தரவேண்டும் அதன்பின்னரே அவர்கள் பிளானை வரன்முறைப்
படுத்தவேண்டும்.


மூன்று

கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் சிறுபெண்ணிற்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சந்தோஷ் என்னும் பாதிரியார் தாமாக முன்வந்து தானம் அளிக்க வந்தும் மருத்துவத் தர்மம் அனுமதிக்கவில்லை என்கிற செய்தி இவ்வார குமுதத்தில் வந்துள்ளது. வாழவேண்டும் என்று சொல்லுகிற பெண்ணை ஏன் சாக விடுகிறீர்கள் என்று அந்தப் பாதிரியார் கேட்டுள்ளார். இதில் அரசு தலையிட்டு மனிதாபிமானமிக்க முறையில் அந்த பெண்பிள்ளையை வாழ அனுமதிக்கவேண்டும்.


நான்கு

விலங்குகள் மீது பரிவுகாட்டும் புளுகிராஸ் எனும் அமைப்பிற்கு அன்பான வேண்டுகோள். நாய்களைக் கொல்லக்கூடாது எனும் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனாலும் தெருவிற்குப் பத்துநாய்கள் ஒவ்வொருநாளும் படுத்தும் பாட்டை, அதனால் பொது மக்கள் படும் இன்னல்களை ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் எல்லா தெருநாய்களையும் சேகரித்து எங்காவது தனியிடத்தில் உங்கள் பராமரிப்பில் வைத்துப் பரிவுகாட்டுவது நலமாக இருக்கும் அல்லவா

Monday, November 21, 2011

புதிய ஆத்திசூடி

ஔவையின் ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார். நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வெகுநாளாகவே மனதில் இருந்தது. அதன்விளைவுதான். ஆனால் இன்றைய சூழ்ல் மனதிற்கு சஙக்டமாக உள்ளது. மனித நேயம், பரிவு, நட்பு எல்லாம் வீண். மனிதனை மனிதன் உட்கொள்ளும் வன்முறை பெருகியுள்ளது. இன்றைய சூழலின் விளைவையே

இந்த ஆத்திசூடியில் பகிர்ந்துகொள்கிறேன்.


விரும்பாததது.......
/////////////


அரசியல் அறம் ஒழி

ஆன்மீகப் புலைத்தனம் கல்

இயன்றவரை துரோகம் இழை

ஈட்டுதலுக்காக குற்றம் பயில்

உண்மை எப்போதும் மறு

ஊழலைத் துணிந்து பேண்

எண்ண்த்தில் விடம் நிரப்பு

ஏற்றம்பெற எதுவும் செய்

ஐம்புலனையும் அடக்காது செல்

ஒவ்வொரு நாளும் வன்முறை புரி

ஓராயிரம் முறை நடித்து வாழ்

ஔவை சொல் விலகு.


விரும்புவது.......
/////////////////


அன்புசால் உலகு செய்

ஆற்றலைப் பெருக்கி நில்

இயன்ற வரை உதவு

ஈடடுவதில் தருமம் நிறுத்து

உண்மை எப்போதம் பேசு

ஊரின் நியாயம் கேள்

என்றும இறைவன் துணைகொள்

ஏறறம் பெற உழைப்பு தேடு

ஐம்புலன் செம்மைப் பேண்

ஒவ்வொரு நொடியும் நல்சிந்தை நினை

ஓடிஓடி உறவுகள் வளர்

ஔவை பாரதி வணஙகி வாழ்


எல்லோரும் அவரவர் சிந்தைக்கேற்ப ஆத்திசூடி எழுதுஙக்ள். நல் உலகு மலரட்டும்.


Thursday, November 17, 2011

குழந்தைப் பாடல்கள்

குழந்தை இலக்கியம் குறித்து அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இன்றைக்கும் நிலவுகிறது. இன்னொருபக்கம் குழந்தைகள் இலக்கியம் குறித்து அக்கறையுள்ள இலக்கியப் படைப்பாளிகளும் இதழ்களும் கவனம் செலுத்துகின்றன. நம்முடைய பங்கிற்கும் எதாவது செய்யவேண்டும் என்கிற உந்துத்ல் எப்போதும் மனத்தில் சுழன்றுகொண்டேயிருக்கிறது. தவிரவும் நீண்ட நாட்களாகிவிட்டன குழந்தைப் பாடல்கள் எழுதி. எனவே சில பாடல்கள் மறுபடியும்.



அணில்குட்டி

அணில்குட்டி அணில்குட்டி
அழகான அணில்குட்டி
முதுகுமேல திருநீறு
பூசிக்கிட்ட அணில்குட்டி
தாவிதாவி ஓடுமாம்
தரைமேலேயே தாவுமாம்
வாலவால ஆட்டிக்கிட்டு
ராம்ராம்னு பாடுமாம்
கருப்புமுழி கருகமணி
முழிச்சிக்கிட்டு கத்துமாம்
கட்டைசுவத்துமேல
நின்னுகிட்டு வரம்கேட்டு
ஆடுமாம்...

000000


வானம் முழுக்கப் பாருங்க
கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
காடடும் அழகு நட்சத்திரம்...

அம்மா நிலவு மெல்ல வந்து
அன்பாய் சிரித்துப் பாலுர்ட்டும்
கர்ற்று அடித்து காற்று அடித்து
மேகம் நிலவை மறைக்குமாம்...

கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
நட்சத்திரம் வேண்டாம் வேண்டாம்
என்குமாம்...

மேகம் ஓடி அழுவுமாம்
அம்மா நிலவு சிரிக்குமாம்..

அன்பு என்ற சக்தியை
அம்மா என்ற சக்தியை
யாரும் மறைக்க முடியாதாம்...

அம்மாபோல அன்புகாட்டி
அனைவருமே வாழுவோம்...

00000


காட்டுக்குள்ளே திருவிழா
கலகலன்னு நடக்குமாம்..

குயிலு அக்கா பாடுமாம்
மயில அக்கா ஆடுமாம்
ஓடிஓடி முயலு அண்ணா ஓயாம
அழைக்குமாம் வாங்க..வாங்க்..வாங்க..

சிங்கம் மாமா தலைமையில்
சிறுத்தை அண்ணா கச்சேரி
மான்கள் கூட்டம் மத்தளம்
மயக்கும் இசையில் நடக்குமாம்..

வகைவகையா விதவிதமா
விருந்து எல்லாம் நடக்குமாம்
பச்சைப்பச்சை காய்கறி
பழுக்கப் பழுக்க பழங்களாம்
பட்டாம்பூச்சி மெத்தையாம்
பளபளன்னு மின்னுமாம்...

குருவி வந்து சிரிக்குது...கரடி வந்து உறுமுது
யானை வநது பிளிறுமாம்..குதிரை வந்து கனைக்குமாம்..
எல்லாம் வந்து கூடிக்கூடி
பேசிப்பேசி களிக்குமாம்...

மிருகமெல்லாம் மிருகமா
பறவையெல்லாம் பறவையா
பண்போடு இருக்கணும்
பாழும் மனுசன் குணத்தைப் பார்த்து
பாதை மாறக்கூடாதாம்..

அதுக்குத்தான் திருவிழான்னு
தீர்மானமா சொன்னிச்சாம்
விருந்து வாசம் வந்துச்சாம்
திருவிழாவும் முடிஞ்சிச்சாம்..

00000

Thursday, November 10, 2011

குழந்தைகளிடம் கேட்டவை.

குழந்தைகள் எப்போதும் எந்தக் காலக்கட்டத்திலும் நம்மை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிகளுககும் உள்ளாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் செயலும் பிரமிப்பும் மன அதிர்வையும் தருகின்றன நமக்கு. நான் சில குழந்தைகளிடம் கேட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


மூன் மம்மி இருக்குல்லே..அதுக்கு ஏராளமான ஸ்டார்ஸ் பேபிஸ்..அதனால அது எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்கும். ஆனா சூரியன் பாவம். அதுக்கு பேபிங்களே இல்லை. அதனால அது மூன் மம்மியைப் பார்த்ததும் கோபமாயிடிச்சி..அது மலைமேல இருந்துச்சா..அங்கிருந்து கிளம்பிடுச்சி. அதுக்கு ஒரே கோபம். வெளியே வந்து வேகமா மூன் மம்மியையும் ஸ்டார்ஸ் பேபிங்களயும் முழுங்கிடிச்சி. அதனாலதான் பகல்லே மூன் மம்மியும் ஸ்டார்ஸ் பேபிங்களும் காணமாப் போயிடிச்சி. அவ்வளவுதான் கதை.

000000000000

தம்பி கடவுள் இருக்காரா?

சாமி இருக்கா இல்லையான்னு தெரியாது.

கடவுள பார்த்திருக்கியா?

கடவுள பாத்திருக்கேன்.

எங்கே?

அதான் தெருத்தெருவா தேர்ல வர்றாரே...


00000000000000


ஒரு குழந்தையிடம் தாய் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி வடை சுட்ட கதை. கதையில் கடைசியில் நரி காக்கா போட்ட வடையைக் க்வ்விட்டு போயிடிச்சிசொன்னதும். குழந்தை கேட்டது தப்பா கதைய சொல்றியே மம்மி.. என்றது.

என்னப்பா தப்பு?

நரி வைல்ட் அனிமல் ஆச்சே? அது எப்படி வடையை சாப்பிடும். கறிதானே
சாப்பிடும்? கதைய மாத்தி சொல்லு.

0000000

ஒரு கவிதை...


குழந்தைகள்

வாழ்க்கைப் படகின் துடுப்பு...
நம்பிக்கையின் வேர்
எந்தப் பக்கத்தின் இருளையும்
வெளிச்சத்தால் நிரப்புவர்கள்..
கடவுளின் பல அவதாரங்களையும்
காட்சிப்படுததக்கூடியவர்கள்
கடவுளின் சிரிப்பையும்
கடவுளின் அழுகையையும்
கடவுளின் தவிப்பையும்
கடவுளின் ஏக்கத்தையும்
கடவுளின் பிடிவாதத்தையும்
காட்டுபவர்கள்...
ஒன்றேயொன்றுதான்
குழந்தைகளிடம் நெருங்க
குழ்ந்தைகளாகவேணடும் நாம்..
ஆனாலும் குழந்தைகளாக
முயல்வது ரொம்பக் கடினம்
அதே சமயம் அது ரொம்ப
எளிதும்கூட...


தம்பி சாமி கும்பிடுப்பா...

சாமிய கும்பிட்டா என்னா அம்மாச்சி?

சாமி கேட்டதெல்லாம் குடுக்கும்,,

அப்புறம் ஏன் கடையில பெல்ட் சாக்ஸ் எல்லாம் கேட்டா காசு கேக்கறாங்க அமமாச்சி?

00000000000


ஒவ்வொரு முறையும
ஒவ்வொரு பொருள்தரும்
கவிதை
குழந்தைகள் மட்டுமே...

மனித இனத்தின்
முதல் மொழி
குழந்தைகள் மட்டுமே....

எல்லா வாழ்வின்
எப்படிப்பட்ட சிக்கல்களையும்
தீர்ப்பவர்கள்
குழந்தைகள் மட்டுமே...


ஆகவே
குழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...

Saturday, November 5, 2011

அவர்களும் நமது பிரதிகளும்



இப்போது அதிகம்
அலைகிறார்கள்...

நெருக்கடியாக சாலையின்
நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில்
காற்றுவெளியில்
கவலையற்று நிற்கிறார்கள்...

ஒருவன் இளைஞன்
ஒருத்தி இளம்பெண்
ஒருவர் முதியவர்

அவரவர் அவரவர்
கவலைகளோடு
போய்க்கொண்டிருக்கையில்

இவர்கள் சிரித்தபடியும்
அல்லது அழுதபடியும்
அல்லது ஏதோ முணுமுணுத்தபடியும்
நிற்பதைப் பார்க்கையில்
உள்ளுக்குள் உடைகிறது
ஒரு பயம்...

அவர்கள் சிரிப்பு நம்முடையதுபோல
அவர்கள் அழுகை நாம் அழுவதுபோல
அவர்கள் முனகல் நாம் முனகுவதைபபோல...

வாழ்க்கையினைப்
பிரதியெடுத்த பிரதியை
மனதில சுமந்திருப்பதுபோல...

Sunday, October 30, 2011

பொய்யாமொழி





பொய்யாமொழி என்பது திருக்குறளைக் குறிக்கும். திருவ்ள்ளுவருக்குப் பொய்யாமொழியார் என்ற பெயரும் உண்டு.

மனித வர்ழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வள்ளுவர் நினைக்க வைக்கிறார். அவருடைய வார்த்தைகள் அதற்குள் அடங்கியிருக்கும் சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு சொல்கூட வீணான சொல் இல்லை.

மனிதன் மகிழ்ச்சியுறும்போது
மனிதன் காயமுறும்போது
மனிதன் ஆதங்கப்படும்போது
மனிதன் கோபப்படும்போது
மனிதன் பொறுமை கடைப்பிடிக்கும்போது
மனிதன் நிதானிக்கும்போது

வள்ளுவரும் வள்ளுவமும் தேவைப்படவே செய்கிறது.

சான்றுக்கு இரு வரிகள்.

1. அவரவர் எச்சத்தாற் காணப்படும்.
2. பணியுமாம் என்றும் பெருமை.

தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும் (114)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து...(978)


இன்றைக்கு ஒரு உறவினர் இறந்துபோன நிகழ்வுக்கு செல்லவேண்டியிருந்தது. அருமையான மனிதர் என்று எல்லோரும் சொன்னார்கள். ஒரு மனிதன் இறந்துவிட்டால் சொல்லவேண்டிய பொதுவான வார்த்தைகளாக இல்லை. உண்மையில் நல்ல மனிதனாகவே இருந்து இறந்துபோனார். ஆனாலும் அவரின் இறப்பிற்கு வழிகாட்டிய காரணங்களில் முதன்மையானது திருமணத்திற்கு முன்தினம்வரை அவரது மகள் தனது காதலைப் பற்றிக் கூறாமல் மறைத்து அன்று இரவு விருப்பமான காதலனுடன் கிளம்பிப்போனது. அன்றைக்கு அவர் கூனிக்குறுகி அவர் சந்தித்த அவமானங்களும் காயங்களும் சொற்களில் எழுத முடியாதவை. அவரின் எச்சத்தால் (மகளால்) உண்டானது அது.

இன்னொன்று

ஒருவர் எங்கு வந்தாலும் எல்லோருக்கும் அறிவுரை மழை பொழிவார். அவரின் மகன்களுக்கு இன்றுவரை அவரின் அறிவுரை எந்தப் பலனையும் தரவில்லை. வேலையற்றுத் திரிகிறார்கள்.

எச்சம் என்பது எஞ்சி நிற்பது. வாழுகிற காலத்தில் ஒரு மனிதன் உண்மையோடு நன்றியோடும் நடுவுநிலைமையோடும் ஒழுக்கமோடும் இருக்கையில் அதுதான் அவனுடைய மறைவுக்குப்பின் அவனுடைய சந்ததிகளால் (எச்சத்தால்) அடையாளப்படுத்தப்படும்.

பிள்ளைகள் பெறுவது மட்டுமல்ல...அவர்கள் நல்ல பிள்ளைகளாகவும் வளரவேண்டும்...வளர்க்கவேண்டும்... நல்ல என்பதன் அடையாளம் படிப்பு மட்டுமல்ல.. உறவுகளைப் பேணும் தன்மையும்கூட... அன்றைக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை இருந்தது. அண்ணன் தம்பி பிள்ளைகள் யாரும் பேதமற்று எல்லோரும் ஒரே பிள்ளைகளாக வள்ர்ந்தர்ர்கள். உண்மை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இப்போது திருமணம் ஆனவுடன ஆணின் உறவுகள் அறுக்கப்படுகின்றன. மனைவியின் உறவுகள்தான் ஒட்டப்படுகின்றன. கணவனின் உறவுகள் ஒழுக்கமாக இருந்தாலும் அது உறவுகள் இல்லை. மனைவியின் உறவுகள் ஒழுக்கக்கேடாகவும்... குடிகாரர்களாகவும்...முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் அது உறவாகின்றன..

இப்படி சந்ததிகளை வளர்கக்க்கூடாது. நடுவுநிலைமையோடு வளர்க்கவேண்டும். இதைத்தான் எச்சம் என்கிறார் பொய்யாமொழியார்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் எச்சங்களாகின்றனர்.

அடுத்து

ஒரு கைதேர்ந்த சிற்பி சிலையை செதுக்கிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் ஒருவன் கேட்டான் சிலை செதுக்குகிறாயா? என்று. அந்த சிற்பி சொன்னான் அந்த திறமையெல்லாம் எனக்கு குறைவு. இந்தக் கல்லிற்குள் ஒர் அழகான சிலை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதனைச் சுற்றியிருக்கும் கசடுகளை நீக்கிக்கொண்டிருக்கிறேன் என்று.

ஒருவர் தனது மாமா வீட்டிற்குத் தத்துப்பிள்ளையாகப் போனார். அவருக்கு மாமாதான் விலாசம். மாமா படிக்கவைத்து ஒரு வேலைக்கு அனுப்பினார். நல்ல வேலையும் கிடைத்தது. அவரின் மாமாவின் பண்பிற்கும் அவரது குடும்பப் பின்னணிக்கும் என அவர் வளர்த்த த்த்துப்பிள்ளைக்குத் திருமணம் நடந்தது. வந்த பெண்ணின் இளமை மயக்கத்தில் வளர்த்து ஆளாக்கிய மாமாவை மறந்துபோனார். மாமாவிடம் கேட்டார்கள். அது அவன் குணம். இது என் குணம் என்றார் மாமா பதட்டமில்லாமல்.


நண்பர் ஒருவரின் மாமனார் வீட்டிற்குப் போனேன். அவரின் மனைவி அந்த இரவில் பட்டுப்புடவை போன்ற பளபளப்பான புடவையில் மேக்கப் குறையாமல் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். நான் போனதும் அவர் உட்கார்ந்தபடியே கணவனை அழைத்து மாப்பிள்ளையின் நண்பர் வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்தார். நண்பரின் மாமனார் உள்ளே போய் இரு டம்ளர்களில் காபி கொண்டு வந்தார். சாப்பிட்டோம். அந்தம்மாவின் பேச்சு ரொம்ப பகட்டாக இருந்தது. அவர் அமைதியாகப் பேசினார்.

வெளியே வரும்போது நண்பர் சொன்னார். என்னோட மாமனார் அந்தக் காலத்துலே உறானர்ஸ் படிப்பு படித்தவர். பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஆனா எதையும் காட்டிக்க மாட்டார். என்னோட மாமியாருக்கு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாது.

பாரதியார் சகுனியைப் பாஞ்சாலி சபதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது சபை நடுவே ஏறெனக் களித்திருந்தான் என்பார். அதாவது அறிவாளிகள் நிறைந்த சபையில் எல்லாம் தெரிந்தவன் போலக்கூட அல்ல நன்றாகக் கற்ற புலமையாளன் போல மகிழ்ச்சியோடு இருந்தான் என்பார். இதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்.

பொய்யாமொழியார் காலந்தொட்டு இதெல்லாம் உண்டுபோலும். அதனால்தான்

பணியுமாம் என்றும் பெருமை என்றார் போலும்.

Wednesday, October 26, 2011

கவிதை


எரியஎரியத்தான்
நெருப்பு...

வீசவீசத்தான்
காற்று...

இடிக்க இடிக்கத்தான்
இடி...

மின்னமின்னதான்
மின்னல்...

பெய்யப் பெய்யத்தான்
மழை...

பொங்கப் பொங்கத்தான்
கடல்...

விரியவிரியத்தான்
வானம்....

இழையஇழையத்தான்
கவிதை....

Sunday, October 23, 2011

காட்சிகள்....



உள்ளாட்சி தேர்தல்வரை வரப் பயந்து முடிவுகள் தெரிந்தபிறகு வெளியே வரலாம் என்பது போலக் காத்திருந்த வானம் லேசாகக் கண் திறந்து மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சவுக்கு இலைகள் போல ஊசிஊசியாய் தொடங்கிய மழை அவை இறுகிப் பின்னிய கயிற்றைபோல கணமாகப் பெய்ய ஆரம்பித்தது.

நகரத்தில் தீபாவளி கடைபோட்டிருந்த பிளாட்பார ஓரக் கடைவாசிகள் கலக்கமுற்று தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் போர்வையால் போர்த்திவிட்டு வாயை மட்டும் உரக்கத் திறந்திருந்தார். ரெண்டு ஐம்பது. நாலு இருவத்தஞ்சு..வாங்க சார்...வாங்கம்மா...வாங்கம்மா...குடை 60 கலர்க்குடை 60தான் சார்...இப்படிப் பல குரல்கள். மழையில் நனைந்தபடியும் குடையைப் பிடித்தபடியும்..புடவை தலைப்பால் தலையை மூடியும் பெண்கள் துணிக்கடைகளிலும் சாலையோரக்கடைகளிலும் பட்சணங்களில் மொய்த்த ஈக்களாயினர்..

அப்பா ஒரு சுடிதார் கூட எடுத்துக்கொடுங்கப்பா...
சும்மா இருடி... நீ ஒருத்தி மட்டும்தான் அதிசயமா இருக்கியா..உனக்கு மேல ஒண்ணு...கீழ ரெண்டு இருக்கு.. இத உங்கப்பா கடன் வாங்கிட்டு வந்திருக்காரு...சத்தம் போடுவாரு...பாவம் அந்த மனுஷன்...


அப்பா தர்த்தா வாங்கிகொடுத்த பட்டாசோட நிறுத்தக்கூடாது...எனக்குத் தனியா 500 ருவாயிக்கு வேணும்..
தொணதொணங்காதே.. வாங்கி தந்து தொலைக்கிறேன்..


எனக்கு வேணாம்...எங்கப்பா கருமாதிக்கு வச்சுக்கொடுத்த துணிங்க இருக்கு. அத தச்சிப் போட்டுக்கலாம்.. புள்ளங்களுக்கும் உனக்கும் எடுத்துக்க..


நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டேயிருந்தா உங்கப்பனா காசு தருவான்.
ஏன் உங்க்ப்பன்கிட்டே கொட்டிக்கிடக்குன்ன அள்ளிக்கிட்டு வாயேன்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
பாரு...பதிலுக்குப் பதிலு பேசறதுக்கு சீக்கிரமே தாலியறுத்து பிச்சை எடுப்பே பாரு..
பரவாயில்லை...

நாலுமாசமா வட்டி வரலே...இதுலே இபப்வேற கடன் கேக்கறே..ஆடம்பர மயிரு பண்ணத்தெரியுது..உன்பொண்டாட்டி திமிறாப் பேசறா.. நீ என்னடான என் காலை நகக்றே பணத்துக்க..
அவளுக்குத் தெரியாதும்மா..தீபாவளி புள்ளங்களுக்குத் துணி எடுக்கணும்..கொடுங்க..ஏற்கெனவே கொடுக்கவேண்டிய வட்டிய அசலோட சேத்துக்கங்க.. லோன் போட்டிருக்கேன்..அடுத்த மாசம் எல்லாதையும் பைசல் பண்ணிடறேன்..
பேச்சு நல்லா பேசறே..மானம் ரோசமா இருக்க மாட்டேங்குறே..
இல்லம்மா கொடுத்துடறேன்.
இதான் கடைசி...அடுத்த மாசம் வட்டி வரலே..விளக்குமாறுதான் பேசும்..
சரிம்மா..


நாலு டிரசும் பிடிக்கல்லியா?
நான் உன்ன கேட்டனா?
என்னடா ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி பண்ணறே?
எனக்குப் பிடிச்ச நான் எடுத்துக்கறேன்.. நீ எடுக்கவேண்டாம். எனக்கு ஐயாயிரம் கொடு நான் பாத்துக்கறேன்.
இந்தா என்னமோ பண்ணித்தொலை. ஏன்தான் எனக்குன்னு வந்து பொறந்தியோ?
நானா உன்னை பெத்துக்க சொன்னேன்?

சேதி தெரியுமா?
மூணுசக்கர வண்டியிலே வருவாரில்லை முட்டை எடுத்துக்கிட்டு...
ஆமா..
ஆறு மாசத்துக்கு முந்தி கால்ல ஆணி குத்திச்சாம்.. கவனிக்காம விட்டுட்டாரு... சுகரு வேற..அது ரொம்ப புண்ணாயிடிச்சாம்.. காலையிலே செத்துப்போயிட்டாரு..
அடப்பாவமே...நாலு வயசுல பொம்பள புள்ள இருக்கு.
ஆமா.. அவருக்கு செத்துப்போயிடுவோம்னு தெரியுமா? ஆஸ்பத்திரியிலே பொண்டாட்டியைக்கூப்பிட்டு பத்திரமா பர்த்துக்கோன்னு சொன்னாராம்..
தீபாவளி அதுவுமா அடக்கடவுளே?

மழை வலுத்துக்கிடந்தது.

ஒரு அப்பாவும் பெண்ணும் மழையில் ரோட்டில் கிடந்த பள்ளத்தைக் கவனிக்கவில்லை.
அந்த பெண் ஸ்கூட்டியை ஓட்ட அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார் போல..பள்ளத்தில் முன்சக்கரம் விழுந்து அப்படியே இருவரும் விழுந்தவிட்டார். தரையில் கிடந்த கல் ஒன்று பெரியவர் தலையைப் பதம்பார்க்க ஏகமாய் இரத்தம். அந்த பெண் காலில் அடி..
பாத்து வரக்கூடாதும்மா.
அடக்கடவுளே?
பாதாள சாக்கடை போடறேன் போடறேன்னு நாசம் பண்ணிட்டானுங்க..
ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு இந்த ரோட்டுலதான் போறான்.. எம்எல்ஏ மினிஸ்டர்.. எல்லாம் போறானுங்க..அவனுஙக்ளுக்கு என்ன ஜெயிச்சாச்சு..இனிமே என்னா? ஒரு வயதானவர் தலையிலடித்துக்கொண்டு பேசிப்போனார்.
ஒருவர் வண்டியையும் ஒருவர் அந்தப் பெண்ணையும் ஒருவர் அந்த பெரியவரை தாங்கிப்பிடித்து ஓரமாய் உட்கார வைத்தார்கள்.
அந்தப் பெண் பதறினாள்.
அப்பா செல்லையும பணத்தையும் காணோம்..
அந்தப் பெரியவர் பரிதாபமாக மகளைப் பார்த்தார்...

மழை லேசாகக் குறைந்திருந்தது.
பட்டாசுகள் சரவெடிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.

பைக்குகள் ஊர்வலம் வந்தன. பின்னாலே நாலைந்து கார்கள். அப்புறம் ஒரு
ஜீப் அதில் கையை கும்பிட்டபடி ஒரு பெண். கழுத்தில் அவள் சார்ந்திருந்த கட்சியின் துண்டு.நன்றி அறிவிப்பு ஊர்வலம்.

சும்மாவா 40 இலட்சம் செலவு பண்ணியிருக்கேன்.
என் பொண்டாட்டிய ஜெயிக்கமுடியுமா?

இவங்களாச்சும் ரோடு போட்டுடுவாங்களா?
நாலு தெரு தாண்டி தண்ணிக்குப் போவவேண்டியிருக்கு,,ஒரு பைப்பாவது வச்சுத் தருவாங்களா...

நைட்டு பிரியாணியும் சரக்கும் இருக்காம்.. அண்ணே வரச்சொன்னிச்சு..
எங்க?
அண்ணனோட கல்யாண மண்டபத்துலதான்.



எல்லாவற்றையும் மறந்து வாயைப் பிளந்தபடி இரு ஓரமும் மக்கள் கூட்டம் வெற்றி வேட்பாளரை வியக்கப் பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு வீட்டின் உள்ளே

என்னடா இது நாளைய தேதிய இன்னிக்கே கிழிச்சிட்டே..

சும்மாப்பா?

சும்மாவா? அப்படியெல்லாம் கிழிக்கக்கூடாது. நாளைக்குதான் கிழிக்கணும்.

அதனால என்னப்பா?

அதனால என்னப்பா?

அதனால என்னப்பா?